Friday, July 25, 2014

ஆனந்தி

வேலைத்தளத்தில் இருக்கையில் சொரூபன் கைபேசியில் அழைத்தான்.

'மச்சான் டேய் முகுந்தன் பிரான்சில இருந்து வந்து நிக்கிறானாமெடாப்பா. நாளைக்கு பின்னேரம் அவன மீற் பண்ணப் போவமா?'

முகுந்தனை மீண்டும் சந்திப்பேனென நான் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. இப்போது எல்லாமே அவனுக்குத் தெரிந்திருக்குமோ இல்லையோ என்றுகூடத் தெரியாது. எந்த முகத்துடன் அவனைச் சென்று சந்திப்பது? உண்மைகள் தெரிந்திருந்தால் என்னைக் காண்கையில் அவனது எதிர்வினைகளை என்னால் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்குமா? மனதிற்குள் ஆயிரம் கேள்விகளுடன் துரோகம் புரிந்துவிட்டதான குற்ற உணர்ச்சியும் மீண்டும் வந்து குறுகுறுக்கத் தொடங்கியது.

'இல்ல மச்சான். எனக்கு நாளைக்கு வேலை'

'என்னடா சனிக்கிழமையிலும் வேலையா?'

'OT' -யடாப்பா. 

'வேலைவேலையெண்டு இப்பிடி உழைச்சு என்னத்தை மச்சான் காணப்போறாய்'

'உனக்கென்னடாப்பா, நீ சொல்லுவ. அவனவனின்ரை கஷ்ரம் அவனவனுக்குத்  தான் தெரியும். மூண்டு வருஷமாச்சு. இன்னும் வந்து சேர்ந்த காசே ஏஜென்சிக்காரனுக்கு; கட்டி முடிக்கேல்ல. உழைக்கிற காசெல்லாம் வட்டிகட்டத்தான் சரியாயிருக்கு'ஃ

'சரியடாப்பா அப்ப கொன்பிரன்சில விடுறன். மற்ற லைனில முகுந்தன் நிக்கிறான் கதை'

நெஞ்சுக்குள் உண்டான நடுக்கத்தை மறைத்துக் கொண்டு,

'முகுந்தன் டேய் எப்பிடியிருக்கிற?'

'இருக்கிறன்ராப்பா. நீ எப்பிடி இருக்கிற. எப்பிடிப் போகுது கனடா எல்லாம்?'

'ம்ம்ம்.... இக்கரைக்கு அக்கரை பச்சைதான். என்ன விசயம். திடீரெண்டு கனடாக்கு வந்திருக்கிறாய்?'

'இல்ல மச்சான் தெரியாதே. வயசும் போகுது. அக்காதான் வரச் சொன்னவா. இஞ்சையொரு பிள்ளையைப் பாத்து வைச்சிருக்கெண்டு. போட்டோ பிடிச்சிருந்துது. அதுதான் நேரபாத்துக் கதைச்சுப்பழகி பிடிச்சிருந்தா கட்டுவமெண்டிட்டு வந்தனான்.'

'அப்ப ஆனந்.'

தீ-யை வாய்க்குள் விழுங்கிக் கொண்டேன். என்னையே அறியாமல் வந்து விழுந்துவிட்ட வார்த்தைகள். முகுந்தன் என்றவுடன் ஆனந்தியும் சேர்ந்தே நினைவுக்கு வருவாள். ஆனால் இந்த இருவருக்கும் நான் செய்திருப்பது? 

வாற செவ்வாய் வேலைக்கு லீவு போட்டு திரும்பவும் டொக்ரர் சூரியபாலனைப் போய்ப் பார்க்க வேணும். இல்லையெண்டா திரும்பவும் டிப்பிரஷன் வந்து வேலைக்கும் போகேலாம. ச்சே இவனை ஆரு இப்ப இஞ்சை வரச் சொன்னது?

'அந்த வே... பற்றி என்னோட கதைக்காத மச்சான். அவள் இப்பை அங்க அடிசர... .தெரியுமா உனக்கு?

கைகள் நடுங்கி கைபேசி கீழே விழுந்தது.  மனம் உடைந்து நொருங்கி சுக்கல்சுக்கலானதாய்.. குற்றவுணர்ச்சியில் மனம் குமையத் தொடங்கியது.

ஆனந்தி. 

எங்களின் சின்ன வயதுச் சிநேகிதி. பாலகப் பருவத்திலிருந்தே ஒன்றாவே படித்து வந்தோம் ஆண்பெண் பேதமறியா பேதை பெதும்பைப் பருவங்களில் எங்களோடு சேர்ந்து விளையாடியவள். நாங்கள் மறவோன்களாக அவள் மங்கையானாள். அதுவரை ஆனந்தத் தித்திப்பாய் இருந்தவள் எனக்கு ஆனந்தத் தீயாய் மாறினாள். அவளின் மேல் இன்னவென்று புரியாத அதீத ஈர்ப்புகள் என்னுள் உருவாகத் தொடங்கின. ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரங்களில்கூட  கரும்பலகையிலிருந்து  என் நயனங்கள் நழுவி அவள் கூந்தலில் சென்று சிக்கெடுக்கத் தொடங்கின. எப்போதுமே நான் ஒருவித கிறக்கத்தில் திரிந்து கொண்டிருந்தேன். இதைப்பற்றி யாருடானவது கதைக்கவேண்டும் போலிருந்தது. என் நம்பிக்கைக்குரியவனாக முகுந்தனே இருந்தான். ஒரு நாள் இன்ரேர்வலுக்கு அவனைத் தனியே அழைத்துச் சென்றேன்.

'மச்சான் நான் உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும்'

'சொல்லு மச்சான்'

ஏனோ தெரியவில்லை குரல் நடுங்கியது.

'இல்ல மச்சான்... ஆ..னந்தி ல. லலவ்'

'எப்பிடியடா கண்டு பிடிச்ச?'

'எ...என்ன?'

'நான் ஆனந்திய லவ் பண்ணுறன் எண்டு எப்பிடிக் கண்டு பிடிச்ச?'

என் இதயத்திலிருந்து எதையோ யாரோ பிய்த்தெறிவது போல உணர்ந்தேன். கண்களை உடைத்துக் கொண்டு பாய்வதற்குக் கண்ணீர் அருவிகள் துடித்தன. ஓவென்று கத்தி அழ வேண்டும் போலிருந்தது.

'மச்சான் ஆனந்தி அந்தப் பக்கமாப் போறாள். நான் பிறகு உன்னோட கதைக்கிறன் என'.

அன்றைய இரவு முழுவதும் நித்திரையின்றி மனதைப் பிசைந்துகொண்டேயிருந்தது. கண்ணீரருவிகள் கன்னங்களில் கோடிழுத்துக் கொண்டேயிருந்தன. யாருடனும் கதைக்கப் பிடிக்காமல் சில நாட்கள் தனித்தே திரிந்தேன்.

'நான் உனக்கு முதல்லேயே சொல்லேல்லையெண்டு கோபமா? சொறி மச்சான். நீதான் என்ரை லவ்வுக்கு கெல்ப் பண்ண வேணும்'

முகுந்தன் கேட்கையில் என்னால் மறுக்க முடியவில்லை.

சந்தர்ப்பம் பார்த்து ஒருநாள் ஆனந்தியிடம் சென்று நடுக்கத்துடன் முகுந்தனின் காதலைச் சொன்னேன்.

சிரித்தாள்.

'நீங்க சும்மா தானே முகுந்தனைச் சொல்லுறீங்க. கிளாசில நீங்க என்னை அப்பிடிப் பாத்துக் கொண்டிருக்கிறது எனக்கும் தெரியும்'

'இல்லை உண்மையாத் தான். முகுந்தன் தான் உங்களை லவ் பண்ணுறான்'

அவள் வதனம் சுருங்கிப் போவது தெரிந்தது.

'நானும் ஏதோ நீங்க என்ன லவ் பண்ணுறீங்களாக்கும் என்டு நினைச்செல்லோ சும்மா இருந்தன். என்னால இப்ப லவ்வையெல்லாம் நினைச்சுப் பாக்கோலாது. எனக்குப் படிக்க வேணுமாமெண்டு முகுந்தனிட்டச் சொல்லுங்கோ'

அவள் சென்றுவிட எதுவும் புரியாமல் நான் திகைத்து நின்றேன்.

சிலமாதங்களிலேயே எங்கள் பகுதிகளிலும் யுத்தம் பரவ ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கெனப் பிரிக்கப்பட்டோம்.

