Showing posts with label வேரென நீயிருந்தாய். Show all posts
Showing posts with label வேரென நீயிருந்தாய். Show all posts

Monday, February 15, 2010

வேரென நீயிருந்தாய்... (8)

அன்று வெள்ளிக்கிழமை மாலை. தாமதமாகவே இருப்பிடத்தினை வந்தடைந்திருந்தேன். இப்போதெல்லாம் ஆங்கில வகுப்புகள் முடிவடைந்ததும், பனிதெனியாவிற்குள்ளால் இறங்கி கண்டிக்குச்செல்லும் பேருந்தில்ஏறி கலகாச்சந்தியில் இறங்கியோ அல்லது கண்டிநகருக்கோ சென்று நாவலப்பிட்டிப்பேருந்தினை பிடித்து ஹெலிஓயாவிலோ அல்லது கம்பளையிலோ இறங்கிப்பின் மீண்டும் அங்குணாவலையிற்கு வருவதினூடாக பேருந்துகளுக்குள் சிரேஷ்ட மாணவர்களின் பார்வையில் படுவதினை பெருமளவிற்கு தவிர்க்கத்தொடங்கியிருந்தோம். அறைக்குள் சென்றதும் பக்கத்து அறை நண்பன் வந்து சொன்ன சேதி வயிற்றில் புளியைக் கரைத்தது.

சிலவாரங்களுக்கு முன்னர் ஒரு சிரேஷ்ட மாணவனால் எனக்கென வழங்கப்பட்ட course work, dead line முடிவடைந்தும் இன்னமும் என்னால் சமர்ப்பிக்கப்படாதிருந்தது. நாளை காலைக்கிடையில் அதனைச் சமர்ப்பிக்காவிட்டால் விளைவுகள் விபரீதமாகலாம் என்கின்ற அச்சத்தினால் உடனடியாக அந்த சிரேஷ்ட மாணவனைச்சந்திப்பதே எனக்கும் அவனுக்கும் நல்லதாகப் பட்டது. ஏற்கனவே வேறும்சில மாணவர்களிடம் அதே course work இற்கான தகவல்களைப்பெற்றிருந்ததால் அவற்றைப்பார்த்து எழுமாற்றாகச் சில தகவல்களை மாற்றிப்பிரதி பண்ணிக்கொண்டு உடனேயே புறப்பட்டேன்.

“வாடா மாப்பிள”
வரவேற்பு பலமாக இருக்கவே நெஞ்சு திக்கென்றது.

“உன்ன எப்ப submit பண்ணச் சொன்னான்? பெரிய விஐபி ஆகிட்டீங்களோ நீங்கள்?”

“இல்லையண்ண. வேறை சீனியர்ஸ் பிடிச்சுக்கொண்டு போனதால வரேல்லாமப் போய்ற்றுதண்ண.“

“டேய்! ஆருக்குச் சுத்துற? நாங்களும் யூனியர்ஸ்ஸா இருந்துதான் வந்தனாங்கள். உன்னப்போல எத்தினபேர பாத்திருப்பம்? பாவமெண்டு கொஞ்சம் விட்டால் தலைக்குமேல ஏறிருவியள் என?”

“அப்பிடியில்லயண்ண....”

“சரிசரி. இப்ப course work நீயாச் செய்தனியோ அல்லது வேறையாற்ரையையும் copy பண்ணிக் கொண்டந்தனியோ?”

“இல்லையண்ண. நானாத்தான் செய்தனான்.”

“சரி. அப்ப மொத்தமா எத்தின பேர்?”

“பதினைஞ்சு பேர்.”

“அப்ப மெலிசா?”

“.....”

“எல்லாம் 'தானா'-க்களா?”

“இல்லை. ஒராள் முஸ்லீம்”

“சரி அப்ப எல்லாருக்கும் marks போட்டிட்ட?”

“ம்...” -தலையசைத்தேன்.

“சரி! ஆருக்கு highest marks?”

அவசரமாகக் கொண்டு சென்றிருந்த தாளினைப் பிரித்தேன்.
“கஸ்தூரி“

“ம்... எவ்வளவு?”

“78“

“எது எதுக்கு எவ்வளவு போட்டிருக்கிற?”

ஙே! விழித்தேன்.

“என்னடா முழிக்கிற? நீதானே marks போட்டனி?”

“ஓம்!”

“என்னண்டு marks போட்டனி?”

“ஆளப்பாத்து”

“சரி அப்ப கண்ணுக்கு எவ்வளவு? காதுக்கு எவ்வளவு எண்டு ஒவ்வொண்டாச் சொல்லு.”

“இல்லையண்ண. அப்பிடிப் போடேல்ல“

“பேய்ப்... அப்ப என்னெண்டு marks போட்டனி?”

“சும்மா ஆளப் பாத்து...”

“சரி. அப்ப ஆர reference-ஆ வச்சு marks போட்டனி?”

“ல்ல... ஒருத்தரையும் இல்ல...”

“அப்ப அவளிலும் விட வடிவான பெட்டைக்கு எண்டால் நூறுக்கும் மேல marks போடுவியோடா?”

“ல்ல......”

“அம்மாண வாற ஆத்திரத்துக்கு... பேய்ப்... Engineering படிக்கவெண்டு வெளிக்கிட்டு வந்திட்டியள். இன்னும் reference எண்டா என்னெண்டு ஒரு கோதாரியும் தெரியாது. என்னெண்டுதான் lab-இல தாற course work எல்லாம் செய்யப் போறியளோ...”

“....”

“மவனே சுத்தாம உண்மையச் சொல்லு! நீ கஸ்தூரிய பாத்திருக்கிறியா? இஞ்ச என்னட்ட மற்றப் பெடியள் போட்டுத்தந்த marks list-உம் கிடக்கு. இப்ப compare பண்ணிப்பாத்து நீ சுத்துறாயெண்டு பிடிச்சால் பிறகு உனக்கு physical தான்.”

விடயம் விபரீதமாக மாறுவதற்கு முன் உண்மையை ஒப்புக்கொள்வது நல்லதென மனதுக்குப்பட்டது.

“ஓமண்ணே, நான் உண்மையைச் சொல்லுறன். ஆள நான் பார்க்கேல்ல. வேற பெடியள் எழுதி வைச்சிருந்ததை வேண்டி marks-ஐக் கொஞ்சம் மாத்திப்போட்டுக் கொண்டு வந்தனான்”

“நீயொரு லெப்பையடா. போயும் போயும் அவளுக்கு போய் 78 marks போட்டுக் கொண்டு வந்திருக்கிறியே. மற்ற எல்லாரும் அவளுக்குத் தான்ரா குறையப் போட்டிருக்கிறாங்கள். கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம்.”

“....”

“எடேய்! இப்ப ராகிங்கப்பாத்துப் பயப்பிடுறியள். பிறகு கன விசயங்கள miss பண்ணீற்றமே எண்ட கவலைப்படுவியளடா. ஊரில A/L படிக்கேக்க ஆரும் பெட்டையளோட கதைச்சுப்பழகியிருப்பியளோ? இஞ்சையும் ராகிங் முடிஞ்சுதெண்டால் பிறகு உங்கட batch பெட்டைகள் உங்களோட கதைக்கவே level காட்டுங்களுடா. சும்மா கதைக்கப்போனாலும் வாளி வைக்கிறதுக்கு வழியிறான் எண்டுங்கள். அதுக்காகத்தான் இப்பவே உங்கள ராக்கிங்கச் சாட்டிக்கதைக்கப் பழக்கிறது. அத விட்டிட்டு, சும்மா எங்களுக்குச் சுத்திக்கொண்டிருக்கிறியள். போடா! இனிமே இந்தப்பக்கமே நீ வரக்கூடாது.”

