Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Saturday, February 27, 2010

கடவுளின் வரத்தைப் புறக்கணித்தவன்


அது அவனுக்குள் நிகழ்ந்த போது அவன் பால்ய வயதிற்குள் போயிருந்தான். பதின்மம் வராத பருவம் அது. வீட்டு முற்றத்தில் அதே பருவத்தைச் சேர்ந்தவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அது வேறு பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். ஆதலினால் அயல் வீட்டுச் சிறுவர்களும் இணைந்து தங்களுக்குள் அவர்கள் பிரிந்து விளையாடிக்கொண்டிருந்தனர். உயரம் பாய்தல் அவனுக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. பாடசாலையில் படிக்கும் வேறொரு மாணவனின் திறமையைப் பற்றிய சிலாகிப்பு வந்தது. அப்படியே காற்றில் பறந்து மிதந்து வருவது போன்றான அவனின் ஸ்ரைல் வியப்பூட்டுவதாய் இருந்தது. அது அவனுக்கு ஒரு கோழியினை நினைப்பூட்டியது.

சில வருடங்களுக்கு முன்னர் அந்த நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அப்போது அவனது வீட்டில் கோழிமுட்டை அடைவைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் முன்னும் பள்ளியால் வந்த உடனேயும் ஓடிச்சென்று குஞ்சு பொரித்து விட்டதா என்று பார்ப்பதே அவன் வாடிக்கை. குஞ்சுகள் ஒவ்வொன்றாய்க் கோதுடைப்பதைக் காண்கையில் அவனுக்குள் ஒரு ஆனந்தப் பரவசம். கைகளையும் கால்களையும் உதறிக் குதித்துக் குதூகலிப்பது அவனது ஆனந்தத் தாண்டவம். சில நாட்களிலேயே அந்தக் குஞ்சுகளைக் கைகளால் அளைவதும் அவற்றை அள்ளிக் கன்னத்தோடு வைத்துக் கொஞ்சுவதும் அவனுக்குள் இன்ப ஊற்றுக்களைக் கிளறிவிடும் சுகானுபவங்கள். ஒரு மதியம் தாண்டிய வேளையில் அவன் வெளியிலிருந்து உணவருந்திக்கொண்டிருந்த வேளையில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

கோழிக்குஞ்சுகள் சற்றே வளர்ந்திருந்ததால் அவற்றினை காகங்களால் தங்களின் அலகுகளால் கொத்திக் காவிச்செல்ல முடியாத காரணத்தினால் அந்தக் குஞ்சுகள் தாய்க்கோழியுடன் சுதந்திரமாக உலவிக்கொண்டிருந்தன. எங்கிருந்தோ சட்டென காற்றை சிலாவிக்கொண்டு வந்த பருந்தொன்று தன் கால்களினால் ஒருகுஞ்சினைப் பற்றிக் கொண்டு பறக்க எத்தனித்த போதுதான் தாய்க்கோழி தாவிப்பாய்ந்து பருந்தைத் தாக்கியது. எதிர்பாராது ஏற்பட்ட அமளியில் அங்கே நின்றிருந்த நாயும் பருந்தின் மீது பாயவே பருந்து பயந்து போயிருக்க வேண்டும். கால்களிலிருந்து குஞ்சினை நழுவவிட்டுவிட்டுத் தப்பித்துக் கொண்டது. இருந்தும் கோழி விடுவதாயில்லை. தன் சிறகுகளை அடித்தடித்துப் பறந்து பறந்து பருந்தினை அந்த இடத்தை விட்டுத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தது. அதற்கு முன்னர் கோழிகள் அவ்வளவு உயரத்திற்குப் பறந்து அவன் பார்த்ததில்லை. இரவில் கோழிகளை வாதனாராணி மரத்தின் கிளைகளில் படுக்க விடுவதற்கே அவை ஒவ்வொரு கிளைகளாய் தாவித் தாவி ஏறுவதை வேடிக்கை பார்த்திருக்கிறான்.

அந்தக் கோழிபோல் தன்னாலும் பறக்க முடிந்தால் எப்படியிருக்கும்? அவனது நினைப்பை மற்றைய பையன்களின் கூக்குரல் கலைத்தது.

“டேய் உன்ர முறை. ஓடி வந்து பாய்.”

“இவனால இந்த உயரத்தைப் பாய ஏலாது.”

அவன் உயரம் பாய்வதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த கயிற்றினைப் பார்த்தான். அவனால் அதைத்தாண்ட முடியாது என்றே அவனும் நினைத்துக் கொண்டான். இதற்கு முதல் இதிலும் சற்றுக் குறைந்த உயரங்களையே அவனால் தாண்ட முடிந்ததில்லை. ஆகவே அதைத் தாண்டுவதற்கு தான் தகுதியற்றவன் என்றும் அவன் நம்பத் தொடங்கினான்.

