Monday, April 5, 2021

காலுங் காதலும் (1)



'மிஸ்ரர் லிங்கம் வேக் அப். வேக் அப் மிஸ்ரர் லிங்கம்' 

யாரோ என்னை உலுக்குவதை உணரமுடிந்தது. இமைகளைத் திறக்கமுடியாதவாறு பெருங்கனமொன்று வந்து அதன்மேல் குந்தியிருந்தது. உடலின் ஒருபகுதியையேனும் அசைக்கமுடியா இயலாமையில் தத்தளித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் அதேகுரல்

'ஆர் யூ ஓகே மிஸ்ரர் லிங்கம்? ற்றை ரு வேக் அப். யூ ஆர் ஓகே நௌ'

 மிகுந்த சிரமத்துடன் இமைகளைத் திறக்கிறேன். ராசலெட்சுமி!

 'வந்திற்றியா என்ரை ராசாத்தி!

 'மிஸ்ரர் லிங்கம்  மிஸ்ரர் லிங்கம். டொக்ரர் திஸ் பேஷன்ற் இஸ் லூசிங் ஹிஸ்....'

****** 

'என்ரை அல்லிராணி அரளிவிதைய அரச்சுக்குடிச்சிற்றுது எண்டு கேள்விப்பட்டோடண நான் துடிச்சுப் போய்ற்றன் தெரியுமா? ஏனடியாத்தை அப்பிடிச்செய்தனீ?'

'அதுக்காக இப்பிடியா மாட்டுவண்டிலக் கொண்டுபோய் பத்தைக்குள்ள விடுவீங்க? பாருங்க உடம்பெல்லாம் ஒரே கீறல் காயம். காலில வேற பத்துப்போட்டுக் கிடக்கு'

'நீ கதையை மாத்தாதையணை. ஏனெணை என்ரை குஞ்சு நஞ்சைக் குடிச்சது?'

'நஞ்சைக் குடிச்சதாலதானே இப்ப அப்பு உங்களைப் பாக்க விட்டவர்'

'தச்சலா(தற்செயலாகஒண்டு கிடக்க ஒண்டு நடந்திருந்தா?'

'நான் ஒரு எற்பன்தான் குடிச்சனான்'

'எண்டலுமெணை நஞ்சோடை ஆரும் விளையாடுறதே? தச்சலா உனக்கொண்டு நடந்திருந்தா?'

'அய்! அய்யான்ரை ஆசையைப்பாருங்கோவன். எனக்கொண்டு நடந்திருந்தா இன்னொருத்தியைப் பிடிக்கலாமெண்டு நினைச்சியளோ? நான் சாகிறதாயிருந்தா உங்களையும் கொண்டுபோட்டுத்தான் சாவன் தெரிஞ்சுகொள்ளுங்கோ?'

'ஏனடியாத்தை இப்ப இப்பிடியெல்லாம் கதைக்கிறாய்?'

'அப்ப சத்தம் போடாம படுங்க பாப்பம். இன்னும் ரெண்டுமாதத்தில பள்ளிக்கூட விளையாட்டுப்போட்டீல நீங்க வெல்லட்டா கூட்டாளிப் பெட்டையளிட்டை என்ரை மானம் போயிரும்'

'போனமுறை விளையாட்டுப் போட்டியிலதான் நீ என்னோட முதன்முதல் கதைச்சனீ ஞாபகமிருக்கோ?'

'அதுக்குப் பிறகு நீங்க எனக்குப் பின்னால வந்து பம்மினதும் ஞாபகமிருக்கு'

இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் அது. அஞ்சலோட்டத்தின் போது எமது இல்லத்தின் மூன்றாவது வீரர் தடக்கி விழவே மற்றைய இல்ல வீரர்களுக்கும் எங்களுக்கும் இடையே நீண்ட இடைவெளி உண்டாகிவிட, இறுதியாளாய்த், தோல்வி நிச்சயம் என்கின்ற உறுதியில் ஓடிக்கொண்டிருக்க. . .

'கமோன் லிங்கம் வேகமா ஓடுங்க! முன்னுக்குப் போற ஆக்களைப் பிடிச்சிரலாம். கமோன்'

குரல்கேட்டு இடப்புறமாய்த் திரும்ப, ராசலெட்சுமி! ஓட்ட வீரர்கள் குறுக்காகப் போகாமல் தடுப்பதற்காக இடையிடையே நிறுத்தப்பட்டிருந்த மாணவிகளில் ஒருத்தியாய். ஒருகணம் எனக்கே திகைப்பாகிப் போனது. ராசலெட்சுமிக்கு, எங்கள் பள்ளிக்கூடத் தேவதைக்கு, ஊரின் பேரழகிக்கு என்னை, எனது பெயரைத், தெரிந்திருக்கிறதா?

'கன்னியர் கடைக்கண் காட்டிவிட்டால் மண்ணில் காளையர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்'

உயிரைக் கொடுத்து ஓடுவது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு ஓட்டம். மயிரிழையில் மூன்றாமவனை முந்தி மூன்றாமிடத்தைத் தட்டிப்பறித்தேன். யாருமே எதிர்பார்த்திராத வெற்றி அது.

திகைத்துப் போயிருந்த நண்பர்களிடம் உண்மையைச் சொன்னேன். நம்ப மறுத்தனர். தாங்கள் பார்க்க ராசலெட்சுமியுடன் நான் உரையாடினால் கள்ளும் கள்ளக்கோழியும் தருவதாய்ப் பந்தயம் கட்டினார்கள்.

கொஞ்சம் அழகிகளுக்கே திமிரிருக்கும் எங்கள் ஊரில், எழில் கொஞ்சும் ரதியாய், அழகிகளின் ராணியாய்த் திகழும் ராசலெட்சுமி மட்டும் அதற்கென்ன விதிவிலக்கா? படிப்பில் பெயரெடுத்த பல மாணவர்களையே எடுத்தெறிந்துபேசி செருப்பைக் கழற்றிக் காட்டுபவள் வெறும் ஓட்டக்காரனான என்னை ஊக்கப்படுத்தியதை நான்கூடத்தான் நம்பத் தயாராயிருக்கவில்லை.

வெள்ளி அல்லது சனி இரவுகளில் ஈரச்சாக்குப் போட்டுப் பிடிக்கும் கோழியை மறுநாள் மதியம் நண்பர்களுடன் தனியிடத்தில் நெருப்பில் வாட்டி கள்ளுடன் சேர்த்தடிக்கும்போது வரும் ஒருவித போதை தரும் சந்தோஷத்திலும், இதைச்சாட்டாய் வைத்து ராசலெட்சுமியுடன் ஒருமுறை உரையாடிவிடலாம் என்பதே மனதிற்கு மகிழ்ச்சியாயிருந்தது.

பந்தயப்படி மறுநாள் பள்ளிக்கூடம் முடிவடைந்தது வீடுசெல்லும்  போது அவளைப் பின்தொடர்ந்தோம். நண்பர்கள் விலகி நிற்க நான் அவளை நெருங்கினேன்.

காலடியோசை கேட்டு நின்று திரும்பி முறைத்தாள்.

'அம்மாணை செருப்பைக் கழட்டிப் போடாதையும் ஐசே! பெடியளோட பந்தயம் கட்டினபடியாலதான் உம்மோடை கதைக்க வந்தனான். நீர் என்னோடை கதைக்கத் தேவையில்லை. சும்மா கதைக்கிற மாதிரி நடிச்சாலே காணும். நான் பந்தயத்தில வெண்டிருவன்'

'ம். அவ்வளவு பயமிருந்தாக் காணும்'

'நான் ஓடேக்குள்ள நீர் எனக்கு கமோன் சொன்னீர் என்று சொல்ல ஒருத்தரும் நம்பயில்லை. நீர் சரியான திமிர் பிடிச்சனீராம். பெடியளோட கதைக்கமாட்டீராம் எண்டுசொல்லி என்னைப் பொய்யன் எண்டுறாங்கள்'

'ஏன் என்னைப்பார்த்தா திமிர்பிடிச்சவள் மாதிரயா இருக்கு?'