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று எண்ணியவாறே இருப்பிடத்தை அடைந்தாலும் பகிடிவதைக்கு இன்னொரு பக்கமும் இருப்பதை உணரத் தொடங்கினேன்.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7

Friday, October 30, 2009

வேரென நீயிருந்தாய்... (7)

அன்று சனிக்கிழமை, விடுமுறை நாள். அறையில் இருந்த நண்பர்களில் சிலர் தங்களின் வீடுகளிற்குச்சென்றுவிட்டிருந்தார்கள். இப்போதெல்லாம் குருந்துவத்தைச்சந்தியால் இறங்குவதைத்தவிர்த்து அங்குணாவலையூடாக எமது பாதையினை மாற்றி விட்டிருந்ததில் சிரேஷ்ட மாணவர்களின் பார்வையில்படுவதை பெருமளவில் தவிர்த்துக்கொண்டிருந்தோம். அன்றைய காலைஉணவிற்காக அங்குணாவலைச்சந்தியை அடைய, ச்சே! வெறுத்துப் போனது மனது. சிரேஷட மாணவர்கள்! ஏற்கனவே பல தடவைகள் சந்தித்து தாராளமாய்த்தோப்புக்கரணமும் ரிப்சும் (தண்டால்) அவர்களின் பெயரால் வாரி வழங்கியிருந்தோம்.

“டேய்! இஞ்சை ஏன்ரா வந்தனீங்கள்?”

”சாப்பிட”

”உங்களையெல்லாம் குருந்துவத்தையிலதானே சாப்பிடச்சொன்னது. சீனியர்ஸிற்குச் சுத்திக்கொண்டு இஞ்சால ஒளிச்சுத்திரியிறியள் என. வாங்கடா! இண்டைக்கு அக்பரில வந்து சாப்பிடுங்கோ.”

வெறுத்துப்போன மனதுடன், சிரேஷ்ட மாணவர்களுடன் பேருந்துத் தரிப்பிடத்தினை அடைய பேருந்தும் வந்துசேர்ந்தது.

சிங்கத்தின் குகைக்குள் செல்வது போன்றிருந்தது. வரிசையில் நின்று சாப்பாட்டிற்கு காசு கொடுத்தபோது திகைப்பாயிருந்தது. விலைகள் எல்லாம் அவ்வளவிற்கு குறைவாயிருந்தன.

“இனித் திரும்பிப்போறது உங்கட கெட்டித்தனம்.” என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட, வேறு சிலர் எம்மைச்சூழ்ந்துகொண்டனர். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திக்காய்ப்பிரித்து அழைத்துச்சென்றனர். மாடிப்படிகள் நிலத்துக்கு கீழே செல்வது ஆச்சரியமாயிருந்தது.

நாமும் நடக்க தானும் நடக்கின்ற ஏகாந்தப்பெருங்ககனம் என்பது போல் இருண்ட ஹொரிடோரின் வழியாக நடந்து கொண்டேயிருந்தோம். அறையிலக்கங்கள் 2024 முடிந்து 3122ம் முடிந்து 4103 இற்கு வருகையில்,

”மச்சான் கம்பூச்சி வந்து நிக்கிறேராமடாப்பா. இவன வச்சிருந்தால் பிரச்சனை. ஆளை அனுப்பு” - என வேகமாக வந்து சொன்ன இன்னொரு சிரேஷ்ட மாணவனின் சொற்கேட்டு.

“உனக்கு இண்டைக்கு நல்ல காலம். ஓடித்தப்பு”

என்று என்னை விரட்டினார்கள். திரும்பி தனியே வர பாதை பிடிபடவில்லை. மாறி குளியலறைத்தொகுதிக்குள் நுழைய....

“you can go this way.” ஒரு சிங்கள சிரேஷ்ட மாணவன் சரியான பாதைகாட்ட அறை இலக்கம் 2001 தாண்டி வர வெளியே வாசல் தெரிந்தது. வரும்போது கீழே இறங்கி வந்தது நினைவிற்குவந்து குழப்பியது. பின்புதான் அக்பர் விடுதியைப்பற்றி மற்றைய மாணவர்கள் கூறியது நினைவிற்கு வந்தது. அது பள்ளம் மேடு சார்ந்தவொரு நிலப்பரப்பில் அமைந்திருந்ததால் ஒரு கட்டடத் தொகுதி மற்றைய கட்டடத்தொகுதியினின்றும் ஒரு தளம் உயர்ந்திருப்பது புரிந்தது. அதன் வழியே வெளியேறி எங்கே செல்வது என்று குழம்புகையில்.

“அணணே! இதுக்குள்ள என்ன தடவுறாய்?”
-ம்ம்ம்...! சரி! இண்டைக்கு ஆப்புத்தான் என்றது மனது.

“வாடா வா அப்பிடியே எனக்குப்பின்னால சத்தம் போடாம வா” - பின்தொடர்ந்தேன்.

“போய்க் கதவைத் திற” - திறந்தேன்.

“சின்னனில ஒளிச்சுப்பிடிச்சு விளையாடியிருக்கிறியா? ”

”ஓம்”.

”அப்ப இந்த றூமுக்குள்ள எதுக்குள்ளையெண்டாலும் போய் ஒளி. நான் உன்னத் தேடுறன்.”

ஙே!

“என்னடா முழிக்கிற? ரெண்டு அலுமாரி கிடக்கு, கட்டிலுக்குக் கீழ எவ்வளவோ இடங்கிடக்கு. கெதியா ஒளி”.

கட்டிலுக்குக்கீழே குனிந்தேன். திகைத்தேன். அதற்குள் வேறொரு மாணவன் படுத்துக்கிடந்தான். மறுபுறம் திரும்பி மற்றக்கட்டிலின் அடியில் பார்க்க அட! அங்கேயும் வேறொரு மாணவன்.

“என்ன ஒளிஞ்சாச்சா?”

அவசரமாய் அலுமாரிகளைத் திறந்தேன். எல்லாமே ஏற்கனவே வேறு சக மாணவர்களால் நிரப்பப் பட்டிருந்தன.

”என்ன இன்னும் ஒளியேல்லையா?”

”இ.. இ..இடமில்லையண்ணே.”

”சரி அப்ப வந்து கதிரையில இரு.”

கண்களுக்கு எந்தக் கதரையுமே தட்டுப்படவில்லை.

“என்னடா? சொன்னது விளங்கேல்லையோ? கதிரையிலை இருடா எண்டால் வாய்பாத்துக் கொண்டு நிக்கிறாய்”

“ல்ல.. கதிரையொண்டையும் காணேல்ல”

“பேய்ப்... உங்கொப்பனா இஞ்ச கதிரைகொண்டந்து வச்சவன். டேய்! உள்ளுக்க இருக்கிறவங்கள் எல்லாம் வெளியால வாங்கடா” - வந்தார்கள்.

“ஆராரு (யார்யார்) நேற்று ராத்திரியே வந்தாக்கள்?”- இருவர் கையுயத்தினர்.

“ரெண்டு பேரும் ஓடுங்கோ. நீங்க மூண்டு பேரும் வரிசையா வந்து கதிரையில இருங்கோ”

மற்றைய இருவரும் கதிரையில் உட்காருவதைப் போலவே பாவனை செய்ய நானும் உட்கார்ந்தேன்.

”டேய் புதுசா வந்தனி! காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு இரு. இருடா எண்டுறன். தூக்கடா ஒரு கால.” - தூக்க முயற்சித்தேன். அப்படியே தவறிக் கீழே விழுந்தேன்.

”ஏன்ரா கதிரையை உடைச்சனி? டேய் குட்டான்! நீ சிரிக்கிற என. போடா போய்ச் சிரிப்ப வெட்டி எறிஞ்சிற்று வா”
முதலாவதாயிருந்த அந்த சின்ன உருவம் தன் சொண்டினை (உதடுகள்) ஒருகையால் இழுத்துப்பிடித்தவாறே மற்றைய கையால் கத்தி கொண்டு அறுப்பது போன்றும் பின் அறுபட்டதை ஜன்னலால் எறிவது போன்றும் பாவனை செய்தான்.

