Monday, May 3, 2021

காலுங் காதலும் (2)

இம்முறை நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் நானிருந்தேன். நடக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவதென்பது நினைத்தே பார்க்கமுடியாத காரியம். இந்நிலையையிட்டு என்னிலும் அதிகம் வருந்தியது ராசலட்சுமிதான். அவளுடைய இராசிதான் என்னால் இம்முறை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என்று ஞானவதி பகிடியாக ராசலெட்சுமியிடம் கூறப்போய் அது பெரிய பிரச்சினையில் போய் முடிந்தது.

ராசலட்சுமியைத் தவிர்த்து மேலும் ஐந்து ஜீவன்களும் என்னுடைய நிலையை எண்ணித் துக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் வேறுயாரும் அல்ல. அப்புவும் அம்மாவும் என் மூன்று தங்கைகளும் தான். அம்மாவின் வேண்டுதலோ அல்லது ராசலட்சுமியின் வேண்டுதலோ அல்லது ஒட்டகப்புலத்து முறிவு நெறிவு வைத்தியரின் திறமையாலோ தெரியாது அடுத்த சில மாதங்களில் நான் பூரணமாகக் குணமடைந்தேன்.

நான் பூரண குணமடைந்த சில மாதங்களில், துலா மிதித்துக் கொண்டிருந்த அப்பு தவறி விழுந்து தன் கைகளையும் கால்களையும் உடைத்துக் கொண்டார். குடும்ப வண்டிலை இழுக்க வேண்டிய பொறுப்பு எள் தோள்களில் வீழ்ந்தது. எஸ். எஸ். சி சோதனை எடுப்பதற்கு மூன்று மாதங்கள் இருப்பதற்குள் என் பாடசாலை வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் அது எங்கள் காதலிற்கு வெறும் காற்புள்ளியாக மாத்திரமே அப்போது தெரிந்தது.

வீட்டில் வறுமையும் தன் தலையை விரித்துக் கொண்டு வந்து குடிகொண்டது. இம்முறை வெங்காயச் செய்கையும் பெரிதாய் வாய்க்கவில்லை. அப்பு ஓரளவிற்குத் தேறி நடக்கத் தொடங்கியிருந்தாலும் மண்வெட்டி பிடிக்குமளவிற்குத் தேறியிருக்கவில்லை. வீட்டில் எந்நேரமும் புறுபுறுத்துக் கொண்டேயிருந்தார். இடையிடையே கள்ளுத் தவறணையில் அவரைக் காணக்கிடைப்பதாய் நண்பர்கள் வந்து சொன்னார்கள். இவ்வாறே சில வருடங்கள் உருண்டோடின. வறுமையின் பிடியிலிருந்து எந்த விடியலும் தோன்றுவதாய்த் தெரியவில்லை.

என்ன வாழ்க்கையடா இது என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில்தான்,

”நீயும் என்னோட வாவன் கிளிநொச்சிக்கு போவம். அங்க திருவையாத்துப் பக்கம் நிறையக் காணிகள் சும்மா கிடக்காம். நாங்க போய் அதுகளை வெட்டித் துப்பரவாக்கித் தோட்டம் செய்யலாமாம். காணியும் எங்களுக்கே வந்திரும் எண்டுறாங்கள்”

என்று ஒன்றுவிட்ட மாமா முறையிலான அயலவர் ஒருவர் அழைக்க நானும் அங்கு போகலாம் என முடிவெடுத்தேன். அதனை ராசலட்சுமியிடம் கூறிய போது அவள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து அடம்பிடித்தாள். அங்கு நான் சென்று விட்டால் தன்னை நான் மறந்து விடுவேன் என்று கூறி அழுதாள். நானும் எனது குடும்ப நிலையைினை அவளுக்கு விளங்கும் படி எத்தனையோ தடவைகள் எடுத்துக் கூறி, நிச்சயம் நான் அவளை மறக்க மாட்டேன் என்று அம்மா மேல் சத்தியமும் செய்தேன்.

”உந்தச் சத்தியத்தையெல்லாம் நான் நம்ப மாட்டன்.”