'ஐயையோ. அம்மாண நான் அப்பிடிச்சொல்லேல்ல. மற்றப் பெடியள்தான் அப்பிடிச் சொன்னவங்கள்'

'வேறென்ன சொன்னவங்கள்?'

'நீர் நல்ல வடிவெண்டு உமக்குப் பெரிய எண்ணமாம்.'

'ஏன் அப்ப நான் வடிவில்லையோ?'

'இஞ்ச பாரும் ஐசே! நான் ஒண்டுமே சொல்லேல்லை. அவங்கள்தான் எல்லாம் சொன்னவங்கள்?'

'அப்ப உமக்கு நான் வடிவான ஆளாத் தெரியேல்லை என?'

அவள் முறைப்பது தெரியவே நான் தடக்கியது உறைத்தது.

'இல்லையில்லை நீர் சரியான வடிவு. உம்மைப்போல இவ்வளவு வடிவான ஒரு பெட்டையை நான் பார்த்ததேயில்லை'

'அப்ப இதுவரைக்கும் எத்தனை பெட்டையளைப் பார்த்திருக்கிறீர்?'

'என்ன நீர்? நான் அப்பிடியான ஆளில்லை' முகத்தில் கோபத்தைக் காட்டினேன்.

'இதென்ன நீர்? லூசு மாதிரி. இதுக்கேன் கோவிக்கிறீர்?'

'ஓம் நான் லூசுதான். அவங்களோட பந்தயம் கட்டி உம்மோடை வந்து கதைச்சன்பாரும்'

'அப்ப அவங்களோட பந்தயம் கட்டியிருக்காட்டி என்னோட வந்து கதைச்சிருக்க மாட்டீரோ?'

'நான் ஏன் உம்மோடை வந்து கதைக்கிறன். நீரும் உம்மடை திமிரும் உம்மோடையே இருக்கட்டும் எண்டு விட்டிட்டிருந்திருப்பன்'

'அப்ப உங்களுக்கு உண்மையா என்னில விருப்பமில்லையா?'

அவள் குரல் கரகரத்திருந்தது. இவ்வளவு நேரமும் என்னை நீர் என்று அழைத்தவள் இப்போது நீங்கள் என்கிறாள். அப்படியானால் இவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா? வயிற்றினுள் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கத் தொடங்கின.

'விருப்பம் இல்லாமலா உம்மோடை வந்து இவ்வளவு நேரமும் கதைச்சுக் கொண்டிருக்கிறன்?'

'இல்லை. நீங்க பொய் சொல்லுறீங்க. உங்களுக்கு என்னில விருப்பமில்ல. இனி என்னோடை கதைக்க வேண்டாம். நான் போறன்'

முகத்தைத் திருப்பிக்கொண்டு புறப்பட்டாள். அவள் நயனங்கள் இரண்டிலும் இரு கண்ணீர் முத்துக்களை நான் கண்டேன்.

காதலுக்கும் கண்ணில்லை. காதலில் வீழ்ந்திருப்பவர்கட்கும் கண்ணில்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கிறதே

ஊருக்குள் காதலிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. சிலமாதங்களிலேயே எங்கள் காதல் அவள் தந்தைக்குத் தெரியவர ராசலெட்சுமியின் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது.

சனி ஞாயிறு காலைகளில் சந்தைக்குச் சென்றுவிட்டு வரும் வழியினை ராசலெட்சுமியின் வீட்டினருகாக வருவதற்கும். வீட்டிற்கு அடுத்துள்ள பனங்காணியினுள் ஓய்வெடுப்பதற்கும் வண்டில்மாடுகள் பழகிவிட, அவள் தந்தை அவளை வீட்டின் முற்றத்திற்குக் கூட வரவிடாமல் சிறைவைக்க அவள் அரளிவிதையினை விழுங்கியிருந்தாள்.

ராசலெட்சுமி அரளி விதையை அரைச்சுக் குடிச்சிற்றாளாம் எண்டு  கேள்விப்பட்டவுடன் சந்தைக்குக் கொண்டு சென்றிருந்த வெங்காயத்தை அப்படியே விட்டுவிட்டு மாடுகளை அரையும் குறையுமாக வண்டிலில் இழுத்துக் கட்டிவிட்டு மாடுகளை அவளின் வீட்டை நோக்கி விரட்டிய போதுதான் நுகத்தடியிலிருந்து ஒரு மாடு விலக வண்டி முட்பற்றைக்குள் சாய்ந்தது.

நன்றி தாய்வீடு - ஏப்ரல் 2021

(தொடரும்)

Tuesday, November 10, 2020

மனிதன் படைத்த குரங்கு (5)


கணினித் திரையில் தோன்றிய ஓலைச்சுவடிகளின் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. தமிழ்ப்பிராமியையோ வட்டெழுத்துக்களையோ சிறிதேனும் ஒத்ததாக அல்லாமல் அவையிருந்தன. எனக்கோ மண்டை காய்ந்தது. நீண்ட யோசனையின் பின்னர் அந்தப் படங்களில் காணப்படும் வரிவடிவங்களை முதலில் அடையாளம் காணம் நோக்குடன் பட-வகைப்பாடாக்கும் (image classification) செய்வதற்கான செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டினை (Artificial Intelligent processing) செயற்படுத்தினோம்.

இச்செயல்முறையினூடாக முப்பத்தெட்டு (38) வகையான வரிவடிவங்களை அடையாளங்காணக்கூடியதாக இருந்தது. பின்னர் தொடக்ககால மறைகுறியாக்க உத்தியினைப் (decryption method) பயன்படுத்தி இவ்வெழுத்துக்கள் ஒவ்வொன்றும் இந்தப்படங்களில்  காணப்படும் நிகழ்தகவினை (probability), தற்காலத்தில் கிடைக்கும் சித்தர் இலக்கியங்களில் காணப்படும் எழுத்துக்களின் நிகழ்தகவோடு ஒப்பிட்டும், அதன் பின்னர் அப்படங்களில் அவதானிக்கப்பட்ட ஒவ்வொரு சொற்களின் முதலெழுத்துக்களை ஆராய்ந்தும் ஓரளவிற்கு எம்மால் அவ்வரிவடிவங்களில் பலவற்றை  உய்த்துணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

பெரும்பாலான வரிவடிவங்களை உய்த்துணர்ந்த பின்னர் ஏனைய வரிவடிவங்களை அடையாளங்காண்பது சாதாரணமான புதிர்ப்போட்டியாகவே இருந்தது. கீறிட்ட இடங்களை நிரப்புவதுபோல் ஒவ்வொரு எழுத்தாக இட்டு நிரப்பி அது கருத்துள்ள ஒரு சொல்லை உருவாக்குகின்றதா என்பதைக் கண்டறிந்து பின்னர் அவ்வெழுத்து ஏனைய இடங்களிலும் சரிவரப் பொருந்துகின்றதா என்பதனை வாய்ப்புப்பார்த்து உறுதிப்படுத்துவதற்கான நிரலிகளையும் உருவாக்கி முடிக்கவே எமக்கு இருவாரங்களாகி விட்டிருந்தன.