“நான் வரேல்ல. நீங்க விளாடுங்கோ” - அவன் பின்வாங்கி வீட்டீற்குள் நுழைய முற்பட்டான்.

மற்றவர்கள் கேலிபண்ணத் தொடங்கினார்கள்.

“அந்தக் கதைப்புத்தகத்தில வந்த முனிவரைப் (சித்தரை) போல நீயும் தவம் செய்து பறக்கிற வரம் வாங்கிக் கொண்டு வந்தாத்தான் இனி எங்களோட உன்னைய விளாடச் சே(ர்)ப்பம்”.

அவனுக்கு அழுகைஅழுகையாக வந்தது. அந்தப்புத்தகத்தில் வந்த முனிவரைப் போல தன்னால் காற்றில் நடந்து பறந்து திரிய முடியாதா? தவிப்பாயிருந்தது. மனதின் ஒரு மூலைக்குள் உன்னாலும் முடியும் என்றொரு குரல் கேட்டது. வீட்டிற்குள் நுழைந்தவன். திரும்பி வந்தான்

“இஞ்ச விடுங்கோ! நானும் பாய்வன்.”

அவன் ஓடிவந்து ஒரு காலை உயர்த்தினான். அவன் அப்படித்தான். இரண்டுகால்களையும் ஒரே நேரத்தில் ஒன்றாக உயர்த்திப் பாய்வதை அவன் கற்றிருக்கவில்லை. உயர்த்தி வைத்தகாலினை அப்படியே அந்தரத்தில் வேறோ எதுவொன்று தாங்கிப்பிடிப்பதாய் அவன் உணர்ந்தான். படியில் ஏறுவது போல் அவன் மற்றைய காலையும் தூக்கி இன்னும் ஒருபடி உயரே வைத்தான். மற்றவர்கள் அவனை விப்புடன் பார்ப்தை அவனால் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.

ஆம். இப்போது அவனால் காற்றுவெளியில் ஏறிச்செல்லக்கூடியதாகவிருந்தது. அவன் இன்னுமொருபடி மேலே ஏற, மற்றையவர்கள் “ஐயோ! பேய்ய்........” என்று அலறியடித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கூக்குரலைக் கேட்டதும் அவனுக்குள்ளும் அச்சம் துளிர்விடத் தொடங்கியது. அவன் இறங்குவற்கு எத்தனித்தான். முடியவில்லை. அவனால் கால்களால் நிலத்தை நோக்கி இறக்கமுடியவில்லை. அவன் எத்தனிக்கும் ஒவ்வொரு முறையும் அவன் மேலே மேலே போய்க்கொண்டிருந்தான்.

அவன் மிகவும் பயந்து விட்டான். ஏதோவொன்று அவனை மேல்நோக்கி ஈர்த்துக் கொண்டிருந்தது. இப்போது அவன் வீட்டின் சீலிங்கின் உயரத்தை அடைந்து விட்டிருந்தான். அவன் அலறினான் யாரையாவது உதவிக்கு வரும்படி. யாரையும் காணோம். அவன் ஒருவாறாக தன்னைச் சமாளித்துக் கொண்டு வெளியே நீட்டிக்கொண்டிருந்த சீலிங்கிற்கும் கூரைக்குமிடையில் தன்னை நுழைத்துக் கொண்டான். தான் ஒருவாறாக தப்பிவிட்டதாக அவனுக்குள் எழுந்த நினைப்பினைப் பொய்யாக்கி கூரை உடைந்து விடுமாற் போல் ஆடிக்கொண்டிருந்தது. கூரையின் மீதான நம்பிக்கையினை இழந்து விட்டதன் பின்னர் அவன் வேறொரு பலமான ஒரு பொருளைத் தேடத் தொடங்கினான். சற்றுத் தள்ளியிருந்த முற்றத்து வேம்பு கண்ணில் பட்டது. அந்த வேம்பில் ஊஞ்சல் கட்டி ஆடுவது அவன் நினைவிற்கு வந்தது. ஊஞ்சல் ஆடுவது அவனுக்கு மிகவும் பிடித்த செயல். அதில் அவன் தன்னை மறப்பதுண்டு. ஊஞ்சல் ஆடும் அந்த வேப்பமரத்துக் கிளை மிகவும் பலமானதென்று பெரியவர்கள் சொல்ல அவன் கேள்விப்பட்டிருக்கின்றான். காலினைப் பக்கவாட்டில் உதைத்துத் தாவி அவன் அந்த வேப்பமரக் கிளையினைப பற்றிக் கொண்டான். அங்கிருந்த புறாக்கள் வெருண்டு விர்ரென்று சிறகடித்து சற்றுத் தூரத்திலிருந்த தென்னைமரங்களில் அமர்ந்து கொண்டன. அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆயினும் மேல்நோக்கிய ஈர்ப்பு விசை அதிகரிக்கத் தொடங்கியது. அவனுக்குள் பீதி கிளம்பியது. உதவிக்கு யாரையும் காணவில்லை. அங்கும் இங்குமாய்த் தலையைத் திருப்பிப்பார்த்தான். தென்கிழக்கு மூலையில் முருகன் கோவிலின் விமானம் தெரிந்தது. அவன் முருகனின் நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினான். மறுபடி மறுபடி ஓம் முருகா என்று உச்சரித்துக் கொண்டிருக்கையில் அவன் நாக்குகுழறத் தொடங்கியிருந்தது. இப்போது அந்த உச்சரிப்பு 'ம்...கா' என்று மருவியிருப்பதை அவன் உணர்ந்தான். அதைத் திருத்த முயற்சிக்க 'கா' 'வா'-வாகி விட்டிருந்தது. அந்த 'ம்...வா' இப்போது 'ம்...ச்வா' வாக மாறி மருவிப் பின் 'சிவா'-வாவி விட்டிருந்ததை அவன் உணர்கையில் அந்தக்குரல் அவனுக்குள் ஒலித்தது.