”இதுக்கும் மேல என்னண்டடியப்பா உன்னை நான் நம்ப வைக்கிறது?”

”ம்… ம்…ம்… அபபடியெண்டா உங்கட இந்தக் காலுகள் மேல சத்தியம் செய்யுங்கோ பாப்பம். அப்ப நான் உங்கள நம்பிறன்”

எனககுச் சிரிப்பாய் வந்தது.

”ஏனடியாத்தை! போயும் போயும் காலில போய்ச் சத்தியம் பண்ணச் சொல்லிக் கேக்கிற?”

”ஆ! ஏனெண்டா நீங்க ஓடேக்குள்ள உங்கட இந்தக் காலுகளைப் பாத்துத் தான் எனக்கு உங்களிலயே ஆசை வந்தது. உங்கட காலுகள் சரியான வடிவு தெரியுமா?”

எனக்கு நம்புவதா விடுவதா என்று தெரியவில்லை. ஆயினும் அவளைச் சமாதானம் செய்வதற்காக என் கால்களின் மேல் சத்தியம் செய்தேன்.

”நான் இன்னும் ஒண்டும் என்ர மனசில நினைச்சிருக்கிறன். அதுக்கு என்ர அப்பு மட்டும் ஓமெண்டிட்டார் எண்டால் நல்லாயிருக்கும். ஆனா அப்பூட்ட எப்பிடிக் கதைக்கிறதெண்டுதான் தெரியேல்ல.

என்று கூறிவிட்டு ராசலெட்சுமி சென்றுவிட்டாள். இப்படி என்னதான் வில்லங்கமாக அவள் யோசிக்கிறாளோ என்ற எண்ணத்துடன் நானும் வீட்டுக்குத் திரும்பினேன்.

மறுநாள் மாலை ராசலெட்சுமியின் தாயும் தந்தையும் எம் வீட்டிற்குத் திடீரென வருகை தந்தனர். இதை எங்கள் வீட்டில் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்களை வரவேற்கக் கூடிய நிலையில் எங்கள் வீடும் இருக்கவில்லை. வீட்டின் முற்றத்தில் கிடந்த கோழிப் பீக்களை மணலைக் காலால் தட்டி மூடினேன். முற்றத்தில் சற்றுத் தள்ளிப் படுத்திருந்த மாட்டினை எழுப்பி தள்ளிப் போகச் செய்ய, அது சனியன் வாலைத் தூக்கிச் சாணியைப் போட்டது. எனக்கோ மானம் கப்பல் ஏறிக்கொண்டிருந்தது.

பின்வளவிற்குள் நின்றிருந்த அம்மாவைக் கூப்பிட்டேன். அம்மாவும் எனது காதல் பற்றி அரசல்புரசலாக அறிந்திருந்தார். இவர்களைக் கண்டதும் அம்மாவிற்கு காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை. அவர் போய்க், குடித்துவிட்டு வந்து படுத்துக் கிடந்த அப்புவைத் தட்டி எழுப்பினார்.

அதன் பின் நடந்தவை யாருடைய வாழ்க்கையிலுமே நடக்கக் கூடாதவை. விடுப்புப் பார்ப்பதற்காக அயலட்டங்கள் வீதியில் கூடிவிட்டிருந்தனர். அதன் பின்னர் ராசலட்சுமியின் முகத்தில் எப்படி என்னால் விழிக்க முடியும். அவளிடம் சொல்லாமலேயே நான் திருவையாறுக்குப் புறப்பட்டு விட்டேன்.

ஊரினதும் ராசலட்சுமியினதும் ஞாபகங்கள் என்னைப் பாடாய்ப் படுத்தின. ஞாபகங்களில் தொல்லையிலிருந்து என்னை விடுவிப்பதற்காய் அதிக நேரத்தினைத் தோட்ட வேலைகளில் செலவழித்தேன். காடுகள் வெட்டித் துப்பரவாக்கி எனக்கென்றொரு குடிலும் கட்டி முழு நேரமும் தோட்ட வேலைகளில் மூழ்கியதால் எதிர்பார்த்ததை விட அமோக அறுவடை.

