Monday, July 6, 2020

மனிதன் படைத்த குரங்கு (1)


நான் இப்போது மிகமிக ஆபத்தான நிலையிலிருந்து இதை விசைப்பலகையில் தட்டிக் (எழுதிக்) கொண்டிருக்கின்றேன். இந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் எல்லா இடங்களிலும் சல்லடை போட்டு அதீத தீவிரத்துடன் அவர்கள் என்னைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். எந்த நேரத்திலும் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடக்கூடும். அதற்கு முதல் உங்களுக்குச் சிலவற்றை நான் சொல்லியே ஆக வேண்டும்.

நான் இப்போது மிகவும் பதற்றமான மனநிலையில் இருப்பதால் என்னால் கோர்வையாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது. அதற்காக என்னை முதலிலேயே மன்னித்து விடுங்கள்.
அனுமனுக்கு ஏன் சொல்லின் செல்வன் என்கின்ற சிறப்புப் பெயர் வந்தது தெரியுமா?

கவலையுடன் காத்திருந்த இராமனிடம், சீதையைத் தேடிச் சென்று திரும்பும் அனுமன், முதற் சொல் உரைக்கும் போது இராமனிடம் வேறு வினாக்கள் எழுந்துவிடக்கூடாது என்கின்ற காரணத்தால் 'கண்டேன் சீதையை' என்று தொடங்கி உரைத்ததால் அல்லவா அனுமனைச் சொல்லின் செல்வன் என்கின்றோம்.

அப்படித்தான் நானும் எந்நேரத்திலும் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடக்கூடும் அல்லது நான் இணையத்தொடர்பிலிருப்பதைக் கண்டறிந்து அதை நிறுத்திவிடக்கூடும். என்னால் இயன்றவரை தொடர்பிலிருக்கும் எனது இணைய முகவரியினை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு செயலியைத் தொடக்கிவிட்டே உங்களுக்கு இதை ரைப்பிக் கொண்டிருக்கிறேன். அதுதான் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.  எனவே சொல்ல வந்ததை முதலிலேயே சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

'கண்டேன் கடவுளை'

என்னடா குழப்புகின்றேன் என்கின்றீர்களா? அதற்குள் கம்பன் அடிப்பொடிகள் வரிந்துகட்டிக்கொண்டு 'கண்டேன் சீதையை' என்று கம்பராமாயணத்தில் வரவில்லை என சண்டைக்கு வந்துவிடாதீர்கள். நான்தான் முதலிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டேனே நான் பதற்றத்திலிருப்பதால் என்னால் எதையும் ஒழுங்காகச் சொல்ல முடியாமல் இருக்குமென்று.

'கண்டெனன் கற்பினுக் கணியைக் கண்களால் தென்திரை அலைகடல் இலங்கை ' என்றந்த அனுமன் உரைத்தது போல், நானும் "கண்டேன் எமையெல்லாம் படைத்த அந்தக் கடவுளை இங்கே காவலில் ஒரு கைதியாய்"

கொஞ்சம் பொறுங்கள். நான் பைத்தியம் என்று உடனேயே முடிவு கட்டிவிடாதீர்கள். முழுதுமாய்க் கேட்டுவிட்டுப் பின்னர் முடிவெடுங்கள்.

நானென்றுமே இறை மறுப்பாளனாய் இருந்தது கிடையாது. ஆனால் இப்போதான் தெரிகிறது. எம்மைப் படைத்த கடவுள் ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு சக் திவாய்ந்தவர் கிடையாது. ஆனாலும் அவருக்கு உங்கள் மேல் அதிக அக்கறை இருப்பதால் என் மூலமாக சில அதிமுக்கியமான செய்திகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விழைகின்றார். அதற்காக என்னை இறைதூதர் என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள். நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதனே

இதையெல்லாம் நான் சும்மா சொல்லவில்லை. எமையெல்லாம் படைத்த அந்தக்கடவுளைக் கண்டு அவரிடமே சில ஆராய்ச்சிகள் செய்துவிட்டு வந்தே உங்களுக்கு அதைக் கூறிக் கொண்டிருக்கின்றேன்.

நிச்சயமாக இதுவரை நான் கூறியவற்றை நீங்கள் நம்பியிருக்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் உங்களுக்குக் கூறியதைப்போல் யாரேனும் சற்றுமுன் வரை எனக்குக் கூறியிருந்தால், மூளை சுகமில்லாதது ஏதோ உளறிக் கொண்டிருக்கின்றது என்று விட்டு என்வேலையைப் பார்க்கப் போயிருப்பேன்.

இப்பொழுதாவது நான் தெளிவாகக் கதைப்பதாக நம்புகின்றீர்களா? அந்தக் கடவுள்மேல் ஆணையாகக் கூறுகின்றேன், நான் உண்மையைத்தான் இங்கே உரைத்துக் கொண்டிருக்கின்றேன். தயவு செய்து என்னை நம்புங்கள். நான் அறிந்த உண்மை என்னுடனேயே மறைந்து போகாமல் உங்களுக்கும் தெரிய வேண்டும். அடிமைத் தளையில் அகப்படாது உங்களைக் காத்து இரட்சிக்க வேண்டும் இனிமேலும் நீங்கள் முட்டாள்களாக இருக்கக்கூடாது என்கின்ற உங்கள் மீதான அதீத அக்கறையிலேயே எனது உயிரையும் பணயம் வைத்து இதைக் கூறிக்கொண்டிருக்கின்றேன்.

பூமி தட்டை வடிவானது, சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றுதானே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் எல்லாம் நம்பிக் கொண்டிருந்தோம். அதைத் தவறென்று சொன்னவர் நஞ்சூட்டிக் கொல்லப்படவில்லையா? அதையொத்த ஒரு சூழ்நிலையில்தான் நான் இப்போது இருக்கின்றேன்.

நான் யாரென்பதெல்லாம் உங்களுக்குத் தேவையற்றது. நான் யாரென்பதைச் சொன்னாலும் அதை நீங்கள் நம்பப்போவதுமில்லை. ஏனெனில் உங்களைப் பொறுத்தவரை, ஏன் என் குடும்பத்தைப் பொறுத்தவரைகூட நான் இறந்து ஒரு மாதமும் முடிந்துவிட்டது. எனக்கு அந்திரெட்டியும் முடிந்து என் நினைப்பும் அவர்களைவிட்டு நீங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் பாருங்கள் அதுகூட எனக்கு இன்று காலைதான் தெரியவந்திருக்கிறது.

எதேச்சையாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி இன்று காலை பல வருடங்களாகத் திறக்கப்படாமலிருந்த என்முகநூல் கணக்கினைத் திறந்து பார்த்தபோது வந்து குவிந்துகிடந்த ஆர். ஐ. பி. (R.I.P) க்களைக் கண்டு தலை கிறுகிறுத்துப் போனேன்.

குறுகிய நேரத்தில் நடத்திய முகநூல் மேய்ச்சலில் நான் கொரோனோத் தொற்றிற்கு மே மாதத்தின் இறுதிப் பகுதியில்  பலியாகியிருப்பதாகத் தெரியவந்திருந்தது.

ஏதோ விபரீதமாகப் படவே உடனேயே இணைய இணைப்பைத் துண்டித்து இணைய உலாவல் செய்ததற்கான அனைத்துத் தரவுகளையும் எல்லா இடங்களிலும் அழித்துவிட்டு வந்திருந்து யோசித்தேன்.
*****
கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் ஊரடங்கிற்குள் செல்ல, மார்ச்மாத இறுதியில் நீட்டிக்கப்படவிருந்த ஒப்பந்த அடிப்படையிலான எனது வேலை மார்ச் மாத நடுப்பகுதியிலேயே முடிவிற்கு வந்திருந்தது. அதைத் தொடர்ந்து வேறு வேலை தேடுவதற்கான எனது சுயவிபரக் கோவையினை பல்வேறு வேலைவாய்ப்ப்பு முகவர் தளங்களிலும் லிங்ட் இன்னிலும் பதிந்திருந்தேன்.