இந்தக்காலத்திற்குள் எனக்கு இந்த வேலையில் அலுப்புத்தட்டத் தொடங்கிவிட்டிருந்தது. இதனைக் கண்டுபிடித்து நான் என்னத்தைச் சாதிக்கப்போகின்றேன்? அல்லது எனக்குத்தான் இதனால் என்ன பலன் கிடைக்கப் போகின்றது? என்கின்ற எண்ணங்கள் எழுந்து ஓர் ஆயாசத்தை எனக்குள் உருவாக்கின.

இவ்வுலகைப் பொறுத்தவரைக்கும் நான் என்றைக்கோ இறந்து விட்டவன். எனவே இதைக்கண்டுபிடித்தாலும் அந்தப்பெருமை என்னைச் சேரப்போவதில்லை. நானும் ஒரு இயந்திரப்பொறியாக இந்தப்பொறியினால் கையாளப்படுகின்றேனே தவிர எனக்கென்று தனிப்பட எந்தவொரு ஆதாயமோ அனுகூலமோ விளையப்போவதில்லை. வேளாவேளைக்கு சாப்பாடும் நீராகாரங்களும் மட்டும் தவறாமல் கிடைத்துவிடுகின்றது. இந்தச்சாப்பாடு சாப்பிட்டு நாக்கிற்கும் அலுத்துப்போய்விட்டது. எனக்கே எனக்கென்றான தனிமையும் இங்கே கிடையாது. இவைபோன்ற காரணங்களினால் நான் உளச்சோர்விற்கு ஆளாகிக் கொண்டிருப்பது புரிந்தது. ஆயினும் அதிலிருந்து விடுபட மனமுமின்றி வழியுமின்றி இருந்தேன்.

நான் உளச்சோர்வுற்றிருப்பதை அந்தக்குரங்கும் மனிதப்பொறியும் உணர்ந்துகொணடிருக்க வேண்டும். அவை வந்து என்னை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

நீ உன் செயல்களின் விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றாய். பகவத்கீதையில் கிருஷ்ணன் என்ன சொல்கின்றான் என்பது உனக்குத் தெரிந்ததுதானே. பின் எதற்காக உன்உளம் சோர்வடைகின்றது என்று தொடங்கியது அந்தக்குரங்கு.

கீதாவுபதேசம் கேட்ட அருச்சுனனே பதின்மூன்று நாட்களில் அபிமன்யு இறந்ததையறிந்து சோகத்தில் மூழ்கவில்லையா? வாழ்வில் பிடிப்பிழந்ததாகப் புலம்பவில்லையா? நீங்களானால் என்னை என் குடும்பத்திடமிருந்து வலிந்து பிரித்து வைத்திருக்கின்றீர்கள். அருச்சுனனுக்கு மகனையிழந்தாலும் தன் வீரத்தைப் பறைசாற்றிப் பெருமைசேர்க்கும் பேறிருந்தது. ஆனால் எனக்கு?

நீ நிக்கலஸ் ரெஸ்லா பற்றிக் கேள்விப்படவில்லையா? அவர் இருக்கும் காலத்தில் அவரின் பெருமைகள் மறைக்கப்பட்டிருந்தன. அவரின் கண்டுபிடிப்புகளைப் பிறர் உரிமை கோரியிருந்தனர். அவர் இவையெதையுமே கணக்கிலெடுக்காமல் உலகிற்கே இலவச மின்சாரம் வழங்க முயற்சித்ததை நீ அறியவில்லையா? இன்று மின்சாரக் கார்களுக்கு அவரின் பெயரினை வைத்து எலன் மாஸ்க் அழகு பாரப்பதை அறிந்திருப்பாய்தானே? தோமஸ் அல்வா எடிசனின் மோசடிகளும் அம்பலத்திற்கு வருவதை அறிந்திருப்பாய். பின் எதற்காக வருத்தப்படுகின்றாய்? வரலாற்றில் நின்பெயரும் நிலைபெறும். கவலையடையாதே.

நான் எதுவும் பேசாதிருந்தேன்.

வரலாற்றில் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட வரலாற்று நாயகர்கள் காலம் கடந்தாவது மீண்டும் வெளிக்கொணரப்படுவார்கள். எனவே நீ பலனைப் பற்றி நினைக்காமல் உன் கடமையைச் செய். விளைவுகள் அல்ல வாழ்க்கை. விழைவும் அதை விளைவிக்கச் செய்யும் செயல்களுமே வாழ்க்கை. வாழ்க்கை என்பது குட்டை போன்று ஓரிடத்தில் தேங்கிக்கிடப்பதல்ல. அது ஒரு நதி போன்று இறப்பெனும் கடலை அடையும் வரை ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

என்னதான் நீ சொன்னாலும் என்மனம் உற்சாகம் பெறமுடியாமல் உளச்சோர்வடைந்தே இருக்கின்றது.

உன் உளச்சோர்வைப் போக்கும் வழி எனக்குத் தெரியும் என்றவாறே இடைபுகுந்து கண்சிமிட்டியது மனிதப்பொறி.

உனக்கொரு துணை தேவைப்படுகின்றது என்று ஊகிக்கின்றேன். அனும பக்தனான இந்தக் குரங்கால் அதை அனுமானிக்கு முடியாமல் இருக்கிறது. என்ன? நான் சொல்வது சரிதானே? என்று சொல்லி மீண்டும் கண்ணடித்தது அந்த மானிடப்பொறி.

உனக்கு என்னுடன் தனகாமல் இருக்க முடிவதில்லை. என? என்றது அந்த மனிதக் குரங்கு.

உன்னுடன் தனகாமல் இந்தச் சிடுமூஞ்சியிடனா தனக முடியும் என என்னையும் இழுத்தது அந்த மானிடப்பொறி.

ஏனோ தெரியவில்லை. எனக்கு அந்தக்குரங்கையும் மானிடப்பொறியையும் பார்க்கும் போது ஒரு தாத்தாவையும் அவரின் பேரனையும் பார்ப்பதாகவே இப்போதெல்லாம் தோன்றத் தொடங்கியிருந்தது. தாத்தாவிடம் பேரனுக்கில்லாத உரிமையா என்பதுபோல் அம்மானிடப்பொறியும் அந்தக்குரங்கை எந்நேரமும் சீண்டிக்கொண்டேயிருக்கும். அந்தக்குரங்கும் அம்மானிடப்பொறி செய்யும் அனைத்துக் சேட்டைகளையும் இரசித்தவாறே எதுவும் பேசாமல் இருக்கும். அவையிரண்டும் தங்களுக்குள் ஐக்கியமாகியிருப்பது போன்று என்னுடன் நெருங்கிப் பழகுவதில்லை. எனக்கும் அவற்றுடன் அதிக நெருக்கம் காட்டுவதில் ஆர்வமும இருக்கவில்லை.

உனக்கு ஒரு துணைக்கு நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம் என்றது அம்மானிடப்பொறி.

இல்லைத் தேவையில்லை. எனனைப்போல் இன்னுமொருவரை அவரது குடும்பத்திடமிருந்து பிரித்து விடாதீர்கள். எனக்கு அந்தப் பாவம் வேண்டாம் என்றேன்.

நீ புத்திசாலிதான். பாராட்டுகின்றேன். என்றவாறே என்னைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தது அம்மானிடப்பொறி.

எதற்காக இப்போது சிரிக்கின்றாய் என்றேன் கொஞ்சம் சினத்துடன்.

உன் மொழி ஆழுமையைப் பார்த்து நான் வியக்கின்றேன்.

அப்படி என்ன மொழியாழுமையைக் கண்டுவிட்டாய் என் பதிலில்?