“நான் கடவுள் வந்திருக்கின்றேன். உனக்கென்ன வரம் வேண்டுமோ கேள்'

அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவன் கடவுளை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. அத்துடன் அவனால் அந்தக் குரலையும் நம்பமுடியாதிருந்தது. தன்னை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். இப்போது இவன் சிறு பராயத்தினன் அல்ல. அவன் தன் தற்போதைய நிலையை அடைந்திருந்தான். ஆயினும் வேப்பமரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். எப்போது அந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை அவன் உணரத் தவறியிருந்தான். இப்போது அவன் கடவுளை அலட்சிப்படுத்தத் தொடங்கினான். அந்தக் குரல் அவன் செவிக்குள் மீண்டும் ஒலித்தது. தான் கேலி செய்யப்படுவதாய் அவனுக்குள் சினம் கிளர்ந்தது. “உன்ர வரமும் பூனாவும். என்னைக் கீழே போகவிடு”.

“உன்னை விடுவதாயில்லை. நன்றாக யோசித்துவிட்டுச் சொல்”. இப்போது தன்னருகிலிருந்து ஏதோவொன்று விலகுவதை அவனால் உணரமுடிந்தது. அவனைத் தாங்கியிருந்த அந்த வேப்பங்கிளை மரத்தை விட்டு அவனுடன் சேர்ந்து மேலே கிளம்பத் தொடங்கியிருந்தது.

இப்போது என்ன வரம் கேட்கலாம் என்கின்ற சிந்தனை அவனுக்குள் எழுந்தது. தனக்கு எதுவும் தேவையில்லை. அப்படிக் கேட்பது சுயநலம் என்று எண்ணிக்கொண்டான். தன் உறவுகளுக்காகக் கேட்பதும் சுயநலமே என்றது மனது. நட்புக்களுக்காகக் கேட்கலாமா? அப்படியானால் எந்த நட்புக்காக் கேட்கலாம் என்று குழம்பிய மனது அதுவும் சுயநலத்துடன் சம்பந்தப்பட்டதே என்றது. சரி. என் இனத்திற்காக கேட்கலாமா? ஒரே வரத்தில் என்னினம் மீட்சிபெறமுடியுமாறு கடவுளை மடக்க முடியுமா? அவன் தன் வரத்தினூடாக கடவுளை மடக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.

எது என் இனம்? அவனுக்குள் குழப்பம் உண்டாயிற்று. என்னினம் தனக்குள்ளேயே அடிபடுகிறதே, என்று கவலைப்படுகையில் சற்றே கீழே குனிந்து பார்த்தான். இப்போது அவன் மிக உயரத்திற்கு வந்துவிட்டிருந்தான். தன்னினம் பற்றிய நினைப்பு மறந்து உலகத்தைப்பற்றிய நினைப்பு உண்டாயிற்று. போரற்ற, வறுமையற்ற, அமைதியான, சந்தோசமான உலகை அவன் நினைக்கத் தொடங்கினான். பூரிப்பாயிருந்தது. தான் சார்ந்த உலகிற்கு தன்னால் ஏதாவது செய்ய முடியும் என்று பரவிய சந்தோசம் சற்று நேரத்திலேயே கலைந்தது. இப்போது பூமிப்பந்து ஒரு கால்பந்தளவில் அவன் கண்களுக்குத் தெரிய அவன் மேலும் மேலும் மேலே போய்க் கொண்டிருந்தான்.

