Monday, June 28, 2010

இராவணன் - சொல்ல மறந்த கதை அல்ல, சொல்லாமல் மறைத்த கதை



ராவணன் திரைப்படத்தினைப் பற்றிய எனது கருத்தினை (எனக்கு விமர்சனம் செய்யத் தெரியாது என்பதனால்) பதிவு செய்யும்படி அத்திரைப்படம் வந்த புதிதினில் என்னிடம் ஒருவர் கேட்டிருந்தார். படத்தினை இரசித்துப் பார்ப்பதற்குரிய மனநிலை இருக்கவில்லையாயினும், 'what ever happens, life has to go on' என்பதனால் நண்பர்களுடன் ஒருவாரத்திற்கு முன்னரே திட்டமிட்டிருந்ததன் பிரகாரம் கடந்த சனி இரவு திரையரங்கினுள் நுழைந்திருந்தோம். இத்திரைப்படம் எந்தவொரு சரித்திர நிகழ்வுடனும் சம்பத்தப்பட்டதல்ல என்பதை ஆரம்பத்திலேயே கூறுவதன் மூலம் பார்வையாளர்களுக்கு இராமயண இதிகாசத்தினை நினைவுபடுத்திவிடுகின்றார் அதன் இயக்குனர் திரு. மணிரத்தினம்.

இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தனது படங்களுக்கு வித்தியாசமான களங்களையே தேர்வு செய்வதானவொரு கருத்தினை ஏனைய விமர்சனங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிந்திருந்தது. அவரின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தினைப் பார்வையிட்ட ஈழத்தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் களத்தின்/காட்சியமைப்புகளின் குறைபாடுகள். ஆயினும் களநிலவரத்தினை நேரில் பார்த்திருந்திராத தமிழக நண்பர்கள் பலர் இப்போதும் அப்படத்தினை சிலாகித்துக்கூறுவது சிலவேளைகளில் சிரிப்பினையே ஏற்படுத்துவதுண்டு. ஆயினும் அப்படத்தினுாடக சில நியாயங்களை வெளிப்படுத்தியிருந்தமை வரவேற்கத்தக்கதே. சிலவேளைகளில் மணிரத்தினம் அவர்களினால் ஈழத்து அவலங்களைக் கற்பனை செய்து பார்ப்பது கடினமானதாக அமைந்திருந்திருக்கக்கூடும். உதாரணத்திற்கு இடம்பெயரும் மக்கள் தலைக்கு மேலே வட்டமிடும் உலங்கு வானூர்தியினை வேடிக்கை பார்ப்பது போல் ஒரு காட்சியமைப்பு அமைந்திருந்தது. உலங்குவானூர்திகளைக் கண்டால் மக்கள் எப்படி ஓடி மறைவார்கள் என்பது அனுபவித்தவர்களுக்கே தெரியும். தூரதிர்ஷ்டவசமாக அந்த வகையிலேயே இந்த ராவணன் திரைப்படமும் அமைந்துவிட்டிருப்பது வேதனைக்குரியதே.

இராவணன் ஒரு காமுகன், கொடியவன், அரக்கன் என்றெல்லாம் பக்கச்சார்பானவர்களால் புனைந்துவிடப்பட்டுள்ள இதிகாசங்களையே எமது முன்னோர்கள் எம்மிடம் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பார்கள். தோல்வியைத் தழுவிய புரட்சிகள், கிளர்ச்சிகள் என மாற்றப்படுவதும், மிகைபலத்துடன் வெற்றியடைந்துவிட்ட கிளர்ச்சிகள் புரட்சிகளாக வரலாற்றில் காட்டப்படுவதும் சர்வசாதாரணமானது. நீ தோல்வியடைந்துவிட்டால், எதனால் தோல்வியடைந்தாய் என்பதை விளக்குவதற்கு நீ இருக்க மாட்டாய். வெற்றியடைந்து விட்டாலோ நீ எப்படி வெற்றியடைந்தாய் என்பதைக் கூறவேண்டிய அவசியம் உனக்கு இருக்காது என்பார்கள். இதுதான் வாழ்க்கை. வென்றவனைப் போற்றுவதே வரலாற்றின் வாடிக்கை. ஒருவனை நல்லவனாய்க் காட்ட வேண்டுமெனில் மற்றொருவனைக் கெட்டவனாய்க் காட்ட வேண்டியது அவசியமாகி விடுகிறது. ஏனெனில் நல்லது என்று தனித்து ஒன்று கிடையாது. ஒப்பீடுதான் நல்லது கெட்டது என்று வகைப்படுத்துகிறது. ஆக ஒரு சாதாரண அரசனான இராமனை ஒரு அவதார புருஷனாகக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்காக இராவணனை கெட்டவனாகச் சித்தரிக்கப்பட வேண்டிய கடப்பாடு இராமயண கதாசிரியர்களுக்கு உண்டாகி விடுகிறது. (அவர்களும் தங்கள் வயிற்றுப் பிழைப்பினைப் பார்த்தாக வேண்டுமே). அதிலும் கம்பர் இன்னும் ஒருபடி மேலே போய் வான்மீகி இராமயணத்தையே தமிழில் தான் மொழிபெயர்த்ததாய் அவையடக்கம் செய்துவிட்டு தன் கற்பனைகளை அள்ளிவிட்டு இராமனைப்பற்றிப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இராமனை ஏகபத்தினி விரதனாய்க்காட்டி இராவணனை ஒரு காமுகனாய்ச் சித்தரிப்பதனூடாக இராமனை உயர்த்தி விட்டிருக்கிறார். ஆனால் மணிரத்தினம் அவர்கள் இந்தச் சிக்கல்கள் எதுவும் எழுந்துவிடாமல் தவிர்ப்பதற்காய் இந்தியிலும் தமிழிலும் தனது ராவணனை தானே இயக்கி ஒரே நேரத்தில் வெளியிட்டிருப்பது பாராட்டிற்குரிதே.

இராமாயண கதாபாத்திரங்களான இராமன், இலக்குவணன், சீதை, அனுமன், சடாயு, இராவணன், சூர்ப்பணகை போன்ற பல கதாபாத்திரங்களும் இந்த ராவணன் படத்தில் காட்டப்பட்டிருந்தாலும் இராமாயண கதையோட்டத்திற்கேற்ப அவர்களுக்கிடையிலான காலத்தொடர்புகள் அமைந்திருக்கவில்லை. இராமாயணத்தில் சடாயுவை சந்தித்த பின்னரே அனுமரை இராமன் கூட்டணி சந்திக்கிறது. இங்கே அனுமராக உருவகிக்கப்பட்ட பாத்திரம்தான் சடாயுவாக உருவகிக்கப்பட்ட படகோட்டியைக் கண்டுபிடிக்கிறது. அந்தப் படபோட்டியும் சடாயு பாணியில் ஐஸ்வர்யாராயைக் கடத்திச் சென்ற திக்கைக் காட்டி விட்டு கதையிலிருந்து மறைந்து விடுகிறது.

“ஆண்கள் நீங்கள், உங்கள் சண்டையில் எதற்காய், பெண்களாகிய எங்களைப் பகடைக்காய் ஆக்குகின்றீர்கள்?” என்கின்ற நியாயமான கேள்வியினூடாக காலங்காலமாய் பெண்கள்மீது திணிக்கப்பட்டுவரும் ஆணாதிக்க மனோபாவம் தோலுரிக்கப்படுகிறது. இராமனைக் கண்டு மயங்கி, அவனை அடைய முற்பட்டதாலேயே இலக்குவணன் சூர்ப்பணகையின் காது, மூக்கு முலைகளெல்லாம் அறுத்தெறிந்தானாம். ஒரு பெண்ணை இதைவிட கேவலப்படுத்திவிட முடியுமா? அப்படிச் செய்வதற்கு யார் இராம இலக்குவணன்களுக்கு உரிமை தந்தது? எந்த வகையிலே இதை நியாயப்படுத்த முடியும்? பிறபெண்களின் விருப்பின்றி இராவணன் அவர்களை அடைந்தால் அவன் தலைகள் வெடித்து இறப்பான் என்கின்ற சாபத்தினாலேயே இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்கிறது இராமயணம். அது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அவன் சீதையை இப்படிக் கேவலப்படுத்தவில்லையே. இராமாயண கதாசிரியர்களின்படி அவன் ஒரு காமுகனாக இருந்திருந்தால் தன் முடிவு தெரிந்திருந்ததும் அவன் சீதையைப் பலாத்காரப்படுத்தியிருந்திருக்கலாமே. அவர்கள் சொல்வது உண்மையென வைத்துக் கொண்டாலும் அவன் சீதையைக் காதலித்திருக்கின்றான் என்றே கொள்ள வேண்டும். அதைத்தான் தனது ராவணன் திரைப்படத்தினூடாக மணிரத்தினம் அவர்கள் சொல்லியிருக்கிறார். ஆனாலும் அவர் சொல்ல மறந்த அல்லது சொல்லாமல் மறைத்த உண்மைகள் ஏராளம் (அவைபற்றிய மேலதிக தகவல்களுக்கு படங்களாக இணைக்கப்பட்டிருப்பவற்றைப் பாருங்கள்). இயக்கனர் செல்வராகவன் அவர்களின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு காட்சி, காதலிற்கும் காமத்திற்கும் இடையிலான அந்த மெல்லிய கோட்டினைக் காட்டிச் செல்கின்றது. பெண்ணின் விருப்புடன் அவளைத் துய்க்க விரும்புவது காதல். பெண்ணின் இசைவின்றிப் பலாத்காரமாக அவளை அனுபவிக்கத் துடிப்பது காமம். அந்த வகையிலே இங்கே ராவணன் காமுகன் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்கிறார் இயக்குனர் மணிரத்தினம்.

ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே என்பார்கள். அது எந்தளவுக்கு உண்மையோ பொய்யோ பெரும்பாலான இந்துமத புராணங்களில் விரோதிகளாகச் சித்ததரிக்கபட்டிருக்கின்ற பெரும்பாலோனோரின் அழிவுகளுக்கு பெண்களே காரணமாக இருந்திருக்கின்றார்கள். அந்த வகையிலேயே தன்னால் தன் தங்கையை மானபங்கப்படுத்தியமைக்குப் பழிவாங்கும் முகமாக தான் அனுபவித்த அதே வலிகளை அதைத் தந்தவனுக்கே திருப்பித்தரும் எண்ணத்துடன் ஐஸ்வர்யாராயைக் கடத்தி வந்திருந்தாலும், மலைநாட்டுக் கரும்பாறை மேலே தலைகாட்டும் சிறுபூவைப்போல பூத்த அந்தப் பொல்லாத காதல் இந்த வீரா என்கின்ற ராவணனுக்கும் ஏற்பட்டு விடுகிறது. காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் படுத்திருக்கும். அதன் இரண்டு கண்களும் மூடுவதில்லை ஒருகண் விழித்திருக்கும். அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு வெளியே குதித்துவிடும். அந்த மிருகம் தான் இந்த ராவணனையும் கொன்று குவித்திருக்கிறது. “நீ என்னைத் தேடி வந்தாயா? அல்லது வீராவைத் தேடி வந்தாயா? என்கின்ற ஐஸ்வர்யாராயின கேள்வியில் பெண்மையின் ஏக்கமும் கோபமும் பொங்கி வழிகிறது. “பதினான்கு நாட்கள் வீராவுடன் இருந்தாயே, அவன் சொக்கத்தங்கமாக இருந்த உன்னை எச்சத் தங்கம் என்று சொன்னானே” என்கின்ற பிரதிவிராஜின் கூற்று அன்றும்சரி இன்றும்சரி ஆண்கள் பெண்களின் உள்ளத்தூய்மையிலும் உடலின் கற்பையே அதிகம் கொண்டாடுகின்றார்கள் என்கின்ற யதார்த்தத்தினை அடித்துச் சொல்கிறது.

இராவணன் பற்றிய என் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த காரணமோ அல்லது வேறேதேனும் காரணங்களோ ஏனோ தெரியவில்லை மணிரத்தினம் அவர்களின் இந்த ராவணன் திரைப்படக்கதை சப்பென்றிருந்தது.













Friday, May 28, 2010

தேடலும் தொலைத்தலும்!













ஒவ்வொரு முறையும்
எங்கேயென்றே தெரியாத
ஏதாவதொரு புள்ளியில்தான்
ஆரம்பிக்கின்றன
எனது தேடல்கள்!











நுாலின் ஒற்றைநுனி பற்றி
சிக்கெடுக்கும்
பக்குவத்துடன்தான்
ஆரம்பிக்கின்றன
ஒவ்வொரு தடவையும்.












இழையோடும் பாதையோடு
விழைந்து செல்லும்
விழிகள், விட்டுவிடும்
இடம்தான் ஈற்றில்
புரிபட்டு விடுவதில்லை.













எதிலோவெல்லாம் தொடங்கி
எங்கோவெல்லாம் சேர்ந்து
சோர்ந்து போகையில்
மறந்து விடுகின்றன
முடிவிடப் புள்ளிகள்.












அமர்க்களமாய் ஆரம்பித்தாலும்
இதோ! இப்படித்தான்!
ஈற்றில் என்னவென்றே தெரியாமல்
தொலைந்து போகின்றன
அந்தத் தேடல்கள்!

Tuesday, May 18, 2010

முட்டையும் முள்ளிவாய்க்காலும்


பூமிப்பெண்ணும் இந்த
ஆமைப்பெண் போல்தான்
அன்றொருநாள் சூல்கொண்டாள்

ஆயிரம் முட்டைகளின்றியொரு
அக்கினிக் குஞ்சிற்காய்
அடை காத்தாள்.

அடங்காப்பற்றினை அண்டி
அன்னியர் அயலவர்
அனைவரும் வந்தனர்.

இருபத்தொரு தலைமுறைக்கு
கருவறுத்த பரசுராமன்
பரம்பரைதானேயது!

இருபத்தொன்றுக்கு பழிதீர்ப்பதாய்
பகையுடன் சேர்ந்து பதினெட்டில்
பகடையாடியதாம்.

பாருங்கள் இப்படித்தான்...





















Saturday, May 8, 2010

வேரென நீயிருந்தாய்... (12)


அதுவொரு வெள்ளி இரவு. குறிஞ்சிக்குமரன் கோவிலிலிருந்து எங்களில் சிலரையும் அழைத்துக்கொண்டு இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

என்னருகில் வந்த ஒருவன்,

எனக்குப் பின்னால என்னோட வா” என்று சொல்ல சரியென்று தலையாட்டினேன்.


பள்ளிவாசல் அருகிலிருந்த பள்ளத்தாக்கின் ஒற்றையடிப் பாதையினூடக இறங்கி, படிக்கட்டினை அடைகையில்,

டேய்! எத்தனை படிக்கட்டு எண்டு எண்ணிக்கொண்டு வாறாய். கீழ வந்ததும் சரியாச்சொல்ல வேணும். இல்லையெண்டால் திரும்பவும் மேல ஏறி எண்ணிக்கொண்டு வரவேணும் சரியா?”

படிக்கட்டுகளை எண்ணிக் கொண்டே அவர்களுடன் இறங்கத் தொடங்கினேன்.

என்னடா உன்ரை பெயர்?

“திடுக்கிட்ட தீவான்”

இப்ப உனக்கு என்ன ராக்கிங்கே நடக்குது? card name-ஐச் சொல்லு

“ஜெயந்தன்”

அப்பன் இல்லையோடா உனக்கு?

“சுந்தரலிங்கம் ஜெயந்தன்”

எந்த இடம்?

“வேலணை.”

கொப்பர் என்ன வேலை பாக்கிறேர்?

அமைதியாயிருந்தேன்.

கேட்டது விளங்கேல்லையா?

“இல்லை. விளங்கினது”

அப்ப ஏன் பதில் சொல்லேல்லை?

அப்பா உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில் என்னவென்று சொல்வது? மீண்டும் மௌனமாயிருந்தேன்.

என்னடா? அப்பா செத்துப்போய்ற்ரேரா?

மீண்டும் பதிலளிக்காதிருந்தேன்.

சரி வீட்டிலை எத்தினை பேர்?

“ரெண்டு பேர்.”

ஆராரு?

“நானும் அம்மாவும்”

கூடப்பிறந்த ஆக்கள் ஒருத்தரும் இல்லையோ?

அக்காவைப்பற்றி இங்கே இருக்கும் சூழ்நிலையில் எப்படி சொல்ல முடியும்? மௌனமாயிருந்தேன்.

என்ன? ஒழுங்காக் கேட்டால் பதில் சொல்லமாட்டியளோ? ராக்கிங் குடுத்தாத் தான் சொல்லுவியளோ?

“இல்லை என்னோட கூடப்பிறந்த ஆக்கள் ஒருத்தரும் இல்லை.”

சரி! இது வரைக்கும் எத்தினை படி இறங்கியிருக்கிறம்?

“எண்ணேல்லை”

ஏன்?

“உங்களோடை கதைச்சுக் கொண்டு வந்ததில எண்ண மறந்திற்றன்”

ஏன்ரா? ஒரே நேரத்தில ரெண்டையும் செய்ய உனக்குத் தெரியாதா? multi tasking எண்டு கேள்விப்படேல்லையா?

மௌனமாயிருந்தேன்.

உனக்கு இறங்க முதல் என்ன சொன்னான்? போ! மேல ஏறிப்போய் திரும்ப எண்ணிக்கொண்டு வா!

மேலே ஏற,

உன்னோட கனக்கக் கதைக்க வேணும். கீழ வந்து என்னைச் சந்திக்க வேணும். சரியா?