ஏறத்தாழ பத்து வருடங்களின் பின் 2002 இல் ஆனந்தியை எதிர்பாராத விதமாகக் கிளிநொச்சியில் சந்தித்தேன் முகுந்தனின் காதலியாக, முகுந்தனுடன். அவள் மல்லாவியில் இருப்பதாகவும் முகுந்தனைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி வந்ததாகவும் முகுந்தன் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். வேலை நிமித்தம்  நான் எனது இருப்பிடத்தைக் கிளிநொச்சிக்கு மாற்றிக் கொண்டேன்

2006 இற்குப்பின்னர் சண்டைகள் உக்கிரமடைந்து தொலைபேசிப் பாவனைகள் சுருங்கிக்கொண்டுவர முகுந்தனுக்கும் ஆனந்திக்கும் தொடர்பாளனாய் நான் மாறிப் போனேன். ஆனந்தியின் தம்பி இயக்கத்தில் இணைக்கப்பட நோயாளிகளான பெற்றோரைப் போஷிக்கும் பொறுப்பு அவளின் தலையில் விழுந்தது. உள்ளுக்குள்ளேயே ஆழஊடுருவும் படைகளின் தாக்குதல்களால் உள்ளூர் போக்குவரத்துகள் ஆபத்தானவையாக மாற எமக்கிடையிலான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. 

கையில் இருந்தவை எல்லாம் இழந்து நெஞ்சில் வியாபித்திருந்த கனவுகளும் தொலைத்து, முள்ளிவாய்க்காலிலிருந்து சூனியமாகிப் போன மனதுடன் வெளியேற கால்கள் தயங்கிக் கொண்டிருந்த கணத்தில்,

'அண்ணே நான் உங்களோட வரட்டா'

குரல் கேட்டுத் திரும்ப ஆனந்தி தன் தாயுடனும் இரு குழந்தைகளுடனும் நின்றிருந்தாள். அவளுக்கு இன்னும் நான் யார் என்பது புரிந்திருக்கவில்லை. நான் யார் என்பதை அறிய வேண்டிய தேவையும் அவளிடம் காணப்பட்டதாய்த் தெரியவில்லை. தயங்கி நின்றதையே சம்மதமாக எடுத்தவள், என்னுடன் தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டாள். அப்போதுதான் மற்றையவர்களைக் கவனித்தேன் எல்லோரும் குடும்பமாய் இணைந்தே சென்று கொண்டிருந்தனர். ஆங்காங்கே ஷெல் வீச்சுகளினாலும் துப்பாக்கிச் சன்னங்களினாலும் கொல்லப்பட்ட உடல்கள் சிதறிக்கிடக்க,

'கொஞ்சம் பொறுங்கோ அண்ணே வாறன்'

சற்றுத் தள்ளி ஓடியவள் அங்கே கிடந்த ஒரு பெண்ணின் சடலத்தைதப்பிரட்டி எதையோ எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டாள். பின் நெற்றியைத் தொட்டு தன் நெற்றியில் பூசிக் கொண்டாள். ஏதும் புரிபடாமல் நின்றேன்.

'அண்ணை குறை நினைக்காதீங்கோ. தனியப் போனா ஆமிக்காரர் ஏதுஞ்செய்து போடுவாங்கள். சேர்ந்து போனாலும் விசாரிப்பாங்கள்.. அதுதான் அந்தத் தாலியையும் எடுத்து நானே போட்டிட்டு குங்குமப் பொட்டையும் எடுத்து வைச்சுக் கொண்டு வாறன். அவங்கள் கேட்டால் என்னை உங்கட மனிசியெண்டு சொல்லுங்கோ. என்ர பேர்..'

'தெரியும், ஆனந்தி'

'உங்களுக்கு எப்பிடி என்னைத் தெரியும்' என்றவாறே என்னை முதன்முதலாக ஏறிட்டுப் பார்த்தாள்.

'ஓ! ஜேந்தன் நீங்களா?'

தலையைக் குனிந்து கொண்டாள்.

'சித்தி எனக்குக் கால் நோகுது. என்னைத் தூக்குங்கோ' என்றது அருகில் இருந்த பெண் குழந்தைகளில் ஒன்று. அதைத் தூக்கியவாறே 

'நீங்க ரெண்டு பேரும் இனி என்ன சித்தி எண்டு சொல்லக்கூடாது. அம்மா எண்டுதான் கூப்பிட வேணும் சரியா. ஆமிக்காரங்கள் கேட்டா இவர்தான் அப்பா எண்டு சொல்ல வேணும். இல்லையெண்டா ஆமிக்காரங்கள் சித்தியை ஏதும் செய்து போடுவாங்கள் சரியா?'

அந்த இரு குழந்தைகளுமே தலையை ஆட்டின. எனக்கும் ஏதோ புரிந்தது போலிருந்தது. அது எனது பாதுகாப்பிற்கும் தேவையாயிருந்தது.

முட்கம்பி முகாமிலும் நாம் கணவன் மனைவியாகவே அறியப்பட்டாலும் நாங்கள் நாங்களாகவே இருந்தோம் என்பதே உண்மை. ஆனால் அதை இந்த சமூகம் எப்படிப் பார்க்கப்போகின்றது என்பதைப் பற்றிய சிந்தனை அப்போது இருந்திருக்கவில்லை. ஒருமாதிரி விடுவிக்கப்பட அடிச்சுப்பிடிச்சு ஒரு ஏஜென்சிக்காரனைப் பிடிச்சு அங்கை இஞ்சை அலைஞ்சு கனாடாவிற்கு வந்து சேர்ந்து நிம்மதிப்பெருமூச்சும் விட்டபின்தான் மனதிற்குள் குற்றவுணர்ச்சி உறுத்தத் தொடங்கியது.

'எங்கள விட்டிட்டுப் போகாதீங்கப்பா' என்று கெஞ்சிய அந்தவிரு குழந்தைகளையோ 'நீயும் எங்களோடையே இருந்தாக் கொஞ்சமாவது தெம்பாயிருக்கும் மோன. நீயும் இல்லையெண்டா நாங்க என்னத்தைச் செய்யப்போறமோ?' என்று கூறிக்கண்ணீர்விட்ட ஆனந்தியின் அம்மாவையோ. எதுவுமே பேசாமல் முகத்தை மறைத்துக் கொண்டு தனித்திருந்து இரவுகளில் விம்மிய ஆனந்தியையோ என்னால் மறக்க முடியவில்லை. ஆனந்தியை அணைத்து அமைதிப்படுத்தி அவர்களுடன் தங்கிவிடவே மனம் விரும்பினாலும் அப்படிச் செய்வது முகுந்தனுக்குச் செய்யும் மிகப்பெரிய நம்பிக்கைத்துரோகமாக அமைந்து விடலாம் என்பதால் என்மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்

விடுதலையாகி வவுனியா வந்த அன்று முகுந்தனைத் தொலைபேசியில் அழைத்து, 'ஆனந்தி' என்று தொடங்கவே 'கேள்விப்பட்டனான் மச்சான், நான் இப்ப வேலையில நிக்கிறன் பிறகு கதைக்கிறன் என்று தொடர்பைத் துண்டித்தவன் அதன் பிறகு எந்தவொரு அழைப்பிற்கும் பதிலளிக்கவில்லை. அவன் என்னத்தைக் கேள்விப்பட்டானோவென்றும் எனக்குத் தெரியாது.

மீண்டும் கைபேசி அழைக்கவே,

என்ன மச்சான் போனைக் கட்பண்ணீற்ற?' 

சொரூபன் கேட்க, 

'இல்லையடா. கவரேஜ் கொஞ்சம் குறைவாயிருக்கு அதுதான். சொல்லு'

'அவன் முகுந்தன் வைச்சிற்றான்ரா. அவனுக்கு நீ ஆனந்தியைப் பற்றிக் கேட்டது பிடிக்கேல்லை. அவள் எப்பையோ இவனுக்குத் தெரியாம கல்யாணம் கட்டி ரெண்டு பெம்பிளைப் பிள்ளைகளும் இருக்காம். அதோட இப்ப அவள் அங்கை அப்பிடி இப்பிடித்தானாம். நீகூட அதை அவனுக்குச் சொல்லேல்லை எண்டு உன்னோடையும் சரியான கோபம். நான் தான் கல்யாண வீட்டுக்கு உனக்கும் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தினனான். வாற சனியை விட்டு அடுத்த சனி அவனுக்கு கல்யாணமடா'

மண்டை விறைக்கத் தொடங்கியது.


Wednesday, June 11, 2014

சொல்லிவிட்ட சொல்




வார்த்தைகள் தடித்து
சுயங்கள் காயமான
தருணத்தில்,

புணர்தலின் உச்சப்பொழுதில்
சீறிப்பாயும் விந்தென
பீறிட்டு வந்த சொல்,

விழுந்து முளைத்து
தழைத்து சடைத்து
சல்பீனியாவாய்

மனக்குட்டைகளில்
ஊறிக்கிடந்த நீரன்பை
மூடி மறைக்குமினி

Friday, June 6, 2014

சொல்லப்படாத சொல்



யுகங்களாய் நீண்டிருக்கும்
எமக்கிடையிலான 
மௌனப் பெருவெளிகளில்
காத்துக்கொண்டேயிருக்கிறோம்

நீ சொல்லுவாயென நானும் 
நான் சொல்லட்டுமென நீயும்

Thursday, May 29, 2014

ஒரு கவிதையின் ஜனனம்


விடலைப் பையனின்
விருப்பக் கனவாய்
அது வந்து என்னிடம் 
தன்னை வனையச் சொன்னது.