இப்போது பிரபஞ்சம் பற்றிய நினைப்பு அவனுக்குள் எழுந்தது. அவன் வசித்துவந்த பூமிப்பந்து ஒரு புள்ளியாய்த் தெரிய அவனுக்கான உலகில் அவன் விரிந்து கொண்டேயிருந்தான். ஒரு நிலையில் அவனுக்கு எல்லாமே மங்கலாகி மண்ணிறமானவொரு மலைப்பாங்கான பிரதேசம் தென்பட்டது. யாரும் ஏன் எதுவுமே தென்படவில்லை. மரங்களில்லை புற்களில்லை. அதுவொரு சுடுகாடாய்த் இருக்கக்கூடுமென அவன் ஊகிக்கத் தொடங்கினான். எரிந்த பிணங்களின் எஞ்சிய எலும்புத்துண்டுகள் ஆங்காங்கே பரவிக்கிடப்பதாய் உணர்ந்தான். தன்னுடலைப் பார்த்தான். காணவில்லை.

உண்மையாய்த்தான். அவனால் அவன் உடலைக்காண முடியவில்லை. இப்போது அவன் உருவற்றிருந்தான். தான் எங்கிருக்கின்றேன் என்றே அவனால் உணரமுடியவில்லை. இப்போது அவனுக்குப் பயம் வரவில்லை. ஏன்? பதட்டம் கூட வரவில்லை. அப்போதுதான் தான் உணர்வகளும் இழந்திருப்பதாக அவனுக்குப்பட்டது. மகிழ்ச்சியில்லை. வெறுப்பில்லை. சலிப்பில்லை. காதலில்லை. காமமில்லை. ஏன்? இதுவரை காலமும் அவன் அனுபவித்த எந்தவொரு உணர்வுகளுமின்றி அவன் சும்மாயிருந்தான். இப்போது அவன் தன்னைத் தேடத் தோடங்கினான். அவனால் அவனைக்காண முடியவில்லை.

அங்கிருக்கும் ஒவ்வோர் அணுக்களிலும் அவன் இருப்பதாயும் இல்லாமலிருப்பதாயும் ஒரே சமயத்தில் அவன் உணர்ந்தான். தன்னைத் தேடுவதைத் தவிர்த்து அப்படியே சும்மாவிருக்கத் தொடங்கினான். எவ்வளவு நேரம் அப்படியேயிருந்தான் என்பது அவனுக்கச் சரியாகத் தெரியவில்லை. அதுவொரு கணப்பொழுதாகவும் இருந்திருக்கலாம். இல்லை பலகோடி யுகங்களாகவும் இருந்திருக்கலாம். அதைப்பற்றி இப்போதும் அவனால் சரியாகச் அனுமானிக்க முடியவில்லை. ஆயினும் அவன் விழித்த போது அந்த வேப்பமரத்து ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்ததாய் நினைவிற்கு வந்தது. கடவுளின் வரம் பற்றிய சிந்தனைகள் எதுவும் அவனிடம் காணப்படுவதாய்த் தெரியவில்லை.

Saturday, June 27, 2009

நீ சொல்லுவ மச்சான்,




“நேற்றுப் போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை... ”
பாடல் வரிகளைச் சுமந்தவாறே வந்த காற்று காதில் அறைந்தது.

உண்மைதான் கடந்த சனிக்கிழமை, ஊரிலிருந்து வந்த நண்பன் ஒருவனுடன் மிகவும் பரபரப்பாக் கடந்து சென்றிருந்தது. ஆனால் இந்த சனிக்கிழமை? செல்லவேண்டிய அலுவல்கள் இருந்தாலும், பணியிடத்தில் அறிவிக்கப்பட்டிருந்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தது அலுப்பாய் இருந்தது. மாலைநேரம் தாண்டித் தொடர்ந்து கொண்டிருந்த உறக்கத்தையும், ஐரோப்பியக் கண்டத்திலிருந்து வந்த உறவினர் ஒருவரின் அழைப்புக் கலைத்து விட்டிருந்தது. வெளியே எங்காவது காற்றாடச் சென்றுவரவேண்டும் போல் இருக்கவே குளித்துவிட்டுப் புறப்பட்டேன்.