“நீ நல்லா ராக்கிங் வாங்கித்தானிருக்கிற. சரி அப்பிடியே நிலத்தில இரு” - அவன் இருந்தான்.

“டேய் ரெண்டாவது நீ மக்ஸிமம் எத்தனை தோப்பு போட்டிருக்கிற?”

”முன்னூறு”

“நீ”

”நானூற்றிஎண்பது”

“ஆருக்குப் போட்டனி?”

“ஒணரபிள் சுப்பர் சுப்பர் சீனியர் ரமேஷ்”

“சரி எல்லாரும் கிட்ட வந்து நிலத்தில இருங்க” அருகே சென்று அமர்ந்தோம்.

“ஒவ்வொருத்தரா உங்கட detailsஅ சொல்லுங்கோ. இஞ்ச வைச்ச பெயரொண்டும் வேண்டாம்.”

“என்ர பேர் பாலசிங்கம் இந்திரன். சொந்த இடம் கோப்பாய்.....”

“நீ”

“என்ர பேர் சண்முகலிங்கம் கணேசன். சொந்த இடம் பருத்தித்துறை.....”

“நீ”

“என்ர பேர் சுந்தரலிங்கம் ஜெயந்தன். சொந்த இடம் வேலணை....”

“சரி! உங்களில ஆருக்குப்பாட்டுப்பாடத் தெரியும்?”

மூவருமே தெரியாதெனத் தலையாட்டினோம்.

“டேய் பருத்தித்துறையான்! அப்ப நீயொரு கதைசொல்லு. பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்.. எண்டில்லாம நல்லொரு கதையைச் சொல்லு.”

“அண்ணே எனக்குக் கதை தெரியாது.”

“ஆமை முயல் கதை தெரியுமா?”

“ஓம்”

“அப்ப அதைச் சொல்லு.”

“ஒரு ஊரில ஒரு ஆமை இருந்துதாம்.”

“என்னடா அம்புலிமாமாக் கதை போல ஒரு ஊரில ஒரு ஆமையெண்டு? ஊரின்ரை பெயரைச் சொலலிச் சொல்லு”

“பருத்தித்துறை என்கின்ற ஊரில ஒரு முயல் இருந்துதாம்.”

“அப்ப முயலுக்குப் பேரில்லையோ?”

“பருத்தித்துறை என்கின்ற ஊரில ராமன் என்கின்ற முயல் இருந்துதாம்.”

“எப்ப இருந்ததாம்?”

“1997 ஆம் ஆண்டு”

“கதை சொன்னா முழுசாச் சொல்ல வேணும். நீ பிழை விட்டால் திரும்பி முதலில இருந்து சொல்ல வேணும் சரியா? இப்ப சொல்லு”

“1997ஆம் ஆண்டு தை மாதம் 14ம் திகதி பருத்தித்துறை என்கின்ற ஊரில இருந்த ராமன் என்கின்ற முயல் ஒரு ஆமையிடம் சென்று...”

“நிப்பாட்டு. ஆமைக்குப் பெயரில்லையோ?”

“1997ம் ஆண்டு..... ராமன் என்கின்ற முயல் மணி என்கின்ற ஆமையிடம் சென்று ஓட்டப்போட்டிக்கு வருமாறு அழைத்தது. போட்டி தொடங்கியதும்...”

“இஞ்ச வா! போட்டி எங்க நடந்தது?”

“1997ம் .....அழைத்தது. போட்டி மணியாறன் வளவடியில் இருந்த ஒழுங்கையில் தொடங்கியது.”

“எத்தின மணிக்குத் தொடங்கினது?”

“1997.....போட்டி மாலை 4.00 மணிக்குத் தொடங்கியது. ராமன் என்கின்ற முயல் வேகமாக”

“நிப்பாட்டு. போட்டிக்கு ஆரு நடுவர்?”

“1997.... யோன் என்கின்ற நாயை நடுவராக வைத்து போட்டி தொடங்கியது.”

“ஆமை முயல் எல்லாம் ஓடேக்குள்ள என்ன உடுப்பு போட்டிருந்ததுகள்?”

“1997..... ராமன் என்கின்ற முயல் நீல நிறக்காற்சட்டையும் வெள்ளைநிற மேற்சட்டையும் அணிந்திருந்தது.”

“டேய்! ஓட்டபபோட்டி நடக்குது. முயல் ஜட்டி போடாமா ஓடுதாம். ஆருக்குக் கதை விடுறாய்?”

“1997...........”

“....”

“199.....”

“....”

“19......”

“....”

“1......”

“....”

“@#$%^&*......”

“மவனே றூமுக்குப் போய் ஒழுங்கா prepare பண்ணீற்று நாளைக்கு வந்து எனக்கு இந்தக்கதையை முழுக்கச் சொல்லோணும். இல்லையெண்டால்.” - சரியென்றவாறு கணேசன் தலையாட்டினான்.

”சரி எப்பிடி வெளியால போறதெண்டு தெரியுமா? இப்ப lunch time. அக்பர் வாசலால போனீங்களெண்டால் வேறையாரும் பிடிப்பாங்கள். இப்பிடியே அக்பருக்கும் facultyக்கும் இடையால போற றோட்டால போய் பனிக்குள்ள (பனிதெனியா) இறங்கி தப்பிப் போங்கடாப்பா. ”


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6

Thursday, October 29, 2009

வேரென நீயிருந்தாய்...(6)

1997 ஓகஸ்ற் திங்கள் 11ஆம் நாள் காலை, எமக்கான தீவிர ஆங்கில வகுப்புகள் (Intensive course) ஆரம்பமாயின. எமது வசிப்பிடமாக, பேராதனை முதல்நாளே மாறிவிட்டிருந்தது. கண்டியின் கடுங்குளிரை விரட்டி காலைக்கடன்களை முடித்துவிட்டு குருந்துவத்தைச்சந்தியை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தோம். எதிர்பார்த்ததைப்போன்றே சிரேஷ்ட மாணவர்கள் வழிமறித்தாலும் வகுப்பிற்கு நேரமாகிவிட்டதால் எம்மை யார் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்காமல் ஓடச்சொல்லிப்பணி்த்தார்கள். சற்று நேரத்திலேயே, எம்மை நிற்கச்சொல்லி சில குரல்களும் ஓடச்சொல்லி சிலகுரல்களும் எம்செவிகளை வந்தடைந்தாலும் ஓடுவதே அவர்களிடமிருந்து தப்புவதற்கான வழி என்பதால் ஓடிக்கொண்டிருந்த எம்மை மிதிவண்டியில் துரத்திவந்த இருவர் வழிமறித்தனர்.

“நிக்கச்சொன்னது காதில கேக்கேல்லையோடா உங்களுக்கு?”

“டேய்! நீதான் கோடுபோட்ட சேட்டு, இஞ்சகிட்ட வாடா.”

பளாரென்ற ஓசைகேட்டுத்திடுக்கிட்டேன். சீலன் தன் கன்னத்தைத்தடவிக் கொண்டிருந்தான். அவனின் விழியோரங்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன.

“உனக்கு எங்களப்பாத்தாச் சிரிப்பு வருகுதோ? பேய்ப்... என்னடா பேர் உனக்கு?”

“பார்சிலோனா”

“ஆரடா வச்சது?”

“ஒனரபிள் சுப்பர் சீனியர் செந்தூரன்”

“உங்கொப்பாம்மா வச்சபேர் என்னடா?”

“தில்லைநாதன் சாந்தசீலன்”

“மவனே இண்டைக்கு பின்னேரம் கிளாஸ் முடிய நேர பேய்வீட்டுக்கு வாற. வேறையாரும் கூட்டிக்கொண்டுபோய்ற்றாங்கள் எண்டு சொல்லி வராம விட்டியெண்டா நீ செத்தாய். எல்லாரும் ஓடுங்கடா”

பின்னங்கால் பிடரியில் பட ஓடத்தொடங்கினோம்.