சரி என்று சொல்லியவாறே மேலே ஏறினேன். இருபது படிகள் வரை ஏறியிருப்பேன். எதிரே வந்தவர்களில் ஒருத்தன்,

அண்ணை எங்க மேல போறாய். வாடா எங்களோட”.

அவர்களுடன் சேர்ந்து கீழே இறங்கி நடக்கலானேன்.

டேய்! உன்னை என்னோடையெல்லா வரச்சொன்னான்.

அவன் எங்களோடைதான் வருவான்.

அவங்களோடை போனால் நீ பிறகு என்னட்டைச் செத்தாய் மவனே.

என் நிலை இருதலைக்கொள்ளி எறும்பானது. இப்போது எந்தப் பக்கம் போனாலும் மற்றப் பக்கத்தினரின் ஆத்திரத்திற்கு உள்ளாக வேண்டிய நிர்ப்பந்தம். முன்னவருடன் சென்றால் பின்னால் வந்த மூவரினதும் கோபத்திற்கு ஆளாகவேண்டும். இவர்களுடன் சென்றால் அவர் ஒருவரின் கோபத்திற்கு மட்டுமே ஆளாகவேண்டும். எனவே பின்னால் வந்தவர்களுடன் இணைந்து செல்லலானேன். அவர்களுடனேயே 'ஐடியல்' இல் இரவுணவை முடித்துவிட்டு வெளியே வந்தேன்.

ஏன்ரா அவனை விட்டிட்டு எங்களோட வந்தனி? நீ அவனோடையெல்லா போயிருக்கோணும். அவனிட்டத் துலையப்போற

என்று அவர்கள் சொன்னதும் பகீர் என்றது.

சரி சரி. இண்டைக்கு எங்களோட எங்கட றூமுக்கு வா!

அக்பர் விடுதிக்குச் செல்லலாம் என்ற நினைப்பில் மண் வீழ்ந்தது.

அவர்களின் இருப்பிடத்தை அடைந்ததும்,

இன்னும் கொஞ்சநேரத்தில அவன் வந்திருவான். உன்னைக் கண்டான் எண்டால் துலைப்பான். அறைக்குள்ள போய்ப்படுத்து நித்திரையைக் கொள்ளு

அட! அவர்கள் எல்லோருமே ஒரே வீட்டில்தான் தங்கியிருக்கிறார்களா? நெஞ்சம் படபடக்க அறையினுள் சென்று படுத்துக்கொண்டே, காதைத் தீட்டி வைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் அவனின் குரல் கேட்டது.

மச்சான்! உன்னட்டை ஒரு விசிற்றர் வந்திருக்கிறேரடாப்பா.

என்னைத்தான் போட்டுக்கொடுக்கிறார்கள் என்பது விளங்கியது.

ஆரடா?

றூமுக்குள்ள படுத்துக்கிடக்கிறான். போய்ப்பார்”.

அறையின் மின்குமிழ் ஒளிர்ந்தது.

அட பேய்ப்....எழும்பி வெளியால வாடா

அட்ரீனலினின் அதிஉச்ச சுரப்புடன் வெளியே வந்தேன்.

அடியடா ரிப்ஸ். சொல்லும்மட்டும் நிப்பாட்டக்கூடாது.

சொல்லி விட்டு அறையினுள் நுழைய, நான் ரிப்ஸ் (தண்டால்) அடித்துக் கொண்டிருந்தேன்.

டேய் என்ன செய்யிறாய்?
அப்போதுதான் வீட்டினுள் நுழைந்திருந்த வேறொருவன் என்னைப் பார்த்துக் கேட்டான்.

நிப்பாட்டீற்று எழும்பு!

எழுந்தேன்.

என்னடா பேர்?

“சுந்தரலிங்கம் ஜெயந்தன்”

எந்த இடம்?

“யாழ்ப்பாணம்”

யாழ்ப்பாணம் எவ்விடம்?

”வேலணை”

வேலணை எங்க? அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு என்ன பேர்? மறந்து போச்சு. அதுக்குக் கிட்டவா?

யாழ்ப்பாணத்தில் எல்லா ஊர்களிலும் கோயில்கள் இருக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு யாழ்ப்பாணமே தெரியாதவர்கள் எல்லாம் அந்தப் பிள்ளையார் கோயிலுக்குக் கிட்டவா வீடு என்றோ அல்லது இந்த வைரவர் கோயிலுக்குக் கிட்டவா வீடு என்று கேட்டு ஏதோ தானும் அந்த இடத்தைச் சேர்ந்தவன்தான் என்று காட்டிக் கொள்வதைப் பலமுறை அனுபவத்தில் கண்டிருந்ததால் எரிச்சல் வந்தது.

டேய்! உன்னை என்ன சொல்லீற்றுப் போனான்? ஏன் எழும்பினனீ? அடியடா ரிப்ஸ்

கொஞ்சம் பொறு மச்சான். நான் இவனோடை கொஞ்சம் கதைக்க வேண்டியிருக்கு

நீ எவ்வளவு நேரமெண்டாலும் கதை. இவன் இண்டைக்கு இஞ்சதான் இருக்கப்போறான். இண்டைக்குத்தான் இவனுக்கு என்னைப்பற்றித் தெரியப் போகுது.

வேலணை எவ்விடம்?

“மணியாறன் வீட்டடி.”

மணியாறன் வீட்டடியோ?

“ஓம்!”

அப்பர் என்ன வேலை?

மௌனமாயிருந்தேன்.

அப்பர் இல்லையே? செத்திற்றேரே?

சரிசரி. எல்லாரும் ஒருநாள் சாகிறதுதான். என்ன வேலை செய்தவர்?

“கடை வைச்சிருந்தவர்”

எங்கை?

“வங்களாவடியில”

ஓ! அப்ப நீ, வேலணை சென்றலில படிச்சனியா?

“ஓம்”

எத்தனையாம் ஆண்டு வரைக்கும் படிச்சனி?

“91 இல முழுசா இடம்பெயருற வரைக்கும் படிச்சனான்”

அப்ப பள்ளிக்கூடத்தில என்னைக் காணேல்லையா?

“கண்டது போலதான் இருக்கு. சரியா ஞாபகமில்லை”
சும்மா சடைந்தேன்.

ம்ம்ம்... நீ மணியாறன் வீட்டடி எண்டு சொன்னனி என. ஆ! உனக்கு ஜெயந்தினியைத் தெரியுமா?

நெஞ்சு திக்கென்றது. அங்க இங்க சுத்திக் கடைசியா அடிமடியில கையை வைச்சிட்டானே.

“எந்த ஜெயந்தினி?”

90 ஆம் ஆண்டு எந்த வகுப்பில படிச்சனீ?

“8ம் வகுப்பு”

அவள் அப்ப என்னோட O/L படிச்சுக் கொண்டிருந்தவள். அவளும் மணியாறன் வீட்டடிதான்.

“தெரியேல்லை”.

வடிவா யோசிச்சுப்பார். ஒரு நீலக்கலர் லேடீஸ் சைக்கிளில வாறவள்.

ஆரையடா விசாரிக்கிறாய்?” - இடையில் புகுந்தான் அவன்.

ஜெயந்தினி எண்டு ஒரு சுப்பர் சரக்கு மச்சான். என்னோட படிச்சவள். 90 ஆம் ஆண்டு பிரச்சனைக்குப் பிறகு அவளைக் காணக்கிடைக்கேல்ல.

இஞ்ச வா! உனக்கு அவளத் தெரியாதோ? உங்கட வீட்டுக்குக் கிட்டத்தான் அவளும் இருந்திருக்க வேணும்.

“ஞாபகம் இல்லை அண்ணே!”

அவளின்ர அப்பர் வங்களாவடிச் சந்தியில கடை வைச்சிருந்தவர். நல்லா யோசிச்சுப்பார். அவளுக்குத் தம்பியும் ஒருத்தன் இருந்தவன். உங்களோட தான் படிச்சிருப்பான் எண்டு நினைக்கிறன்.

“எனக்கு நினைவில்லை அண்ணே!”

பொய் சொல்வதென்று முடிவெடுத்த பின் அதில் தளம்பக்கூடாது என்பதை கடந்தகால பகிடிவதை அனுபவங்களிலிருந்து உணர்ந்திருந்ததால் பொய்யுரைத்தேன்.

நீ சுத்துறாய்

“இல்லையண்ணே!”

உன்ரை அப்பரும் வங்களாவடியில தானே கடை வச்சிருந்தவர்?

தயக்கத்துடன் தலையசைத்தேன். பிடி கொடுத்து விட்டேன் என்கின்ற பயம் வயிற்றைக் கலக்கியது.

மச்சான்! நீ செமையாச் சுத்துற. ஆனா இன்னொரு வேலணையானுக்குச் சுத்துப்பாக்கிறாய் எண்டது உனக்கு விளங்கேல்ல. ஜெயந்தினி, ஜெயந்தன் பேர்களைப் பார்க்க விளங்கேல்லை? டேய் நீ அவளின்ர தம்பி தானே. உண்மையைச் சொல்லு அவள் இப்ப என்ன செய்யிறாள்?