ஏறத்தாழ ஆறு மாதங்களின் பின்னர் ஊருக்குத் திரும்பினேன். ஊரிலிருந்து புறப்படும் முன்னர் நடந்த நிகழ்வுகளால் மனம் சஞ்சலப்பட்டாலும், அதை இப்போது அனேகமானோர் மறந்துவிட்டிருப்பார்கள் என்ற ஒரு நப்பாசை மனதினுள்.

ஆனால் நான் அறிந்த செய்தியோ என் இதயத்தைக் காரை முள்ளால் தேய்த்தது போலிருந்தது. என்ர ராசலட்சுமி என்னை விட்டிட்டு ஏன் இந்தக் கேவலமான உலகை விட்டிட்டே நிரந்தரமாகப் போய்விட்டாள். அரளி விதை அவளுக்குப் புதியதில்லைத்தான். ஆனாலும் என்ரை அல்லிராணியை அரளிராணி கொன்று விட்டாள். தான் போவதாய் இருந்தால் என்னையும் கொன்றுவிட்டுத்தான் போவேன் என்று சொல்லியிருந்தாள். அப்போது தெரிந்திருக்கவில்லை இப்படி என்னை உயிருடன் கொன்றுவிட்டுப் போவதைப் பற்றிச் சொல்லியிருக்கிறாள் என்று. என்னை நடைப்பிணமாக்கி விட்டு அவள் போயே போய்விட்டாள்.

என் சோகமெல்லாம் கோபமாய் மாறி என் அப்புவின் மேல் பாய்ந்தது. இதுவரை அப்புவை எதிர்த்து ஒருவார்த்தை பேசியறியாத நான், கண்டபாட்டுக்கு அவரை ஏசத் தொடங்கினேன். அதைக்கண்டு அம்மா தான் மாரிலடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள். அதைத் தொடர்ந்து மூன்று தங்கைகளும் அழத்தொடங்க எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது.

அண்டைக்கு மட்டும் அப்பு குடிக்காமலிருந்திருந்தால் வந்திருந்தவர்களையோ அல்லது ராசலட்சுமியைப் பற்றியோ கேவலமாக் கதைத்திருக்க மாட்டார் என்றே இப்போதும் தோன்றுகிறது. அவர்கள் திடீரென்று வந்து திருமணம் பற்றிக் கதைத்ததும், நான் கூடத்தான் திக்குமுக்காடிப் போயிருந்தேன். என் வயதொத்த ஒரு சிலர் அப்போது  திருமணம் முடித்திருந்தாலும், மூன்று தங்கைகளை அடுக்கடுக்காய் வீட்டினுள் வைத்துக்கொண்டு என் திருமணத்தைப் பற்றி எண்ணிப் பார்ப்பதென்பது அதிலும் எமது இந்த வறுமை நிலையில் இதுவெல்லாம் கொஞ்சம் கூடச் சாத்தியமேயில்லாத ஒன்று.

எனக்கு வீட்டில் யாருடனும் பேசப்பிடிக்கவில்லை. அம்மாதான் தங்கைகளைக் கரை சேர்க்க வேண்டியது என் பொறுப்பென்றும் அப்புவால் எதுவும் முடியாதென்றும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார். ஊரிலிருக்கப் பிடிக்காததால் நான் மீண்டும் திருவையாற்றுக்கே சென்று விட்டேன். ஓரளவு நிதிநிலை தேறியவுடன் மூத்த தங்கையின் திருமணத்தை நிறைவேற்றினேன். அது நடந்து சில வாரங்களிலேயே அப்புவும் போய்ச் சேர்ந்தார்.

இரண்டாவது தங்கையின் திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்த போது ஊரில் நிலைமைகள் மாறியிருந்தன. ஊரில் பல இளைஞர்கள் தலைமறைவாகியிருந்தார்கள். அடிக்கடி இரவுகளில் இராணுவத்தினர் வந்து வீடுகளில் சோதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அம்மாவும் கடைசித் தங்கையும் ஊரில் தனித்திருக்கப் பயப்பட்டனர். எனவே நானும் அவர்களுடனேயே தங்கவேண்டியதாகிப் போனது.