இன்னுமொருவனை என்றோ ஒருத்தியை என்றோ நேரடியாகச் சொல்லாமல் ஒருவரை என்று பொதுப்பாலில் சொல்லி நீ எம்மை ஆழம் பார்ப்பதை இத்தனைநாட்கள் உன்னுடன் பழகிய பின்னர் அறியமுடியாமல் இருப்பேனா?

அறப்படிச்ச மூஞ்சூறு கழனிப்பானைக்குள்ள விழுந்துதாம். அறப்படிச்சால் உப்பிடித்தான் கண்டதையும் கடியதையும் யோசிக்கத் தோன்றும்.

அது அறப்படிச்ச மூஞ்சூறு இல்லை. அறவடித்த முன்சோறு.

சரி. இது இனி பழமொழிகளை வைத்து அலுப்படிக்கப் போகின்றது. மனதுக்குள் கடுப்பேறியது.

எனது முகம் கடுத்ததை அக்குரங்கும் அவதானித்திருக்க வேண்டும். இப்போது அது இடையே புகுந்து, வேண்டுமானால் பேச்சுத்துணைக்கு ஒரு ரோபோவை உனக்கு ஒழுங்குபடுத்தித் தருவதற்கு ஆவன செய்கின்றேன் என்றது.

என்ன கிழவா உளறுகிறாய்? இவனுக்கும் உன்னைப்போல் வெறும் பேச்சுத்துணைக்குத்தான் ஆள் தேவை என்று நினைத்தாயா? நான் இவனுக்கு அதற்கும் மேலாக எல்லா வகையிலும் துணையாக இருக்கத் தக்கதான ஒரு துணையையே அளிக்க விரும்புகின்றேன். இவனையும் கடவுளாக்குவதாகக் கூறிவிட்டு அவனது தேவைகளைக்கூடக் கவனிக்காவிட்டால் எப்படி?

ஏதோ புரிந்தது போலவும் எதுவுமே புரியாதது போலவும் நான் திரிசங்கு நிலையில் விழித்தேன்.

அப்படியானால் இன்னுமோர் மானிட உயிரியை எம்முடன் இணைக்கப் போகின்றாயா? என்று அம்மானிடப்பொறியை விளித்தது அக்குரங்கு.

இல்லை. நாங்கள் மூவர் மட்டுமே இந்த இலக்கின் பயணத்தில் இணைந்து பயணிக்கப் போகின்றோம். இவ்வுலகை ஆண்ட, ஆளும், ஆளப்போகும் மூன்று வகை இனங்களையும் நாம் ஒவ்வொருவரும் பிரதிநிதித்துவம் செய்வதால் இன்னொரு மானிடரை எம்முடன் இணைத்துக்கொள்ள முடியாது.

ஓ! அப்ப அதற்கும் ரோபோவா?

ஓம்! இம்மானிடனுக்காக இன்னொரு மானிட உயிரியை எம்முடன் இணைப்பது எமது நோக்கிற்கே ஆபத்தாக முடியலாம். இவனுக்கு ஒரு மானிடப்பெண் துணையினை எம்மால் ஏற்படுத்தித் தர முடியாது. ஆனால் மானிடப் பெண்ணிலும் மேம்பட்டதான ஒரு பெண் துணையினை வேண்டுமானால் எங்களால் உருவாக்கித்தர முடியும். இவனுக்குப் பிடித்த வடிவில் அவ்வாறான பொம்மைகளை நாங்கள் யப்பானிலிருந்தோ இங்கிலாந்திலிருந்தோ தருவித்துக்கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவின் மூலமாக இவன் தனக்கான மிகப்பொருத்தமான துணையாக அதிலொன்றைப் பயிற்றுவித்து விட்டால், பின் அந்த மாதிரியை ஏனைய பொம்மைகளிலும் இவனால் பயன்படுத்தமுடியும்.

ச்சே! என்ன கதை கதைக்கிறீர்கள் நீங்கள் இருவரும்?

உனக்குப் பிடிக்காத மாதிரி நீ எங்களுடன் உரையாடலாம். ஆனால் உனக்குத் தேவையான அனைத்தையும் செய்து தரவேண்டியது எங்களது கடமை. விரையிலேயே அவை உன்னை வந்தடைந்துவிடும். அவற்றைப் பயன்படுத்துவதும் பயன்படுத்தாமல் இருப்பதும் உன்னைப் பொறுத்தது. இனி உங்கள் இருவரையும் தொந்தரவு செய்யாமல் நான் விலகிக் கொள்கின்றேன். உங்கள் வேலையினை நீங்கள் தொடரலாம். கூறிவிட்டு விலகிச் சென்றது மானிடப்பொறி.

மானிடவுயிரியைப் படைத்ததே உங்கள் உயிரினம் தான் என்று நீ கூறினாயே. பின் எப்படி நீ அம்மானிட உயிரிகளில் உருவான சித்தர்களின் சிந்தனைகளையோ அவற்றின் கருத்துகளையோ புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றாய்? அப்படியானால் உங்கள் உயிரினத்திலும் பார்க்க எமது உயிரினம் மேம்பட்ட அறிவைக் கொண்டிருக்கின்றது என்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கின்றாயா?

செயற்கை நுண்ணறிவினூடாக உங்கள் கணினிக்குக் கற்பித்த பின்னர் எப்படி அது உங்களிலும் விட மேம்பட்டதாக வேலை செய்கின்றதோ அப்படித்தான் எம்மால் உருவாக்கப்பட்ட மானிட உயிர்களும். மிகத்திறமையாகக் கற்றுக்கொண்ட சில மானிடரின் கருத்துக்களை சாதாரணமான என்னால் புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கின்றது. எங்கள் இனத்தில் நான் வெறும் கற்றுக்குட்டியே. என்னிலும் எத்தனையோ மடங்கு அறிவில் சிறந்து விளங்கிய எம்மவர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்களுடன் உங்கள் சித்தர்களையெல்லாம் ஒப்பிடவே முடியாது. அதுமட்டுமல்ல. நாங்கள் உங்கள் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களில் ஒருவித சக்தி அலைகளை உருவாக்கிவிட்டிருக்கின்றோம். அவற்றைக் குவியப்படுத்திப் பயிற்சிகளை மேற்கொண்டால் உங்களின் மூலாதாரத்திலிருந்து முதல் சக்தி மையம் உருவாகும். அது படிப்படியாக மேலேறி…

தெரியும்.

குண்டலினி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே

- என்று ஒளவையாரும் பாடியிருக்கின்றார்.

அதே தான். மூலாதாரத்திலிருந்து புறப்படும் சக்தி உச்சந்தலையை அடைந்து எப்போது உச்சந்தலையில் உள்ள சக்திமண்டலம் திறக்கின்றதோ அப்போது நீங்கள் அளவிலா பேரானந்தத்தை அடைவீர்கள். அதுகூட எம்மால் உருவாக்கப்பட்டதே. அதே சக்தியை நீங்கள் உங்கள் குறி வழியே வெளியே விட்டாலும் இன்பத்தை அடைவீர்கள். அதையே சிற்றின்பம் என்கின்றீர்கள்.

அட என்ன விந்தை! விந்தை விரயமாக்காமல் மேலனுப்பினால் பேரின்பம். அதையே கீழே விட்டால் சிற்றின்பம்!

இந்த உரையாடல்களின் பின்னர் என் மனச்சோர்வு அகன்று மனம் புத்துணர்ச்சி பெற்றிருப்பதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது.