வகுப்பின் இடைவேளையில்,

“என்னை ஐசே! உங்களோட இருக்கிற சீலனை பேய்வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறாங்களாம். அவன் போனா பிறகு அடுத்தடுத்து நீங்களும் போக வேண்டி வரும்.” -என்றான் எனது வகுப்பில் இருந்த நண்பன்.

“பேய்வீடு எங்கை ஐசே இருக்கு? அங்க போனா என்ன செய்வாங்கள்?”

“குருந்துவத்தையிலதான் இருக்கு. அங்க விஐபி-மாரத்தான் கொண்டு போறவங்கள். அங்க போனா முறிமுறியெண்டு முறிச்சுப்போடுவாங்கள். கறண்ட்ஷொட் எல்லாம் குடுப்பாங்கள். கீழ விழேக்குள்ள முழங்கைச் சில்லெல்லாம் வெடிக்கிறமாதிரியிருக்கும். போனவருஷம் எங்கட இம்மீடியற் சீனியர்ஸ்ஸில கறண்ட்ஷொட் வாங்கினவையின்ர இரத்தம் இப்பையும் சுவரில இருக்காம் ஐசே.”

மண்டை விறைத்தது. எப்படி இந்த பகிடிவதைக்குள்ளால் தப்பிப் பிழைக்கப்போகின்றோமோ என்கின்ற பயம் பிரமாண்டமாய் மனமெங்கும் வியாபித்தது. அதற்குள் இன்னொரு சக மாணவன் வந்து எல்லோரது விபரங்களையும் ஒரு தாளில் திரட்டிக்கொண்டிருந்தான். அது சிரேஷ்ட மாணவர் ஒருவரால் அவனுக்கு வழங்கப்பட்ட கோர்ஸ்வேர்க் (course work).

“ஐசே சீனியர்ஸ்ட்ட குடுக்கமுதல் போட்டோக்கொப்பியொண்டு எடுத்து வச்சிற்றுக்குடும்.” என்ற நண்பனிடம் எதற்கு என்றேன்.

”எங்களிட்டையும் இந்தக் கோர்ஸ்வேக்கத் தருவாங்கள். இப்பையே ஒரு கொப்பி எடுத்து வச்சிற்றால் பிறகு நாங்கள் அலையவேண்டியிருக்காது” என்றான்.

அவன் இரண்டாம் தடவையில் பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்ததால் தற்போது எமக்கு immediate seniors ஆக இருக்கும் அவனது பாடசாலைக்கால வகுப்புத்தோழர்களிடமிருந்து எல்லாத்தகவல்களையும் அவன் அறிந்து வைத்திருந்தான்.

மாலை வகுப்புக்கள் முடிந்ததும் அவனுடனேயே வேறு பாதையால் இறங்கி புகையிரதப்பாதை வழியே நடந்து பனிதெனியாவை அடைந்து பின் பேருந்தி்ல் ஏறி கலகாச் சந்தியில் இறங்கி மீண்டும் கம்பளைக்கான 718 இலக்க பேருந்தினைப்பிடித்து குருந்துவத்தைச் சந்தியில் இறங்க அதிர்ஷ்ட வசமாய் யாரும் இல்லாதிருக்கவே சந்திக்கடையி்ல் வெதுப்பியினை (bread) வாங்கிக் கொண்டே எனது அறையினை அடைய அறை நண்பர்களில் ஒருவன் ஏற்கனவே வந்துவிட்டிருந்தான்.

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5

Wednesday, August 19, 2009

வேரென நீயிருந்தாய்... (5)

அடர்ந்து படர்ந்திருந்த இருளினைக் கிள்ளிக் கிள்ளிக் கொய்து விட்டது போல் அந்த அதிகாலைப் பொழுதில் மின்கம்பங்களிலிருந்து ஒளியினைப் பெய்துகொண்டிருந்த வீதிமின்விளக்குகளின் வெளிச்சம் இருட்டினைக் காயப்படுத்திக் கொண்டிருந்தது. நானும் புதிதாகசேர்ந்துகொண்ட நண்பர்களுடன் ஆனிமாதத்தின் அந்தச்சனிக்கிழமை அதிகாலைப்பொழுதில் நடந்து கொண்டிருந்தேன். அதிகாலைக் குளிரைக்குறைப்பதற்காகப் பருகியிருந்த தேநீரின் வீரியத்தினை உடல் இழந்து கொண்டிருந்தது. நேரம் எப்படியும் அதிகாலை நான்கரையைத்தாண்டியிருக்கும். எங்களில் யாருடைய கைகளிலும் கடிகாரங்கள் இருக்கவில்லை. ஐந்துலாம்படிச்சந்தியை நெருங்கிய பிற்பாடு வீதிகளில் சுறுசுறுப்புக்காணப்பட்டது. கொழும்பு மாநாகரின் வியாபாரப்பிரதேசமும் நிறைஅழுக்குப்பிரதேசமுமான 'பெற்றா'விற்குள்ளால் நடந்து கொண்டிருந்தோம். கூடவந்தவர்களில் ஒருவன் அன்றுதான் வாழ்க்கையிலேயே முதன்முதலாக பாட்டா (Bata) இறப்பர்ச் செருப்பு அணிந்திருப்பானோ என்னவோ தேய்த்துத்தேய்த்து நடந்து கொண்டிருந்தான். பெற்றா தனியார் பேருந்து நிலையத்தில் எங்களைப் போலவே பலரும் வந்து சேர்ந்திருந்தார்கள். ஆட்களைத்தன் வயிற்றுக்குள் புதைத்துக்கொண்டு பேருந்து கிளம்புகையில் நேரம் காலை ஐந்து மணியைத் தொட்டுவிட்டிருந்தது. கலைந்திருந்த உறக்கம் கண்களைச்சுழற்றவே இருக்கையில் சாய்ந்து கொண்டேன்.

தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்க்கையில் பேருந்து ஒரு மலைப்பாதையில் மிகவும் சிரமப்பட்டவாறே ஏறிக்கொண்டிருந்தது. நாக்கிளிப் புழுவைப்போல் அப்படியும் இப்படியுமாய் வளைந்த கொண்டிருந்த பாதை ஒருவாறாக சீர்பெற்று 20 நிமிடங்கள்வரை கழிகையில் நண்பர்கள் பரபரப்பாகினர். சில நிமிடங்கள் கழித்து வந்த இறக்கத்தில் எல்லோருடனும் சேர்ந்து நானும் இறங்கினேன். கடைகளின் பெயர்ப்பலகையை அவதானித்ததில் பேராதனையை அடைந்து விட்டிருந்தது தெரிந்தது. முதல்தடவை வேறொரு நண்பனுடன் பல்கலைக்கழகத்தில் எம்மைப்பதிவு செய்ய வந்தபோது இறங்கிய இடம் இதுவல்ல என்பது புரிந்தது. துவிச்சக்கர வண்டிகளில் வந்த சிலர் எங்களை வரிசையில் வரச் சொன்னதும் நெஞ்சுக்குள் பயம் அடைத்துக் கொண்டது.

“அறுப்பாங்கள், இப்பவே வந்திட்டாங்கள். இண்டைக்கு course முடிஞ்சு வீட்டபோன மாதிரித்தான்...”

முன்னுக்கு நின்ற நண்பனின் முணுமுணுப்புக்கேட்டது. வந்தவர்கள் எமது சிரேஷ்ட மாணவர்கள் என்பதும் இன்றைக்குப் பகிடிவதை எம்மைப்பிழியப் போகின்றது என்பதும் மனதுக்கு உறைத்ததும் உள்ளம் நடுங்கியது. வந்தவர்களோ சிலர். நாங்களோ பலர். எனவே எங்கள் எல்லோரையும் விசாரிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. postal course எனப்படும் ஆங்கில வகுப்புக்கு நேரமாகவே எங்களை அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு வருமாறு பணித்தார்கள். பின் அனைவரையும் அணிவகுத்து வருமாறு சொல்லிவிட்டு அவர்கள் மறைந்து விட்டார்கள்.