அதற்கானவென் சொற்களை
என்றைக்கோ நான் 
கண்கூசும் சூரியவிருட்டில் 
தொலைத்துவிட்டிருந்தேன்

மிகச்சரியான அந்த
ஒற்றை இழையின்றி
யாரால் இயலும்
ஒருகவிதையை நூற்க?

சுரோணிதம் சேராத 
சுக்கிலமென தனக்கான
வார்த்தைகள் இல்லாததால்
வதங்கி அழுதது.

வெளிச்சமில்லாப் 
பெருவெளிகளிலதன்
விசும்பலால் என்னுள் 
மோக விதும்பல்

இறுக்கமாய் நோற்ற
இந்திரிய விரதத்திலும்
கனவின் ஸ்கலிதமென
கசிகிறது இக்கவிதை!


Thursday, February 13, 2014

காதலர் தினம்

கொலை செய்வதென்று தீர்மானித்து கொல்லப்படுவரையும் தேர்ந்தெடுத்தபின்பும் மனதிற்குள் கொஞ்சம் கிலேசமாகத்தான் இருக்கிறது. இன்று நேற்றல்ல ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்பே கொலை செய்வதென்று முடிவெடுத்தாயிற்று. ஆனால் யாரைக் கொலை செய்யலாம் என்பதில் தான் இத்தனை நாட்களை வீணடித்து விட்டேன். கொலை செய்தபின், என்னை மாட்டிவிடக்கூடிய எந்தவொரு தடயத்தையும் விட்டுவைக்கக் கூடாது என்பது தொடங்கி அதைத் தற்கொலையாகக் காட்ட என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது வரை என்மனதிற்குள் பலவிதமான வழிமுறைகளையும் சிந்தித்தும் எந்தவொரு முடிவிற்கும் வரமுடியாமலிருந்தது. ஆயினும் லிண்டாவிடமிருந்து சற்றுமுன் வந்திருந்த அந்தக் குறுஞ்செய்தி யாரைக் கெலை செய்யலாம் என்கின்ற கேள்விக்கு வழிகாட்டிவிட்டிருந்தது.

Will you let me to be the happiest person in this valentines day?

நாளை பெப்ரவரி 14.

கடந்த சில வாரங்களாகவே லிண்டாவிடம் அந்த மாற்றத்தை நான் அவதானிக்கத் தொடங்கியிருந்தேன். அதற்கு முன்பே கொலை ஒன்றைச் செய்துவிட வேண்டுமென்ற ஆசை மனதிற்குள் மூண்டு விட்டிருந்ததால் அவளது மாற்றங்களை அவதானித்ததை நான் காட்டிக் கொள்ளாமலிருந்தேன். மற்றம்படிக்கு அவளைப் போன்றொரு அப்சரஸை அடைவதற்கு நான் ஏழேழு பிறப்பிலும் பிரம்சரிய விரதம் பூண்டிருந்திருக்க வேண்டும். எனது இப்பிறப்பு முழுமையடைந்து விட்டிருக்கிறது என்பதை அவளைச் சந்தித்த கணத்தில்தான் தான் உணர்ந்து கொண்டேன். அவளைப் போன்றொரு அழகான அம்சமான அணங்கை நீங்கள் முன்னெப்பொழுதும் பார்த்திருக்க முடியாது. இனிமேலும் பார்க்க முடியாது. அது உங்களின் விதி. ஏனெனில் நான் தான் நாளைக்கு அவளைக் கொன்றுவிடப் போகின்றேனே. 

அனைத்துக் காதலர்களும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நாளை காதலர்தினம் தான் அன்றைய தினத்தில்தான் காதலை யாசித்தவளைக் காதலின் பெயரால் ஏமாற்றிக் கொலை செய்யப் போகின்றேன். நான் ஒன்றும் காதலுக்கு எதிரி கிடையாது. ஆயினும் பாழாய்ப்போன மனதிற்குள் கொலைசெய்தேயாக வேண்டுமென்கின்ற ஆசை, காதல் காம உணர்வுகள் யாவற்றையும் விஞ்சி நிற்கையில் மனிதநேயம் பற்றியெல்லொம் துளிகூட நினைத்துப் பார்க்க முடியாது. புரிகிறது உங்கள் குழப்பம். இப்படியும் ஒருத்தன் இருக்க முடியுமா என்று. விசுவாமித்திரரையே மேனகையால் காமுறச் செய்ய முடியுமென்றால் நான் எம்மாத்திரம்? அதற்காக என் ஆண்மையிலோ அல்லது அவள் கவர்ச்சியிலோ சிறிதும் சந்தேகம் வேண்டாம். 

நீங்கள் அரேபியக் குதிரைகள் பார்த்திருக்கிறீர்களா? அதிலும் மண்ணிறத்தில் ஒலிவ் எண்ணெய் விட்டு மினுக்கிய உரோமத்துடன் வாளிப்பாய், பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அந்த வனப்பை கண்டிருக்கிறீர்களா. இப்போது அப்படியே அந்த வாளிப்பை ஒரு வெள்ளையினப் பெண்ணிடம் கற்பனை செய்து பாருங்கள். பொதுவாக வெள்ளையினப் பெண்களில் வாளிப்பான உடல்வாகு கொண்டவர்களை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். வெள்ளையினத்தில் விதிவிலக்காய் இவள் மட்டும் தன் தந்தையின் சேர்பிய ஜீனிலிருந்து அதைப் பெற்றிருந்தாள். அமெரிக்க சேர்பியக் கலப்பினில் உருவான அந்த அபூர்வ அழகியை கண்டால் எந்த ஆடவனும் ஒருதடவை ஆடித்தான் போவான். அப்படிப்பட்ட அந்த அதிசய நாரி நேரங்கெட்ட நேரத்தில் என்னிடம் தன் காதலைச் வெளிப்படுத்தியிருக்கிறாள்,


எல்லாவற்றிற்கும் ஒரு நேரங்காலம் வேண்டுமென்று சொல்வார்கள். அது என் விசயத்தில் எப்படியெல்லாம் விளiயாடுகிறது. இப்போது மட்டும் நான் சாதாரண மனநிலையிலிருந்திருந்தாலும் அவளின் கோரிக்கையை என்னால் பூர்த்தி செய்திருக்கமுடியாது என்பது என்னவொரு முரண். ஆம் அப்போது அவளல்ல நான் தான் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சி கூடிய மனிதனாக இருந்திருப்பேன். பிறகென்ன மயிருக்கு, அவளைக் கொலை செய்யப் போகிறேன் என்கிறீர்களா?  அதற்கும் அவள்தான் காரணம். சொல்கிறேன். எல்லாவற்றையும் சொல்கிறேன். நீங்கள் யாருக்கும் சொல்லிவிடமாட்டீர்கள் என்கின்ற நம்பிக்கையில் சொல்கிறேன். அவளுடன் பழகிய இந்த ஆறு மாதங்களில்தான் கொலை செய்யவேண்டுமென்கின்ற விஷநச்சு என்னுள் விதையாக விழுந்து இன்று வேர்விட்டு விழுதுவிட்டு ஆலமரமாகி என் மூளையின் ஒவ்வோர் கலங்களிலும் வியாபித்து நிற்கிறது.

அதுவரை கணினிகளின் மென்பொருளுக்கு நிரலி எழுதி எழுதி எழுதிக்  களைத்துக் கொண்டிருந்த நான் அதில் ஏற்பட்ட சலிப்பில் வேறு வேலை கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த பொழுதில் எல்லா வேலைவாய்ப்பு முகவர் இணையத்தளங்களிலும் எனது சுயவிபரக் கோவையை தரவேற்றியிருந்தேன். லிண்டாவின் விதி அவளது மேலாளர் கண்ணில் என் விபரம் அகப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் அதுவொரு வெளித்தெரியாத ஆராய்ச்சி நிறுவனம். அவர்கள் ஆராய்ச்சி பற்றி வெளியே மூச்சுக்கூட விடமுடியாது. எனது பின்புலம் பற்றிய நீண்ட ஆய்வின் பின்னர் வேறு நிறுவனம் ஒன்றின் பெயரில் ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்ட நான் லிண்டாவின் ஆராய்ச்சிக்கு நிரலி எழுதும் பணியில் அமர்த்தப்பட்டேன். ஆராய்ச்சி பறறிய விபரங்கள் வெளியே கசிந்துவிடாபடி எத்தனையோ பாதுகாப்பு நடவடிக்கைகள். எனது மென்பொருள் தயாராகும் வரை நான் வெளிநபர்கள் யாரையும் சந்திக்க முடியாது. ஏறத்தாழ வீட்டுக்காவலில் தான் இருந்தேன். தேவையான அத்தனை வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகி விட்டிருந்தது என் நிலமை. அதிக சம்பளமும் தேவையாயிருந்த வேலைத்தள மாற்றமும் என்னை இங்கே கொண்டுவந்து தள்ளியிருந்தாலும் பாலைவனத் தென்றலாய் லிண்டாவின் அருகாமை அவை அனைத்தையும் மறக்கடித்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த கசப்பான பாதுகாப்புக் கெடுபிடிகளை அடுத்து அவளுடன் நெருங்கவே அஞ்சியிருந்தேன். எல்லா இடங்களிலும் நான் கண்காணிக்கப்படுவதை உணர்ந்திருந்தாலும் அவளின் அருகாமை என் மனதிற்கு இதமாக இருந்தது. 