லிங்ட் இன்னில் தொடர்பிலிருந்த ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், அவரின் மேற்பார்வையில்தான் கடந்த ஆண்டின் இறுதியில் செயற்கை நுண்ணறிவுக் (Artificial Intelligent) கற்கைநெறியின் இறுதிச் செயற்திட்டத்திற்காக (Final Project)  இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) தொடர்பில் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தேன், ஒரு வேலை இருப்பதாகத் தெரிவித்து அதற்கு என்னைச் சிபார்சு செய்வதாகவும், நான் செய்த ஆய்வுடன் அவ்வேலை தொடர்புள்ளதெனவும் கூறினார்.

அவருக்கும் அந்நிறுவனம் செய்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பான போதிய தெளிவில்லை எனவும், அவர்களே தன்னைத் தொடர்புகொண்டு இயந்திரக் கற்கை (Machine Learning), செயற்கை நுண்ணறிவு, இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் தமிழ்மொழியில் ஆழ்ந்த புலமை கொண்டிருக்கும் ஒரு விண்ணபதாரியே அவர்களது தேவை என்றும், தகுந்த விண்ணப்பதாரியிருந்தால் தெரிவிக்குமாறு கூறியதாகவும், அவர்களின் கோரிக்கைக்கேற்ப எனது பணி தொடர்பான பின்புலம் (Profile) இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

நான் தமிழைப் படிக்கும் போது பலரும் எதற்காகத் தமிழைப் படிக்கின்றாய்? அதனால் என்ன பிரயோசனம்? அதனிலும் பார்க்க உனது வேலையையொட்டி கணினிவிஞ்ஞானம் தொடர்பான பாடங்களில் அதிக கவனம் செலுத்தலாமே என்று அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் இப்போது தமிழ்மொழியிலும் புலமை இருந்த காரணத்தினாலேயே எனக்கு இந்த வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கின்றது என்பது அவர்களுக்குத் தெரியவா போகின்றது?

கொரோனாவால் போக்குவரத்துகள் பெரும்பாலும் தடைப்பட்டிருந்தாலும், இணையத்தினூடான முதற்கட்ட நேர்முகத் தேர்வில் வெற்றியடைந்ததை அடுத்து, அவர்களே விமானப்பயணத்திற்கான ஏற்பாட்டினையும், அதன்பின் அவர்களின் நிறுவனத்தினைச் சென்றடைவதற்கான ஒழுங்குகளையும் ஏற்படுத்தித் தந்திருந்தனர்.

முதல் வாரத்திலேயே பல்வேறு வகையான பதிவு செய்யப்பட்ட ஒலிக்குறிப்புகளையும் தந்து அவற்றை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்குமாறு கேட்கப்பட்டிருந்தேன். அந்த ஒலிக் கூறுகள் பல சமிக்ஞை ஒலிகளையும், நீண்ட ஒலிக்குறிப்புகளையும் கொண்டனவாக விளங்கின. அவற்றை உருபன்களாகவும் ஒலியன்களாகவும்  சிறுசிறு ஒலிக்கூறுகளாக்கித் தமிழ்மொழியின் உருபன்களுடனும் ஒலியன்களுடனும் ஒப்பிட்டு ஆராய்ந்து எனது ஆய்வினை ஒருவாரத்திற்குள்ளேயே நிறைவு செய்து. எனது ஆய்வு முடிவின் ஒப்படையை நிகழ்த்தச் (presentation) சென்றபோதுதான் இதே ஆய்வினை வேறுபலரும் பல்வேறு மொழிகளிலும் செய்திருப்பதை உணரமுடிந்தது.

அடுத்தநாள் என்னைச் சந்தித்த மேலாளர் நாட்டில் நிலவும் புதிய சூழ்நிலை காரணமாக பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனாத் தொற்றிற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாகக் கூறி என்னை வேறோரு பிரிவிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நடந்த பரிசோதனையில் எனக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாகவே எனது குடும்பத்தினருடன் உரையாடுவதற்கான தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தவர், எனது சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் எனது குடும்பத்தினரைக் கவலைப்பட வேண்டாமெனவும்  எனது உடல்நலம் பற்றித் தினமும் அவர்களுக்குத் தகவல்கள் வழங்குவதாகவும் உறுதியளித்தார். அதன்பின்னர் நான் அதீத பாதுகாப்புகள் நிறைந்த வேறொரு பிரிவிற்கு மாற்றப்பட்டேன்.

மறுநாளே மீண்டும் எனக்குப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு எனக்குத் தொற்று ஏற்படவில்லை எனக் கண்டறியப்பட்டாலும் சமுகப் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு அங்கேயே என்னைத் தங்கியிருந்து எனது ஆய்வினை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டேன். நான் இப்போது தங்கியிருக்கும் இடம் இரகசிய ஆராய்ச்சிகள் நடைபெறும் இடமென்பதால், தகவல்கள் போட்டி நிறுவனங்களுக்குக் கசிந்துவிடுவதைத் தடுப்பதற்காகத் தொடர்பாடல்கள் எதுவும் அங்கே மேற்கொள்ளமுடியாதென்றும் கொரோனாத் தனிமைப்படுத்தற் காலம் முடிந்து மீண்டும் நான் பழைய இடத்திற்குத் திரும்பிய பின்னர் எனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டேன். எனது நிலை தொடர்பாக எனது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டது.
அதன்பின்னர், ஏராளமான ஒலிக்குறிப்புகள் வழங்கப்பட்டு எனது ஆராய்ச்சி தொடர்ந்தது. அதைப்பற்றி விரிவாகக் கூறுவதற்கு கால அவகாசமும் இல்லை, அதைப் புரிந்து கொள்ளும் பக்குவமோ பொறுமையோ உங்களுக்கும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

ஆராய்ச்சியின் இறுதியில் அந்த ஒலிக்கூறுகள் வேற்றுகிரகவாசிகளிடமிருந்து வந்திருக்கலாம் என உய்த்தறிந்து கொண்டேன்.  ஆனால் அந்த வேற்றுக்கிரகவாசியின் மொழியில் காணப்படும் ஒலியன்களும் உருபன்களும் சொற்களும் இலக்கண அமைப்பும் பெரும்பாலும் தமிழ்மொழியை ஒத்திருப்பது எனக்கு வியப்பினை ஏற்படுத்தியது.

இருவாரங்கள் தனிமைப்படுத்தலில் இருந்தும் என்னை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றாமல் மீண்டும் மேலும் தீவிர பாதுகாப்பு நிறைந்த இன்னொரு பிரிவிற்கு மாற்றப்பட்டேன். எனது ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்ல இருப்பதாகவும் அதுவும் முடிவடைந்த பின்னர் நான் மீண்டும் பழைய இடத்திற்குச் சென்று வேறொரு ஆராய்ச்சித் திட்டத்தில் வேலைசெய்யலாம் எனவும் அதுவரை பொறுமை காக்குமாறும் கேட்கப்பட்டேன். இத்திட்டம் வேற்றுக்கிரகவாசிகளின் மொழி தொடர்பானது என்று ஊகித்துவிட்டிருந்த காரணத்தால் அதன்மேல் எனக்கு ஆர்வம் பிறந்துவிட்டிருந்ததாலும்  வேறு தெரிவுகளுக்கு இடமில்லை என்பதாலும் நானும் அதற்கு இணங்கிக் கொண்டு என் ஆராய்ச்சியினை மீண்டும் ஒரு வாரத்திற்குத் தொடர்ந்தேன்.