இருமலுக்கு யோக்கற் (yoghurt, தமிழல் இதையும் தயிர் என்றே அழைப்பது சரியாய் இருக்குமா?) இதமாயிருக்கும் என்ற அறை நண்பனின் கருத்தை ஏற்றுக்கொண்டு அருகிலிருக்கும் 24 மணிநேர Shop & Save இற்குச் சென்று புதிதாக அறிமுகமாகியிருக்கும் யோக்கற்றுகள் இரண்டு வாங்கினேன். ஒன்றுதான் வாங்க நினைத்தேன், ஆனால் ஒரு யோக்கற் $1.10, இரண்டு யோக்கற் $1.65. எனவே இரண்டாகவே வாங்கிக்கொண்டு அருகிலிருக்கும் பூங்காவை அடைந்தேன். ஒன்றை அருந்தி முடிக்கவே வயிறு போதும் என்றது. ஆனால் நாக்கோ மற்றதையும் கவனி என்றது கண்களைப் பார்த்து. எனக்கும் என் நாக்கிற்கும் இப்போது பெரும்யுத்தம். நாக்கின் சுவையரும்புகள் தங்கள் பணிகளை அளவுக்குமீறிச் செய்துவிட்டிருந்ததுடன் கண்களையும் தங்களுடன் கூட்டுச்சேர்த்து விட்டிருந்தன. நேரம் செல்லச்செல்ல எனக்கான ஆதரவாளர்கள் எல்லாம் எதிரணியுடன் கூட்டு வைக்கத் தொடங்கியிருந்தனர். தனிமையில் “நான்”. என் தோல்வியை ஒப்ப மனமும் விரும்பவில்லைபோல் எனக்குக் கூறியது (அல்லது அப்படி நடித்ததோ தெரியவில்லை). மத்தியஸதம் வகிப்பதாகக் கூறி என் மண்டையைக் கழுவத்தொடங்கியது. விழுந்தும் மீசையில் மண்படாமல் காட்டிக்கொள்வதே இப்போதைக்குப் புத்திசாலித்தனம் என பட்டறிவு வேறு, பாடம் புகட்ட நானும் என் சம்மதத்தை வழங்கினேன். சில வினாடிகள் தாமதித்திருந்தாலும், என் சம்மதமின்றியே அது நிகழ்ந்து விட்டிருக்கலாம் என்பது வேறு விடயம்.


அப்பா! என்ன வல்லமை இந்த நாக்கிற்கு!

இதனால்தான் முன்னோர்கள் எல்லாம் நாவடக்கம் தேவையென்றார்களோ? இத்தனை நாளும் நாவடக்கம் என்பது பேச்சை, வார்த்தைகளைப் பற்றியது என்றே எண்ணியிருந்தேன். “வில்லில் இருந்து விடுபட்ட அம்பும், வாயிலிருந்து விடுபட்ட சொல்லும் திரும்பிப் பெற முடியாதவை.” என்கின்ற பழமொழியோ, “ஒரு பெண்ணின் மூன்றங்குல நாக்கு ஆறடி மனிதனைக் கொல்லும்” என்கின்ற சொல்லாடல்களோ ஏதும் அர்த்தமற்றவையாகவே அப்போது எனக்குப் புலப்பட்டன.

குனிந்து யோக்கற் குவளைகளைப் பார்த்தேன். இரண்டுமே வெறுமையாக...

'இங்கே யோக்கற் குவளைகள் வெறுமையாக'. நான் சிரித்துக் கொண்டேன். Zen துறவிகள் யாரையாவது இந்தக் கணத்தில் சந்தித்துக்கொள்ள முடியுமா?


Zen தத்துவங்கள், ஓஷோவின் நூல்கள் மூலமாகவே எனக்கு அறிமுகமாகியிருந்தன. ஆரம்மபத்தில், என் பதின்மப் பருவங்களில் வாசிப்பதற்கு வேறு நூல்கள் கிடைக்காத பொழுதுகளில் பொழுதைப் போக்குவதற்காகவே அவரின் நூல்களை வாசித்தேன். முக்கியமாக அதில் வரும் சின்னச்சின்னக் கதைகளை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தேன். பின்னாட்களில் அவரது கருத்துகள் கொஞ்சம் கொ்ஞ்சமாக விளங்குவது (புரிவது) போலவும் விளங்காதது (புரியாதது) போலவும் விளையாட்டுக் காட்டுகையில் ஆர்வம் பிறந்தது. Zen தத்துவங்களைக் கற்றுக் கொள்ள விரும்புவர்கட்கு அது தனது தத்துவங்களை மிகவும் சிறிய சிறிய கதைகளில் அடக்கி வைத்திருக்கிறது என்கின்ற சூட்சுமம் புலப்பட்டது. பொதுவாக முதலாவது கதையாக அது உங்கள் தேநீர்க் குவளை முற்றிலுமாக நிரப்பப்பட்டிருக்கின்றது என்பதாய்ச் சொல்கிறது. அது, வெற்றுக்குவளையாக வாருங்கள் அப்போதுதான் உங்களை நிரப்பிக் கொள்ள முடியும் என்கிறது. ஏற்கனவே வேறு கருத்துக்களால், கொள்கைகளால் நிரம்பி வழியும் உங்களிற்கு, வார்க்கப்படும் உண்மைகள் வெளியே கொட்டப்பட்டுவிடும் என்பதைச் சொல்கிறது.