என்னை ஒத்த நிலையிலேயே அவளும் இருந்திருப்பாள் போலும். தானாகவே வந்து என்னுடன் உரையாடத் தொடங்கினாள். என்னைப் போலவே அவளுக்கும் உறவென்று சொல்லிக் கொள்வதற்கு யாரும் இருக்கவில்லை. அவளுடன் பழகுவதே ஒரு சித்திரவதை. உணவை அருகினில் வைத்துக் கொண்டு அதை உண்ணமுடியாமலிப்பது சித்திரவதையன்றி வேறென்ன? வந்த தொடக்க காலத்திலேயே ஒவ்வோரிடத்திலும் நான் கண்ணகாணிக்கபடுவதை உணர்ந்துவிட்டிருந்தேன். அத்துடன் இங்கே வேலைசெய்பவர்கள் முகங்களில்கூட மகிழ்ச்சியை நான் கண்டதில்லை. பெரும்பாலானவர்களும் இயந்திரங்களைப் போலவே வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதனால் என்னுள் இனம் புரியாதவொரு அச்சமும் வியாபித்திருந்தது. அப்படியில்லையெனில் எப்போதோ லிண்டாவை ...

ம்ம்ம்...விடுங்கள். அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். அவள் மேல் ஏற்பட்டிருந்த காமம் காதலாகிக் கொண்டிருந்த சமாந்தர காலத்தில் அங்கே நடக்கின்ற ஆராய்ச்சிகள் பற்றிய விபரங்களை நான் ஓரளவிற்கு ஊகித்துக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தேன். அந்த ஊகத்தை உறுதி செய்தவுடன் அதிர்ந்து போய் விட்டேன். அதைச் சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க என்னால் முடியாது. சொன்னால் என்னை விசரன் என்பீர்கள். அதிக மன அழுத்தம் ஏற்பட்டதால் பிதற்றுகிறேன் என்பீர்கள். ஆனால் இன்னும் பலபத்து வருடங்கள் கழித்து அப்போது வருகின்ற சந்ததிக்கு அது புரியக் கூடியதாகவிருக்கும். அதனால் சுருக்கமாவே சொல்லி விடுகிறேன். 

நம்பினால் நம்பங்கள். அவர்கள் அங்கே வெள்ளெலிகளைக் கொன்று அவற்றின் உயிரிலிருந்து சக்தி எடுப்பதற்குப் பரீட்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ அவர்களது பரிசோதனை வெற்றியடைந்து விட்டிருந்தது. இப்போது அவர்கள் அதைப் பன்றி ஒன்றில் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் வெற்றியடைந்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் கதைதான். உணவிற்காக உடலையும் சக்தித் தேவைக்காக அவற்றின் உயிரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த உயிர்ச் சக்தியை அளவிடும் மென்பொருளைத் தயாரிப்பதில்தான் நான் ஈடுபட்டு கடந்தவாரம் அது வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருந்தது.

அவர்களின் பரிசோதனை பற்றி எனக்குத் தெரிந்திருப்பதை ஏதோவொரு மயக்கப் பொழுதில் லிண்டாவிடம் தெரிவித்திருந்தேன். எனது அறிவுத் திறனை மெச்சியவள் என்னில் மயங்கத் தொடங்கியது அன்றிலிருந்துதான். நாளையுடன் எனது பணி ஒப்பந்தம் நிறைவடைகிறது. அதற்குள் ஒர் மனித உயிரின் சக்தியை அளந்துவிடவேண்டுமென்கின்ற ஆவல்தான் சந்ததியைப் புதுப்பிக்க வேண்டுமென்கின்ற இயல்பான உயிரியல் உந்துதலையும் மீறி அவளைக் கொலை செய்யுமாறு என்னைத் தூண்டிக்கொண்டிருக்கிறது. நாளையை விட்டால் அதற்குப் பின் எனக்கு அதற்குச் சாத்திமில்லாமல் போய்விடும். இன்றைய இரவிலேயே அதைச் செய்து பார்த்து விட்டால்.................

Why not? we both will be the happiest couple in the world since this midnight

செய்தியை அனுப்ப. உடனடியாகவே அவளிடமிருந்து பதில் வந்தது

Sure, come to the lab at exactly 12.00. you will hve a surprize too

காதலையும் கொன்று காதலியையும் கொல்ல வேண்டியிருக்கின்றதே என்கின்ற தயக்கம் இருந்தாலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பரிசோதனையை நானே செய்துவிடவேண்டுமென்கின்ற பேராசையில் ஆய்வகத்திற்கு விரைந்தேன்.

காத்திருந்தாள் கன்னி, மனதிற்குள் ஊற்றெடுத்த உணர்ச்சிகளை கவிதைகளாய்ச் சொல்லில் வடிக்கமுடியவில்லை. கட்டியணைத்து முத்தமிட ஆரம்பித்தாள். 

போகட்டும் சாகப் போகிறவள் இன்பத்தைக் கொஞ்சம் அனுபவித்துவிட்டுச் சாகட்டும் என்று நினைத்தேன். அவள் பிடி இறுகியது. கள்ளி இவ்வளவு ஆசையை என்மீது வைத்திருக்கிறாளே என்று பெருமையாக இருந்தது. அந்தளவிற்கு என்னை இறுக்கினாள் மேலும் இறுக்கினாள். மேலும் மேலும் இறுக்கிக்கொண்டே போனாள். முடியாது. இதற்குமேல் தாங்காது என்கின்ற நிலையயை நான் எப்போதோ அடைந்து விட்டிருந்தேன்.

இவ்வளவு பலசாலியாக இருக்கிறாளே. இவள் பெண்தானா என்கின்ற சந்தேகம் எழுந்தது. அவள் கரங்களில் பெண்மைக்குரிய மென்மை இல்லை. மார்பகங்கள் மெத்தென்று இருக்கவில்லை.முத்தமிட்டு நாக்கைச் சுழற்றித் துழாவியபோது தித்திக்கவில்லை. எல்லாமே என் எதிர்பார்ப்பிற்கு எதிர்மாறாகவே இருந்தன. இவள் பெண்ணில்லை. இவள் இவளல்ல. இது.!!!!! மனதுக்குள் பயம் வந்து குந்திக் கொண்டது.

என்னை அப்படியே தூக்கிக் கொண்டு பரிசோதனை இடத்தை நோக்கி நடந்தது. என்னைக் கீழே விட்டுவிடச் சொன்னேன். பதிலில்லை. கெஞ்சினேன் பதிலில்லை. என்னைக் கொண்டு சென்று அகண்ட அந்தப் பரிசோதனைக் குழாயினுள் பொருத்தும் போது தான் உறைத்தது. 

என்னையா?

Thursday, November 8, 2012

ஒரு பயணமும் சோஷலிஸமும்


யாழ்நகரிலிருந்து வன்னிப்பெருநிலப்பரப்பிற்குச் செல்லும் தனியார் பேரூந்து நிலையத்தையடைந்து வவுனியாவிற்கான பேரூந்தில் ஏறுகையில் மணி மாலை நான்கைத் தாண்டிவிட்டிருந்தது. 

“ச்சே! கொஞ்சம் முந்திவந்திருந்தா நாலு மணி bus இனைப் பிடிச்சிருக்கலாம்” என்றவனிடம் திரும்பினேன்.

“don't worry மச்சான். எங்களுக்குத் தாராளமா நேரமிருக்கு. கொழும்பு trIain பத்து மணிக்குத்தான்.”

“இல்லையடாப்பா.. நேரத்துக்குப் போனா வவுனியாவில வடிவாச் சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்.....” இழுத்தான்.

“மச்சான் இனிச் சோஷலிசத்துக்குள்ள தேவையான சாப்பாடு எண்டும் கொண்டுவரவேணுமடாப்பா”

“அம்மாணா சும்மா விசரக் கிளப்பாத. எப்பப்பாரு எதுக்கெடுத்தாலும் சோஷலிஸமும் கத்தரிக்காயும் எண்டு. வடிவா AC bus-இல கொழும்பு போக இருந்த என்னை சுரண்டல் அது இதெண்டு மண்டையைக் கழுவி வவுனியா bus இல ஏத்திப் போட்டு....”