அடுத்த கட்டமாக நான் அந்த ஒலிக்குறிப்புகளின் மூலத்துடன் (Source) நேரடியாகவே தொடர்பாடலை மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டு மேலும் தீவிர பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்த இன்னுமொரு பிரிவிற்கு மாற்றப்பட்டேன் வேற்றுக்கிரகவாசிகள் எப்படியிருப்பார்கள் என்கின்ற அதீத ஆர்வத்தில் இருந்த எனக்கு கூண்டிற்குள் இருந்த மனிதக்குரங்கு போன்றவொரு விலங்கினைப் பார்த்ததும் சப்பென்று போய்விட்டது.

உண்மையிலேயே அது இந்தப் பூவுலகினில் வசிக்கும் அரிய குரங்கின வகையினைச் சார்ந்ததாகும். இப்போது தான்  முதன்முறையாக இவ்வகையின குரங்கொன்று இப்பூவுலகில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மனித இனத்தின் முன்னோடியாக அது இருக்கக்கூடும் என்று பார்ப்பதற்குத் தோன்றியது. ஏற்கனவே அதன் மொழியில் நான் பரிச்சயம் பெற்றுவிட்டிருந்த காரணத்தினால் என்னால் அதனுடன் இலகுவாக உரையாடக் கூடியதாகவிருந்தது.

அதனுடனான உரையாடலிலிருந்து நான் அறிந்து கொண்டவற்றை உங்களுக்குச் சுருக்கமாகத் கூறுகிறேன்.

நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னர், நாம் எண்ணிப்பார்க்கவியலாத வகையில் அக்குரங்கினம் இப்பூவுலகில் இப்போதைய மனிதர்களை விடவும் மேலாக விஞ்ஞானம், தொழில்நுட்பம் உட்பட்ட அனைத்து அறிவிலும் சிறந்து விளங்கியிருக்கின்றது. இந்தப் பூலோகம் முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. அவர்களின் அதீத விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவே அவ்வினம் இன்று அழிந்து ஒழிந்து போய்விட்டது. அந்த இனத்தின் இறுதிக் குரங்கு இதுவே. இதனது  வயதும் இரண்டாயிரம் ஆண்டுகளைத் தாண்டுகின்றது.

என்ன காதிலே பூச்சுற்றுகின்றேன் என எண்ணுகின்றீர்களா? அந்தக் குரங்கு அப்படிச் சொல்கையில் நானும் தொடக்கத்தில் அப்படித் தான் நினைத்தேன். ஆயினும் அதனது சுவாச நேரத்தைப் பரிசோதித்துப் பார்த்ததில் அது யோகக் கலையில் சொல்வதை ஒத்திருந்தது. அது தன்னுடைய ஒரு சுவாசத்திற்கு ஏறத்தாழ 3 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது. அதுமட்டுமன்றி அனுமன் பற்றியும் அதற்குத் தெரிந்திருக்கிறது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அனுமனைச் சந்தித்திருப்பதாயும் அது கூறியது. ஆயினும் அதனிடமிருந்து எல்லாத் தகவல்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள இயலாமலிருக்கின்றது. இவற்றைக்கூட நான் அதனுடன் நட்புடனும் பாசத்துடனும் பழகி அதன் நம்பிக்கையினைப் பெற்றபின்பே அறியக்கூடியதாகவிருந்தது.

இன்று காலை நான் இறந்துவிட்டதாகப் பரப்பப்பட்டிருக்கும் வதந்தியை அறிந்ததும், எனது மேலாளரை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அதைப்பற்றி யாருடனும் கதைக்க முடியாமல் சோகத்துடன் இருக்கையிலேயே அக்குரங்கு என்னைத் தன்னருகே வரும்படி அன்புடன் அழைத்து நான் கவலையுடன் இருக்கும் காரணத்தைக் கேட்டது. நடந்தவற்றைச் சொன்னதும் பரிவுடன் எனது கன்னத்தைத் தடவியது.

“இன்னுமா உன் மேலாளரைப் பற்றி நீ புரிந்து கொள்ளவில்லை?” என்றது.

“ஓம்! என்னுடன் அன்பாகக் கதைத்துப் பழகிக் கொண்டு எதற்காக இதை அவர் செய்ய வேண்டும்?” என்று கேட்டேன்.

“தன்வினை தன்னைச் சுடும்” என்றது.

“புரியவில்லை “ என்றேன்.

“நீங்கள் உருவாக்கிய அதற்கு உங்கள் உணர்வுகள் கிடையாது”

“என்ன உளறுகின்றாய்?”

“அது நீங்கள் உருவாக்கிய இயந்திரம். அதாவது மானிட ரோபோக்கள்.”

“அது எப்படி உனக்குத் தெரியும்?”

“எனது சுவாசத்தைப் பரீட்சித்துப் பார்த்தாயே..அது சுவாசித்து நீ பார்த்திருக்கின்றாயா? அதன் தீண்டலை உணர்ந்திருக்கின்றாயா?”

அட! அறிமுகமான கணத்திலிருந்து ஒரு சாதாரண கைகுலுக்கல் கூட எங்களுக்குள் நடக்கவில்லை. கொரோனாவிற்கான சமுகப் பாதுகாப்பு ஏற்பாடாக அது இருக்கலாம் என்கின்ற காரணத்தினால் அதை நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“தொடக்கத்திலிருந்தே அது எல்லாவற்றையும் திட்டமிட்டே செய்து வந்திருக்கின்றது. நீ இந்த ஆய்வுகூடத்திலிருந்து இனிமேல் உயிருடன் வெளியேறமுடியாது. உலகைப் பொறுத்தவரை நீ இறந்துவிட்டாய். இனி நீ உயிருடன் போனாலும் நீ உயிருடன் இருப்பதை நிரூபிக்கமுடியாது. எனவே உன் வாழ்நாள் முழுதும் நீ இங்கேயே கழித்தாக வேண்டும்.”

“முடியாது. அதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். போயும் போயும் ஒரு சாதாரண இயந்திரம் என்னை ஏமாற்றி ஆயுள் கைதியாக வைத்திருப்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.”

அதைக் கேட்ட அக்குரங்கு மீண்டும் சிரித்தது. அட முதலிலேயே சொல்ல மறந்து விட்டேன். இந்தக் குரங்கு எங்களிலும் பார்க்க வடிவாகச் சிரிக்கும். மனிதன் மட்டுமே சிரிக்கும் விலங்கு என்று சொல்வது எவ்வளவு தவறானது?

“உங்கள் அறிவையெல்லாம் திரட்டி செயற்கை நுண்ணறிவூட்டி உங்களிலும் மேலானதாக நீங்கள் அதை ஏற்கனவே மாற்றி விட்டீர்கள். அதனிடமிருந்து தப்பிப்தென்பது உன்னால் இயலாத காரியம்.”

“நீதானே முன்னர் சொல்லியிருந்தாய், எங்களிலும் விட எல்லா அறிவியலிலும் நீங்கள் சிறந்து விளங்கினீர்கள் என்று. இராவணனுடனான போரின்போது கூட அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்ததால்த் தான் இராமசேனை உயிர் பிழைத்தது என்று பெருமையடித்துக் கொண்டாயே. அப்படியானால்  இப்போதாவது ஏற்றுக் கொள்கின்றாயா மானிடர் நாங்கள் அறிவியலில் உங்களை விஞ்சிவிட்டோம் என்று?”