சில மாதங்களில் திருநெல்வேலி தபாற்கட்டைச் சந்தியடியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலை அடுத்து நாடு முழுதும் பீதியில் உறைந்து போயிருந்தது. அப்போதைய ஒரு இரவில் வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் என்னையும் அடித்து உதைத்துக் கைதுசெய்து தம்மோடு கொண்டு சென்றனர். சில மாதங்களில் நான் விடுவிக்கப்பட்டதும் கடைசித் தங்கையின் திருமணத்தை ஒருமாதிரி ஒப்பேற்றிவிட்டு ஊரிலிருக்கப் பிடிக்காமல் ஏஜென்சிக்காரன் ஒருவனைப் பிடித்து வெளிநாட்டிற்குக் கிளம்பினேன். முதலில் ஜேர்மனியில் தஞ்சமடைந்திருந்தேன். பின் அங்கிருந்து கப்பலேறிக் கனடாவை வந்தடைந்தேன்.

இப்போது அம்மா எனது திருமணத்தைப் பற்றி அதிகம் வற்புறுத்தத் தொடங்கினார். ராசலட்சுமியின் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்ப்பதற்கு என்னால் முடியாமலிருந்தது. ஆயினும் வருடங்கள் சில செல்ல இங்கே வந்த ஏனையவர்களின் நடவடிக்கைகளைக் கண்ட பின்னர் எனது மனதிலும் சலனங்கள் ஏற்படலாயின. ஆயினும் திருமண பந்தத்தில் இணைவதைத் தவிர்த்துக் கொண்டேன். உறவு கொண்ட பெண்களின்றில்லை, வேறு எந்தப் பெண்ணுடனும் என்னால் மனதால் நெருங்க முடியாதிருந்தது. இடையில் அம்மாவும் இறந்துபோக எனக்கென்ற உறவுகள் இனியில்லை என்கின்ற எண்ணம் மனதில் ஆழமாக வேரூன்றியது.

அப்பாவின் குடிபோதையால் ராசலட்சுமியை இழந்த நான், இன்று எனது தனிமையைத் தவிர்ப்பதற்காய் குடிபோதையில் மூழ்கத் தொடங்கினேன். விளைவு தெரிந்தது தான். எனது தனிமையைக் கலைத்து சர்க்கரை வியாதியும் வந்து என்னுடன் ஒட்டிக் கொண்டது.

இன்சுலின் இன்றி வாழ்க்கை இனியில்லை என்கின்ற நிலையில் காலங்கள் உருண்டன.

திடீரென ஒருநாள்  எனது வலது உள்ளங்காலில் விறைப்புத் தன்மையை உணர்ந்தேன். அதனுடன் சேர்ந்து ஒருவித இனந்தெரியாத வலி அல்லது குறுகுறுப்பு என் உள்ளங்கால் முழுதும் பரவியது. எனது காலைத் தரையிலேயே குத்திக் குத்திப் பார்த்தேன். அந்த உபாதை போவதாய்த் தெரியவில்லை. எமர்ஜென்சிக்கு வந்து காட்டினேன். வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்.

எனது உள்ளங்காலின் உள்ளே புண்ணொன்று புரையோடிப் போயிருப்பதாய்ச் சொன்னார்கள். இன்னமும் ஏதேதோவெல்லாம் சொன்னார்கள். ஈற்றில் என் காலின் முழங்காலுக்குச் சற்றுக் கீழே உள்ள பகுதியிலிருந்து வெட்டியகற்ற வேண்டுமென்றார்கள்.

அப்போதுதான் ராசலட்சுமிக்குச் செய்துகொடுத்த சத்தியம் நினைவிற்கு வந்தது.

ராசாத்தி, நீ ஆசைப்பட்ட கால்! 