“இல்லை மச்சான். உனக்கு இன்னும் சோஷலிஸத்தைப்பற்றி வடிவா விளங்கேல்லை. திருப்பிச் சொல்லுறன் வடிவாக் கேள்”

“திறமைக்கேற்ற வேலை. தேவைக்கேற்ற ஊதியம். இதைத்தானே சொல்லப்போற. கேட்டுக்கேட்டுக் காது புளிச்சுப் போச்சடாப்பா. கொஞ்ச நேரம் சத்தம் போடாம இரடாப்பா”

“இல்ல மச்சான் நீ ஒருக்காக் கேளன்”

“அம்மாண நான் பிறகு நான் பொல்லாதவனாகிடுவன். பிறகு நீ சந்தானம் கருணாஸ் மாதிரி ஆயிருவ”

காதுக்குள் “மச்சான் நீ கேளேன் மச்சான் நீ கேளேன்” என்று கருணாஸ் கெஞ்சுவது கேட்கவே அமைதியானாலும் அதே feelings எனக்குள்ளும். எப்படி இப்படி மாறினேன்? இப்போதெல்லாம் எதைப் பார்த்தாலும் கார்ல் மார்க்ஸ்ஸின் கொம்மியூனிஸக் கோட்பாடுகளும் அதன் அடுத்த கட்டமான சோஷலிஸமுமே மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன. எந்த வியாபார நிறுவனங்களைப் பார்த்தாலும் அது தேசிய முதலாளித்துவத்தைச் சார்ந்ததா அல்லது தரகு முதலாளித்துவத்தைச் சார்ந்ததா? எப்படியெல்லாம் அவைகள் சாதாரண மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன என்பவற்றை யோசித்து மூளையைக் குழப்புவதிலேயே காலம் கழிந்து கொண்டிருந்தது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாகி என்றைக்கு அது பாட்டாளி மக்களின் புரட்சியுடன் முடிவுக்கு வரும் இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமா?

“சகோதரர்களே எனக்கு இரண்டு கையும் இல்லை. உங்களிடம் உதவிகேட்டு வந்திருக்கிறேன். தயவு செய்து உதவுங்கள்”

கம்பீரமான குரல் கேட்டு நிமிர்ந்தேன். யாசகன் ஒருவன் பேரூந்தினுள் ஏறி சாரதியின் இருக்கைக்கு அண்மையில் நின்றுகொண்டு பயணிகளை நோக்கிக் கூறிக்கொண்டிருந்தான். ஏற்கனவே ஒருகால் அகற்றப்பட்ட முதியவர் ஒருவரும் அவரைத் தொடர்ந்து வயதான பெண்மணியுடன் ஒரு சிறுவனும் பேரூந்தினுள் ஏறி யாசித்து விட்டுச் சென்றிருந்தனர். இப்போது பேரூந்து ஓரளவிற்குப் பயணிகளால் நிறைந்திருந்தது. என் முன்னாலிருந்தவர்களில் பலர் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இங்கே ஒரு கூட்டத்திற்கு வந்துவிட்டு மீண்டும் வவுனியாவிற்குத் திரும்பிவதற்காக வந்திரக்கிறார்கள் என்பது அவர்களின் உரையாடல்களிலிருந்து புரிந்தது. தான் மிகவும் கஷ்ரப்பட்டுத் தகவல்கள் சேகரித்துச் செய்த presentation ஒன்றினை வேறொருவர் தான் செய்ததாகக் கூறிப் பெயர் பெற்றுக்கொண்டதை உள்ளக்குமுறலுடன் அவர் தனக்கருகிலிருந்தவரிடம் கூறிக்கொண்டிருந்தார். இப்போது அந்த யாசகன் பயணிகளிடம் யாசிப்பதற்காக வந்துகொண்டிருந்தான். பலர் அந்த யாசகனைப் பார்த்துவிட்டு உதட்டைப்பிதுக்கிக் கொண்டிருக்க, தன் மனக்குமுறலைப் பகிர்ந்து கொண்டிருந்தவரும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தவரும் முன்னைய யாசகர்களுக்குச் செய்தது போலவே இந்த யாசகனையும் கணக்கிலெடுக்காமல் தங்கள் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் வந்த யாசகன் ஆடாது அசையாது அவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவர்களோ அவனைச் சட்டைசெய்யாது தங்கள் உரையாடலில் தீவிரமாயிருப்பதாய்க் காட்டி்க கொண்டிருந்தனர்.

“Execuse me. I'm an unable man. Can you please help me?”

தமிழில் உரையாடிக் கொண்டிருந்த அந்தப் பயணிகள் தங்கள் பாசாங்கில் தீவிரமாயிருந்தனர்.

“மட்ட அத்த தெக்கக் ந. மட்ட பொடி உதவுகரண்ட புழுவன்த?”

அந்தப் பயணிகளிடம் எந்தச் சலனமுமில்லை.

“மூண்டு மொழியிலையும் கேட்டுப் பாத்திற்றன். எனக்கு எல்லா மொழியும் தெரியும். தெலுங்கு தெரியும். ஹிந்தி தெரியும்”

அந்தப் பயணிகள் இப்போது அமைதியாகி விட்டிருந்தனர்.

“மச்சான் ஆளைப்பார்.இவனைப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரியாத் தெரியுது?”

“ஓமடா நானும் அப்பவே யோசிச்சனான். நல்ல கட்ஸ்ஸான ஆளா smartஆ இருக்கிறான். அவனைப் பார்த்தா பிச்சை எடுக்க வந்ததாத் தெரியேல்லை. இவனுக்கு இவ்வளவு திமிர் இருக்குமெண்டால் ஆரு இவனுக்குப் பிச்சை போடுவினம்?”

உணமைதானே! நாமெல்லாம் எம்மிடம் இரந்து வாழ்பவர்களுக்கு சூடு சுரணை மானம் எண்டு ஒண்டும் இருக்கக்கூடாது எண்டுதானே எதிர்பார்க்கிறம். அப்ப எங்கட முதலாளிமாரும் அப்பிடித்தானே எங்களிடம் எதிர்பார்ப்பார்கள். ஏதோ புரிபடுவது மாதிரி இருந்தது. இதை வச்சே இண்டைக்கு இவனுக்குக் கொம்மியூனிசத்தைப் பற்றி ஒரு குப்பி எடுத்து விடலாம். மனதுக்குள் நான் கார்ல் மார்க்ஸாக மாறிக்கொண்டிருப்பதாய் ஒரு புழுகம். அருச்சுனனுக்கு கண்ணன் தேர் சாரதியா வந்து பகவத்கீதை அருளிய மாதிரி எனக்கும் வாகன சாரதிக்கு பக்கத்து இருக்கையில் அமர இடம் கிடைத்த ஒரு பயணத்தில் அந்த சாரதியிடம் கற்றுக் கொண்ட மார்க்ஸிஸ சித்தாந்தம் இடதுசாரிக் கொள்கைகள், புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டால் அதைப்பற்றித் தம்பட்டமடிக்கும் குறைகுட மனித இயல்பிற்கு நான்மட்டும் என்ன விதிவிலக்கா?

“மச்சான் இவனை வச்சே இப்ப உனக்கு கொம்மியூனிசத்தை விளங்கப்படுத்திறன் பார்”

“நீ ஒண்டும் புடுங்க வேண்டாம். அவனப் பார்த்தா றோக்காரன் மாதிரிக்கிடக்கு”

“ஓமடா நானும் அப்பிடித்தான் நினைச்சனான். அவற்றை செடிலும் திமிரும். தெலுங்கு ஹிந்தியெல்லாம் தெரியுதெண்டுறான்.”

“சரி அப்ப சத்தம் போடாம அமத்திக்கொண்டிரு“

மணி 4.30 ஆக சாரதி பேரூந்தில் வந்து ஏறி அதை start பண்ணிவிட்டு பின் 4.45 இற்கு பயணத்தை ஆரம்பித்தார். பேருந்து மின்சார நிலையவீதிக்கு வந்து வைரவர் கோயில் வீதியால் திரும்பி ஆஸ்பத்திரி வீதியில் ஏறிப்பின் ஆறாம் குறுக்குத் தெருவால் திரும்பி பிரதானவீதியை அடைந்து கண்டி A9 வீதியில் ஏறுகையில் நடத்துனர் பயணிகளிடம் பணம் வசூலிக்க ஆரம்பித்து விட்டிருந்தார்.

“அண்ணை வவுனிய எவ்வளவு?”

“நுாற்றியெண்பது”

ஆயிரம் ரூபாய்த்தாளை நீட்டினேன். வாங்கிவிட்டு சிட்டையைத் தந்தார்.

“மிச்சக் காசு?”

“ரிக்கற்றுக்குப் பின்னால எழுதியிருக்குப் பிறகு தாறன்”

 Ticket இனைப் பார்த்தேன். 177/= என்று போடப்பட்டிருந்தது. பின்பக்கத்தில் 820/= எழுதப்பட்டிருந்தது.