கண்டி-கம்பளை வீதியின் வழியே அணிவகுத்துச் சென்ற நாங்கள் ஒரு பாலத்தைக் கடந்தவுடன் அங்கே நின்ற வேறுசிலர் வழிமறித்துப்பின், வகுப்பிற்கு நேரமாகவே அருகிலிருந்த ஒற்றையடிப்பாதை போன்று காணப்பட்ட ஒரு பாதையினால் எம்மை ஏற்றி அனுப்பினார்கள். புற்பற்றைகளாய் மண்டிக்கிடந்த அந்தப்பாதை வழியே சென்று கட்டடக் காட்டுக்குள் நுழைந்தோம். எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதங்களில் குறிக்கப்பட்டிருந்த வகுப்பறைகளின் இலங்கங்களைத் தேடிக் கண்டடைகையில் வகுப்புகள் ஆரம்பித்து விட்டிருந்தன. முன்னைய வகுப்புகளிற்கு நான் சென்றிருக்கவில்லையாதலால் ஆங்கில ஆசிரியை எனது பெயரைப்பதிவு செய்துவிட்டு இருக்கையில் சென்று அமருமாறு பணித்தார்.

கண்களால் வகுப்பினைத் துளாவினேன் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்கின்ற ஆவலில். ஊஹும். யாரும் தெரிந்தவர்களாய்த் தெரியவில்லையே.

அட! இவளை எங்கோ பார்த்திருக்கிறேன். நன்றாய்ப்பழகியுமிருக்கிறேன். எனது வரிசையில் எதிர்ப்புறமிருந்த பெண் மனதினைக் குடைந்தாள். நன்றாய் யோசித்தும் சட்டென அவள் யாரென நினைவிற்கு வரவில்லை. ஆனால் அவளுடன் எப்போதோ நன்றாய்ப்பழகியிருப்பதாய் மட்டும் மனது அடித்துச்சொன்னது.

யாராயிருப்பாள் இவள். என்னுடன் ஒன்றாய் ரியூசனுக்கு வந்திருப்பாளோ? எங்கே வந்திருப்பாள் Science Academy-க்கா இல்லை Shamrock-இற்கா? Shamrock-இல் Double maths மட்டும்தான். அங்கேயும் கமலசிங்கம் சேரின் கடிக்குப்பயந்து அவரிடம் படித்த பெண்களே இருவர்தான். அவர்களின் யாருடைய பெயருமே எனக்குத் தெரிந்ததில்லை. அவர்களுடன் கதைத்ததுமில்லை. Science Academy-யில் சோதிலிங்கம் சேரிடம் physics படிக்க வந்திருப்பாளோ? வந்திருந்தாலும் அவளுடன் பழகியிருக்கச்சந்தர்ப்பமில்லை. சனிஞாயிறுகளில் காலை 8.00 மணி physics வகுப்பிற்கு நான் வீட்டிலிருந்து 8.00 மணிக்கு வெளிக்கிட்டால் 8.10 இற்கு சைக்கிளைத்தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல சரியாக எனக்குப் பின்னால் சாளியைத் (ஒருவகை motorcycle) தள்ளிக் கொண்டு சோதிலிங்கம் சேர் வருவார். இருவருமே ஒன்றாகவே உள்ளே செல்வோம். வகுப்புகளில் பின்னாலிருந்தால் கண்தெரியாது என்பதால் பெரும்பாலும் மாணவர்கள் அமரத்தொடங்கும், முதல் அல்லது இரண்டாம் வாங்கில்களிலேயே (bench) அமர்ந்து விடுவதால் கூடப்படிக்கும் பெட்டைகளைப்பார்க்க முடிவதில்லை. பின்னாலையோ பக்கத்தாலையோ திரும்ப வெட்கம் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்திருக்கும் பெடியங்களின் கடிதாங்க முடியாததாயிருக்கும் என்பதுவும் ஒரு காரணம். இதே நிலைதான் மணியம் சேரின் chemistry பாடத்திலும். ஆக இவளை நான் ரியூசனில் பார்த்திருக்க முடியாது.

A/L படித்ததோ ஆண்கள் பாடசாலையில். அப்படியெனறால் O/L இல் ஒன்றாய்ப் படித்திருப்பாளோ? படிச்ச பள்ளிக்கூடங்களிலையெல்லாம் சொந்தக்காரர் வாத்திமாரா இருந்ததால எங்கட கலாச்சாரப்படி நானும் பெட்டைகள் இருக்கிற பக்கமே திரும்ப முடியாமல் போய்விட்டது. அப்படியானால் வேறு எங்குதான் இவளைப் பார்த்தேன். நன்றாய்ப் பழகியிருப்பதாய் உள்மனம் சொல்கிறதே. ஒருவேளை 95 இல் யாழ்ப்பாணத்திலிருந்து இடப்பெயர்ந்து வசித்த இடங்களில் அருகருகே இருந்திருப்போமோ. அம்மாவுக்கென்றால் நன்றாகத்தெரிந்திருக்கும். பார்ப்போம், இல்லாவிட்டால் இவளிடமே கேட்டால் போயிற்று. கம்பசில பெட்டைகளோட தாராளமாக் கதைக்கலாம் தானே.

யாழ்ப்பாணத்திலையெண்டால் A/L படிக்கும் வரையும் பெடியளும் பெட்டையளும் ஒராளோடையொராள் frirndly-யாக் கதைக்கேலாது. ஆனால் கம்பஸ்க்கு போனாப்பிறகு எண்டால். அவை தாராளமா கதைப்பினம். பெட்டைகிளின்ர வீட்ட பெடியள் போவாங்கள். பெடியளின்ர வீட்ட பெட்டைகள் போகுங்கள். அதைப்பற்றி ஒருத்தரும் கணக்கே எடுக்கிறேல்லை. ஆனால் A/L படிக்கேக்குள்ள ஒரு பெட்டையும் பெடியனும் கதைச்சால் சரி. உடனேயே வீட்டில விளக்கம் தொடங்கீரும். பிறகு அந்தப் பெட்டை போறவாற இடமெல்லாம் அந்தப் பெட்டையின்ர தம்பியோ அப்பாவோ காவலுக்கு வரத் தொடங்கீருவினம். ஏன்தான் அப்படிச் செய்யினமோ தெரியாது. சிலவேளை Teen-age-இல பிள்ளைகள் வயசுக்கோளாறால ஏதும் செய்துபோடுவினம் எண்ட பயம்தான் காரணம் என நினைக்கிறேன். அதாலதான் teen-age முடியும் வரைக்கும் பிளளைகளை கவனமாப்பாக்கிறவை, teen-ageம் முடிஞ்சு பிள்ளைகள் கம்பஸ் போகத்தொடங்கினாப்பிறகு அவை பழகிறதைப்பற்றி அக்கறைப்படுவதில்லை.

பக்கத்தில் திரும்பி அவளைப்பார்க்கிறேன். அட அவளும்தான் என்னைப் பார்க்கிறாள். அந்தக்கண்களில் தெரியும் பரிவும் காருண்யமும் அப்படியே புத்தரை மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்துகிறது. அவளது சிநேகமான இதழ்வலிக்காத அந்த ஒற்றைப்புன்னகை அடித்துச் சொல்கிறது, இவளுடன் நான் நன்கு பழகியிருக்கிறேன் என்பதை மட்டுமல்லாமல் அவளுக்கும் என்னை நினைவிருப்பதை. Class முடிந்தவுடனேயே அவளிடம் விசாரிக்கவேண்டும் என்று உள்மனம் சொல்வதைக் கேட்க எனக்கே வியப்பாயிருக்கிறது.