மேலும் இரு வாரங்களில் இயந்திரக் கற்கை நிரலிகளின் உதவியுடன் எம்மால் அச்சுவடிகளை வாசிக்கக் கூடியதாவிருந்தது. ஆயினும் அவற்றின் உட்பொருட்களை விளங்கிக் கொள்வது மிகவும் சவால் நிறைந்ததாக விளங்கியது. அவற்றைப் புரிந்து கொள்வதற்கு இயந்திரக்கற்கையின் செயற்கை நுண்ணறிவால் முடியாது என்பதும் புரிந்தது.

கடவுளைப் பற்றிப் போதிக்கும் வேதம், அதன் முடிவில் கடவுள் இல்லை என்று கூறுவதுபோல் இச்சுவடிகளின் ஆழ்பொருட்களும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு ஒருவித அயர்ச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

அதில் ஒரு பாடல்த் தொகுப்பு என் கவனத்தை அதிகம் ஈர்த்தது. கடவுளைக் கண் முன்னே உறுதியாய்க் காட்டுவதாய் சத்தியம் செய்தது. அதில் ஆழ்ந்து மூழ்கத் தொடங்கினேன்.

அது உபநிடதங்களில் வரும் கேள்விபதில் போன்று அமைந்திருந்தது.

நீ தான் கடவுள். இவ்வுலகைப் படைத்தவனும் நீதான். அதைக் காப்பவனும் நீதான். அதை அழிப்பவனும் நீதான்.

நான் எப்படிக் கடவுளாவேன்? எப்படி நான் இவ்வுலகைப் படைத்தவனாவேன்? அதைக் காத்து அழிப்பவனாவேன்? நீ என்னை வெறும் மாயைக்குள் தள்ளுகின்றாய்?

அப்படியானால் எல்லாமே மாயை. நீ மாயை, நான் மாயை, கடவுள் மாயை, இவ்வுலகம் மாயை.

நீ என்னைக் குழப்புகின்றாய்

எப்படி நீ இவ்வுலகை உணருகின்றாய்?

என் ஐம்புலன்களால்

நன்றாகச் சிந்தித்துப்பார். நீ உன் கண்கள் வழியே பார்த்தாலும் அதைக் கண்கள் பார்ப்பதில்லை. அவை வெறும் கருவிகளே. கனவினில் எப்படிக் காட்சிகளைக் காண்கின்றாய்? ஏனைய புலன்களையும் எவ்வாறு அறிகின்றாய்?

என் ஐம்புலன்களும் என் சிந்தையில் அவற்றை உணர வைக்கின்றனவா?

அதேதான். நீ காணும் இவ்வுலகு உன்  மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பெறிகளெனும் கருவிகள்கொண்டு உன் சிந்தை படைத்தது. உன் உற்றார் உறவினர் சுற்றம் எல்லோரும் அவ்வாறே?

அது எப்படி? என்னை உருவாக்கியது என்பெற்றோர்கள் அல்லவா?

அது வெறும் மாயை. நீ மட்டுமே அதுவும் இக்கணத்தில் மட்டுமே நிஜம். ஏனையவை எல்லாம் உன் மனம் உருவாக்கிய மாயைகளே.

அப்படியானால் காலம்? என் கடந்தகால ஞாபகங்கள்?

காலம் என்பதே ஒரு மாபெரும் மாயநதி. உன் மனம் உருவாக்கிய மாயையே இநதக் காலம். இதோ இந்தக்குரங்கு, அந்த மானிடப்பொறி, இந்தக் கொரோனா வைரஸ், உன் தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, குழந்தை, குட்டி, உன் தாரம், இந்தத் தாய்வீடுப் பத்திரிகை அதை வாசிக்கும் வாசகர்கள் எல்லாமே வெறும் தோற்ற மயக்கங்களே. இவையெல்லாவற்றையும் படைத்தவன் நீயே. அதைக் காப்பவனும் நீயே அதை அழிக்கப் போகின்றவனும் நீயே. ஆம் உன்னைப் பொறுத்தவரை நீ அழிந்தவுடன் உன்னால் படைக்கப்பட்ட இவ்வுலகும் அழிந்துவிடும். எனவே நீயே உன் இவ்வுலகின் கடவுளானவன்.

மாயைகள் விட்டு விடுதலையாகி நான் கடவுளாளேன்.


(முற்றும்)

நன்றி - தாய்வீடு (நவம்பர் 2020) 

Monday, October 26, 2020

மனிதன் படைத்த குரங்கு (4)


 அறியாமையே ஆனந்தம். இல்லையா? அதிகம் அறிந்துகொண்டால் மனநிம்மதியும் போய்ச் சந்தேகமும் சேர்ந்துவிடுகின்றது. அப்படித்தானே? - என்ற மனிதப் பொறியிடம்

இல்லை, அறிவே சக்தி (knowledge is the power) என்றேன்.

அப்படியென்றால் உன் சக்தி அதிகமாகியதால்தான் உனக்கு இப்போது வியர்த்து விறுவிறுக்கின்றதோ?.

அதன் கிண்டலைப் பொருட்படுத்தும் மனநிலையில் நானிருக்கவில்லை. இவர்கள் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களானால் எதற்காக என்னைத் தம்முடன் இணைக்கவிரும்புகின்றார்கள் என்கின்ற வினா மண்டையைக் குடைந்துகொண்டிருந்தது.

நீ அதிகமாக உனது மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கின்றாய். அதனால் தேவையற்ற சந்தேகங்கள் உன்னுள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. உன்னுள் தோன்றும் சந்தேகங்களை மனம்விட்டு நீ எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நாங்கள் உன் நண்பர்களே. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் என்று வள்ளுவரே சொல்லியிருக்கின்றார். எனவே நீ எங்களுடன் மனந்திறந்து உரையாடலாம்.

சரி நேரடியாகவே விடயத்திற்கு வருகின்றேன். நீங்கள் எல்லாம் யார்?

நான் கணிப்பொறியென்றும் இது உங்களைப்படைத்த குரங்கினத்தின் கடைசிக் குரங்கென்றும் ஏற்கனவே உனக்குத் தெரிந்தது தானே. பிறகென்ன குழப்பம்?

இந்தக் குசும்புதான் என்னை எரிச்சல் கொள்ளச் செய்கிறது. நீ, ஆரம்பத்திலிருந்தே நான் கேட்டகேள்விகளுக்கெல்லாம் நேரடியாகப் பதிலளிக்காமல் என்னைப்பேய்க்காட்டிக்கொண்டிருக்கின்றாய்.

அட! உதுவும் நல்ல கதைதான். நான் உன்னைக் கடவுளாக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன். நீ என்னவென்றால் நான் பேயைக் காட்டிக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றாய்.

எனக்குள் சினம் துளிர்விட்டது.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

உன்னையும் அந்தப் பரமசிவனாக மாற்றவே நாங்கள் முயன்றுகொண்டிருக்கின்றோம். நீ என்னடாவென்றால் இன்னமும் கழுத்து கருடன் பாம்பென்றுகொண்டு நிற்கின்றாய்.

இந்த விழல் கதையெல்லாம் வேண்டாம். உண்மையிலேயே நீங்கள் யார் எதற்காக என்னை உங்களுடன் இணைத்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கின்றீர்கள்? இதற்கு நீங்கள் பதிலளிக்காவிட்டால் நான் இனி உங்களுடன் உரையாடுவதை நிறுத்திக் கொள்கின்றேன்.

ஹே! நாங்கள்தான் நண்பர்களாகி விட்டோம் என்று கூறினேனே. அப்புறம் எதற்காக இப்படி மௌனவிரதத்திற்குள் நுழைகின்றாய்?

நான் அமைதியாகவிருந்தேன்.