(முற்றும்)
நன்றி: தாய்வீடு - மே 2021

Monday, April 5, 2021

காலுங் காதலும் (1)



'மிஸ்ரர் லிங்கம் வேக் அப். வேக் அப் மிஸ்ரர் லிங்கம்' 

யாரோ என்னை உலுக்குவதை உணரமுடிந்தது. இமைகளைத் திறக்கமுடியாதவாறு பெருங்கனமொன்று வந்து அதன்மேல் குந்தியிருந்தது. உடலின் ஒருபகுதியையேனும் அசைக்கமுடியா இயலாமையில் தத்தளித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் அதேகுரல்

'ஆர் யூ ஓகே மிஸ்ரர் லிங்கம்? ற்றை ரு வேக் அப். யூ ஆர் ஓகே நௌ'

 மிகுந்த சிரமத்துடன் இமைகளைத் திறக்கிறேன். ராசலெட்சுமி!

 'வந்திற்றியா என்ரை ராசாத்தி!

 'மிஸ்ரர் லிங்கம்  மிஸ்ரர் லிங்கம். டொக்ரர் திஸ் பேஷன்ற் இஸ் லூசிங் ஹிஸ்....'

****** 

'என்ரை அல்லிராணி அரளிவிதைய அரச்சுக்குடிச்சிற்றுது எண்டு கேள்விப்பட்டோடண நான் துடிச்சுப் போய்ற்றன் தெரியுமா? ஏனடியாத்தை அப்பிடிச்செய்தனீ?'

'அதுக்காக இப்பிடியா மாட்டுவண்டிலக் கொண்டுபோய் பத்தைக்குள்ள விடுவீங்க? பாருங்க உடம்பெல்லாம் ஒரே கீறல் காயம். காலில வேற பத்துப்போட்டுக் கிடக்கு'

'நீ கதையை மாத்தாதையணை. ஏனெணை என்ரை குஞ்சு நஞ்சைக் குடிச்சது?'

'நஞ்சைக் குடிச்சதாலதானே இப்ப அப்பு உங்களைப் பாக்க விட்டவர்'

'தச்சலா(தற்செயலாகஒண்டு கிடக்க ஒண்டு நடந்திருந்தா?'

'நான் ஒரு எற்பன்தான் குடிச்சனான்'

'எண்டலுமெணை நஞ்சோடை ஆரும் விளையாடுறதே? தச்சலா உனக்கொண்டு நடந்திருந்தா?'

'அய்! அய்யான்ரை ஆசையைப்பாருங்கோவன். எனக்கொண்டு நடந்திருந்தா இன்னொருத்தியைப் பிடிக்கலாமெண்டு நினைச்சியளோ? நான் சாகிறதாயிருந்தா உங்களையும் கொண்டுபோட்டுத்தான் சாவன் தெரிஞ்சுகொள்ளுங்கோ?'

'ஏனடியாத்தை இப்ப இப்பிடியெல்லாம் கதைக்கிறாய்?'

'அப்ப சத்தம் போடாம படுங்க பாப்பம். இன்னும் ரெண்டுமாதத்தில பள்ளிக்கூட விளையாட்டுப்போட்டீல நீங்க வெல்லட்டா கூட்டாளிப் பெட்டையளிட்டை என்ரை மானம் போயிரும்'

'போனமுறை விளையாட்டுப் போட்டியிலதான் நீ என்னோட முதன்முதல் கதைச்சனீ ஞாபகமிருக்கோ?'

'அதுக்குப் பிறகு நீங்க எனக்குப் பின்னால வந்து பம்மினதும் ஞாபகமிருக்கு'

இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் அது. அஞ்சலோட்டத்தின் போது எமது இல்லத்தின் மூன்றாவது வீரர் தடக்கி விழவே மற்றைய இல்ல வீரர்களுக்கும் எங்களுக்கும் இடையே நீண்ட இடைவெளி உண்டாகிவிட, இறுதியாளாய்த், தோல்வி நிச்சயம் என்கின்ற உறுதியில் ஓடிக்கொண்டிருக்க. . .

'கமோன் லிங்கம் வேகமா ஓடுங்க! முன்னுக்குப் போற ஆக்களைப் பிடிச்சிரலாம். கமோன்'

குரல்கேட்டு இடப்புறமாய்த் திரும்ப, ராசலெட்சுமி! ஓட்ட வீரர்கள் குறுக்காகப் போகாமல் தடுப்பதற்காக இடையிடையே நிறுத்தப்பட்டிருந்த மாணவிகளில் ஒருத்தியாய். ஒருகணம் எனக்கே திகைப்பாகிப் போனது. ராசலெட்சுமிக்கு, எங்கள் பள்ளிக்கூடத் தேவதைக்கு, ஊரின் பேரழகிக்கு என்னை, எனது பெயரைத், தெரிந்திருக்கிறதா?