ஆட்களை அறியாமல் அக்காவைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும்? நாக்குக் கூசினாலும் எனக்கு அப்பிடியொரு அக்காவே இல்லை என்றேன்.

மச்சான் டேய்! இவன் செமச்சுத்துச் சுத்துறான் மச்சான். இவனோட இனிக் கதைச்சு வேலையில்ல. நீயே கவனிச்சுக் கொள்ளு

சொல்லிவிட்டு என்னை விட்டுவிட்டு விலகினான்.

அண்ணை நீ ரிப்ஸை அடிக்கத் தொடங்கு

50 இற்கு மேல் தாண்ட முடியவில்லை. pushup பண்ண முடியாமல் அப்படியே படுத்து விட,

என்ன களைச்சுப் போயிற்றியே? எத்தனை ரிப்ஸ் அடிச்சனீ?

“அம்பது”

சரி எழும்பித் தோப்புக்கரணம் போடு. அஞ்ஞூறு (500) தோப்புப் போட வேணும்.

மண்டை விறைத்தது. என்னால் அவ்வளவு போட முடியாது என்பது புரிந்தது. எதுவும் செய்யாமல் அப்படியே நின்றேன்.

என்னடா முறாய்க்கிறாய்? போடச் சொன்னால் போட மாட்டியா?

அமைதியாய் இருந்தேன்.

சரி! அப்ப நீ வெளியால போ. நீ அன்ரி ராக்கர் எண்டு நான் மற்றாக்களுக்கு inform பண்ணி விடுகிறன். நீ இனி ஒருத்தரிட்டையுமே ராக்கிங் வாங்கத் தேவையில்லை.

அதற்கும் அமைதியாயிருந்தேன்.

போடா வெளிய. அன்ரி ராக்கர் எல்லாம் இஞ்சை வரக்கூடாது.

அன்ரி ராக்கர் ஆக மாறி விட்டால் பிறகு instructors-மாரிடம் சொல்லி course works எல்லாம் fail-ஆக்கிப் போடுவாங்கள். ஒரு நிகழ்ச்சிகளுக்கும் போக விடமாட்டாங்கள். எல்லாரும் ஒருமாதிரித்தான் பார்ப்பார்கள். படிப்பை முடிச்சு வெளியால வாறதே சரியான கஷ்டம் எனப் பரவியிருந்த பலவிதமான வதந்திகளையும் உண்மையென நம்பியதன் விளைவாக தன்னிச்சையாக வெளியே செல்ல முயன்ற கால்களை மூளை தடுத்து நிறுத்தியது.

“நான் தோப்புக் கரணம் போடுறன் அண்ணே!”

அப்பிடியெண்டால் ஆயிரம் தோப்புக்கரணம் போடவேணும். போடு

ஆரம்பித்தேன். சிறிது நேரத்தின் பின்னர்,

எத்தின போட்டிட்டாய்?

“நூற்றிமுப்பத்தெட்டு”

ம்... தொடர்ந்து அடி

அடித்துக் கொண்டேயிருந்தேன்.

மீண்டும் சிறிது நேரத்தின் பின்,

இப்ப எத்தின?

“முன்னூற்றிப்பன்னிரெண்டு”

அதுக்குள்ள முன்னூற்றிப்பன்னிரெண்டு அடிச்சிற்றியோ? சிலோவாப் (slow) பண்ணு. பிறகு உடம்புக்கு ஏதாவது ஆகீரும்

ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுதிச்சாம். மனதிற்குள் வன்மம் பிறந்தது. கடவுளே எனக்கு ஏதாவது ஆக வேண்டும். அதன் பழி இவன் மீது விழவேண்டும். எல்லோரும் இவனைக் கேவலமாய்ப் பார்க்க வேண்டும். நான் செத்தாலும் பரவாயில்லை. இவன் பழிவாங்கப்படவேண்டும் என்கின்ற விபரீத எண்ணம் ஆற்றாமையின் உச்சக்கட்டத்தில் வந்து நின்றது. மிக மிக வேகமாக தோப்பக்கரணம் போடத் தொடங்கினேன்.

இப்ப எத்தினை?

“அறுநூற்றியெழுபத்தெட்டு”

காணும் நிப்பாட்டு

“நீங்கதானே ஆயிரம் போடச் சொன்னீஙங்க!”

அது அப்ப. இப்ப சொல்லுறன், காணும் நிப்பாட்டு

நிறுத்தாமல் அடித்துக் கொண்டிருந்தேன்.

நீ என்ன அன்ரி ராக்கரா?

“இல்லை”

அப்ப சொல்லுறது கேக்க வேணும். நிப்பாட்டு எண்டால் நிப்பாட்ட வேணும்

மதம் கொண்ட யானையின் நெற்றியில் அங்குசத்தால் குத்துகையில் எப்படி அதன் வெறி தணிகிறதோ, அப்படியே அன்ரி ராக்கர் என்கின்ற மந்திரச் சொல்லுக்கு என் மனமும் ஏனோ பணிந்து விட்டது.

களைச்சுப் போனாய். இந்தா ரீ-யைக் குடி

விசர் விசராய்க் கிளம்பியது. குடிக்க மறுத்தேன்.

இதுவும் ராக்கிங்தான். குடிக்க விருப்பமில்லையெண்டால் அன்ரி ராக்கர் எண்டு சொல்லீற்று வெளிய போ!

தந்த தேனீரைக் குடித்தேன்.

சரி! அக்பருக்கு இப்ப போகப் பயமெண்டால் இங்கையே படுத்திற்று விடிய எழும்பிப் போ!

“இல்லை நான் அக்பருக்கே போறன்”

அதுவும் நல்லம் தான். விடியேக்க ஆரும் கண்டாங்கள் எண்டால் பிறகு பிடிச்சுக் கொண்டு போயிருவாங்கள். ரோச்லைட் வேணுமா நேரம் ஒரு மணியாகப் போகுது

”வேண்டாம்”

தனியப் போகப் பயமெண்டால் றோட்டுவரைக்கும் வரவா?

சிரிப்பாய் வந்தது. அங்குணாவலையில் இருக்கையில் ராக்கிங் முடிந்து நடுச்சாமம் 12 மணிக்குப் பின்னரும் கூட சுடுகாட்டினைக் கடந்து இருப்பிடத்திற்குச் சென்றிருக்கிறேன். அந்தளவிற்கு பகிடிவதை பற்றிய பயம் பேய்கள் பிசாசுகள் பற்றிய பயத்தினை விரட்டி விட்டருந்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கிருந்து நகரச் சொல்லி மனம் கூறியது.

“இல்ல நான் போயிருவன்” கூறிவிட்டு, விரைவாக நடக்க முடியாமல் கால்தொடைகளுக்குள் பிடித்துக் கொண்டதால் மெதுவாக நடந்து 15 நிமிடங்களில் அடைய வேண்டிய அக்பர் விடுதியினை 40 நிமிடங்களில் சென்று சேர்ந்து எனது அறையினை அடைந்தேன்.

என்னடா? இப்பத்தான் வாறியா? ஆரு பிடிச்சுக் கொண்டு போனவங்கள்?
அறைக்கதவைத் திறக்கையில் எழுந்த சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்டு கேட்டான் அறை நண்பன் தீபன்.

“மச்சான்! இவ்வளவு நாளும் நான் ஒருத்தருக்கும் ராக்கிங் குடுக்கிறதில்லையெண்டுதான் இருந்தனான். இப்ப சொல்லுறன் மச்சான். அடுத்த batch-இல ஆராவது அந்தப் பேய்ப்....... தெரியுமெண்டு சொன்னாங்களோ அவங்கள் எல்லாரும் என்னட்டச் செத்தாங்கள் மச்சான்”

என்னை வியப்புடன் பார்த்த தீபன் எழுந்து விளக்கைப் போட்டான்.

என்னடா நடந்தது? இவ்வளவு நாளும் நாங்க தூஷணம் கதைச்சால் எங்களைப் பேசுறநீ, இண்டைக்கு நீயே தூஷணம் கதைக்கிற?

“அந்தப் பேய்ப்....யை வேற என்னெண்டு சொல்லுறது? எனக்கு மச்சான் தோப்படிச்சதோ இல்லாட்டி கறண்ட் வேண்டினதோ வலிக்கேல்லை மச்சான். தோப்படிக்கேக்க அந்தப் ... சொன்னான் மச்சான் மெதுவா அடி. இல்லாட்டி உடம்புக்கு ஏதாவது ஆகிருமாம். அதைத்தான் மச்சான் என்னால தாங்கேலாமக் கிடக்கு”

சரிசரி இதெல்லாம் சகஜமெடாப்பா? ராக்கிங் முடிய இன்னும் ஒருமாதம் தானே கிடக்கு. விண்டோஜின் வேணுமெண்டால் அந்த மேசை லாச்சிக்க கிடக்கு. எடுத்துப் பூசிற்றுப் படுடாப்பா

விளக்கை அணைத்து விட்டு தீபன் படுத்துக் கொண்டான்.