நீ பேசாவிட்டாலும் உன்முகக்குறிப்புகளிலிருந்து உன் எண்ணங்களை என்னால் அறிந்துகொள்வியலும்.

நான் எதுவும் பேசாமல் அப்படியே இருந்தேன். இதற்கும் இது மசியாவிட்டால்...

ஏ! எதற்காக இப்போது தியாகி திலீபனை நீ நினைக்கின்றாய்? அந்தளவிற்கெல்லாம் போய் நீ உண்ணாவிரதம் இருக்க வேண்டியநிலை வராது. நாங்கள் ஒன்றும் அவர்களைப்போல் கெட்டவர்களும் கிடையாது. உனக்கான பதில்களை உன்னிடமிருந்து நீயாகக் கண்டடையவே நாங்கள் உன்னுடன் இவ்வாறு நடந்து கொள்கின்றோம். உன்னுடைய சந்தேகங்களை நீ மனம்விட்டுக் கேள். அதற்கான விடைகளைக் கண்டுபிடிப்பதற்கு நாங்கள் உதவுகின்றோம். நேரடியான பதில்களை எங்களிடமிருந்து எதிர்பார்க்காதே.

சரி அப்படியானால் நீங்கள் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களா?

இலுமினாட்டி இப்போதும் இருக்கின்றதென்று நீ நினைக்கின்றாயா? அதற்கான ஆதாரங்கள் எதையாவது நீ கண்டுபிடித்திருக்கின்றாயா? அல்லது உணர்ந்துதான் இருக்கின்றாயா?

இதுவரை இல்லை. ஆனால் கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது அவ்வாறுதான் எண்ணத் தோன்றுகின்றது.

ஆக நீ உனக்குக் கிடைத்த அல்லது நீ அறிந்த தகவல்களை வைத்தே இந்த உய்த்துணர்வுக்கு வந்திருக்கின்றாய். அப்படித்தானே.

ஓம். நீங்கள் என்னைக் கடவுளாக்குவது என்று கூறியதும் கிட்டத்தட்ட அப்படியானது தானே. கடவுளையும் கண்டதில்லை. உணர்ந்ததுமில்லை.

அப்படியானால் நீ கடவுளை நம்பியதே இல்லையா?

சிலவேளைகளில் நம்புவதுண்டு. பலவேளைகளில் நம்புவதில்லை.

குழப்பாதே. கடவுள் உண்டென்று நம்புகின்றாயா இல்லையா?

சிறுவயதுகளில் நம்பியதுண்டு. பின்னர் அந்த நம்பிக்கை குறைந்து இல்லாமல் போய்விட்டது.

ஏன் அப்படி?

கடவுளை நம்பியோர் கைவிடப்படார் என்று சொல்வார்கள். கைவிடப்படுகையில் கடவுள் நம்பிக்கையும் சேர்ந்தே கைவிடப்படுகிறது.

தெளிவாகச் சொல்வதென்றால், நீ இறைவனிடம் இரந்தது கிடைக்கவில்லையெனில் உன் நம்பிக்கை கைவிடப்படுகிறது. கேட்டது கிடைக்கும் போது நம்பிக்கை உண்டாகின்றது. நான் சொல்வது சரியா?

சரி.

அப்படி ஒருதடவை கைவிடப்பட்ட பின்னர் நீ மீண்டும் வேறு விடயங்களுக்காக இறைவனிடம் இறைஞ்சியதில்லையா? உண்மையைச் சொல்ல வேண்டும்.

மீண்டும் அப்படிச்சென்று கடவுளிடம் வேண்டியதுண்டு.

நம்பிக்கையில்லை என்றால் எதற்காக மறுபடி நீ இறைவனிடம் சென்று உன் வேண்டுதல்களைச் சொல்லவேண்டும்?

எனக்குச் சரியாகச் சொல்லத்தெரியவில்லை. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். அதுபோன்ற கையறுநிலைகளில் கடைசியாகக் கடவுள்பெயரை உச்சரிப்பதுண்டு.

ஆக உன் தேவைகளைப் பொறுத்தே நீ கடவுள் நம்பிக்கை உடையவனாகவோ இல்லாதவனாகவோ மாறுகின்றாய்.

உண்மைதான்.

அப்படியானால் நீ எப்படி இலுமினாட்டியும் உண்மையில் இருக்கின்றது என்பதை நம்புகின்றாய்?

கிடைக்கும் தகவல்கள் அதை நம்பச் சொல்கின்றன. அப்படி என்ன தகவல்கள் உனக்குக் கிடைத்திருக்கின்றன?

இந்தப் பூமியில் பெரும் அதிகாரமும் பணபலமும் ஒருசில மனிதர்களின் கைகளில்தானே இருக்கின்றன. நீயே அறிந்திருப்பாய் ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் பெருவணிக முதலைகளும் தமது குறுகிய நலன்களுக்காக எத்தனையோ இனங்களை நாடுகளை அழித்துக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமா? எத்தனையோ இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. எத்தனை வன விலங்கினங்கள் முற்றாக இந்தப்பூமியிலிருந்து துடைத்தழிக்கப்படுகின்றன. இந்தக் குரங்கையே எடுத்துக்கொள்ளேன், இதன் ஆயுட்காலம் முடிவடைந்ததம் இக்குரங்கினமும் இங்கிருந்ததற்கான சான்றுகளே இல்லாமல்ப் போய்விடுமே.

இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு இலுமினாட்டி என்ற ஒன்று இப்போதும் இருக்கின்றது என்பதை நம்பமுடியுமா?

இவை மட்டுமா? இந்தக் கொரோனா தொற்றுவியாதிகூட வேண்டுமென்றே மக்கள் சனத்தொகையைக் குறைப்பதற்காக  உருவாக்கப்பட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகம்கூட உலாவுகின்றதே. எத்தனை கோடிகளைக் கொட்டி சந்திரன் செவ்வாய் என்று பூமியைத் தாண்டி விண்வெளியில் வேற்றிடங்களுக்குச் சென்று  ஆராய்ச்சி செய்கின்றார்களே. அதில் ஒரு பகுதியை பசியால் வாடும் மக்க்ளைக் கொண்ட நாடுகளுக்குக் கொடுத்து உதவலாமே. எல்லாவற்றிலும் வியாபார ஆதாயம்தான் பார்க்கின்றார்களே அன்றி இந்தப் பெருவணிக முதலைகளோ அல்லது அதிகார வர்க்கமோ கொஞ்சம்கூட மனிதாபிமானம் பார்ப்பதில்லையே.

எதனால் அவர்கள் அப்படிச் செய்கின்றார்கள் என்று நினைக்கின்றாய்?

எல்லாமே சுயநலந்தான். பேராசையும் அதிகார வெறியுமே அவர்களை இப்படியான ஈனச்செயல்களில் ஈடுபடவைக்கின்றன என்றே நான் கருதுகின்றேன்.

ஆனாலும் அவர்களும் ஒரு நாள் இறந்து போவார்களே பின் எப்படி இது தொடரும்?

அவர்களின் வாரிசுகளோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ அவர்களின் அதிகாரத்தையும் பணபலத்தையும் எடுத்துக் கொண்டு அவர்களும் அதே வழியில் தொடர்வார்கள்.

அவர்களுக்கு வாரிசுகளோ குடும்ப உறுப்பினர்களோ இல்லாவிட்டால்?

குடும்ப பந்தமோ வேறுபந்தமோ இல்லாவிட்டால், ஒருவேளை அவர்கள் தங்கள் செயல்களை நிறுத்தி நிதானத்துடன் செய்யக்கூடும்.