என்னாயிற்று எனக்கு? எந்தப் பெண்ணையுமே ஏறெடுத்தும் பாராமல் திரிந்த நான் அவளிடம் வலியச் சென்று பேசுவதா? எப்படி? இதற்கு முன் எனக்கு எந்தப் பெண்ணுடனும் வலியச் சென்று கதைத்துப்பழக்கமில்லையே. முடியாது. அவளாய் வந்து கதைத்தால் இதைப்பற்றிக் கேட்கலாம். இல்லையென்றாலும் இன்னும் நான்கு வருடங்கள் இங்குதானே இருக்கப்போகிறோம். அதற்குள் எப்படியும் அவளைப்பற்றி அறிந்து விடலாம் என்று எண்ணியவாறே இருக்க, கண்கள் மீண்டும் அனிச்சையாய் அவள் பக்கம் திரும்பின.

எனக்குள் வியப்பு மேலிட்டது. என்னாயிற்று இந்தப் பட்டினத்தாருக்கு? இன்னும் அவரைக்காணவில்லையே என்று ஆச்சரியமாயிருந்தது. வழமையாகவே அழகாகத்தெரியும் ஒரு பெண்ணை கண் மீண்டும் பார்க்கத் தூண்டினால் மனதிற்குள் கண்ணதாசன் வந்துநின்று 'இந்திரியம் தீர்ந்து போனால் சுந்தரியும் பேய்போல' என்பார். அதையும் தாண்டி அந்தப் பெண்ணின் அழகை கவர்ச்சியை ரசிக்க மனம் விழைந்தால், பின்பிடரியில் இரண்டு தட்டுத்தட்டி 'பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசாம் பிடித்தென்னைக் கண்ணால் வெருட்டி முலையால்மயக்கிக் கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப் பொருள்பறிக்க' என்பார் பட்டினத்தார். பின் அவரின் அறுவை ஆரம்பித்து விடும்.

சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து
பாயும் புடவை ஒன்றில்லாத போது பகல் இரவாய்
ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்
மாயும் மனிதரை மாயாமல் வைக்கமருந்தி்லையே.

என்றவாறே சலித்துக்கொண்டு அவர் தன் தலையில் அடிப்பது மனதுக்குள் தெரிகையில் அந்தப் பெண் மறைந்து போயிருப்பாள்.

ஆனால் இன்று இவர்கள் இருவருமே வரவில்லையே. ஒருவேளை இவளின் அழகை ரசிக்காமல் இவள் யாரென சிந்திப்பதால் இருக்குமோ? அவளை மீண்டும் பார்க்கிறேன். அதே கனிவான கண்கள். வைத்தகண் வாங்காமல் பார்க்கச் சொல்கின்றன. மற்றம்படிக்கு சாதாரணமாக பாடசாலையில் கூடப் படிக்கும் பெண்களில் ஒருத்தியாக பருமனுமாயில்லாமல் ஒடிசலுமாயில்லாமல் அளவாக அவள் இருந்தாள். உடலியல் ரீதியாக எவ்வித ஈர்ப்புமே அவளிடம் ஏற்படவில்லை. இவளை எங்கோ பார்த்திருக்கிறேன், பழகியிருக்கின்றேன் என்கின்ற சிந்தனை மட்டுமே சுற்றிச்சுற்றி வந்தது.

அவளும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதுவாய் உள்ளுணர்வு குறுகுறுக்க மீண்டும் அவளைப்பார்க்கிறேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் நான் பார்ப்பதை அறிந்ததும் கீழே குனிந்து எனது கால்களைப்பார்க்குமாறு சைகையால் கூறினாள். கீழே குனிந்து பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். இருகால்களிலுமிருந்து குருதி சொட்டுச்சொட்டாய் வழிந்து கொண்டிருந்தது. அதைக்கவனித்த அருகிலுருந்த மாணவன் மலையட்டை கடித்துவிட்டதாகக் கூறி ஆசிரியையின் அனுமதியுடன் என்னை வெளியில் அழைத்து வந்தான்.

கழிப்பறையில் சென்று பார்த்தபோது நான்கு அட்டைகள் இரத்தம் உறிஞ்சிக் கொழுத்துப்போய் கால்களில் ஒட்டிக்கிடந்தன. ஏற்கனவே குருதியை அவை வயிறு நிறையக்குடித்திருந்ததால் அவற்றை இழுத்தெறிவது சுலபமாயிருந்தது. பின் கால்களைக்கழுவிவிட்டு வழியும் குருதியின் மேல் காகிதத்தை ஒட்டி விட்டு வகுப்பிற்குள் நுழைந்தோம்.

கட்டுக்கட்டாய் குறிப்புகளைத்தந்துவிட்டு, அடுத்த இரண்டாவது சனிக்கிழமை மீண்டும் சந்திக்கலாமெனக்கூறி ஆங்கில ஆசிரியை வகுப்பினை நிறைவு செய்ய, அவளாகவே என்னிடம் வந்தவள்,

“ஹோமத தங்?” (எப்படி இப்போ?) -என்றாள்.

எனக்கு எதுவுமே புரியாமல் அவளைப் பார்க்க,

“ஆர் யூ சிங்கள?" என்றவளிடம் “நோ" என்றேன்.

“ஓ! சொறி சொறி. ஐ தோட் யூ ஆர் சிங்கள. பை த பை, ஹவ் ஆர் யூ பீலிங் நவ்? ரேக் கெயார் எபவுட் லீச்சஸ்.”

என்றவாறே எனது பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியேறினாள்.

அப்படியானால் இவள் தமிழிச்சி அல்ல. நான்தான் வீணாகக் குழம்பிப்போயிருக்கிறேன். இதற்கு முன்னர் நான் இவளைப் பார்த்திருக்கவோ பழகியிருக்கவோ எந்தச் சந்தர்ப்பமும் இருக்கவில்லை. ஆயினும் இப்போதும் உள்மனம் சொல்லியது, இவளுடன் நான் நன்றாய்ப பழகியிருக்கிறேன் என்று. சிலவேளை இவளின் சாயலில் யாருடனும் என் சின்ன வயதுகளில் நான் பழகியிருந்திருக்கக்கூடும்.

வெளியேறிய மாணவர்களுடன் சேர்ந்து வெளியேற முயல அருகிலிருந்த மாணவன் தடுத்தான், இவன்தான் என்னைக்கழிப்பறைக்கு அழைத்துச் சென்று அட்டைகளை அகற்ற உதவியவன்.

“கொஞ்சம் பொறும் ஐசே! இப்ப போனால் வெளியில நிக்கிற சீனியேர்ஸ் ராக்கிங் பண்ணப் பிடிச்சுக் கொண்டு போயிருவாங்கள். அவங்கள் எல்லாம் போய் முடிஞ்சாப் பிறகு நாங்க போவம்”.

அரைமணி நேரத்தின் பின் வெளியே வந்த போது யாரையுமே காணக்கிடைக்கவில்லை. வரும் போது வந்த பாதையை ஒருவாறு கண்டுபிடித்து பற்றைக்குள்ளால் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் பற்றிய மிகுந்த கவனத்துடன் இருவரும் இறங்கினோம். வீதியினை அண்மிக்கையில் தூரத்தில் ஒருவர் வருவது தெரிந்தது. அவர் ஒரு சிரேஷ்ட மாணவராக இருக்கலாமோ என்கின்ற அச்சம் எங்கள் இருவரிற்குள்ளும்.

கிளீன் சேவ்-உம், காலில் பாட்டா இறப்பர் செருப்பும், பெல்ற் இல்லாத ஜீன்சிற்குள் உள்விடப்பட்டிருந்த சேட்-உம் பார்ப்பவர்கள் யாருக்குமே நாங்கள் புதுமுகம் என்பதை உணர்த்தி விடும்.

“ஐசே! அவர் தமிழில கதைச்சால் நாங்கள் விளங்காத மாதிரி நிப்பம். சிங்களம் எண்டிட்டு விட்டிட்டுப் போயிருவேர்.”

என்றான் நண்பன். அவன் இப்போது நண்பனாகி விட்டிருந்தான். அருகில் நெருங்கி வந்தவர் எங்களைப் பார்த்ததும்,

“மல்லிலா ஒயா சிங்களத?” (தம்பிமார் நீங்க சிங்களமா?) - என்றார்.