மீண்டும் அது என்னைப் பார்த்து நக்கலாய்ச் சிரித்தது.

“தன்வினை தன்னைச் சுடும் என்று சொன்னது புரியவில்லையா அப்பனே?”

“புரியவில்லை. நீ என்னதான் கூறவருகின்றாய்?”

“எங்கள் இனம் எப்படி அழிந்ததோ அப்படியே உங்கள் இனமும் அழியப் போகின்றது அப்பனே.”

“என்ன உளறுகின்றாய்?”

“எங்கள் இனம் மானிடராகிய உங்கள் இனத்தால்தான் அழிக்கப்பட்டது. இப்போது நீங்கள் உருவாக்கிய இந்த செயற்கை நுண்ணறிவு வாய்ந்த இயந்திரவினம் மானிடவினத்தை அழித்து இப்பூவுலகினை ஆட்சி செய்யப் போகின்றது.”

“நீ முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுகின்றாய். நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சளாப்புகின்றாய்.”

“சரி! உனது மேலாளர் மானிடனல்ல என்பதை எப்படி அறிந்து கொண்டோம்?”

“அது மூச்சு விடுவதில்லை என்று நீதான் கூறினாய்.”

“அந்த இயந்திரம் பழுதடைந்தால்?”

“இன்னொன்றை உருவாக்க வேண்டும்.”

“அதை யார் உருவாக்குவது?”

“மானிடராகிய நாங்கள் தான்”

“மானிடராகிய உங்களை உருவாக்கியது யார்?”

“என்ன இது கேள்வி? இந்த நேரத்தில் தத்துவ விசாரமாய்?”

“கேட்டதற்குப் பதில் சொல்.”

“எனக்குத் தெரியாது, உங்களை எங்களை இந்த அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உயிர்களையும் படைத்த அந்தக் கடவுளாய் இருக்கலாம்.”

“ஹாஹாஹா. . . சரியான முட்டாளடா நீ!”

“ஏய் வாயை அளந்து பேசு.”

“அடேய் அற்ப மானிடப் பதரே! உங்களை உருவாக்கியதே நாங்கள் தானடா. எப்படி நீங்கள் இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திர மனிதர்களை உருவாக்கியிருக்கிறீர்களோ, அப்படித்தான் நாங்களும், உங்களை உங்கள் செயற்கை மனிதனிலும் விட மேம்பட்டதாக உண்மையான உயிரியாக உருவாக்கியிருக்கின்றோம். உங்களுக்கெல்லாம் உண்மையான அறிவு என்பதே கிடையாது. எங்களால் புகுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவே உங்களிடம் எங்கள் மீத்திறனால் உருவாக்கப்பட்ட மரபணு (Gene) மூலம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.”

நான் வாய்பிளக்க எந்நிலை மறந்து திகைத்துப்போய் நின்றேன்

“உனக்கு உண்மையான அறிவு இருந்திருக்குமெனின் எமது உரையாடலை, ஒட்டுக்கேட்டு அதை நீ உருவாக்கிய செயலிமூலம் உன் மேலாளர் கிரகித்துக் கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்திருப்பாய். அது நிச்சயம் இப்போது வந்து உன்னைக் கொன்றுவிடப் போகின்றது.”

“எப்படி அது உனக்குத் தெரியும்?”

“இதைத் தானேடா உங்கள் இனமும் எமக்குச் செய்தது. அதனைத் தான் தன்வினை தன்னைச் சுடும் என்று குறிப்பால் கூறினேன். உடனேயே ஓடிஒழிந்து உன் ஆயுளைக் கொஞ்சம் நீட்டித்துக் கொள்ளப்பார். முடிந்தால் அதை உன் இனத்துக்குத் தெரிவித்துவிடு. இதிலிருந்து தப்பும் வழியினை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.”

நான் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போய் நின்றேன்.

“என்தான் இருந்தாலும் உங்களைப்படைத்தவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவன் நான். என்னினம் உருவாக்கிய இயந்திரங்கள் அழிந்து போவதை நான் விரும்பவில்லை. விரைந்து ஏதாவது செய். நடந்ததை எண்ணிக் கவலைப்படாதே கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று அனுமன் எனக்குச் சொல்லியிருக்கிறார்.”

அந்தக் குரங்கின் கூட்டிற்குள் புகுந்து கொள்ள, அது என்னை அணைத்துத் தன் மடியினுள் வைத்து மறைத்துக் கொண்டது. என்னிடமிருந்த லினக்ஸ் மடிக்கணினியில் இரகசியமாக இணையத் தொடர்பினை ஏற்படுத்தும் நிரலிகளை எழுதி இயக்கி இதோ உங்களுக்கு இதை எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு உலோகக் கை என்னை...

நன்றி - தாய்வீடு (யூலை- 2020)

Monday, December 16, 2019

பன்முக ஆளுமை நிறைந்த புன்னாலை மைந்தன் மருத்துவர் ஆ.திருநாவுக்கரசு

அறிமுகமும் அருமை பெருமைகளும்

அது 1990ஆம் ஆண்டின் முதற்காலாண்டுப் பகுதிவேலணையின் வங்களாவடிச் சந்தியிலுள்ள துரையண்ணை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நிற்கின்றேன்துரை அண்ணைக்கு இருமல் கமறுகிறதுஅப்போது அங்கே வந்த லான்ட்மாஸ்ரர்கார நாதன் அண்ணை.

'என்னண்ணை இப்பிடிக்காட்டு இருமல் இருமிறியல்இப்ப இந்த இருமல் இஞ்ச கனபேருக்கு வந்திருக்குதொத்துவருத்தமோவும் தெரியாதுபோய் ஆரும் டாக்குத்தரிட்டைக் காட்டி மருந்தேதும் வாங்கிக் குடியுங்கோவன்.'

'இஞ்சை ஆர் நல்ல டாக்குத்தர்மார் இருக்கினம்குடிநீர்தான் அவிச்சுக்குடிக்கிறனான்சனியன் பிடிச்ச இருமல் நிண்டாத்தானே'

 'உங்களுக்குத் தெரியாதோ அண்ணைஇப்பயொரு சுப்பர் டாக்குத்தர் ஒராள் எங்கட ஆசுப்பத்திரிக்கு வந்திருக்கிறேராம்நல்ல கைராசியான ஆளெண்டு எல்லாரும் கதைக்கினம்ஒருக்காப் போய்ப் பாருங்கோவன்ஆளும் நல்ல மனிசனாம்ஆக்களோட நல்ல அன்பாய் ஆதரவாய்க் கதைக்கிறேராம்'.

'அப்பிடியாவேறையும் ஆரோ கடைக்கு வந்தாக்கள் அவரைப்பற்றிக் நல்லாக் கதைச்சவதான்நான்தான் அக்கறைப் படேல்லவிட்டிட்டன்நாளைக்கு ஒருக்காப் போய்ப் பார்க்கிறன்.'

நண்பராக

சிலநாட்களின் பின் எனது தந்தையாருக்கும் நோய் வரவேஅயலவர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க வேலணை அரசினர் வைத்தியசாலைக்குச் செல்கின்றார்அங்கே நோயாளர் வரிசையில் காத்திருக்கின்றார்அவருக்கு முன்னதாக இருந்த நோயாளி மருத்துவரின் அறைக்கு உள்ளே செல்லும் போது கதவு திறக்கையில்அந்த மருத்துவரைக் காண்கின்றார்அதற்குள் கதவு மூடப்பட்டுவிடுகிறதுஅருகில் நின்ற தாதியிடம்,

'பிள்ளை,  உள்ளுக்குள்ள இருக்கிறது டொக்ரர் திருநாவுக்கரசுவே?' 