“பாத்தி்யா மச்சான் எங்களிட்ட எப்பிடிச் சுரண்டுறாங்களெண்டு? உண்மையா 177 ரூபா ஆனா வேண்டுறது 180 ரூபா. ஒரு trip இல எப்பிடியும் 55 பேரெண் பார்த்தாலும் சும்மா சுளையா 165 ரூபா சுட்டிடுறாஙகள். இவங்களைச் சும்மா விடக்கூடாது”

“கொஞ்ச நேரம் சத்தம் போடாம இரடாப்பா”

எல்லோரிடமும் பணம் வசூலித்துவிட்டு வந்த நடத்துனரிடம் ரிக்கற்றைக் கொடுத்தேன.

“என்ன?”

“மிச்சக்காசு தரவேணும்”

“மிச்சக்காசு ஓமந்தைக்கு அங்காலதான் தரலாம். இடையில ஏறின ஆக்களெல்லாம் ரிக்கற் எடுங்கோ”

என்னை அலட்சியப்படுத்திவிட்டு நடத்துநர் முன்னுக்கு விரைந்தான்.

ஆத்திரமாய் வந்தது. நடத்துநரிடம் தாராளமான சில்லறைகளும் சின்னத்தாள்களும் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. திரும்பி வரட்டும் மனதுக்குள் கறுவிக் கொண்டேன்.

பேரூந்து சாவகச்சேரி பேரூந்து நிலையத்தை அடைகையில் மணி ஆறைத் தாண்டி விட்டிருந்தது. இடையிலே வீதி திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பயணம் தாமதமாகிக் கொண்டிருந்தது. இப்போது பேரூந்திற்குள் இடம்கொள்ளமுடியாத அளவில் பயணிகள் நிறைந்துவிட்டிருந்தார்கள். 

பேரூந்தும் முக்கிமுனகிக் கொண்டு புறப்பட்டது.

“என்னடா இவங்கள் short service bus மாதிரி எல்லா இடத்திலையும் நிண்டு ஆக்களை ஏத்திக்கொண்டு போறாங்கள். நெரிஞ்சு கொண்டு. எல்லாம் உன்னாலதான் வந்தது. நான் என்பாட்டுக்கு சிவனேயெண்டு நிம்மதியா AC bus இல சாய்ஞ்சு படுத்துக் கொண்டு போயிருப்பன்.”

“இல்லை மச்சான். இவங்கள் எங்களை மட்டுமில்லை. short service bus காரரையும் சுரண்டுறாங்களடாப்பா. இந்தச்சனமெல்லாம் உண்மையா கொடிகாமம் இல்லாட்டி கிளிநொச்சி bus இலதான் போகவேணும். அவங்கட உழைப்பிலையும் இவங்கள் மண்ணள்ளிப் போடுறாங்கள்.”

பேரூந்து இப்போது பளையை அடைந்து விட்டிருக்க சிலர் இறங்க, பல இளைஞர்கள் ஒன்றாக ஏறினார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளிலிருந்து அவர்கள் ஒன்றாக எங்கோ ஏதோ ஒரு நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது ஒரே நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களின் உரையாடலிலிருந்து அவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழர்களல்ல என்பது புரிந்தது. அவர்களால் இப்போது பேரூந்து கலகலப்பாகி விட்டிருந்தது. கண்கள் சுழற்றியது. விழித்துப் பார்க்கையில் ஆனையிறவைத் தாண்டிவிட்டிருப்பது புரிந்தது. சன நெருசலில் எனக்கருகில் நின்றவனைப் பார்த்தேன். அதே கூட்டத்தைச் சேர்ந்தாலும் அவன் அமைதியாக வேறெங்கோ பார்த்தவண்ணமிருந்தான். தோள்மூட்டருகில் ஏதோ அழுத்துவதாய் வித்தியாசமாய் உணர்ந்தேன். திரும்பினேன். ஆத்திரமாய் வந்தது. தோளை முன்னுக்குக் கொண்டுவந்து நிமிர்ந்து அருகில் நின்றவனை முறைத்தேன். விபரீதத்தை உணர்ந்தவன் சடாரென மறுபுறமாய்த் திரும்பி நின்று கொண்டான். அவனையே தொடர்ந்து பார்க்க அதைப் புரிந்துகொண்ட அவன் சன நெரிசலுக்குள் புகுந்து என் பார்வையினின்றும் மறைந்து கொண்டான். ச்சே! எப்படித்தான் பெண்கள் இந்த பேரூந்துகளில் பயணம் செய்ய முடிகிறதோ?

கிளிநொச்சியை அடைந்ததும் பலர் இறங்கிக்கொண்டனராயினும் ஏறிக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதனிலும் அதிகமாயிருந்தது. இப்போது நடத்துநர் அந்த இளைஞர்களையும் முன்னால் நின்ற எல்லோரையும் மிகமிக நெருக்கமாக பனங்கிழங்கு அடுக்குவதுபோல் அடுக்கிக் கொண்டிருந்தான். அருகில் வந்ததும் ரிக்கற்றினை அவனிடம் கொடுத்தேன்.

“மிச்சக்காசு?”

“மிச்சக்காசெல்லாம் ஓமந்தை தாண்டினாப் பிறகுதான் தரலாம்”

“இல்லை எனக்கு அதுக்கு முதல் வேணும்?”

“அதுக்குமுதல் என்னத்துக்குத் தேவை?”

“என்ரை காசைத்தான் நான் கேக்கிறன்”

“தரமாட்டனெண்டா சொன்னான்? இப்ப தந்தா எல்லாரும் கேப்பினம். அதெல்லாம் இப்ப கரைச்சல்”

“bus நிப்பாட்டேக்க சாப்பிடுறதுக்கு என்னெட்ட வேற காசில்லை”

“இந்த bus ஒரிடத்திலையும் சாப்பாட்டுக்கு நிக்காது”

“ஓமந்தை check point இல நிக்கும் தானே”

புறுபுறுத்தவாறே ரிக்கற்றினை வாங்கினான். 800 ரூபாயை நீட்டினான். 

இவற்றை சுரண்டலுக்கு விடுறதில்லை.

”மிச்சம் 20 ரூபா?”

“அந்த ரிக்கற்றைத் தாங்க”

வாங்கி அதில் 20/= என்று எழுதித்தற்துவிட்டு 

“ஓமந்தைக்கு அங்கால வாங்குங்க”

“மச்சான் ஏன்ரா சும்மா சண்டைபிடிச்சுக்கொண்டு? சனமெல்லாம் எங்களையே பாக்குது பார்”

“இது! இதுதான் மச்சான் பிழை. இதில என்னத்துக்கு வெக்கப்படவேணும். படிச்ச மனிசர் நாங்களே இப்பிடி வெக்கப்பட்டா எல்லாரும் எல்லாத்தையும் சுரண்டிக்கொண்டு போயிருவாங்கள். கோவணமுமில்லாமப் பிறகு வெறுங்குண்டியோடதான் நிக்கவேண்டிவரும்”

“நீ முந்தி நல்லாத்தானே இருந்தனீ. பிறகென்னெண்டு உனக்கு இப்பிடி வந்தது?”

“நான் சீரியசாக் கதைக்கிறன். நீ பகிடிவிட்டுக்கொண்டு இருக்கிறாய். இப்பிடி விட்டுவிட்டுத்தான் இண்டைக்க இந்த நிலையில இருக்கிறம். உண்மையா மச்சான் இண்டைக்கு எங்களுக்கு எவ்வளவோ பிரச்சினையிருக்கு. எங்களுக்கு மட்டுமில்ல உலகத்திலை எத்தனையோ விதமா மக்கள் கஷ்ரப்படுகிறாங்கள். அதுக்கெல்லாம் காரணம் முதலாளித்துவம் தான். எப்ப எல்லா நாடும் சோஷலிஸத்துக்குப் போகுதோ அப்ப ஒரு நாட்டிலையும் ஒரு பிரச்சனையும் இருக்காது”

“சும்மா விசர்க்கதை கதைக்கிறாய். சோவியத் யூனியனுக்கு என்ன நடந்தது எண்டு தெரியாதா?”

அடடா! இவனுக்கும் கொஞ்சம் விசயம் தெரியும் போல. இனி ஆளோட கொஞ்சம் கவனமாத்தான் கதைக்க வேணும். அதுசரி சோவியத்யூனியன் ஏன் உடைஞ்சுது? ஒருநாள் குப்பியில கொம்மியூனிஸமும் சோஷலிஸமும் தரோவா விளங்கீற்றுது எண்டு நினைச்சது பிழையோ?

“இல்லை மச்சான். நான் என்ன சொல்ல வாறனெண்டா?”

“இஞ்சைவா! சோஷலிசத்தைப்பற்றிக் கனக்கக்கதைக்கிறாயல்லா? நீதானே சொன்னீ சோஷலிஸத்தில தேவைக்கேற்ற ஊதியம் எண்டு. அப்ப அங்க பார் அந்த ஐயாவ. அவர் இந்தச் சனத்துக்குள்ள எவ்வளவுக்கு நெரிபடுகிறேர் எண்டு. உன்னிலும் விட அவருக்குத்தான் இந்த சீற் தேவை. அப்ப நீ எழும்பி அவருக்கு இந்த இடத்தை விட்டுக்குடுக்கலாம் தானே”

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. முதலுக்கே மோசம் வந்திரும் போல இருக்கு.