'கன்னியர் கடைக்கண் காட்டிவிட்டால் மண்ணில் காளையர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்'

உயிரைக் கொடுத்து ஓடுவது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு ஓட்டம். மயிரிழையில் மூன்றாமவனை முந்தி மூன்றாமிடத்தைத் தட்டிப்பறித்தேன். யாருமே எதிர்பார்த்திராத வெற்றி அது.

திகைத்துப் போயிருந்த நண்பர்களிடம் உண்மையைச் சொன்னேன். நம்ப மறுத்தனர். தாங்கள் பார்க்க ராசலெட்சுமியுடன் நான் உரையாடினால் கள்ளும் கள்ளக்கோழியும் தருவதாய்ப் பந்தயம் கட்டினார்கள்.

கொஞ்சம் அழகிகளுக்கே திமிரிருக்கும் எங்கள் ஊரில், எழில் கொஞ்சும் ரதியாய், அழகிகளின் ராணியாய்த் திகழும் ராசலெட்சுமி மட்டும் அதற்கென்ன விதிவிலக்கா? படிப்பில் பெயரெடுத்த பல மாணவர்களையே எடுத்தெறிந்துபேசி செருப்பைக் கழற்றிக் காட்டுபவள் வெறும் ஓட்டக்காரனான என்னை ஊக்கப்படுத்தியதை நான்கூடத்தான் நம்பத் தயாராயிருக்கவில்லை.

வெள்ளி அல்லது சனி இரவுகளில் ஈரச்சாக்குப் போட்டுப் பிடிக்கும் கோழியை மறுநாள் மதியம் நண்பர்களுடன் தனியிடத்தில் நெருப்பில் வாட்டி கள்ளுடன் சேர்த்தடிக்கும்போது வரும் ஒருவித போதை தரும் சந்தோஷத்திலும், இதைச்சாட்டாய் வைத்து ராசலெட்சுமியுடன் ஒருமுறை உரையாடிவிடலாம் என்பதே மனதிற்கு மகிழ்ச்சியாயிருந்தது.

பந்தயப்படி மறுநாள் பள்ளிக்கூடம் முடிவடைந்தது வீடுசெல்லும்  போது அவளைப் பின்தொடர்ந்தோம். நண்பர்கள் விலகி நிற்க நான் அவளை நெருங்கினேன்.

காலடியோசை கேட்டு நின்று திரும்பி முறைத்தாள்.

'அம்மாணை செருப்பைக் கழட்டிப் போடாதையும் ஐசே! பெடியளோட பந்தயம் கட்டினபடியாலதான் உம்மோடை கதைக்க வந்தனான். நீர் என்னோடை கதைக்கத் தேவையில்லை. சும்மா கதைக்கிற மாதிரி நடிச்சாலே காணும். நான் பந்தயத்தில வெண்டிருவன்'

'ம். அவ்வளவு பயமிருந்தாக் காணும்'

'நான் ஓடேக்குள்ள நீர் எனக்கு கமோன் சொன்னீர் என்று சொல்ல ஒருத்தரும் நம்பயில்லை. நீர் சரியான திமிர் பிடிச்சனீராம். பெடியளோட கதைக்கமாட்டீராம் எண்டுசொல்லி என்னைப் பொய்யன் எண்டுறாங்கள்'

'ஏன் என்னைப்பார்த்தா திமிர்பிடிச்சவள் மாதிரயா இருக்கு?'

'ஐயையோ. அம்மாண நான் அப்பிடிச்சொல்லேல்ல. மற்றப் பெடியள்தான் அப்பிடிச் சொன்னவங்கள்'

'வேறென்ன சொன்னவங்கள்?'

'நீர் நல்ல வடிவெண்டு உமக்குப் பெரிய எண்ணமாம்.'

'ஏன் அப்ப நான் வடிவில்லையோ?'