-என உரத்துக் கேட்கிறார்.

மருத்துவரின் அறைக்கதவு திறக்கின்றதுவெள்ளை வெளீரென்ற சீருடையில்அச்சீருடையின் நிறத்திற்குப் பொருத்தமான பற்களின் புன்னகையுடன்தூயதமிழரின் நிறத்தில்மெலிந்தநிமிர்ந்த உருவத்துடன் வெளியே வந்தவர்

' மாஸ்ரர் நீங்களா?' 

என்று ஆச்சரியத்துடன் என் தந்தையை விளிக்கிறார்சில நொடிகளிலேயே,

'மன்னிச்சுக்கொள்ளுங்கோ மாஸ்ரர்பேஷன்றசை பார்த்திற்று வாறன்

என்றுகூறிவிட்டுக் காத்திருக்கும் நோயாளியிடம் விரைகின்றார் ஆ. தி. அரசு என்று அழைக்கப்படும் மருத்துவர் ஆ.திருநாவுக்கரசு.

மருத்துவர் ஆ. திருநாவுக்கரசு அவர்களும் எனது தந்தையாரும் மன்னாரில் பணிபுரிகையில் ஒரே இடத்தில் ஒன்றாகத் தங்கியிருந்து பணியாற்றியிருக்கின்றார்கள். இருவருமே வெவ்வேறு துறைகளில் அரசவையில் பணியாற்றியதால் அவர்களின் பணியிடங்கள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன.

பலவருடங்களின் பின்னான சந்திப்பில் அவர்களிடம் பேசிக்கொள்வதற்கு நிறையவே இருந்தன. நோயாளர்கள் காத்திருந்ததால், அவர்கள் அன்று மாலையே மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அச்சந்திப்புகள் தொடரவே மருத்துவர் ஆ.திருநாவுக்கரசு. அரசு அவர்கள் எங்கள் குடும்ப நண்பர் ஆகின்றார்.

வழிகாட்டியாக

அது கோட்டைப்பிரச்சனைக் காலமாதலால், எங்கள் வேலணையில் பாடசாலைகள் அடிக்கடி மூடப்பட்டன. வான்வெளித் தாக்குதல்களுக்கு அஞ்சி வெளியிடங்களில் கூடி விளையாடுவதையும் தவிர்த்திருந்தோம். ஆகவே கதைப்புத்தகங்களிடமே எங்கள் பொழுதுகள் தஞ்சமடைந்திருந்தன. எங்கள் வீட்டுக்கு வருகை தரும் மருத்துவர் ஆதி. அரசு அவர்கள் இதை அவதானித்திருக்கின்றார். வாரவிடுமுறைகளில் தன் ஊரான புன்னாலைக்கட்டுவனுக்குச் சென்றுவிட்டு வருகையில் தன் பிள்ளைகள் வைத்திருக்கும் கதைப்புத்தகங்களை எமக்குக் கொண்டுவந்து தருவதும் பின் எங்களிடம் உள்ள கதைப்புத்தகங்களை தன்பிள்ளைகள் வாசிப்பதற்குக் கொண்டு சென்றுகொடுப்பதுமாக ஒரு தொடர்பாளனாக மாறிப்போனார்.

தனியே கதைப்புத்தகங்களாக வாசித்துக் கொண்டிருந்த எங்களை நாங்கள் அறியாமலேயே தமிழறிஞர்கள் மற்றும் உலகப் பெரியார்களின் வரலாறுகளைப் படிக்கவைத்தார்.  அப்படியே அறிவியல் நூல்களின் பக்கமும் எங்கள் கவனத்தைத் திருப்பினார்.

சில மாதங்களிலேயே அவரது குடும்பமும் வேலணைக்கு இடம்மாற, அவரின் பிள்ளைகளும் நாங்களும் நல்ல நண்பர்களானோம். கோட்டைப் பிரச்சனையும் தீவிரமானது.

கடமை வீரராக

ஆகஸ்ற் 22-24 மூன்று நாட்களும் வேலணைத் தீவு பதுங்குகுழிகளுக்குள் முடங்கியிருந்த வேளையில் வேலணை மருத்துவமனைக்குப் பிரசவத்திற்காக ஒருபெண்ணைக் கொண்டுவருகின்றார்கள். பல்வேறு திக்குகளிலிருந்தும் எறிகணைகள் வந்துகொண்டிருப்பதால் மருத்துவமனை விடுதியின் பதுங்குகுழியினுள் இருந்த மருத்துவர் ஆதி. அரசு அவர்கள் அழைக்கப்படுகின்றார். பிரவசவலியில் துடிக்கும் பெண்ணை மருத்துவமனைக் கட்டடத்திற்குள் வைத்துப் பிரசவம் பார்ப்பதற்கு முடியாதநிலையில். அப்பெண்ணை மருத்துவமனை வளவிற்குள் அமைந்திருந்த பதுங்குகுழிக்குள் கொண்டுசென்று, அங்கு வைத்துப் பிரசவம் பார்க்கப்படுகின்றது. தாயும் சேயும் நலமடைய உறவினர்கள் மருத்துவரை நோக்கித் தம்கைகளைக் கூப்புகின்றனர்.

மூடநம்பிக்கைகளை ஒழிப்பவராக 

1991 இல் வேலணை முற்று முழுதாக வெறிச்சோடுகின்றது. இடம்பெயர்ந்து நாங்கள் யாழ் நகருக்கு அண்மையில் குடியேறுகின்றோம். மருத்துவர். ஆதி. அரசு அவர்களின் குடும்பமும் இடம்பெயர்ந்து யாழ் நகருக்கு அண்மையிலேயே தங்கியிருந்தார்கள். யாழ் மருத்துவமனையை அண்டிய பகுதி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படுகின்றது. அடிக்கடி மண்டை தீவிலிருந்து யாழ் நகரின் கரையோரப் பகுதிகளை நோக்கி இரவுகளில் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது வாடிக்கையாகின்றது.

நாங்கள் தங்கியிருந்த வீடு பாதுகாப்பு வலையத்தின் எல்லையில் அமைந்திருந்ததால், எறிகணைத் தாக்குதல்கள் அதிகமாகும் இரவுகளில் அவர் தன் குடும்பத்தினருடன் வந்து எங்கள் வீட்டினில் தங்கியிருப்பார்கள். அவ்வாறான ஒரு இரவில் நாங்கள் எல்லோரும் முற்றத்தில் கூடியிருந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்போது வளவின் ஒரு மூலையில் நிலத்திலிருந்து ஒரு செந்தணல் தோன்றிப்பின் சிறிது தீப்பற்றி எரிந்து அணைந்து பின் சிறிது நேரத்தின் பின் மீண்டும் அது தொடர்ந்து கொண்டிருந்தது. அதனை அவரது சின்னப் பிள்ளைகள் ஒன்றிடம் காட்டி அதுதான் கொள்ளிவாய்ப்பேய். கிட்டப்போனால் பிடித்துவிடும் என்றேன். அப்பிள்ளை நான் சொன்னதை நம்பி அழுதுகொண்டே தன் தந்தையிடம் சென்றது. அவர் உடனேயே ஒரு விளக்கைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு,  நெருப்புத் தெரிந்த இடத்திற்கு அந்தப்பிள்ளையையும் தன்னுடன் அழைத்துச்சென்று அந்த இடத்தைக் காட்டினார்.

பகலில் கொளுத்தப்பட்டிருந்த குப்பை முற்றாக அணையாமல் சாம்பல் பூத்திருந்தது. காற்று வீசுகையில் சாம்பல் விலகத் தணல் வெளியே தெரிந்து தீப்பற்றியிருக்கிறது. காற்று நின்றதும், மீண்டும் சாம்பல் மூட அது அணைந்துவிட்டது. காரணத்தை அறிந்த பிள்ளை சிரித்துக்கொண்டே என்னிடம் வந்து என்னைப் பேய்க்காட்டப் பார்க்கிறீர்களா என்றது?