அவன் மீதான ஆத்திரம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அடுத்த batch-இல் அவனைத் தெரியுமென்று யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்களை வதைத்தெடுப்பதாய்த் தீர்மானித்துக் கொண்டதன் பின்தான் மனக் கொந்தளிப்பு ஓரளவிற்கு அடங்கியது.

***********

ஜேன்....! வலிக்குதாடா...?

“அக்கா..... நீ எப்படி இஞ்ச?”

எனக்கெல்லாம் தெரியும். உன்னைப்பற்றி நான் எவ்வளவோ நினைச்சு வைச்சிருக்கிறேன். அதையெல்லாம் கலைச்சுப்போடாதே

“நீ என்ன சொல்லுறாய்? எனக்கொண்டும் விளங்கேல்லை”

நீயும் இண்டைக்கு ஒரு பெம்பிளையை அதுவும் ஒரு தாயைக் கேவலமாய்ப் பேசிப்போட்டாய்தானே!.

“என்ன சொல்லுற நீ?”

தீபனிடம் உன்னை ராக் பண்ணினவனைப்பற்றி நீ தூஷணத்தால் பேசினனீ தானே. அவன் செய்த பிழைக்கு எப்படி நீ அவன்ர அம்மாவைப் பழிக்கலாம்?

அடடா! அகராதிகளில் அடங்காத செந்தமிழ் வார்த்தைகள் எல்லாமே பிறப்புறுப்புகளையும் பிறப்பித்தவளையும் பற்றிமல்லவா இருக்கின்றன. எதற்காக ஒருவனை ஏசுவதற்காக அவன் தாயைப் பழிக்க வேண்டும்? இதுவும் பெண்ணடிமைத்தனத்தின் மீதான ஆணாதிக்கத்தின் ஒரு வகை வெளிப்படா? உண்மையிலேயே ஒவ்வொரு ஆணின் தப்பிற்கும் அவன் தாய்தான் காரணமா? அப்படியானால் தந்தைக்கு அதில் எந்தப் பங்கும் கிடையாதா? “தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி யிருப்பச் செயல்” என்றாரே வள்ளுவர். பின் எதற்காக எனது தமிழ் சமூகம் ஒரு ஆணைத் திட்டுவதற்காய் அவன் தாயைக் கேவலப்படுத்துகிறது?. எல்லா சமூகங்களிலும் எதிராளியைத் திட்டுவதற்காய், எதிராளியின் அன்னை இழுக்கப்படுகிறாளா? குழப்பமாயிருந்தது. “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே...” பாடல் நினைவினில் வந்து போனது. அக்காவைப் பார்த்தேன். சிரித்தாள்.

எங்கடை அம்மாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? அப்பா இருக்கேக்கையும் சரி, ஆமி பிடிச்சுக்கொண்டு போனாப்பிறகும் சரி. உன்னைப் பிழையாவா வளர்த்திருக்கிறா?

“ஐயோ! என்ன கதைக்கிற நீ! எங்கட அம்மா, அவவை எதுக்கு இப்ப இதுக்குள்ள கொண்டு வாறாய். அவா என்ன பிழை செய்தவா?”

அடுத்த batch-இல உன்னட்ட ராக்கிங் வாங்கப் போறவனும் உன்னைத் திட்டுறன் எண்டு எங்கடை அம்மாவைத்தானே பழிக்கப்போறான்

நெற்றிப்பொட்டில் அறைந்தாற் போல் வலித்தது.

இன்று என்னை பகிடிவதைக்கு உட்படுத்தியவனுக்கும் அவனது பகிடிவதைக் காலத்தில் இப்படித்தான் வலித்திருக்குமோ? அவனது சீனியர் மேல் எழுந்த வன்மத்தை என்னிடம் பழி தீர்த்திருக்கிறான். நான் எனது ஜூனியர்களிடம் பழிதீர்க்க நினைத்திருக்கிறேன். இப்படியே தலைமுறை தலைமுறையாய் இந்த வினை கைமாறிக் கொண்டேயிருக்கப் போகின்றதா? இதுவும் இந்திய தமிழ்த்திரைகளில் வருகின்ற மாமியார் மருமகள் கொடுமை போன்றது தானா?

“அக்கா!” - கேவலுடன் எழுந்தேன்

அட! எல்லாமே கனவுதானா?

தொடைகளில் வலி பரவி வருவது தெரிந்தது. எழுந்து விண்டோஜினை எடுத்துத் தேய்த்துக் கொண்டேன். சற்று நேரத்திலேயே வலி குறைந்தது. நெஞ்சை அழுத்திப் பிடித்து வைத்திருந்த பாரம் ஒன்று விலகிச் செல்வதையும் உணர்ந்தேன். கனவில் வந்து என் மன வலிகளுக்கு களிம்பு தடவி களைந்து விட்டுச் சென்றிருக்கிறாள். எவ்வளவு நாசூக்காக நான் பண்ணவிருந்த தப்பினை உணர்த்திவிட்டிருக்கிறாள்? இப்படியொரு அக்கா கிடைக்க, நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? இனியெடுக்கும் எல்லாப்பிறப்பிலும் இந்தப் பந்தம் தொடரவேண்டும். இறையே! நீ இருப்பது உண்மையோ பொய்யோ நானறியேன். ஆனாலும் உன்னிடம் எனக்கொரு வரம் வேண்டுமென்றால். என் எல்லாப் பிறப்பிலும் இநதப் பந்தங்களைத் தொடரச் செய்வாயாக!

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11

Thursday, May 6, 2010

வேரென நீயிருந்தாய்... (11)


அது முதலாண்டிற்கான கற்கை நெறிகள் ஆரம்பமாகி இரு தினங்கள் கழிந்து வந்த முதலாவது புதன் கிழமை. செவ்வாய்க்கிழமை முழுதும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட விரிவுரைகளை விளங்கிக்கொள்ள முடியாமலிருந்ததால் தூக்கக்கலக்கத்தில் நாள் கழிந்திருந்தது. புதன் காலை Elect lab-இல் practical வகுப்பிற்குள் நுழைந்தேன். A2-6 குழுவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த மேசையை அடைந்துவிட்டிருக்கையில் வேறு யாரும் வந்து விட்டிருக்கவில்லை. மற்றைய குழுக்களில் அனேகமாக எல்லோருமே வந்து விட்டிருந்தனர். மூவர் கொண்ட குழுவில் நான் மட்டுமே தனித்திருந்தேன். என்னுடைய குழுவிற்கு வரவேண்டிய மற்றைய இருவரும் யாரெனவும் தெரியவில்லை. ஜெயக்கொடியும் என்னுடைய குழுவில்தான் இருப்பதாகத்தெரிந்திருந்தாலும் அவளை Surveying-இலோ அல்லது Drawing-இலோ காணக்கிடைக்கவில்லை. ஆய்வுகூடங்களில் என்னுடைய குழுவில் வருகின்ற உறுப்பினர்களைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாலும் அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து எனது மேசையை நாடி நதீஷா அரக்கப்பரக்க ஓடி வருவது தெரிந்தது. அட! Elect lab-இலும் இவள் எனது group mate தானா? அவள் வரவும் போதனாசிரியர் எமது மேசைக்கு வரவும் நேரம் சரியாயிருந்தது.

“Only 2 ppl? where is the other one?”

போதனாசிரியரின் வினாவிற்கு மௌனமாயிருந்தோம்.

“Do you know who is your other group mate?”

என்னை நோக்கிக் கேள்வியை வீசினார். தெரியாது என்பதற்கு அடையாளமாய் தலையசைத்தேன்.

“You?”
அவளும் பதிலுக்கு உதட்டைப் பிதுக்கினாள்.

“OK. Let me check the name list”

பெயர் நிரலைப் பார்த்து விட்டு “Are you Jeyarajan?” என்றவருக்கு


“No, I'm Jeyanthan” என்றேன்.

“Oh! OK, then he is the one abscent”

என்று சொன்னதைக் கேட்டதும் திகைப்பாயிருந்தது.

அப்படியானால் ஜெயக்கொடி? நான் அன்றைக்குப் பார்த்தபோது எனது பெயருக்கு முன்னால் ஜெயக்கொடி என்று இருந்ததே. தப்பாய்ப் பார்த்து விட்டேனா? இல்லை அப்படிக்கனவேதும் கண்டேனா? குழப்பமாயிருந்தது. ச்சே! இப்படி ஒருபோதும் குழம்பியதில்லை. எல்லாம் பகிடிவதை செய்கின்ற வேலைதான். அறை நண்பன் கடிக்கப்போகின்றான். அவனுக்கு எந்தவொரு குழுவிலும் பெண்கள் இல்லையென்பதை வைத்து அவனை வேறு, நன்றாக வெறுப்பேற்றியிருந்தேன்.