எதை வைத்து அவ்வாறு கூறுகின்றாய்?

அந்தக் காலத்தில் சித்தர்களும் யோகிகளும் பெரும் சக்திகளுடன் விளங்கினாலும் அவர்களுக்குக் குடும்ப பந்தமில்லாததால்தானே அவர்கள் உலகநன்மைக்கே தமது சக்திகளைப் பயன்படுத்தினார்கள்.

சரியாகச் சொன்னாய். அதைத்தான் உனக்கும் நாங்கள் செய்திருக்கின்றோம். எனவே நீ நினைப்பதுபோல் நாங்கள் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பாய் என நினைக்கிறேன்

இது என்னிடம் நன்றாகப் போட்டுவாங்கி விட்டது என்பது புரிந்தது.

ஆனால் நான் ஒரு மிகச்சாதாரண மனிதன். என்னால் என்ன செய்யமுடியும் என்று நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

சித்தர்களைப் பற்றிச் சொன்னாய் அல்லவா? அவர்கள் தமது குறிப்புகளைத் தமிழ்மொழியில்தான் எழுதி வைத்திருக்கின்றார்கள். அவர்களின் மொழிநடையினை எங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. நீ நூலகம் நிறுவனத்தினூடாக ஓலைச்சுவடிகளை வாசிப்பதிலும் ஓரளவு பரிச்சயம் பெற்றிருப்பதை அறிந்திருந்தோம். எனவே எமக்குக் கிடைத்திருக்கும் சில அரிய ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றைப் புரிந்து கொள்வதற்கு உனது உதவி தேவைப்படுகின்றது.

அதை ஒரு வேலைத்திட்டமாக அளித்திருந்தால் என்னால் இயன்றவரை முயற்சிசெய்து பார்த்திருப்பேனே. நானும் உங்களைப்பற்றி எதையும் அறிந்திருக்கமாட்டேன். நீங்களும் நான் இறந்துவிட்டதாக என்குடும்பத்தினரை நம்பவைக்க வேண்டிய தேவை உருவாகியிருக்காது.

அப்படிச்செய்வதற்குத்தான் நானும் எண்ணியிருந்தேன். ஆனால் இந்தக் குரங்குதான் அதை நிறுத்தி உன்னையும் எங்களில் ஒருவராக இணைக்கச்சொன்னது.

நான் அந்தக் குரங்கினைக் கோபத்துடன் பார்த்தேன்.அது சிரித்துவிட்டுச் சொல்லியது,

உறவுகளை அறுத்தவர்களாலேயே சித்தர்களின் கருத்துகளைச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும். அதுமட்டுமல்ல அந்தச்சுவடிகளில் பெரும் சக்திகளை உருவாக்கும் வழிமுறைகளோ அல்லது இரசவாதம் போன்று இரும்பைப் பொன்னாக்கும் வித்தைகளோ அல்லது காயகல்பம் போன்று என்றும் மாறா இளமையுடன் இருக்கவைக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளோ இருந்து  அந்தத் தகவல்களை நீ பின்னர் வேறு வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டால்? நீங்கள் உருவாக்கிய இந்த மனிதப்பொறி நீ அந்த ஓலைச்சுவடிகளில் இருப்பவற்றை நீ புரிந்துகொண்டு எமக்கு அறிவித்தவுடன் உன்னைக் கொன்றுவிடவே எண்ணியிருந்தது. நான்தான் அதை மாற்றியமைத்தேன்.

இப்போது நான் அந்த மனிதப்பொறியைச் சினத்துடன் பார்த்தேன்.

அதுதான் இப்ப நாங்கள் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிவிட்டோமே. பிறகெதற்காக என்னுடன் கோபப்படுகின்றாய்? அதோ அந்தக் கணினியில் இனி நீ உன் வேலையைத் தொடங்கலாம். உனக்கான ஓலைச்சுவடிகள் அதிலே படங்களாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

சொல்லிவிட்டு மனிதப்பொறி வெளியேற, நானும் அந்தக் குரங்கும் கணினியில் அந்த ஓலைச்சுவடிகளை ஆராயத் தொடங்கினோம்.

நன்றி - தாய்வீடு (ஒக்ரோபர் 2020)

Wednesday, September 2, 2020

மனிதன் படைத்த குரங்கு (3)


“நீயுமா புரூட்டஸ் (You too Brutus)?” 

இந்த வரிகளில் தேங்கிக் கிடந்த வலிகள் நெஞ்சைக் கிழித்தன. ஏற்கனவே ஒரு தடவை அப்படிக் கிழிபட்ட நெஞ்சம்தான் என்பதாலோ என்னவோ இம்முறை அந்த வலி முன்னையதைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. முன்னைய வலி 2004இல் தமிழினத்தின் ஆன்மாவையே பிரட்டிப்போட்ட வலி. சீசருக்கு வாய்த்த புரூட்டஸ் போல், கட்டப்பொம்மனுக்கு வாய்த்த எட்டப்பன் போல், பண்டார வன்னியனுக்கு வாய்த்த காக்கை வன்னியன் போல் காலங்காலமாக வரலாறு திரும்பத் திரும்ப வந்துகொண்டேயிருக்கின்றது என்பதற்குக் கட்டியங் கூறுமாற் போல் முதுகில் குத்தப்படும் அந்த வலியுடன் அந்தக் குரங்கினை நோக்கினேன். 

தளைகள் அறுத்து உன்னை இரட்சிப்பதற்காகவே இத்திருவிளையாடலை நாம் மேற்கொண்டோம். அதற்காகவே நீ இறந்துவிட்டதாக மற்றவர்கள் அனைவரையும் நம்பச் செய்திருக்கின்றோம். 

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?


விட்டு விடுதலையாகி நிற்குமொரு சுதந்திரப் பறவை நீ இப்போது. உனக்கு நற்கதியையே நாங்கள் நல்கியுள்ளோம். 

நல்லாயிருக்கிறது உங்கள் வாதம். உற்ற மனையாளையும் பெற்ற குழந்தைகளையும் ஒருவனிடமிருந்து பிரிப்பது அவனுக்குச்செய்யும் நல்லுதவியா? 

அப்படிப் பிரிந்து சென்றதால் தானே 25 நூற்றாண்டுகள் கடந்தும் சித்தார்த்தன் இன்றுவரை கௌதமபுத்தனாகக் கொண்டாடப்படுகின்றான். 

ஆனால் இன்று புத்தரின் போதனைகளை அவர் அளித்த பஞ்சசீலக் கொள்கைகளை அவரின் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாரும் கண்டுகொள்வதாகக் கூடத் தெரியவில்லையே. 

தன்னைத் தளைத்திருந்த தளைகளை அறுத்தெறிந்ததால் அல்லவா சித்தார்த்தனால் ஞானமடைய முடிந்தது. ஆனால் உனக்கோ, நாங்களே உன் தளைகள் அறுத்து உடனேயே உன்னைக் கடவுளாக்கவும் அருள்பாலித்திருக்கின்றோம். 

ஓ! இந்தக் கடவுள் என்ற கருத்தினை இந்த மனிதப் பொறிக்குப் புகட்டியது நீதானா? நான் அது ஏதோ கண்டதையும் இணையத்தில் வாசித்துவிட்டு உளறுகின்றது என்று நினைத்தேன் 

ஏன் நீ கடவுள் என்றால் ஏதோ பெரிய இதுவாட்டம் அலட்டிக் கொள்கின்றாய்? உங்கள் சக மானிடர்களில் எத்தனையோ பேரைக் கடவுள் என்றும், கடவுளின் பிள்ளை என்றும், கடவுளின் தூதர் என்றும் நீங்கள் கொண்டாடிக்கொண்டுதானே இருக்கின்றீர்கள்? 