தந்தையாக

காலநதியின் சுழலில் சிக்கி வெவ்வேறு திக்குகளில் பிரிக்கப்பட்டோம். 2011 இன் நடுப்பகுதியில் நான் வேலணைக்குச் சென்ற பொழுதினில் மீண்டும் அவர் வேலணையில் பணிபுரிவதை அறிந்து மிக்க மகிழ்ச்சியுடன் அவருடன் அளவளாவினேன். தந்தையின் ஸ்தானத்திலிருந்து அறிவுரைகளுடன் வாழ்த்துரைத்தார்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்

என்றார் வள்ளுவப் பெருந்தகை. அந்த வகையில் மருத்துவர் ஆ.திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய பணிகளும், கல்வியிலும் தொழிலிலும் எல்லாவற்றிலுமாய் உயர்ந்து நிற்கும் அவர்தம் பிள்ளைகளும் அவர் ஒரு பெருந்தகை என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன.

 

Friday, May 25, 2018

கனடாவில் அடுத்த தலைமுறைத் தமிழரும் தமிழும்



வந்தாரை வாழவைத்தல் தமிழரின் மரபாகும். அந்தத் தமிழரே ஏதிலிகளாக, அகதிகளாக அலைந்து திரிந்த போதினில், அவர்களைத் தன்மண்ணில் குடியேற அனுமதித்து வாழவைத்துக் கொண்டிருக்கும் கனடாவில், எமது அடுத்த சந்ததியினரிடம் தமிழ்மொழி நிலைக்குமா என்பது மிகவும் சந்தேகத்திற்குரிய ஒன்றாக இருக்கின்றது. பல்கலாச்சாரங்கள் கொண்டவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள கனடாவானது, இங்கே வாழ்பவர்களை அவர்களது கலாச்சாரங்களுடன் ஏற்றுக் கொண்டிருப்பதையும், பல்கலாச்சாரங்களைப் பேணி ஊக்குவிப்பதையும் பார்க்கையில், அதிலும் தை மாதத்தினை தமிழர் மரபுடைமைத் திங்களாக அங்கீகரித்திருப்பதையும் நோக்குகையில், தமிழ்மொழியினைக் கனடாவில் வாழும்மொழியாக நிலைபெறச்செய்வதற்காக, எமது அடுத்த சந்ததியினரிடம் உரிய முறையில் தமிழ்மொழியைக் கையளிப்பது இன்றைய சந்ததியினரின் கைகளில்தான் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெளிவாகத் தெரிகிறது. ஆயினும் அதற்கான போதிய தயார்ப்படுத்தல்கள் எம்மிடம் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. இனிமேலும் அவ்வாறான தயார்ப்படுத்தல்களை நாம் செய்யாது விடுவோமேயானால் எமது அடுத்த தலைமுறையைத்தாண்டித் தமிழ்மொழி வாழாது போகலாம்.

'ஒரு மனிதன் உண்மையில் இறந்துபோவது அவன் பற்றிய நினைவுகளை மக்கள் முற்றாக மறந்து போகையில் தான்'

இக்கூற்று மனிதனுக்கு மட்டுமல்ல, அவன் பேசும் மொழிக்கும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. எனவே தமிழ்மொழி கனடாவில் மறக்கப்படாமல் தொடர்ந்தும் உயிர்ப்புடன் வாழ்வதற்கு தமிழ்மொழியின் தொன்மையையும், அதன் சிறப்பையும், அதைக் கற்பதனால் உண்டாகும் நன்மைகளையும், தமிழின் முக்கியத்துவத்தையும் எம் இளந்தலைமுறையினர் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துரைத்தல் வேண்டும்.

தமிழ்மொழி உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்று. உலகின் அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகளில், வாழும்மொழிகளில் ஒன்றாக விளங்குவது அதன் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது. இதனையிட்டுத் தமிழராகப் பிறந்ததில் எம் அடுத்த சந்ததி பெருமைப்படவேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்துதல் வேண்டும்.

ஒரு இனத்தின் தொன்மையை, அதன் வரலாற்றை நாம் அறிந்துகொள்வதற்கு மூலாதாரமாக விளங்குபவை அம்மொழியில் உருவாக்கப்பட்டிருக்கும் இலக்கியங்களாகும். 'இலக்கியம் காலத்தைக்காட்டும் கண்ணாடி' என்பார்கள். அந்த வகையில் தமிழின் தொன்மைக்கு சான்றாக இன்று எம்மிடம் இருப்பவை தொல்காப்பியம் என்னும் இலக்கணநூலும், சங்க இலக்கியங்களாகிய தொகை நூல்கள் எட்டும், பத்துத் தனிப்பெரும் பாடல்களான பத்துப்பாட்டும் ஆகும். இவை தவிரவும் தொன்மைக் கதைகளாகவும், குறிப்புக்களாகவும், கர்ணபரப்புரைக் கதைகளாகவும், தொல்காப்பியத்திலும் காலப்பழமை வாய்ந்ததான அகத்தியம் என்னும் இலக்கணநூல்பற்றியும் மற்றும் முதற்சங்க, இடைச்சங்க காலங்களில் பற்பல நூல்கள் இருந்தன என்பதுபற்றியும் அறியக் கிடைத்தாலும் அவை இப்போது எம்மிடையே இல்லாததால் அவற்றைத் தமிழின் தொன்மைக்கு விஞ்ஞானரீதியிலான ஆதாரமாகக் கொள்ள முடியாது.

ஆயினும் தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் பல இடங்களிலும், 'என்ப', 'என்மனார் புலவர்', 'மொழிப' போன்ற பதங்களின் ஊடாக தனக்கு முற்பட்ட அறிஞர்களைப் பெயர் சுட்டாமற் குறிப்பிட்டிருப்பதால், தொல்காப்பியத்திற்கு முன்னரேயே பல இலக்கணநூல்கள் இருந்திருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் வகுத்தலே முறை. எனவே தொல்காப்பியத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே தமிழிலக்கியங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்பதும் அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. அதுமட்டுமன்றி உலகப் பொதுமறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள திருக்குறளைத் தந்ததும் தமிழ்மொழியே. எனவே, எமது அடுத்த தலைமுறைக்கு தமிழின் தொன்மையையும் அதன் பெருமையையும் எடுத்துக்கூற வேண்டியது இன்றைய தலைமுறையினரான எமது தலையாய கடமையாகும். அதை எமது பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க முறையில் கூறவேண்டியது மிகமிக இன்றியமையாததாகும்.