பொதுவாகவே உண்மைகள் தர்க்கங்கட்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன. அப்படி இருப்பதனால் தான் அவை உண்மையாகவும் இருக்கின்றன என்றே நான் நம்புகின்றேன். தர்க்கிப்புகளின் மூலம் ஒன்றை உண்மையெனக் காட்ட முடியுமாயின் அதே தர்க்கிப்புகளின் மூலமு்ம் அதைப் பொய்யாக்கியும் காட்டலாம்.

ஒரு தடவை ஒரு மதப் பிரச்சாரத் தலைவரும், ஒரு நாத்திகப் பிரச்சாரத் தலைவரும் சந்தித்துக் கொண்டனர். பொதுவாகவே ஆத்திகவாதிகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்பவர்களும் சரி நாத்திகவாதிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்பவர்களும் சரி, ஒருவரில் ஒருவர் எதிர்மறையாகத் தொங்கிக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை. எப்போது அவர்கள் சந்தித்துக் கொண்டாலும் அங்கே தர்க்கம் ஆரம்பித்து விடுகிறது. இங்கே சந்தித்துக் கொண்டவர்களோ தலைவர்கள்! தர்க்கம் மணிக்கணக்கைத் தாண்டி, நாட்கணக்கிற்கு எட்டி எப்படியோ முடிவிற்கும் வந்துவிட்டது. தங்கள் இருப்பிடம் வந்ததும் இருவரும் செய்த முதல்வேலை தங்களின் வாதங்களுக்குச் சான்றாக இதுவரை காலமும் வைத்திருந்த அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தியதுடன், இருவருமே தங்கள் கொள்கைகளையும் மாற்றிக் கொண்டார்கள். உண்மை மட்டும் அப்போதும் இருவரையும் பார்த்து மௌனமாய்ச் சிரித்திருக்கும்.

இப்போது மீண்டும் Zen-இற்கே வருவோம். எப்படி இவர்களின் நிரம்பி வழிந்திருந்த குவளைகளிற்குள் மற்றவர்களின் தேநீர் நிரப்பப்பட்டது? பொதுவாக தர்க்க ரீதியில் சிந்தித்துப் பார்த்தால் தேநீரால் நிரப்பப்பட்ட குவளைக்குள் தேநீரை ஊற்றிக்கொண்டே இருந்தால், ஊற்றுவதில் பெருமளவு வெளியே சிந்தினாலும், ஏற்கனவே உள்ளே இருப்பதும் சிறிதுசிறிதாக அகற்றப்பட்டு ஒரு கால அளவையின் பின் புதிதாக ஊற்றப்பட்ட தேநீரே அங்கு செறிவுடன் சேர்ந்திருக்கும். அப்படியானால் ஏன் வெற்றுக் குவளைகளாய் வரச்சொல்கிறார்கள்? ஒருவேளை நீண்ட காலம் செல்லலாம் என்பதாலும், பெருமளவிலானவை விரயமாகிவிடும் என்பதினாலும் இருக்குமோ? அல்லது இப்படியெல்லாம் தர்க்கிப்பதால் எந்த உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமல் எமது காலமும் வீணாகிவிடுமோ?