“அப்பிடியில்ல மச்சான். எடுத்த உடனே சோஷலிஸத்தைக் கொண்டு வந்திரேலாது. அதுக்கு முதலில கொம்மியூனிசம் வரவேணும். அது என்ன சொல்லுதெண்டா திறமைக்கேற்ற வேலை. வேலைக்கேற்ற ஊதியம். So, அப்பிடிப் பாக்கேக்குள்ளை...”

“சும்மா சடையாத”

“இல்லையடா முதலில உனக்கு மார்க்ஸிஸம் தெரிய வேணும். அது என்ன சொல்லுதெண்டா....”

“ஒண்டும் சொல்ல வேண்டாம். நீ சும்மாயிரு”

அப்பாடா ஒரு மாதிரி இவனுக்குத் தெரியாத விசயங்களை இழுத்துவிட்டு, ஆள அமத்தியாச்சு. இல்லையெண்டா?

“மாத்தயா! பொட்டக் அற பத்த யண்டப் புழுவன்த?”

“இந்தாப்பாரன். தமிழ் ஆக்களுக்கு எவ்வளவு பேச்சுப் பேசி நெருக்கி நிக்க வைச்சிருக்கிறான் இந்தக் கொண்டக்ரர். ஆனா சிங்கள ஆக்களோடை எவ்வளவு பவ்வியமாய்க் கதைக்கிறான். அப்ப தமிழெண்டா தமிழனுக்கே இழப்பமா?”

“இப்பிடி வீரம் கதைக்கப் போய்த்தான் இண்டைக்கு இந்த நிலையில நிக்கிறம்”

“இல்லை மச்சான்.நாங்க அடக்குமுறைக்கு எதிரா எல்லா இனத்தையும் சேர்த்துப் போராடுறதை விட்டிட்டு தனிநாடெண்டு போராடினதுதான் பிழை. எங்களுக்குள்ளயும் எவ்வளவு அடக்குமுறைகள் இருந்தது. எல்லாரும் மனிசர்தானே. பிறகேன் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சட்டமெண்டு..”

“இப்ப நீ என்ன சொல்ல வாறாய்? ஆருக்கு என்ன சட்டம் இருந்தது?”

“இல்லை மச்சான் சாதி அது இதெண்டு எத்தினை இருந்தது. குறைஞ்ச சாதி ஆக்களை கும்பிடுறதுக்கு கோயிலுக்குக்கூடப் போக விடாம..”

“இப்ப சாதிப்பிரச்சினை இருக்கா? ஆராவது கோயிலுக்குள்ளை போகேலாம இருக்கினமா?”

“ஆனா கல்யாணமெண்டு வரேக்கை”

“அதுக்கும் சாதீய அடக்குமுறைக்கும் என்ன சம்பந்தம். அவனவன் தனக்குத் தனக்கு ஏத்த இடத்தில கட்டிக்கொண்டு போறான். கல்யாணமெண்டுறது அவையவையின்ரை தனிப்பட்ட விருப்பம். ஏன் ஒரே சாதியா இருந்தாக்கூட கல்யாணம் கட்டிக்குடுத்திருவினமா? அந்தஸ்து அது இதெண்து ஆயிரத்தெட்டுப் பொருத்தம் பார்க்கிறதில்லை?”

கொய்யால! இவன் கனக்கக் கதைக்கிறான். விடக்கூடாது.

“அது தான்ரா நான் எனன் சொல்லுறனெண்டா மார்க்ஸ் சொல்லுறேர்...”

“ஆரு? பாட்ஷாவில வாற மார்க் அன்ரனியா?”

“உனக்குச் சொல்லவந்தன் பாரு..”  

அப்பாடா ஒருமாதிரி கதையை நிப்பாட்டியாச்சு. அவன் மார்க்ஸ் என்ன சொல்லுறேர் எண்டு கேட்டிருந்தா கொம்மியூனிஸம் சோஷலிஸம் எண்டு அவனைக் குழப்பி நானும் குழம்பியிருக்கவேணும். ஆள இந்த அளவுக்கு மேல போகவிடாம வைச்சிருந்தாத்தான் எனக்கு ஏதோ கனக்கத் தெரியுமெண்டு ஒரு மரியாதையோட இருப்பான்.

“பின்னால நிக்கிற ஆக்கள் முன்னுக்குப் போங்கோ. எவ்வளவு இடம் கிடக்கு. பின்னால ஆக்கள் ஏற இடமில்லாம நிக்கினம்” 

“கொண்டக்ரருக்கு வேற வேலையில்லை. முன்னுக்கு எங்கையாம் இடம் கிடக்கு?”

“கொஞ்சம் வழிவிடுங்கோ TATA ஒண்டு வருகுது”

அந்த இளைஞர்கள் கலாய்த்தார்கள். திரும்பினேன். பெரிய உருவம் Tata lorry போல். நெருக்கிக்கிருக்கி எனக்குமுன்னால் வந்தது. தன் தொப்பையின் ஒரு பக்கத்தை முன் இருக்கையிலும் மற்றப்பக்கத்தை என் தோளிலும் பொறுக்க வைத்துவிட்டு அது stand போட்டு நின்று கொண்டது. அசையா முடியாத சனநெரிசல். நண்பன் முறைத்துக் கொண்டான்.

ஓமந்தையை அடைகையில் மணி எட்டரையைத் தொட்டுவிட்டிருந்தது. இறங்கி சோதனைச்சாவடியில் வரிசையில் நின்று சோதனைகளை முடித்துவிட்டுக் காத்திருந்து பேரூந்தில் ஏறிக்கொள்ள ஒன்பதாகியிருந்தது. நடத்துநரைக் கண்ணில் காணவில்லை.

“மச்சான் கொண்டக்கரரிட்டை இண்டைக்கு மிச்சக்காசு வேண்டாம விடுறதில்லை”

“train க்கு சரியான நேரத்துக்குள்ள போயிருவமாடா?”

“அடேய் train க்கு 3rd class sleeperets ஏற்கனவே book பண்ணயாச்சு. பத்து மணியெண்டாலும் அது எப்பிடியும் பத்தரைக்குப்பிறகு தான் வெளிக்கிடும். பிறகேன் பயப்பிடுறாய்?”

“இல்லை மச்சான். வழமையா நான் AC bus இலதான் போறனான். அதில போனா பெரிசாக் களைப்பும் தெரியாது?”

“அதுக்கு ஆயிரத்தி முன்னூறு ரூபாய் குடுப்பாய். இது இப்ப எவ்வளவு? வவுனியா bus க்கு 180 ம் கொழும்பு train க்கு 270ம், ரோற்றலா 450 தானே. அதோட bus எண்டா ஒரு இடத்திலதான் நிப்பாட்டுவான். ஒண்டுக்கு ரெண்டுக்குப் போறதெண்டாலும் கரைச்சல். இது train க்குள்ள நீ விரும்பின நேரம் மூத்திரம் பெய்யலாம். கக்கூசுக்கும் இருக்கலாம். நித்திரை வராட்டி நடந்தும் திரியலாம். bus காரர் எவ்வளவு சுரண்டுறாங்கள் எண்டுறது இன்னும் உனக்கு வடிவா விளங்கேல்லையடாப்பா. எங்கட நாட்டை உண்மையான சோஷலிஸ நாடா மாத்தவேணுமடாப்பா.

“காணும் மச்சான் அறுக்காத நிப்பாட்டு”

வேகமெடுத்திருந்த பேரூந்த திடீரென நிறுத்தப்பட்டது. 

“Traffic police மறிச்சிற்றாங்கள். over speed ஆம்.”

பயணம் ஐந்து நிமிடம் தாமதமாகி வவுனியா பேரூந்து நிலையத்தை அடைகையில் மணி ஒன்பதரையைத் தாண்டி விட்டிருந்தது.. பயணிகளில் சிலர் தங்கள் தொடர் பயண அவசரத்தினைக் கருத்தில் கொண்டு மீதிக்காசை வாங்க மறந்தோ என்னவோ வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தனர். 

“மச்சான் வாடாப்பா ஒன்பதே முக்காலாகுது. பிறகு train ஐ மிஸ் பண்ணீருவம்”

“train பத்தரைக்குத்தான் வெளிக்கிடும். இவங்கட schedule தெரியாதே? அதோட கொழும்பு train வந்து அரை மணித்தியாலத்துக்குப் பிறகுதான் இங்கை நிக்கிற train வெளிக்கிடும். இண்டைக்கு மிச்சக் காச கொண்டக்ரரிட்டை இருந்து வாங்காம விடுறதில்லை. ஓமந்தைக்கு அங்கால தாறன் எண்டு சுத்திப்போட்டு ஆள் foot board இலயே நிண்டிட்டான். உனக்கும் இருபது ரூபாய் மிச்சம் தரவேணுமெல்லா. நிண்டு வேண்டிப் போட்டுத்தான் அடுத்த வேலை”

இறங்கி வெளியே வர நடத்துநரைச் சுற்றி 25 பேர் வரையிலானோர் நின்றிருந்தனர். தன்னிடம் நூறு ரூபாய்க்குக் குறைந்த தாள்கள் இல்லை என்பதால் பெரும்பாலானோருக்கும் இருபது ரூபாயைக் கழித்துக் கொண்டே மீதிப்பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். மற்றவர்களுக்கு கடையில் சென்று காசு மாற்றிவிட்டு தருவதாகச் சொல்லவே பலரும் விலகிவிட நானும் அவனுமே எஞ்சினோம்.