“OK, Show me your practical book's cover page.”

இருவரும் போதனாசிரியரிடம் எங்களது கொப்பிகளைக் கொடுத்தோம். வாங்கி அவற்றைச் சரிபார்த்தவர் மீண்டும் எங்களிடமே திருப்பித் தந்தார். என்னிடம் தந்ததை வாங்கி மேசையில் வைக்கையில் எதேச்சையாய் பார்த்தேன்.

Name: Miss. N. Jeyakkody
Group: A2-6
.....

அதிர்ச்சியாயிருந்தது. அப்படியானால் இவள்தான் ஜெயக்கொடியா? Surveying-இல் தன் பெயர் நதீஷா என்றாளே!. ஓ! நதீஷா ஜெயக்கொடி. அப்படியானால் ஜெயக்கொடி என்பது இவளின் முதற்பெயர். ச்சே! என்னவொரு மடத்தனம்! சிங்களத்தில் ஜெயக்கொடி என்பது ஆணின் பெயர் என்பது தெரிந்திருந்தும் இத்தனை நாளும் ஜெயக்கொடியை ஒரு தமிழ்ப்பெண்ணாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்திருக்கின்றேன். எனது குழுவில் ஒரு பெண்தான் என்பது தெரிந்திருந்தும், இவள் தனது பெயர் நதீஷா என்று சொல்கையில் 'J' வரிசையில் இருக்கும் பெயர்களுக்கிடையில் 'N' வரிசையைச் சேர்ந்த இவள் எப்படி வரமுடியும் என்பதை யோசித்துப்பார்க்கத் தவறியிருக்கிறேன். எப்படி என்னால் இந்த வட்டத்தை விட்டு வெளியே சிந்திக்க முடியாமல் போனது?

Miss. N.Jeyakkody என்கின்ற பெயரைப் பார்த்ததும், அந்தப் பெண்ணின் பெயர்தான் ஜெயக்கொடி என்று என் மனம் எதேச்சையாய் நம்பியிருக்கிறது. ஆகவே அவள் தமிழ்ப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று அது முடிவு செய்து விட்டிருக்கிறது. அந்த முடிவினை என்மனமும் ரசித்திருக்கிறது. ஆகவே அந்த முடிவினை உண்மையென்று அது நம்பத் தொடங்கியிருக்கிறது.

ச்சே! என்ன ஒரு முட்டாள்தனமான மனம்! அது ஒன்றினை விரும்பி, அதை நம்பத் தொடங்கிவிட்டால், அதன் பின்னர் அதுதான் உண்மையென்று அடம்பிடிக்கத் தொடங்கி விடுகிறது. அது சரியா தவறா என்கின்ற ஆராய்ச்சியில் அது இறங்குவதில்லை. தனது நம்பிக்கைக்கு வெளியே வந்து சிந்தித்துப் பார்ப்பதில் அது ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது காட்டமுடியாதபடி மூளையை மழுங்கடித்துவிடுகின்றது.

'Think out of the box' என்பார்கள். ஒரு பெட்டிக்குள் அல்லது வட்டத்திற்குள் மாட்டுப்பட்டு நிற்பவர்களால் பலதையும் சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது. மனித உறவுகளுக்குள் ஏற்படுகின்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கும் விரிசல்களுக்கும் இதுதானே மூலகாரணமாய் அமைகிறது. தங்களைச் சுற்றி ஒரு வேலியை வரித்துக்கொண்டு அதற்கு அப்பாலிருக்கின்றவை பற்றிய சிந்தனைகளின்றிப் போவதால் நான் சொல்வதுதான் சரி, நான் செய்வதுதான் சரி என்கின்ற பிரக்ஞையில் மற்றவர்கள் பக்கமிருக்கின்ற நியாயத்தன்மைகளை மறுக்கும் எண்ணம் மனதிற்குள் புரையோடிப்போய் விடுகிறது. இந்த மறுதலிப்பும் அதை வெளிக்காட்டும் பாங்கும் உறவுகளுக்குள் விரிசல்களை ஏற்படுத்தி விடுகிறது.

”என்ன அதுக்குள்ள டூயட்டா?”

-காதோரமாகக் கிசுகிசுத்த குரல் சிந்தனையைக் கலைத்தது. போதனாசிரியரின் நக்கல்ப் பார்வையைத் தவிர்ப்தற்காய் தலையைக் குனிந்து கொண்டேன்.

“அவளின்ர கொப்பியை அவளிட்டக் குடுத்திற்று உன்ரைய வாங்கு” என்றவர்

“OK. please go through the instruction and connect the circuit. Don't switch on the power. Once you connected it, first show it to me. OK?”

கூறிவிட்டு அடுத்த குழுவை நோக்கி நகர்ந்தார்.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10

Tuesday, May 4, 2010

வேரென நீயிருந்தாய்...(10)


பொறியியற் கற்கைநெறியின் முதலாம்நாள், அக்பர் விடுதிக்குள் குடியேறி இரண்டு நாட்களே கழிந்திருந்தன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எமக்கென தரப்பட்டிருந்த அறைகளைச் சுத்தம்செய்து ஒழுங்கு படுத்துவதிலேயே கழிந்து விட்டிருந்தது. காலை 8.00 மணிக்கு விரிவுரை மண்டபம் 8 இல் ஆரம்பித்த முதலாவது விரிவுரை 9.00 மணிக்கு முடிவுற Surveying Lab இற்கு விரைந்தேன். A2.4 குழுவிற்கான இடத்தினைத் தேடிக்கொண்டிருக்கையில், அட! அது அவளேதான். postal course வகுப்பில் முதற்தடவை சந்தித்ததன் பின்னர் இன்றுதான் அவளைக்காண்கின்றேன். அன்றைய அந்த வகுப்பின் பின்னர் அவள் வேறு வகுப்பிற்கு மாற்றப்பட்டிருந்திருக்கலாம். பகிடிவதை எல்லாவற்றையுமே மறக்கச் செய்திருந்தது. உண்மையில் நாம் சந்தித்த எவையுமே எமது நினைவுகளிலிருந்து அழிந்து விடுவதில்லை. மாறாக எம்மால் அவற்றைச் சரியான தருணங்களில் நினைவுபடுத்திக்கொள்ள முடிவதில்லை. சரியான தூண்டல்கள் கிடைக்கும் போது அனைத்துமே மறுபடியும் நினைவிற்கு வந்து விடுகின்றன. இல்லையெனில், மனோவியலாளர்களால் தம்மிடம் வருவோரை ஆழ்நிலை உறக்கத்திற்கு அழைத்துச்சென்று அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிய முடியாமல் போய்விடுமே!

என்பக்கமாய் பார்த்து அவள் புன்னகைப்பது தெரிந்தது. அட! என்னை நினைவினில் வைத்திருக்கின்றாளே என்று மனத்திற்குள் எழுந்த மகிழ்ச்சி மறுநொடியே காணாமல் போனது.

“ஒயாத் ஏரூ-த?” (நீங்களும் A2 வா?)
-என் பின்னாலிருந்து கேட்டவொரு பெண்குரலுக்கு,

“ஓவ்! மம ஏரூ-போர். ஒயா?” (ஓம்! நான் A2.4. நீங்க?)
-என்கின்ற அவளின் பதிலைக் கேட்டதும், அட இவளும் என்னுடைய குறூப் தான் எனத்தெரிந்தது. அவளின் இடத்தை அடைகையில் மேலும் இரண்டு ஆண்களும் வந்து விட்டிருந்தனர். எங்கள் குழுவிற்கான போதனாசிரியர் வந்ததும்,

“Where is the other one?”
-ஐவர் இருக்க வேண்டிய குழுவினில் ஒருவரைக் காணவில்லையென்பதை அறிந்து கேட்டார் போதனாசிரியர்.

அட! ஆமாம், ஜெயக்கொடியை இன்னும் காணவில்லையே? எங்கே போய்த்தொலைந்தாள்? எப்படியிருப்பாளோ? மனதிற்குள் வினாக்கள் எழுந்தன.

“OK. let me know your names. you are...?”

“I'm Jeyaweera from Matara”

“You...?”

“I'm Jeyasundra from Kegale”

“You...?”

“I'm Jeyanthan from Jaffna”

“And you...?”

