இன்று காலை பணியிடத்திற்குள் நுழைந்ததும் சீன நண்பன், "Did you hear the news?" என விளித்தான். "What do you mean?" என்றேன்.
"You know Michale Jakson?"
"Yah, yah, I heared it, because of heart attack. isn't it?"
"Yes la, he is my favourite la" என்றான்.
எனக்கோ மைக்கல் ஜாக்சன் ஒரு பிரபல பொப்பிசைப் பாடகர் என்பதைத் தவிர அவரது இசையல்பங்கள் பற்றியோ அல்லது அவரது நடனஅசைவுகள் பற்றியோ எதுவுமே தெரிந்திருக்கவில்லை. அவரைப்பற்றி இலங்கையில் இருக்கும் போது தினசரிகளில் வெளிவந்த செய்திகள் அப்படியொன்றும் அவர் மீது மதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கவில்லை. மாறாக அவர் ஒரு மனப்பிறழ்ச்சி உள்ளவராக இருப்பாரோ என்ற சந்தேகத்தையே எழுப்பியிருந்தன. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களைப் பற்றி வேறென்ன பெரிதாக அபிப்பிராயப்பட முடியும்? எனவே எனது சீன நண்பனின் துயரம் குறித்து நான் அதிகம் அலட்டிக் கொள்ளாமல்,
"You know he involved in child abuse" என்றேன்.
"Yes, yes, but you should appreciate his music talent." என்றவாறே அவரது பிரபலமான இசையல்பங்களைப் பற்றி அலம்பத்(?) தொடங்கினான்.
எனக்கு மண்டை காயத் தொடங்கியது. கதையை மாற்றுவதற்காகவும் எனக்கும் மைக்கல் ஜாக்சனைத் தெரியும் (?) என்று அவனுக்கு காட்டவும், "You know he is a black." என்றேன்.
"Yah I know la, he is also சாப்பிட்டீங்களா." என்றான், என்னைப் பார்த்துக் கேலியாக.
அடியடா புறப்படலைல! இவனுக்குத் தமிழ் சொல்லிக் குடுத்தது தப்பாப் போய்ச்சு. (வேலைநேரத்தில் அலுப்பு ஏற்படும் நேரங்களில் அவனுக்குத் தமிழில் உரையாடச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பின்னாளில் அது தப்பென உணர்ந்து அதை நிறுத்தி விட்டிருந்தேன் அவனது தமிழ்க்கொலைகளைச் சகிக்காமலும், சிலவேளைகளில அவனது உச்சரிப்புகள் தப்பான அர்த்தங்களைக் கொடுத்ததாலும். அவனுக்கு ந,ன,ண சுட்டுப்போட்டாலும் வரவில்லை. விமானநிலையம் என்பதை விமலாநிலம் என்கிறான் ஒன்பது மணி என்றால், ..ப்பது மயி என்கிறான். ஆனால் சாப்பிட்டீங்களா?, குளிச்சீங்களா? என்பவற்றை அறுத்து உறுத்து உச்சரிக்கிறான்)
எனக்கு விவேகானந்தர் தான் உடனே நினைவிற்கு வந்தார். அது அவர் அமெரிக்காவி்ல் பிரபலமாகி ஊர்ஊராய்ப போய் பிரசங்கங்கள் செய்து கொண்டிருந்த காலம். அப்போதும் அமெரிக்காவில் கறுப்பர்கள் பெரும்பாலான இடங்களில் அடிமைகளாகவே நடத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். ஒருமுறை விவேகானந்தர் இரயில் நிலையத்தால் இறங்கியபோது அவருக்கு வெள்ளையர்களால் அளிக்கப்பட்ட மகத்தான வரவேற்பைப் பார்த்து, அவரை அணுகிய ஒரு கறுப்பினத் தொழிலாளி, உங்களைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களால் எம்மினம் பெருமையடைகிறது என்றானாம். அவர் அவனைத் தட்டிக்கொடுத்துவிட்டு வெளியேற, விவேகானந்தருடன் அருகில் நின்றவர் நீங்கள் கறுப்பர் அல்ல. இந்தியர் என்று ஏன் சொல்லவில்லை என்று கேட்டாராம். அதற்கு விவேகானநதர், இதே வெள்ளையரால் எனது நிறத்திற்காக ஆரம்பகாலங்களில் நான் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன். பின் எப்படி நிறவெறியால் அவமானப்படுத்தப்படும் அவனிடம் நான் கறுப்பன் இல்லை என்று சொல்ல முடியும் என்றாராம்.
எனக்கும் கறுப்பர்கள் மேல் குறிப்பாக ஆபிரிக்க கறுப்பர்கள் மேல் ஒருவித மரியாதையும், வெள்ளையர்களால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாத கொடுமைகளால் அவர்கள் பட்ட இன்னல்களை எண்ணி ஆழ்ந்த அனுதாபமும் அண்மைக்காலம்வரை இருந்தே வந்தது. ஆனாலும் அண்மையில் ஐ.நா.வில் அடக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகளே, இன்னொரு இனத்தினை அடக்கி அழிப்பதனைத் தடுக்காது அதனை ஆதரிக்கத் துணை நிற்பதைக் கண்ட பின்னர்....
ஆனாலும் ஒவ்வொரு மனிதனின் மரணத்தின்போதும் மனம் ரணப்படத்தான் செய்கிறது.

.jpg)