பொதுவாக எல்லோருக்குமே இலக்கணத்தைக் கற்பதிலும் பார்க்க இலக்கியத்தைச் சுவைப்பதில் மிக்க ஆர்வம் இருப்பது இயல்பு. எனவே எம்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இலக்கியச் செழுமையையும், கற்பனை வளங்களைம் நுகர்வதற்கு இளைய தலைமுறையினரை வழிப்படுத்துதல் வேண்டும். அதற்கு, தெரிந்தெடுக்கப்பட்ட இக்கால இலக்கியங்களில் தொடங்கிப் படிப்படியாக இலகுவான சங்ககால இலக்கியப் பாடல்கள் வரை அவர்களைச் சுவைக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்வோமேயானால் அதன்பின் அவர்களாகவே தமிழிலுள்ள எல்லா இலக்கியங்களைத் தேடி வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படியான ஒருநிலையை அவர்கள் அடைந்தால் தமிழ் மொழியின் தொன்மையையும் அது கொண்டுள்ள இலக்கியச் செழுமைகளையும் அக்காலங்களில் வாழ்ந்த தமிழரின் பண்பாட்டு விழுமியங்களையும் நாகரிகச்சிறப்புகளையும், காதல், வீரம் கொடை போன்றவற்றில் எல்லாம் தமிழர்கள் பெற்றிருந்த சிறப்பினையும் உணர்ந்துவிடுவார்கள். அப்படி உணரும்பட்சத்தில், தாம் தமிழர் என்பதிலும், தமது தாய்மொழி தமிழ் என்பதில் நிச்சயம் பெருமிதம் கொள்வார்கள். எதனை நாங்கள் உயர்வாக பெருமையாக நினைக்கின்றோமோ அதனை இயல்பாகவே நாம் மதிக்கத் தொடங்கிவிடுவதுடன் எமது பிள்ளைகளுக்கும் அதனை வழங்க முயற்சிப்போம். அந்த வகையில், தாங்கள் தமிழராய்ப் பிறந்ததில் பெருமையையும் தமிழ்மொழியின் உயர்வினையும் உணர்ந்து கொண்ட இளையவர்கள் தாமாகவே தமிழ்மொழியை அவர்களுக்கு அடுத்துவரும் தலைமுறைக்கு கடத்தும் பணியினை செம்மையாகச் செய்வார்கள்.

'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்'

என்று கூறிய வள்ளுவப் பெருந்தகையே,

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்'

என்றும் சொல்லியிருக்கிறார். எனவே எம் இளம் சந்ததியினர் தமிழ்மொழியினை விரும்பிக் கற்பதற்கு, முதற்படியாக நாம் ஒவ்வொருவரும் எங்கள் எங்கள் வீடுகளிலிருந்தே அதனை ஆரம்பிக்க வேண்டும். வீடுகளில் எம் குழந்தைகளுடன் தமிழ்மொழியில் மட்டுமே உரையாடுதல் வேண்டும். இதற்கு தளராத மனவுறுதி மிகவும் இன்றியமையாததாகும்.

சிறுவயதுப் பிள்ளைகள் கைக்கணினிகளில் அதிக நேரத்தைச் செலவு செய்ய அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிப்பது அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எங்களை எமது பிள்ளைகள் தொந்தரவு செய்யாமலிருப்பதற்காகவே நாங்கள் எம் பிள்ளைகளைக் கைக்கணினிகளில் அதிகநேரம் செலுவிடுவதை எமது வசதிக்காக அனுமதித்து விடுகிறோம். அது தவறு என்பதை நாம் உணர்ந்து கொண்டால், பிள்ளைகளுடன் எங்கள் நேரத்தை அதிகம் செலவிடுவோம். அப்போது எமது பிள்ளைகளுடன் தமிழறிவை வளர்க்கும் விளையாட்டுக்களை விளையாடலாம்.

எடுத்துக்காட்டாக விடுகதைகள் கேட்டல் (நொடி அவிழ்த்தல்), புதிர்க்கதைகள் கூறுதல் என்பவற்றைக் கூறலாம். அல்லது எங்கள் சிறுவயதுகளில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றான, ஒரு எழுத்தைக் கூறி அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர், பொருள், இடம், படம் என்பவற்றை குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதவேண்டும் என்று கூறலாம். இதன் மூலம் பிள்ளைகள் விரைவாகத் தமிழில் எழுதத் தேர்ச்சி பெறுவதுடன் அதிகளவிலான தமிழ்ச்சொற்களையும் அறிந்து கொள்வார்கள். அண்மையில் கனடாவில் உள்ள தமிழ் வானொலியொன்றிலும் இவ்வாறான நேயர் போட்டியொன்றைக் கேட்க நேர்ந்தது. ஆயினும் தொலைபேசியூடான அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர்கூட இளைய தலைமுறையைச் சார்ந்தவர் இல்லை என்பது மனவருத்தத்தைத் தந்தது. சிறு பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டும் சில விளையாட்டான தமிழ்ப்பாடல்களைச் சொல்லிக் கொடுக்கலாம்.

'அக்கா வீட்ட போனேன். 
அரிசிப்பொதி தந்தா. 

வேண்டாமெண்டு வந்தேன். 
வழியெல்லாம் பாம்பு. 

பாம்படிக்கத் தடிக்குப் போனேன். 
தடியெல்லாம் தேன். 

தேன் எடுக்க சட்டிக்குப் போனேன். 
சட்டியெல்லாம் ஊத்தை. 

ஊத்தை கழுவத் தண்ணிக்குப் போனேன். 
தண்ணியெல்லாம் மீன். 

மீன் பிடிக்க வலைக்குப் போனேன். 
வலையெல்லாம் ஓட்டை. 

ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன். 
ஊசியெல்லாம் வெள்ளி. 

வெள்ளியடி வெள்ளி. 
உன்ரை கையில கிள்ளி'

என்று சொல்லி இறுதியில் பிள்ளையின் கையில் மெதுவாகக் கிள்ளினால் அப்பிள்ளை ஆர்வமுடன் தானும் இதைத் தனது நண்பர்களுடன் விளையாட ஆரம்பிக்கும்.

'என்ன வேணும்?' 
'பழம் வேணும்.
'என்ன பழம்?' 
'வாழைப்பழம்.
'என்ன வாழை?' 
'கப்பல் வாழை.
'என்ன கப்பல்?' 
'பாய்க்கப்பல்.
'என்ன பாய்?' 
'ஓலைப்பாய்.
'என்ன ஓலை?' 
'பனையோலை.
'என்ன பனை?' 
'கட்டைப் பனை.
'என்ன கட்டை?' 
'மரக்கட்டை.
'என்ன மரம்?' 
'பூமரம்
'என்ன பூ?' 
'மல்லிகைப் பூ
'என்ன மல்லிகை?' '
கொடி மல்லிகை
'என்ன கொடி?'

என்றவாறு கேட்டுக்கொண்டே போகலாம். விரும்பினால் 'என்ன கொடி?' என்று கேட்கையில் பழக்கொடி என்று சொல்லி மீண்டும் 'என்ன பழம்?' என்று சுற்றிச்சுற்றி வரலாம். இல்லையேல் வேறேதாவது சொல்லி விளையாடலாம் என்று இந்த விளையாட்டுகளைச் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் ஆர்வமுடன் விளையாடுவார்கள். கைக்கணினிகளில் நிமிடத்திற்கு நிமிடம் புதுப்புது விளையாட்டுகள் உலாவரும் இன்றைய வேகமான உலகில் பிள்ளைகள் ஒரே விளையாட்டைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு விளையாட மாட்டார்கள். எனவே அதற்கு ஏற்றவாறு புதுப்புது தமிழ்மொழிமூல விளையாட்டுக்களை நாம் தேடியறிந்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

பிறந்தநாள்விழாக்களை மிகுந்த செலவில் கொண்டாடும் நாங்கள், பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்களைக்கூடத் தமிழில் பாடுவதில்லை. வாழ்த்துகளைக்கூடத் தமிமிற் சொல்வதில்லை. அங்கே குழந்தைகளுக்கு வைக்கப்படும் எந்தவொரு போட்டியிலும் தமிழ்மொழி பாவிக்கப்படுவதுமில்லை. இத்தவறு முற்றுமுழுதாக பெற்றோரையே சாரும். அவர்கள் நினைத்தால் குறைந்தபட்சம் தமிழிலும் பிறந்தநாள் வாழ்த்தைக் கூறச் செய்யலாம். ஓரிரு போட்டிகளிலாவது தமிழ்மொழியை இடம்பெறச் செய்யலாம். இளையோரிடையே தமிழ்மொழியை ஊக்குவிக்க விரும்புவோர், தனித்தமிழில் இலகுவான கேள்வி-பதில் போட்டியை, சிறப்புப்போட்டியாக வைத்து வெற்றிபெறுபவர்களுக்கு அவ்விழாவில் கொடுக்கப்படும் பரிசுகள் அனைத்திலும் பெறுமதி மிக்கதான சிறந்த பரிசினைக் கொடுக்கலாம். இதன் மூலம் பிள்ளைகளிடையேயும் அவர்களின் பெற்றோர்களிடையேயும் தமிழ் மீதான ஆர்வத்தை நிச்சயமாக அதிகரிக்கச் செய்யலாம். இப்படியான போட்டிகள் ஒவ்வொரு பிறந்தநாள்க் கொண்டாட்டங்களிலும் வைக்கப்படுமெனின், பெற்றோரும் பிள்ளைகளும் மிகவும் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் தங்களை அப்போட்டிக்குத் தயார்ப்படுத்திக்கொண்டு வருவார்கள்.