ஓம் என்பதுபோலவும் இல்லை என்பது போலவுமாக தலையை மாறிமாறி ஆட்டினோம்.

“யூ நோ இங்கிலிஷ் றைற்? ஆர் யூ சிங்கள ஓ ரமில்?”

தயக்கத்துடன் “ரமில்” என்றோம்.

“பேய்ப்.... ஆருக்கடா சுத்துறீங்க? நடவுங்கடா பிறிட்ஜ் குவாட்டசுக்கு. இண்டைக்கு ரெண்டுபேரும் செத்தீங்கடா மவனுகளே.”




Friday, April 17, 2009

வேரென நீயிருந்தாய்...(3)

க்கும்ம்ம்...க்கும்ம்ம்...க்கும்ம்ம்...
கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்........

ஆட்டிலறி எறிகணைகளும் பல்குழல் எறிகணைகளும் காதை செவிடாக்கத்தொடஙகின.

*****************

“நதீஷா, நவீன், நாவினி எல்லாரும் கெதியா பங்கருக்குள்ள போங்கோ. ஷெல்லடிக்க வெளிக்கிட்டாங்கள்.”

“நதீஷா நீர் அங்க என்ன செய்யுறீர்?”

“அடுப்பில கஞ்சியிருக்கப்பா. இன்னும் அஞ்சு நிமிசத்தில இறக்கீரலாம். நீங்க பிள்ளையளோட பங்கருக்குள்ள இருங்கோ நான் வந்திருவன்.”

“அப்பா! கிட்டவா அடிக்கிறாங்கள். அம்மாவை கெதியா வரச்சொல்லுங்கப்பா.”-நாவினி அழுதாள்.

“நீங்க ரெண்டுபேரும் உள்ளுக்குள்ளையே இருங்கோ. நவீன் குழப்படி செய்யக்கூடாது. நான் போய் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாரன். நாவினி! நவீனைப் பார்த்துக் கொள்ளுங்கோ. தம்பியை வெளிய வர விடாதீங்க. சரியா”
சொல்லிவிட்டு பங்கரை விட்டு வெளியே வந்தேன்.

நாவினி யார்? நவீன் யார்?

மற்றவர்களுக்கு அவர்கள் இருவரும் எங்கள் இரட்டைப்பிள்ளைகள். நிமிடக் கணக்கில் நாவினி நவீனுக்கு அக்காவாகி விட்டாள். ஆனால் எனக்கும் நதீஷாவிற்கும் அவர்கள் பிள்ளைகள் மட்டுமா? எத்தனை பேருக்குத் தெரியும் இந்த ஜென்மாந்திரத் தொடர்பு? சொன்னாலும் அவர்களால் புரிந்து கொள்ளத்தான் முடியுமா?

க்கும்ம்...

கண்ணிமைக்கும் கணத்திற்குள் என்ன நடக்கிறது என்று புரிவதற்குள்... எங்கேயோ தூக்கிவீசப்படுகிறேன். எல்லாமே மங்கலாகி பச்சையாகி இருளாகி.....

*****************

ஐயோ! அம்மா! என்ரை ஐயோ.....நதீஈஈஈஷாஆஆஆ...

வலி உயிர் பிழிந்தது. கால்வலி மறைந்து களுத்து விண்விண்ணென வலிக்கத் தொடங்கியது. கையை அசைக்க இயலவில்லை. களுத்தைத் திருப்பக் கூட முடியில்லை. தலையை உரசிச் செல்வது போல் கிபிரின் (மிகையொலி குண்டுவீச்சு விமானம்) பேரிரைச்சல் காதைக் கிழித்தது.

“த.ண்..ணீ...” தாகம் எடுக்க முனகத் தொடங்கினேன்.

“டொக்ரர்! இஞ்ச இந்தாளுக்கு உயிர் இருக்குப்போல. அனுங்கிச் சத்தம் கேட்குது.”
-இது, இது சின்னவனின் குரல்.

“சின்னவன்! அவரைப் பார்த்தால் களுத்தில சரியான அடிபோல. ஸ்ரெச்சரக் கொண்டுவந்து ஆளத்தூக்கி மற்றக் கட்டிடத்துக்குள்ள கொண்டுபோங்கோ.”
-இது புதிய குரல். ஆம்பிள டொக்ரர். அப்ப அந்த டொக்ரர் அக்கா எங்க?

“அண்ணே! எனக்கு என்ன நடந்தது?”
ஸ்ரெச்சரில் கிடத்திய சின்னவனிடம் கேட்கிறேன்.

“ஆஸ்பத்திரிக்குள்ளயும் கிபிர்க்காரன் குண்டு போட்டுட்டான் அண்ணை.”

“அப்ப அந்த டொக்ரர் அக்கா எங்க?”

கனத்த மௌனம். சின்னவனிடமிருந்து பதில் இல்லை.

“அண்ணை அந்த டொக்ரர் அக்காவுக்கும் காயமா?”

“அந்த அக்கா வீரச்சாவடைஞ்சிற்றா அண்ணை.”

“என்ன?” அதிர்ந்தேன்.

வீரச்சாவு என்றால் அவர்...?

ஓ! அதனால் தான் அந்த இக்கட்டான வேளையில் கூட எவ்வளவு இயல்பாக பதற்றமில்லாமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். மற்றவர்களை பங்கருக்குள் அனுப்பிவிட்டு கடமையே கண்ணாக.... காலனுக்கும் கடமையை செய்பவர்களைக் கண்டால் மிகவும் பிடிக்கும் போல....

“அண்ணை! நீங்க யோசிக்காதீங்கோ” நீங்க நாளைக்கு வரைக்கும் தாக்குப் பிடிச்சிட்டியள் எண்டால் பிறகு கப்பலில ஏறிரலாம்.”

இழப்புகள் வாடிக்கையாகிப் போனதால் சில நிமிடங்களிலேயே, ஏற்படுகின்ற இழப்புகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சின்னவனுக்கும் வந்திருக்கிறது. இந்த ஏற்றுக் கொள்ளலைப் பற்றித் தானே பெரியபெரிய ஞானிகளெல்லாம் போதிக்கிறார்கள். காலம் களிம்பு தடவியாற்றாத காயமும் உண்டோ? ஆனால் பெரும்பாலானவர்கள் தமக்கு நேர்ந்த இழப்புகளை ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருப்பதால் அல்லவா பெரும் மனஉளைச்சல்களுக்கு ஆளாகின்றார்கள்.

சொல்ல வார்த்தையேதும் இல்லாததால் மௌனமானேன்.

“அண்ணை! நீங்க கடுமையா யோசிக்கிறீங்க போல. ஒண்டுக்கும் யோசிக்காதைங்கண்ணை. நான் உங்கட அவாவ தேடிக் கூட்டிக் கொண்டுவாறன். நீங்க ரெண்டுபேரும் நாளைக்குக் கப்பலில போகலாம்.”
சொல்லிவிட்டு சின்னவன் அகன்றான்.

எல்லோரையும் ஏற்றிச் செல்லக் கப்பல் வருமா....?

********************

கப்பலில் பயணிப்பதற்காக வந்திருந்தவர்களெல்லாம் அருகருகே அமைந்திருந்த இரு வீடுகளில் தற்காலிகமாக இளைப்பாறுவதற்காய் வாகனங்களிலிருந்து இறக்கிவிடப்பட்டிருந்தார்கள். வீடுகள் மிகவும் விசாலமானவையாய் இருந்தன. நிலைகளிலிருந்த கதவுகளும் சாளரங்களும் காணாமற் போயிருந்தன. சுற்றிவரவும் பற்றைகள் பற்றிப் படர்ந்து அந்த அயல் முழுவதும் ஒரே பற்றைக்காடாய்க காட்சியளித்தது. தூரத்தில் சில இடிபாடடைந்த வீடுகளும் ஒரு கோவிலும் பாழடைந்து காணப்பட்டன. ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பான நகரம் கலந்த கிராமமாக இருந்த இடம் இன்று இப்படியாய் வாழ்வின் நிலையற்ற தன்மைக்கு சாட்சியாய். தூரத்துக் கடற்காற்றில் பனைவடலிகள் சலசலத்தன. தொலைதூரத்தில் உலங்குவானூர்தி ஒன்று உறுமி உறுமிச் சென்றுகொண்டிருந்தது.