“மச்சான் விட்டிட்டு வாடாப்பா. வேணுமெண்டா நான் அந்த இருபது ரூபாயைத் தாறன். இருபது ரூபாயைப் பார்த்து பிறகு நீ இருநூற்றியெழுபது ரூபா train ஐ விடப் போற”

“சத்தம் கேட்டனி தானே. இப்பத்தான் கொழும்பு train வருகுது. இன்னும் அரை மணித்தியாலம் கிடக்கு இஞ்சையிருந்து போற train வெளிக்கிட. இவர் மற்றாக்களுக்குச் சுத்தின மாதிரி எனக்கும் சுத்தப் பாக்கிறேர். முந்தியெண்டா விட்டிருப்பன். இப்ப மார்க்ஸ்ஸிஸம் தெரிஞ்சாப்பிறகு இந்தச் சுரண்டலையெல்லாம் என்னால விடேலாது மச்சான்.”

கடைக்குச் சென்று காசுமாற்றி இருவருக்குமான மீதிப்பணம் நாற்பது ரூபாவையும் பெற்றுக்கொண்டு திரும்புகையில் ஏதோ சாதித்து விட்டாற்போல் இருந்தது.

“மச்சான் ஓட்டோ பிடிச்சுப் போவமடா லேற்றாகீற்றுது”

“இப்பத்தான்ரா பத்து மணி. இன்னும் அரை மணித்தியாலம் கிடக்கு. அஞ்சு நிமிசத்தில நடந்தே போயிரலாம். இதுக்குப்போய் ஓட்டோக்காரனுக்கு நூறு ரூபாய் குடுக்கோணுமா?”

அவனின் பதற்றம் எனக்குச் சந்தோசத்தைத் தருவதாய்த் தோன்றியது.

“ஏன் மச்சான் ரென்ஷனாகிற. என்னைப் போல சும்மா கூலா வா. பாத்தியா மார்க்ஸிஸம் தெரிஞ்சதால இண்டைக்கு ஒரு சுரண்டல தடுத்திருக்கிறம்”.

அவன் அமைதியாகவே வந்தான். புகையிரத நிலையத்தை அடைகையில் புகையிரதம் கிளம்பிக்கொண்டிருந்தது. அதைப் பிடிக்க எத்தனித்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டிருந்தன.

அவனைப் பார்ப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன்.

“train இல்லாட்டி என்ன? ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒருக்கா bus இருக்குத்தானே. பொறு போய் ticket-ஐக் குடுத்துக் காசைத் திருப்பிக் கேப்பம்”

புகையிரத அலுவலகத்தில் ticket-இனைக் கொடுத்துக் காசைத் திருப்பிக் கேட்டபோது Not refundable என்று கூறி மறுத்து விடவே தோல்வியுடன் அவனிடம் வந்தேன். 

“மச்சான் refund தர மாட்டனெண்டுறாங்கள். Democratic Socialist Republic of Sri Lanka எண்டு பேரை வைச்சுக்கொண்டு Government ம் எங்களைச் சுரண்டுறாங்கள். Government office-இலயே சோஷலிஸம் இல்லையடாப்பா. நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதா?”

“சோஷலிஸமும் பு. . . .ம் சத்தம் போடாம வாறியா”





Sunday, October 14, 2012

'புதிய பண்பாட்டுத்தளம்' - பத்தோடு பதினொன்றாகுமா?


இன்றைய காலத்தின் தேவை(?) கருதி புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பொன்று, “புதிய பண்பாட்டுத்தளம்” என்கின்ற பெயருடன் தனது அங்குரார்ப்பண நிகழ்வினை கடந்த சனிக்கிழமை (13-10-2012) ஹற்றன் நகரில் நடாத்தியிருந்தது. பல்வேறுபட்ட தமிழ் அமைப்புக்களைச் (அரசியல் கட்சிகள் உட்பட) சேர்ந்தவர்களுடன் கலை இலக்கியத்துறையைச் சார்ந்த சிலரும் இந்நிகழ்வின் பங்காளிகளாய் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர். பல்வேறு கலை இலக்கிய விழாக்களில் பார்வையாளனாய் பங்கேற்றிருந்தாலும், இதுபோன்ற கொள்கை அடிப்படையிலான அமைப்பொன்றின் நிகழ்வினை நேரடியாகப் பார்க்கக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும்.
 
“புதிய பண்பாட்டுத்தளம்” என்கின்ற அமைப்பின் கொள்கைகள் குறித்த அவர்களின் உரைகள், விமர்சனங்கள் மற்றும் பங்கேற்பாளரின் கருத்துரைகள் என்பவற்றிலிருந்து மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனூடாக சமுதாய மாற்றத்தினை உண்டுபண்ணுவதும், பல்வேறு அமைப்புக்களிலிருந்தும் விலகியவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு தளத்தினை உருவாக்குவதுடன் சமூக மேம்பாட்டிற்காக அனைத்து அமைப்புகளையும் இயன்றவரையில் ஒன்றிணைக்கும் ஒரு களமாகவும் இது அமையலாம் எனப்புரிந்தது. அதன் அமைப்பாளர்கள் இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்தவர்களாய் இருப்பதால், ஜனநாயகக் கட்சிகளையும் தம்முடன் இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு தயாராயிருப்பதாய் கூறியிருந்தனராயினும, அவர்கள் மார்க்சிச கொள்கைகளுக்கு அமைவாகவே தங்கள் செயற்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. மார்க்சிசம் பற்றிய அல்லது கொம்மியூனிசம், சோசலிசம் போன்றவை பற்றிய தெளிவின்மை காரணமாக சம்பந்தப்பட்ட சிலருடன் உரையாடிய பின்னர் இணைய உதவியுடன் சில புரிதல்கள் என்னுள் ஏற்பட்டனவாயினும், இன்றைய சூழலில் இங்கே முதலாளித்துவத்தை ஒழித்து கொம்மியூனிசம் சாத்தியமா என்பது எனக்கு மிகப்பெரிய கேள்வியாகவே தெரிகிறது.
 
இது ஒரு நாடு தழுவிய வெகுஜன அமைப்பாக இருக்கப் போவதாலும், ஒற்றைத் தலைமைக்குப் பதில் கூட்டுத்தலைமையைக் கொண்டிருக்கப் போவதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்ததாலும், எனது அறிவிற்கெட்டிய இலங்கை தமிழ் அமைப்புக்களின் (அரசியற்கட்சிகளுட்பட) வரலாறுகளினாலும் சில கேள்விகள் எழுகின்றன. இந்த அமைப்பும் காலவோட்டத்தில் ஒரு அரசியற்கட்சியாக மாறி வாக்குக் கேட்க வந்து நிற்குமா? கூட்டுத்தலைமைக்குள் கொள்கை முரண்பாட்டாலோ அல்லது மற்றைய கட்சிகளைப்போல் அதிகார மோகத்தாலோ பிரிவினை தோன்றினால் என்ன நடக்கும்? (ஒற்றைத் தலைமையுள்ள அமைப்புக்குள் இந்தச் சிக்கல் குறைவு என்றே நினைக்கின்றேன்)
 
அப்படியான ஒரு நோக்கத்தில் உருவாக்கப்படும் ஒரு அமைப்பிற்கான தேவை இன்றைய சூழ்நிலையில் இல்லை என்பதால், அதன் அமைப்பாளர்கள் நேரடி அரசியலில் இறங்க மாட்டார்கள் என்றே கருதுகின்றேன். மாறாக, மார்க்சிச கொள்கைகளை வைத்து எப்படிக் கொம்மியூனிசம், சோசலிசம் போன்றவை உருவாக்கப்பட்டதோ அதேபோல் சமூக விடுதலை சார்ந்த அரசியலுக்கான ஒரு அடிப்படையாக (framework) மக்களிடையே சமூகத்தளைகளினையறுக்கும்  விழிப்புணர்வினை உண்டுபண்ணும் தோற்றுவாயாக, இந்த வெகுஜன அமைப்பு மிளிரட்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை அனைத்துக் கட்சிகளையும் கூட்டிவைத்து ஆராயட்டும். ஒத்துப் போகும் அமைப்புகளை அணைத்துக்கொண்டு அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கட்டும்.
 
இல்லையெனில் இதுவும் பத்தோடு பதினொன்றாய்.........