தாயகத்தில் மட்டுமன்றி சங்ககால வசிப்பிடங்களில் ஒன்றெனக் கருதப்படும் கீழடி அகழாய்வு மையம், மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் போன்றவற்றிலும், தமிழரின் வரலாறுகள் மறைக்கப்படுகின்றன, மாற்றப்படுகின்றன என்று புலம்பித் திரியாமல், எங்களுக்குத் தெரிந்த எங்கள் வரலாறுகளை, எம்மவரின் வரலாறுகளை எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தரலாம். ஒவ்வொருவரும் அவரவர்களுடைய பிள்ளைகளுக்குத் தங்கள் தங்கள் வராலாறுகளை, தாங்கள் கடந்துவந்த பாதைகளைக் கூறலாம். தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் மாமாக்களின், சித்திகளின், சித்தப்பாக்களின், பெரியப்பாக்களின் மற்றும் அத்தைகளின் கதைகளைக் கூறலாம். அதனூடாக சங்க இலக்கியங்களில் காணப்படும் புறநானூற்றுக்கதைகளை அறிவதற்கான ஆர்வத்தினைக்கூட அவர்களிடைய தூண்டலாம். அதன்மூலம், எதிர்காலத் தொழில்நுட்பங்களை அவர்கள் தங்கள் காலத்தில் பயன்படுத்தி வரலாறுகளை மீட்டெடுக்கக்கூடியதாக இருப்பதுடன் அவர்களுக்கும் தமிழினத்தின் உண்மை வரலாற்றை அறிவதில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.

இவற்றிற்கெல்லாம் பொறுமையும் நீண்டகால அர்ப்பணிப்பும் தேவை. வீட்டில் அதைச் செய்வதற்குத் தாயின் பங்கே மிகமிக அத்தியாவசியமானதாகும். தாய்மொழியென்றே நாம் அழைக்கின்றோம். தமிழரான எமக்குத் தமிழே தாய்மொழி. ஆரம்பத்திலிருந்து எம்மை மிக அணுக்கமாகப் பேணி வருபவர் அன்னையே. குழந்தையைத் தூங்க வைப்பதற்காகத் தமிழ்த் தாலாட்டுப் பாடல்களைப் பாடலாம் அல்லத தமிழ்த் தாலாட்டுப் பாடல்களை இசைக்கவிடலாம். குழந்தைகள் காரட்டூன் பார்க்க அடம் பிடிக்கையில் தமிழ்மொழி மூலமான கார்ட்டூன்களையும் பார்க்கச்சொல்லி ஊக்கப்படுத்தலாம். ஏராளமான தமிழ்மொழி மூலமான கார்ட்டூன்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கார்ட்டூன்களும் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன.

இவ்வளவு முயற்சிகள் நாம் மேற்கொண்டாலும், எமது இன்றைய சூழ்நிலையை நாம் கருதினால், கனடாவில் இங்கிருக்கின்ற எமது இளம் தலைமுறையினருக்கு அவர்களிடையேயான தொடர்பாடல் மொழியாக ஆங்கிலமே அமையப்போகின்றது. அதையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஏனெனில் அவர்கள் பாடசாலைகளில் பல்வேறு மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களுடன் ஒன்றாகப் படிப்பதாலும், கற்பித்தல் மொழி ஆங்கிலமொழியாக இருப்பதாலும் பாடசாலைகளில் அவர்களின் தொடர்பாடல்கள் அனைத்துமே ஆங்கிலமொழியிலேயே அமைகின்றன. எனவே பழக்கதோசத்தில் இயல்பாகவே அவர்கள் ஏனைய தமிழ்ப்பிள்ளைகளுடனும் ஆங்கிலத்திலேயே தொடர்பாடலை மேற்கொள்வார்கள். அதுமட்டுமன்றி அவர்களுக்குத் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு ஆங்கில மொழியறிவு மிகவும் அத்தியாவசியமானதும் கூட. ஆங்கிலமொழியறிவு இல்லாமல் இங்கு வாழ்வது கடினம். எனவே அவர்களுக்கு அவர்களின் தாய்மொழியான தமிழ்மொழி இரண்டாம் மொழியாகத்தான் இருக்கப் போகின்றது. அந்த இரண்டாம் மொழியிலும் அவர்கள் தேர்ச்சியுடையவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாம் பாடுபடுகின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், எமது உறவுகள் உலகின் பலபாகங்களிலும் பரந்து வாழ்கின்றார்கள். அவர்களின் பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழிகளையே தமது முதல்மொழியாகக் கொண்டிருக்கின்றனர். எனவே இவ்வாறு பரந்து வாழும் எங்கள் உறவுகளின் பிள்ளைகளுக்கான பொதுமொழியாகத் தமிழ்மொழியே இருப்பதால் எமது பிள்ளைகளுக்குத் தமிழ்மொழி அவசியம் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதுமட்டுமன்றி கனடாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களும் அரசுசாரா நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்குத் தமிழ்மொழி தெரிந்திருப்பதை விரும்புவதையும் காணக்கூடியதாக உள்ளது. எனவே கனடாவில் தமிழர் செறிந்து வாழும் இடங்களில் வேலைவாய்ப்பிலும் தமிழ்மொழியறிவு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதையும் நாங்கள் உணர்ந்து எங்கள் பிள்ளைகளுக்குப் புரியவைத்தல் வேண்டும்.

முப்பது நாப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் தமிழ்ப் பாடசாலைகள் அமையும் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இன்றைய நிலை? இன்று கனடாவில் சில வைத்தியசாலைகளிலும், வைப்பகங்களிலும் கூட தமிழ்மொழியிலான அறிவுப்புகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன. வருங்காலம் எப்படி அமையும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு மரத்தை நடுபவன் அந்த மரம் தனக்கு உபயோகப்படும் என்று நினைத்து நடுவதிலும் பார்க்க தன் சந்ததி, அந்த மரத்தால் அதிக பயனடையும் என்று நினைத்தே நடுகின்றான். எனவே நாமும் பலனை எதிர்பாராது எம் கடமையினைச் செய்வோம். எமது இளம் தலைமுறை விரும்பியேற்கும் வகையில் அவர்களுக்குத் தமிழ்மொழி அறிவை ஊட்டுவோம். அவர்கள் தங்களது இளம் சந்ததிக்கு ஏற்ற முறையில் தமிழ்மொழியறிவைக் கொடுப்பார்கள் என்று நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்க்கை. காலம் பதில் சொல்லட்டும்.


நன்றி: தாய்வீடு (மே 2018)