“I'm Nadheesha from Kandy”

“OK. Please take all the things and follow me”

எமது குழுவிற்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த உபகரணங்களை எடுத்துக் கொண்டு அவரின் பின்னால் விரைந்தோம். ஜெயக்கொடிக்கு என்ன நேர்ந்திருக்கும் என மனம் யோசித்துக் கொண்டிருந்தாலும் ஏதோ ஒன்று விசித்திரமாயப் பட்டது. எனது முதல்நாள் ஆங்கில வகுப்பில் இவளை, என்ன பெயர் சொன்னவள்? ஆ! நதீஷா எப்போதோ கண்டிருப்பதாகவும், அவளுடன் நன்றாகப்பழகியிருப்பதாகவும் மனதிற்குத்தோன்றியிருந்தது. ஆனால் அதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் இருந்திருக்கவில்லை. ஆனால் இப்போது surveying lab இல், அவள் எனது groupmate ஆக வந்துசேர்ந்திருக்கிறாள். அப்படியானால், அதுவும் ஒருவகை தீர்க்கதரிசனம் தானோ? வேறு ஏதேனும் ஆய்வுகூடங்களிலும் இவள் என்னுடன் groupmate ஆக இருக்கின்றாளா என்று பார்க்க வேண்டும். அன்றைக்கு ஜெயக்கொடியின் பெயரைப் பார்த்ததில் மற்றவர்களில் கவனம் செலுத்தவில்லை என்பது மூளையில் உறைத்தது.

'மனமே மனமே! தடுமாறும் மனமே!
உள்ளுக்குள்ளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் போது நீயும் சிறகை விரிக்காதே. . .
'

உள்மனதிற்குள் பாடல் ஓடியது.

'ஜேன்! தப்புப் பண்ணுகிறாய். தேவையற்ற எண்ணங்களை உதறிவிட்டு வந்த வேலையைப்பார். உனக்கான இலக்குகள் வேறு' மனதின் வேறொரு மூலைக்குள்ளிருந்து அக்காவின் குரல் கேட்டதும் நினைவுகளை உதறிவிட்டு chain-ஐ எறிந்தேன்.

Wednesday, April 28, 2010

அப்பா என்றால் என்ன அம்மா?



அப்பா எண்டால் என்ன அம்மா?

பாடசாலையால் வந்திருந்த பள்ளிச் சிறுமி செல்வி. சுதந்திரி சிந்தனா விண்மினி தன் தாய்களில் ஒருத்தியான சிந்தனாவிடம் கேள்வியெழுப்பினாள்.

எதற்காக கேட்கிறாய் விண்?

விண்மினியை விண் என்று சுருக்கிக் கூப்பிடுவது சிந்தனாவின் வழக்கம். சுதந்திரிக்கோ விண்மினி எப்போதுமே மினி தான். இந்த விடயத்தில் ஏனோ சுதந்திரியும் சிந்தனாவும் முரண்பட்டுக் கொண்டாலும், கடந்த எட்டுவருட இல்வாழ்க்கையில் அவர்களுக்கிடையே வேறு பெரிதாக எந்தவொரு கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்ததில்லை. ஆயினும் சிந்தனாவிற்கு இப்போது சுதந்திரியின் போக்கில் சாடையான சந்தேகம் ஒன்று துளிர்விட ஆரம்பித்திருந்தது. ஒருவேளை விண்மினியின் இந்தக் கேள்விக்கு சுதந்திரி தான் காரணமாக இருப்பாளோ? சந்தேகம் என்பதும் கணினிக்கான ஒரு வைரஸ் போன்றதே. அது மூளையின் நினைவடுக்குகளினுள் நுழைந்து விட்டால் போதும். வெறும் சாதாரண விடயங்களுக்கெல்லாம் சந்தேகப்படும் விடயத்துடன் முடிச்சுப் போட்டு முழு மனதையுமே முடிந்து விட்டு விடும். அது சுயபுத்தியினை வேலை செய்ய விடாது.

சுதந்திரி அம்மா ஏதும் சொன்னாளா?

விண்மினியிடம் வினவினாள் சிந்தனா.

இல்லையம்மா!

அப்ப எதுக்கு அப்பாவைப் பற்றிக் கேட்கிறாய்?

இண்டைக்கு பள்ளிக்கூடத்திற்கு புதுசா வந்த பிள்ளை ஒண்டு தனக்கு அப்பா இருக்கு எண்டு சொன்னது. எனக்கு அப்பா எண்டால் என்னெண்டு விளங்கேல்ல என்ர பிறண்ட்ஸ்சிலையும் ஒருத்தருக்கும் அப்பா எண்டால் என்னெண்டு தெரியாதாம். அதுதான் கேட்டனான். அப்பா எண்டால் என்னம்மா?

ச்சே! அநியாயமாய் சுதந்திரியைச் சந்தேகித்து விட்டேன். தன்னையே நொந்து கொண்டாள் சிந்தனா.

தொடர்புபட்ட செய்தி: (நன்றி http://www.globaltamilnews.net/)


இருநூறு ஆண்டு காலமாக நீடித்து நிலைத்து நின்ற மரபை அடியோடு புரட்டிப் போட்டிருக்கிறது அண்மையில் இங்கிலாந்தில் நடந்தவொரு சம்பவம்.

குழந்தை பிறந்தால் அதன் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் தாயினுடையதும் தந்தையுடையதும் பெயரைப் பதிவு செய்யும் மரபு 170 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.

ஆனால் பிரிட்டனில் அண்மையில் கொண்டு வரப்பட்ட ஒரு (Human Fertilisation and Embryology Act 2008) சட்டம் ஒரு பால் உறவுப் பெற்றோரை பெற்றாரின் இடத்தில் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிட வகை செய்கிறது.

இதன்படி கடந்த வருடம் ஏப்ரல் 1இற்குப் பின்னர் கருக் கொண்ட குழந்தைகளுடைய ஒருபால் உறவுப் பெற்றோர் பிறக்கும் குழந்தையின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் தாய் மற்றும் தந்தை என்பதற்குப் பதிலாக தாய் மற்றும் பெற்றோர் என்று தனது ஒரு பால் உறவு இணையைக் குறிப்பிட இந்தச் சட்டம் வகை செய்கிறது.

இச்சட்டத்தின் கீழ் பிரிட்டனில் பிறந்து முதல் குழந்தை லில்லி மே. லில்லி மே கடந்த மார்ச் 31ஆம் திகதி பிறந்தாள். அவளுடைய தாய்மார்கள் நடாலி வூட்ஸ்(38) மற்றும் பெற்றி நொவெல்ஸ்(47) ஆவார்.


நடாலி வூட்ஸ்உம் பெற்றி நொவெல்ஸ்உம் 16 வருடங்களாக ஒரு பாலுறவுக்காரர்களாக இருந்து வருகிறார்கள். நடாலி வூட்ஸ் ஆண் ஒரு பாலுறவு மற்றும் பெண் ஒருபாலுறவு குறித்த மருத்துவ ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். பெற்றி நொவல்ஸ் விநியோகச் சாரதியாகப் பணியாற்றுகிறார்.

16 வருடங்களாக இருவரும் இணைந்து வாழ்ந்தாலும் எட்டு வருடங்களுக்கு முன்னர் தான் அவர்களுக்கு ஒரு குழந்தை தேவை என்று உணர்ந்தார்கள்.

நாங்கள் இருவருமே தாயாராக விரும்பினோம். நடாலி வூட்ஸ் தான் தாயாராவது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். இதனால் இலகுவாக எமக்கு முடிவெடுக்க முடிந்தது. அதேநேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் நாம் இருவருமே சட்டப்படி பெற்றாராக இருக்க அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அது பெற்றாராக வர விரும்பியிருந்த எம் இருவருக்குமே ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

என்கிறார் பெற்றி நொவெல்ஸ்.

குழந்தை பெறுவதாக முடிவு செய்ததுமே நடாலி வூட்ஸ் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். குழந்தை பெறுவதற்காக விந்து தானம் செய்யும் விந்து வங்கியூடாக விந்தைப் பெற்று கருத்தரித்தார்.

விளைவாக கடந்த மார்ச் 31இல் அழகான பெண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். முன்னைய சட்டங்களின்படி பெற்றாராக நடாலி வூட்ஸின் பெயர் மட்டுமே பிறப்புச்சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கும். ஆனால் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி ஒரு பால் உறவினைக் கொண்ட இருவருமே சமமாக குழந்தையின் பெற்றாராக கணிக்கப்படுவர் என்பதால் இருவரது பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நாங்கள் இருவருமே பெற்றாராக பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் கையொப்பமிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. நான் மட்டுமே சட்டரீதியான பெற்றார் என்ற கவலையிலிருந்து இது என்னை விடுவித்திருக்கிறது. என்கிறார் நடாலி வூட்ஸ்.

ஒரே பாலினத்தைச் சேர்ந்த எங்கள் இருவரது பெயர்களுமே பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதானது எங்களைப் போன்ற ஒருபாலுறவுக் குடும்பங்களுக்கு மேலும் அங்கீகாரம் வழங்குவதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு வரலாற்று முன்னுதாரணத்தை நாங்கள்; உருவாக்க விரும்பினோம் என்றும் வூட்ஸ். வலியுறுத்துகிறார்.


பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் 170 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த தாய் தந்தையரின் பெயரைக் குறிப்பிடும் வழக்கத்தை இது மாற்றி இருக்கிறது. தற்போதைய பிறப்புச் சாட்சிப்பத்திரமோ தந்தையுடைய பெயரை அதிலிருந்து விடுவித்து இருக்கிறது.