சிந்தனையை ஊடறுத்து தன்பக்கம் திருப்பியது, உள்ளூர் நண்பன் ஒருவனின் அழைப்பு. (ஆவணி மாதத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்காக, இப்போதே Boonlay யில் நடக்கும் ஒத்திகைகளைப் பற்றிக் கூறுவதற்காக அழைத்ததாகப் பின்னர் அழைக்கையில் கூறியிருந்தான்.) அதே நேரத்தில் இன்னோர் தொலைதூர நண்பனிடமிருந்தும் அழைப்பு வரவே, உள்ளூர் அழைப்பினைத் துண்டிக்க வேண்டிய கட்டாயம். வழமையான அலம்பல்களின் பின்னர், “முக்தியடைய என்ன வழி?” என்கின்ற பதிவைப் பற்றி அலசத் தொடங்கினான். சொல்ல வந்த விடயத்தை பலதடவை தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருப்பதாய்க குறைப்பட்டான். பின்னூட்டமிட்டவர்களின் கருத்துக்களிலிருந்து, அவர்களனைவருமே நான் குறிப்பிட்ட கடவுளைப் பற்றியோ அல்லது “முக்தி” பற்றியோ தப்பாகவே புரிந்து கொண்டுள்ளார்கள் என்றான். இல்லையே! சிலர் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதாய்த்தான் எனக்குப் படுகிறது என்றேன். இல்லை அது Anonymous -கள். அவர்கள்கூட பட்டும் படாமலுமே பின்னூட்டமிட்டிருக்கிறார்கள் என்றான். நான் எனது பின்னூட்டங்களில் கூடுதல் விளக்கம் அளித்திருக்கவேண்டும் என்று குறைபட்டுக் கொண்டான்.

“நீ சொல்லுவ மச்சான், ஆனால் நான் ஊருக்கு அடிக்கடி போறனானடாப்பா.”

Wednesday, June 17, 2009

முக்தியடைய என்ன வழி?

(இது ஒன்றும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் நோக்கத்திலல்ல)

காலாதிகாலம் தொட்டே பிறந்தவர் அனைவருக்கும் இறப்பும் உறுதிப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. மார்க்கண்டேயர், அசுவத்தாமா போன்றவர்களைச் சிரஞ்சீவிகள் என்று கூறினாலும் இன்றுவரை அவர்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே கணிதத் தொகுத்தறிவுக் கோட்பாட்டின் பிரகாரமும் இறப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. ஆக இறப்பு மட்டுமே நிச்சயப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கையில் வாழ்க்கை ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.

அப்படியெனில் எதற்காக இந்த வாழ்க்கை? வாழ்க்கையின் இலக்குத்தான் என்ன?

இப்படியான கேள்விகள் எழுந்த போதினில்தான் மதங்கள் உருவாகினவா? சரி மதங்கள் என்ன கூறுகின்றன? முக்தியடையச் சொல்கின்றன. அதற்கான வழிகள் எனச் சிலபல முறைகளையும் கூறுகின்றன. அவ்வாறான வழிகளில் விஞ்சி நிற்பது கடவுளை ஏற்று வழிபடுதலாகும். கடவுளின் அருள்பெற்றால் முக்தியடையலாம் என்று அடித்துச் சொல்லப் படுகிறது.

எனினும் காலந்தோறும் கடவுளர் எனத்தம்மைச் சொல்லிக்கொண்டோ, அன்றி கடவுளரின் தூதர்கள் எனத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டோ இப்புவியில் அவதரித்து எம்மை முக்திக்கு அழைத்துச் செல்லும் வரம் நல்குவதாக பலர் உறுதியளித்திருந்தாலும், ஏனோ தெரியவில்லை, இன்னமும் எம்மில் யாரும் முக்தியடைந்ததாகத் தெரியவில்லை. ஆதலால் அந்தக்கடவுளரையும் அவர்தம் தூதர்களையும் புறக்கணித்து விட்டு ஆதிக்கடவுளை நம்பி தவங்கள் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமாதலால், ஆத்திகர்களுக்கு எதிராய் நாத்திகர்களும் கடைவிரிக்கிறார்கள். இது கலிகாலம் வேறா? இப்போது கடவுளே இல்லை என்னும் நாத்திகவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. கடவுள் உண்டு, அவர் எமக்கு மோட்சமளிப்பார் என்கிற நம்பிக்கையில் தவம் செய்வோரில் பலருக்கும் குழப்பம். அவர்கள் கடவுளை மறுப்போருக்கெதிராக தாமும் கதைக்கத் தொடங்க தவம் கலைந்து போவதைப் பற்றிய கவலை பலருக்கு இல்லாமல் போய்விடுகிறது.

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்றவர் தெய்வப்புலவர் வள்ளுவர். ஆக கடவுளால் முடியாதெனினும் தீவிர முயற்சி அறுவடையைத்தரும். எமது தவமோ மோட்சத்தைத் தேடி. அதை அடைவதற்கு இந்துமதம் பல வழிகளைக் கூறி உதாரணபுருஷர்களாய் நாயன்மார்களைப் பட்டியலிடுகிறது.