'இஞ்ச பாரும் ஐசே! நான் ஒண்டுமே சொல்லேல்லை. அவங்கள்தான் எல்லாம் சொன்னவங்கள்?'

'அப்ப உமக்கு நான் வடிவான ஆளாத் தெரியேல்லை என?'

அவள் முறைப்பது தெரியவே நான் தடக்கியது உறைத்தது.

'இல்லையில்லை நீர் சரியான வடிவு. உம்மைப்போல இவ்வளவு வடிவான ஒரு பெட்டையை நான் பார்த்ததேயில்லை'

'அப்ப இதுவரைக்கும் எத்தனை பெட்டையளைப் பார்த்திருக்கிறீர்?'

'என்ன நீர்? நான் அப்பிடியான ஆளில்லை' முகத்தில் கோபத்தைக் காட்டினேன்.

'இதென்ன நீர்? லூசு மாதிரி. இதுக்கேன் கோவிக்கிறீர்?'

'ஓம் நான் லூசுதான். அவங்களோட பந்தயம் கட்டி உம்மோடை வந்து கதைச்சன்பாரும்'

'அப்ப அவங்களோட பந்தயம் கட்டியிருக்காட்டி என்னோட வந்து கதைச்சிருக்க மாட்டீரோ?'

'நான் ஏன் உம்மோடை வந்து கதைக்கிறன். நீரும் உம்மடை திமிரும் உம்மோடையே இருக்கட்டும் எண்டு விட்டிட்டிருந்திருப்பன்'

'அப்ப உங்களுக்கு உண்மையா என்னில விருப்பமில்லையா?'

அவள் குரல் கரகரத்திருந்தது. இவ்வளவு நேரமும் என்னை நீர் என்று அழைத்தவள் இப்போது நீங்கள் என்கிறாள். அப்படியானால் இவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா? வயிற்றினுள் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கத் தொடங்கின.

'விருப்பம் இல்லாமலா உம்மோடை வந்து இவ்வளவு நேரமும் கதைச்சுக் கொண்டிருக்கிறன்?'

'இல்லை. நீங்க பொய் சொல்லுறீங்க. உங்களுக்கு என்னில விருப்பமில்ல. இனி என்னோடை கதைக்க வேண்டாம். நான் போறன்'

முகத்தைத் திருப்பிக்கொண்டு புறப்பட்டாள். அவள் நயனங்கள் இரண்டிலும் இரு கண்ணீர் முத்துக்களை நான் கண்டேன்.

காதலுக்கும் கண்ணில்லை. காதலில் வீழ்ந்திருப்பவர்கட்கும் கண்ணில்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கிறதே

ஊருக்குள் காதலிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. சிலமாதங்களிலேயே எங்கள் காதல் அவள் தந்தைக்குத் தெரியவர ராசலெட்சுமியின் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது.

சனி ஞாயிறு காலைகளில் சந்தைக்குச் சென்றுவிட்டு வரும் வழியினை ராசலெட்சுமியின் வீட்டினருகாக வருவதற்கும். வீட்டிற்கு அடுத்துள்ள பனங்காணியினுள் ஓய்வெடுப்பதற்கும் வண்டில்மாடுகள் பழகிவிட, அவள் தந்தை அவளை வீட்டின் முற்றத்திற்குக் கூட வரவிடாமல் சிறைவைக்க அவள் அரளிவிதையினை விழுங்கியிருந்தாள்.

ராசலெட்சுமி அரளி விதையை அரைச்சுக் குடிச்சிற்றாளாம் எண்டு  கேள்விப்பட்டவுடன் சந்தைக்குக் கொண்டு சென்றிருந்த வெங்காயத்தை அப்படியே விட்டுவிட்டு மாடுகளை அரையும் குறையுமாக வண்டிலில் இழுத்துக் கட்டிவிட்டு மாடுகளை அவளின் வீட்டை நோக்கி விரட்டிய போதுதான் நுகத்தடியிலிருந்து ஒரு மாடு விலக வண்டி முட்பற்றைக்குள் சாய்ந்தது.

நன்றி தாய்வீடு - ஏப்ரல் 2021

(தொடரும்)