“அண்ணே திருகோணமலைக்குப் போய்ச்சேர எவ்வளவு நேரம் எடுக்கும்?”
அருகிலிருந்தவரைக் கேட்டேன்.

“பின்நேரம் வெளிக்கிட்டம் எண்டால் நாளைக்கு விடியேக்க Tringo-வில நிக்கலாம்.”

“கப்பல் குலுக்குமோ அண்ணே?”

“இது பெரிய கப்பல் எண்டபடியால பெரிசாக் குலுக்காது எண்டுதான் நினைக்கிறேன்.” சொன்னவர்
“தம்பி இந்த bag-களைக் கொஞ்சம் பாத்துக் கொள்ளுங்கோ. நான் ஒருக்கா bathroom-க்குப் போய்ற்றுவாறன்.” என்றவாறே விலகினார்.

என்னுடன் ஒன்றாக வந்திருந்த மற்றைய இருவரையும் பார்க்கிறேன். பயணக்களைப்பில் தூங்கிவிழுந்து கொண்டிருந்தார்கள்.

“கட்டி ஒக்கம போலிமட்ட எண்ட.” (எல்லாரும் வரிசையி்ல் வாருங்கள்) என்ற கடற்படைச் சிப்பாயின் குரல் கேட்டு தூங்கிவழிந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் தூக்கம் கலைந்து பரபரப்பாயினர்.

என்னுடன் வந்திருந்தவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன். ஒவ்வொருவரின் உடைமைகளும் உடலும் தீவிர சோதனைக்குப் பின்னர் மீண்டும் வேறு பேரூந்துகளில் ஏற்றப்பட்டோம். பேருந்தின் ஜன்னல்கள் எல்லாம் கறுப்பு வர்ணம் பூசப்பட்டு வெளியே பார்க்க முடியாதவாறு மறைக்கப்பட்டிருந்தன. மக்கள் மாக்களாக அடையப்பட பேரூந்து புறப்பட்டது. பத்து நிமிட பயணத்தின் பின்னர் கதவுகள் திறக்கப்பட கடற்காற்று முகத்தில் மூசியறைந்தது. கரைக்கு அண்மையில் லங்காமுதித அணைக்கப் பட்டிருக்க வந்திருந்வர்கள் தங்கள் தங்கள் கையுடைமைகளுடன் (hand-luggage) கப்பலுக்குள் ஏறிக்கொண்டிருந்தனர்.

பரந்து விரிந்திருந்த நீலக்கடலை நோக்கினேன். அமைதியான அளவான அலைகள். சற்றுத் தொலைவிலேயே இரண்டு பாரிய கப்பல்கள் ஒன்று பாதி மூழ்கியவாறும், மற்றையது 90 பாகையில் சாய்ந்து கிடையாகவும் மூன்றாம்கட்ட ஈழப்போரின் சாட்சியங்களாய் தரைதட்டிக் கிடந்தன. திடீரென எங்கிருந்தோ விரைந்த வந்த நீருந்துவிசைப் படகொன்று அவற்றின் அருகிற் செல்ல மாடப்புறாக்கூட்டம் ஒன்று விர்ரென்று ஒருமித்து சிறகடித்துப் பறந்து பின் மீண்டும் அந்தக் கப்பலுக்கே திரும்பியது.

“கட்டி ஒக்கம அத்துலட்ட யண்ட.” (எல்லாரும் உள்ளுக்குள் செல்லுங்கோ) வேறொரு கடற்படையினன் கட்டளை பிறப்பிக்க கப்பலின் மேற்தட்டிலிருந்தவர்களுடன் அவசரஅவசரமா இறங்கி கப்பலின் உள்ளே சென்றேன். சிறிது நேரத்தில் கப்பல் புறப்படுவதை உணரமுடிந்தது. அதன்பின் அரைமணிநேரம் கழித்து மேற்தட்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அந்திச் சூரியன் செம்மஞ்சள் நிறத்தில் தொலைதூரத்தில் கடலுக்குள் மூழ்க ஆரம்பித்திருந்தான். “...கண்டி நகரில் குளிரோ கடுமை. காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை...” சின்ன வயதில் பாடப்புத்தகத்தில் படித்த பாடல் நினைவுக்கு வந்தது. கண்டி நோக்கி, எதிர்காலக் கனவுகளுடனும் பகிடிவதை (ராகிங்) பற்றிய பயங்களுடனும், எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. ஊரையும் உறவுகளையும் பிரியும் இதயவலியுடன் நானும் மற்றைய இருவரும் (நண்பர்களாக மாறப் போகின்றவர்கள்) கரையினை நோக்க, காங்கேசன்துறை துறைமுகம் எம்மைவிட்டு விலகிக் கொண்டிருந்தது.


(வேர் விடும்)

Friday, April 3, 2009

வேரென நீயிருந்தாய்...(1)

எங்கேயிருக்கிறேன் நான்? என்னாயிற்று எனக்கு? எங்கேயென் நதீஷா?எங்கேயென்...ஸ்ஸ்ஸ்...ஆ..........விண்ணென்ற வலி வலது தொடையில் தொடங்கி உடலெங்கும் பரவத்தொடங்கியது. கண்களை வேறு, எதுவோ மறைத்துக்கொண்டிருந்தது.

இது கனவா? இருக்க முடியாது. இந்த வலி நிஜம். காலை, ஏன் கைகளைக் கூட அசைக்க முடியாதவாறு வலி, வலி வலி....

வலியை மீறிய மனவலிமையுடன் இடது கையை ஊன்றி எழ முயல்கிறேன்.

“அண்ணே எழும்பாதீங்கோ. அப்பிடியே படுத்திருங்கோ. கால அசைக்கக்கூடாது.” ஏதோவொரு குரல் என்னை மிரட்டுகிறது.

“டொக்ரர் இந்தப் பேஷன்ருக்கு நினைவு வந்திற்றுது.” எங்கோ தொலைதூரத்தில் இருந்து கேட்பதாய் அதேகுரல்.

யாரோ அருகில் வந்து கன்னத்தைத் தட்டி “அண்ணை இப்ப எப்பிடியிருக்கு?”

யாரிது? இது, இந்தக்குரல் நதிஷா இல்லை. முதலில் அதட்டிய குரலும் இல்லை.

“நதிஷா....”

“அண்ண தயவு செய்து சத்தம் போடாதீங்கோ. மற்ற பேஷன்ற்ஸ்ஸும் முழிச்சுரிவினம்.”

அதே குரல், இம்முறை அதுவும் அதட்டியது.

“ஐயோ! வலிக்குது. தாங்கமுடியுதில்ல. ஐயோ! அம்மா.. ந.தீ..ஷா...”

“சின்னவன் இந்த பேஷன்ருக்கு ரெண்டு பனடோல் குடுங்கோ” சொல்லிவிட்டு அந்தக் குரல் நகர்ந்து சென்றது.

பனடோல் தந்தவரிடம் “அண்ணே! எனக்கு என்ன நடந்தது? என்ர மனிசி பிள்ளைகள்... என்ர மனிசி எங்கையண்ணே?”

“அண்ணே குறைவிளங்காதைங்கோ. உங்கட பேர்கூட இஞ்ச ஒருத்தருக்கும் தெரியாது. இதுக்குள்ள உங்கட சொந்தக்காரரைப் பற்றி எப்பிடியண்ணே தெரியும்? நீங்க இப்ப புதுமத்தாளன் ஆசுப்பத்திரியிலை இருக்கிறியள்.”


(வேர் விடும்)