ஒருதடவை பெங்களூர் சென்றிருந்தபோது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (ISKCON) மையத்திற்கும் செலலும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் ஸ்தாபகர் மறைந்த, பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் அருளிச்சென்ற சில ஆன்மீக நூல்களை தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கலிகாலத்தில் மோட்சம் அடைவதற்கு இலகுவான வழி இறைவனின் நாமவளிப் பிரார்த்தனையாகும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்து மதத்தில் மோட்சமடைவதற்கான வழிகளில் ஒன்றாக அடியவர் வழிபாடு பற்றியும் சொல்லப்படுகிறது. சமயகுரவருள் ஒருவரான திருநாவுக்கரசர் மேல் பக்தி கொண்டு அதன்மூலமாகவே ஒரு நாயனாரான அப்பூதியடிகளைப்பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஊரெல்லாம் நாவுக்கரசர் நாமத்தில் நீர்ப்பந்தல் அமைத்து அடியவர்கள் தாகம் தீர்த்த அவர் பெருமையை அறிந்திருக்கிறோம்.

“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்...”
-என்றார் சமயகுரவர் நால்வரில் மற்றொருவரான சுந்தரர்.

எனவே நாம் முக்தியடைவதற்கு, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கின்ற வாதப்பிரதிவாதங்களை விட்டுவிட்டு கடவுளின் நாமாவளியைப் பாடிக்கொண்டு அல்லலுறும் அடியவர் துயர்தீர்க்கும் வழிபாட்டில் ஈடுபடுவதே இப்போதைய சூழ்நிலையில் சாலச் சிறந்ததாய் இருக்கும்.

Thursday, April 23, 2009

கடவுளர் பற்றிய கனவிலிருப்போர்க்கு.....

இடுக்கண் களைந்தெம்
இன்னல் தீர்க்க வராத
“இரக்கமிலி”களைப்
பற்றிய கனவிலிருப்போரே!

கண்டேன்!
அந்த கடவுளரை
அண்டேன் என
நின்றவன் நான்,
விண்டேன் உம்மனக்குறைகளை.

ரொம்பப் பாவம் அவர்கள்.
அவர்தம் குறைகளை முறையிட,
ஆளின்றிய அவ(/க)தி நிலையில் அவர்கள்.

உம்குறை தீர்க்க
அவர்கட்கும் ஆசையாம்.
ஆனாலும் எல்லோர்க்கும்
வயதாகி விட்டதாம்.
அவதரித்து வருதற்கும்
அலுப்பாயிருக்கிறதாம்.

சிவனின் நெற்றிக்கண்ணில்
பூ-வளர்ந்து விட்டதாம் (catract).
அறுவைச் சிகிச்சையாலும்
அதையகற்ற முடியாதாம்.

சக்திக்கு மாதவிலக்கு நின்று
நெடுங்காலமாகி விட்டதாம்.
பேரப்பிள்ளைகள் வேண்டி
பிள்ளைகளுடன் பிரச்சனையாம்.

பிள்ளையாரால் ஒரு
பிள்ளையை உருவாக்க
தொப்பை தடையென்று
gym-இற்குப் போய் treadmill-இல் ஓடி
அதையும் உடைத்தாயிற்றாம்.

முருகனுக்கோ முதிர்ச்சியடையுமுன்பே
திருமணமாகி அதுவும்
இருமணமாகி, ஏற்பட்ட
சக்களத்திச் சண்டையினால்
உண்டான உளவியல் நெருக்கீட்டால்
பெண்டிரை அண்டவே பயமாம்.

யுகந்தோறும் அவதரித்துக்
களைத்த கண்ணனால்
அடிமுடி தேடி, பட்ட அவமானத்துடன்
நாபிக் கமலத்தில் இன்னோர்
அயனை இனிநினைக்கவே முடியாதாம்.

பிரம்மனுக்கோ
பிரணவ மந்திரமே மறந்து விட்டதாம்.
பின் எப்படி படைப்பதாம்
அதுவம் இன்னோர் கடவுளை?

ஆஞ்சநேயர் இன்னமும்
பிரமச்சரிய விரதத்தையே
பின்பற்றுகிறாராம்.

ஆதலினால்,
கடவுளர் பற்றிய
கனவினில் இருப்போரே!

உறக்கம் கலைத்து
உண்மையை உணருங்கள்.

இல்லையேல்,
“வாருங்கள் நாங்களினி
பேய்களை வழிபடுவோம்”
எனச் சிலர் உங்களை
தடம் மாற்றக்கூடும்.

நக்கிப் பிழைத்தற்கா, இல்லை
நாய் வாழ்க்கை வாழ்தற்கா
நாமங்கு தவம் செய்தோம்?

எமக்காக இங்கே
கடவுளரும் வரப்போவதில்லை.
பேய்களும் தரப்போவதில்லை
எமக்கான வரத்தை.