பிரிட்டனின் பிறிஜ்ரன் என்ற இடத்தைச் சேர்ந்த பிறப்புச் சாட்சிப் பத்திரப் பதிவு அலுவலகமோ புதிய சட்டத்தின் கீழான முதலாவது பதிவு இதுவெனச் சொல்கிறது.

ஆம், அந்த ஒருபாலுறவுத் தம்பதியின்ர் ஒரு வரலாற்று முன்னுதாரணத்தைத் தான் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

குழந்தை லில்லி வளர்ந்ததும் நடாலி வூட்ஸை அம்மா என்று அழைப்பாள். பெற்றி நொவெல்ஸை அம்மா பி என்று அழைப்பாள். ஆனால், அப்பா என்று அவள் யாரையும் அழைக்கப் போவதில்லை.

லில்லிக்கு அப்பா என்றொருவர் இல்லாதது பற்றி நாங்கள் உரையாடினோம். ஆனால் ஒரு அப்பா ஒரு அம்மா என்பதை விட இதில் பல விடயங்கள் இருக்கின்றன. ஒரு குழந்தைக்கு அவசியமானது எந்த நிபந்தனைகளுமில்லாத அளவற்ற அன்பு. பெற்றியாலும் என்னாலும் அந்த அளவற்ற அன்பை லில்லிக்குக் கொடுக்க முடியும் என்கிறார் நடாலி வூட்ஸ்.

குழந்தைக்குத் தேவையானது பரிபூரணமான அன்பு. அதனை எங்கள் இருவராலும் கொடுக்க முடியும். ஆனால் துயரார்ந்த வகையில் சிலருக்கு இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தேவையற்ற பல அபிப்பிராயங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக அவர்கள் உதிர்த்து விட்டிருக்கிறார்கள். எனது பெற்றார் எனது பாலியல் தேர்வு காரணமாக என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் ஒரு அற்புதமான அழகான குழந்தையின்பத்தை இழக்கிறார்கள் என்றும் சொல்கிறார் நடாலி வூட்ஸ்.

இந்த நிலைமையால் குழந்தைக்கு பாட்டா பாட்டிமாருடைய உறவும் கிடைக்கப் போவதில்லை. துரதிர்ஷ்டவசமாக பெற்றி நொவெல்ஸ்இன் பெற்றோரும் ஏற்கெனவே இறந்து விட்டார்கள்.

சமூகம் மாறி வருகிறது. குடும்பங்கள் மாறிவருகின்றன. பெற்றாராக ஆகலாமா என நம்பிக்கையற்றிருந்த மக்கள் இப்போது ஆகி வருகிறார்கள். ஒரு வகையில் இப்போது நாங்கள் விளையாட்டு மைதானத்தைச் சமப்படுத்தி வருகிறோம் என்று இச்சட்டத்தை வரவேற்கிறார் பேராசிரியையான லிஸா ஜர்டின். தற்போது எல்லாப் பெற்றோரும் தங்களுடைய பாலினம் குறித்தோ அந்தஸ்து குறித்தோ கவலைப்படாமல் பெற்றோராக தமது குழந்தையின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் பெயரிட முடிகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இவர்கள் இச்சட்டத்தை வரவேற்றாலும், இவற்றை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை.

பிறப்புச் சாட்சிப்பத்திரம் குழந்தை எப்படி உருவாகியது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறானால் உண்மையான தாயுடையதும் தந்தையுடையதும் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் இனப்பெருக்க ஒழுக்கவியல் தொடர்பாகப் பணிபுரியும் ஜோசப்பின் குவான்ரவெளி.

பிறப்புச்சாட்சிப் பத்திரங்கள் இவ்வாறே வருமெனில் நாங்கள் கலாசாரத்தின் அனைத்து அம்சங்களையும் மறந்தவர்களாகி விடுவோம். அது மட்டுமல்லாமல் கலைச் சொற்களுடன் நாம் விளையாடுபவராகி விடுவோம். ஒரு நாள் குழந்தை தனது தகப்பன் யார் என வினவும் போதும், குழந்தை எவ்வாறு பிறந்தது என்றும் உயிரியல் விளக்கும். அதற்கான வாய்ப்பு இங்கு இல்லாமற் போய்விடுகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

ஓவ்வொரு குழந்தைக்கும் தனது தந்தையை அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது. இந்தச் சட்டம் முதல் தடவையாக குழந்தைகள் தந்தை இல்லாமல் பிறக்க வகையேற்படுத்துகிறது. ஒரு தந்தை குழந்தையின் வாழ்வில் முக்கிய பாத்திரத்தை ஆற்றுகிறார். அதேபோல் குடும்பத்திலும் தந்தை ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகிறார் என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். அது மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கு தமது உயிரியல் ரீதியான தந்தை யாரென அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

தந்தையின் பெயரைக் குறிப்பிடாமலே ஒரே பாலினத்தைச் கொண்ட இருவர் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் ஒப்பமிடுவதை சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் பரோனிஸ் டெச் வெளிப்படையாகவே கண்டிக்கிறார், குழந்தை தனது அடையாளத்தை அறிந்து கொள்ளும் உரிமையை இது பறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது உண்மைத் தகவல்களை மறைக்கிறது. உயிரியல் சார்ந்த பெற்றோர் யார் என்று இனம் காண முடியாமல் குழப்பமடைய வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தவறான தகவல்களை இது வழங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் இந்தச் சட்டங்களும் ஒழுங்கு முறைகளும் வெறுமனே இரண்டு நூற்றாண்டு காலத்துக்குட்பட்டவை தானே என்று வாதிடுகிறார் விக்ரம். சமூக வரலாறென்பது தாய் வழித்துடையானதாகவே மிக நீண்டகாலம் இருந்து வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த நூற்றாண்டின் இறுதியிலும்கூட தமிழகத்தின் சில பகுதிகளில் தாய் வழி மரபு இருந்து வந்திருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். தவிரவும் மரபணு சோதனை அறிமுகமாவதற்கு முன்னர் தாய் அந்தக் குழந்தைக்கு யார் தந்தை எனச் சொல்கிறாளோ அதனை நம்புவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார் அவர்.

எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் குழந்தையின் பிறப்புச்சாட்சிப் பத்திரத்தில் அவர்களுடைய பிறப்புக்கு உயிரியல் ரீதியாகக் காரணமான இருவரது பெயர்களும் மிகச்சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும் எனக் குரலெழுப்பும் அழுத்தக் குழுக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் ஆண், பெண். ஒருபாலுறவு மற்றும் இருபாலுறவு தொடர்பான அமையத்தைச் சேர்ந்த ஸ்ரோன்வால் சட்டத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தினை வரவேற்றிருக்கிறார். ஒரு பாலுறவுக்காரர்களுக்கு மிகவும் அவசியமாக இருந்த ஒரு சட்டமும் இது தான் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் கிளார்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒரு பகுதியான பேர்க் பெக் கல்லூரி நடாத்திய ஆய்வில் ஆண் பெண் பெற்றாரை விட ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிகள் சிறந்த பெற்றாராகத் திகழ்வது தெரிய வந்துள்ளது. இதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால் அவர்கள் தற்செயலாக குழந்தையைப் பெற்றெடுப்பதில்லை. குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்க விரும்பினால் அது தொடர்பாக தெளிவான திட்டவட்டமான முடிவை அவர்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. அதன் பின் அதற்காக விந்து வழங்குனர் ஒருவரையும் கண்டடைய வேண்டியிருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

இது தவிர மூன்றிலொரு பங்கு பிரிட்டிஷ் மக்கள் ஆண் பெண் தம்பதிகளை விட ஒரேபாலினத்தைச் சேர்ந்த பெற்றோர் சிறப்பானவர்கள் என்று நம்புவதாக பிரிட்டிஸ் சமூக நடத்தைகள் தொடர்பான வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவையெல்லாம் நடாலி வூட்ஸ்க்கும் பெற்றி நொவெல்ஸ்க்கும் ஆறுதல் தரக் கூடியவை.

குழந்தை தான் எவ்வாறு உருவாகினேன் என அறிய விரும்புவது அதனுடைய அடிப்படை உரிமை. இப்புதிய சட்டம் அதனை மறுக்கிறது என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கும் இச்சட்டத்திற்கு ஆதரவானவர்கள் லில்லிக்கு 18 வயதானதும் அவள் விரும்பினால் அவள் உருவாகக் காரணமான விந்தை யார் தானம் செய்தார்கள் என்று அறியும் உரிமை அவளுக்கு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், அவர் அவர் விந்தை தானம் செய்த ஒருவர் என்பதற்கப்பால் நாங்கள் அவரைத் தந்தையாக நினைக்கவில்லை. அவர் அப்பா அல்ல. விந்து தானம் செய்த ஒருவர் அவ்வளவு மட்டுமே என்றும் அழுத்துகிறார் வூட்ஸ்.