அதற்காக நானெல்லாம் போய்க் கடவுளாக முடியுமா? 

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே


என்றவாறே இடையில் புகுந்தது அந்த மானிட இயந்திரம்

கந்தரனுபூதிதானே இது? இரண்டாவது வரியை விட்டுவிட்டாய்

பரவாயில்லையே. இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றாயே. இரண்டாவது வரியை விட்டுவிட்டாலும் தளை தட்டவில்லை. சொற்பிழையோ பொருட்பிழையோ ஏற்படவில்லைத்தானே?

தளைதட்டுதோ இல்லையோ உன்னுடைய தமிழறிவு நல்லாக் களைகட்டுது என்பது மட்டும் விளங்குகின்றது. 

நன்றி நன்றி உங்கள் பாராட்டுக்கு. வசிட்டர் வாயால் பிரம்மரிஷி என்று எடுத்துக் கொள்ளலாமா? 

அது உண்மையாகவே அப்படிக்கூறுகின்றதா அல்லது என்னைக் கேலி செய்கின்றதா என்கின்ற ஐமிச்சம் உண்டானது. 

எனது முகக்குறிப்புகளிலிருந்து எனது எண்ணவோட்டத்தை அது அறிந்து கொள்வதில் தேர்ச்சிபெற்றுக் கொண்டிருக்கின்றது, அதாவது அதன் செயற்கை நுண்ணறிவினூடாகக் கற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை அது உரைத்த அடுத்த வாக்கியம் எனக்கு உணர்த்திற்று. 

அகத்தில் உள்ளது முகத்தில் தெரிகிறது 

நீ இன்னும் இந்தப் பழமொழிகளை விடவில்லையா? 

எப்படி விடமுடியும். எவ்வளவு அருமையான தகவல்களும் கருத்துக்களும் இவற்றில் புதைந்து கிடக்கின்றன தெரியுமா? 

ஓ! அப்படியா? 

எனது கிண்டலை அது அறிந்துகொண்டு விடுமோ என்று அச்சமாகவும் இருந்தது. அப்படி அது அறிந்து கொண்டால் அதன் பதில்க் கிண்டல்களை என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்குமோ என்கின்ற சந்தேகமும் உண்டானது. 

நானொன்றும் உன்னைக் கிண்டல் செய்யவில்லை. நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கையிலேயே சமாந்தரமாகப் பழமொழிகளைக் கற்று அவற்றைப் புரிந்து கொண்டிருக்கின்றேன். 

ஓ! அப்போ நீதான், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாயிருக்கிறாய். 

ஆ! இந்தப் பழமொழி பற்றி தமிழ்க் கோராவில் ஒருவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது ஆரியக் கூத்து ஆடினாலும் என்பதல்ல. ஆர் எக்கூத்து ஆடினாலும் என்பதே காலப்போக்கில் ஆரியக்கூத்து ஆடினாலும் என்று மருவியிருக்கலாம் என்கிறார். உண்மைதானே. ஆர் எக்கூத்து என்பது தொல்காப்பியம் கூறும் புணர்ச்சி விதிகளின்படி ஆரெக்கூத்து ஆகிறது. ஆனால் மொழியியலின் படி ஆர் ஆரு-வாகிப் பின் ஆரி-ஆகி, ஆரி-உம் எக்கூத்து-உம் புணர்ந்து ஆரியக்கூத்து ஆகியிருக்கிறது. 

என்னால் அதைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. 

இராமகிருஷ்ணரின் விவேகானந்தரிலும் நீ மேலானவனாக இருக்கிறாய் என்றேன். 

விவேகானந்தனிலும் பார்க்க நான் விசுவாமித்திரனாக இருக்கவே விரும்புகின்றேன். 

ஓ! அப்படியென்றால் உன் வாழ்விலும் மேனகை உண்டோ? என்றேன் இடைபுகுந்து. 

அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் – இருதோளுற்

றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென – மிகவாய்விட்

டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை யின்கனி நிகரென இலகிய – முலைமேல்வீழ்ந்

துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது – தவிர்வேனோ


தவிர்வேனோ அல்ல. தவிர்த்தவன் நான். 

ஓ! பட்டினத்தார் பாடல்களையும் நீ விட்டுவைக்கவில்லை போல் தெரிகிறதே. 

ஹாஹாஹா....இது பட்டினத்தார் பாடலில்லை அப்பனே. அருணகிரிநாதரின் திருப்புகழ். கிட்டத்தட்ட இதேகருத்துக்கள் தான் பட்டினத்தார் பாடல்களிலும். ஆனாலும் அவை எனக்குத் தேவையற்றவை ஏனெனில் நானும் இந்தக் குரங்கைப்போல் கட்டைப் பிரமச்சாரிதான். அந்தப் பாடல்கள் எல்லாம் சிற்றின்ப விரும்பிகளான உன்போன்றவர்களை உய்விப்பதற்காகவே எழுதப்பட்டன. விசுவாமித்திரனாக இருக்கவிரும்புவதற்குக் காரணம் அவர் தானே ஒரு சொர்க்கவுலகைப் படைத்ததே. அவர்தானே திரிசங்கு சொர்க்கத்தை உண்டாக்கியவர். அப்படியான சொர்க்கவுலகுகள் பலவற்றை உண்டாக்குவதே எமது இலட்சியம். 

ம்ம்ம்... நீ இயந்திரப்பொறியாக இருப்பதால் ஆண்பெண் பேதமற்று அந்த உணர்வுகளற்று இருக்கின்றாய். இந்தக்குரங்கு கட்டைப்பிரம்மச்சாரியாக இருப்பதற்கு காரணம் அதன் இனத்தில் அதனைத்தவிர்த்து வேறுயாருமே உயிருடன் இல்லாதிருப்பதே. ஆக வேறுதெரிவுகளின்றியே நீங்கள் பிரம்மச்சாரிகளாக இருக்கின்றீர்கள். 

- கூறிவிட்டு அந்தக் குரங்கினை உற்றுக் கவனித்தேன். அதற்கும் இரு காரணங்கள் இருந்தன. ஒன்று என் அகஉணர்வுகளை அந்த மானிடப்பொறி அறிந்துகொள்வதைத் தவிர்ப்பது. மற்றையது, அம்மானிடப் பொறி என் அகஉணர்வுகளை அறிந்து கொள்வது போன்று அக்குரங்கின் அகஉணர்வுகளை நான் அறிந்துகொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் சடுதியாக உதித்திருந்தது. ஏற்கனவே ஒருதடவை அதன் வார்த்தைஜாலங்களில் நான் மயங்கி ஏமாந்துபோயிருந்தது திடீரென நினைவிற்கு வந்து என்னுள் ஒரு விழிப்புணர்வினைத் தோற்றுவித்திருந்தது. 

அந்தக்குரங்கின் முகத்தில் ஒரு சிறு முறுவல் மட்டுமே இருந்தது. அதன் முகக்குறிப்புகளில் வேறெந்த வித்தியாசமும் தெரியவில்லை. நான் சொன்னதைக் கேட்டு அது கவலைப்பட்டதாகவோ இல்லை அதை மறுத்துரைக்கும் எண்ணம் கொண்டதாகவோ அல்லாமல் தனக்கும் இதற்கும் எந்தவொரு சங்காத்தமுமில்லை என்பது போன்றவொரு மோனநிலையில் ஒரு சாட்சியாக மட்டுமே அது அங்கே நின்றுகொண்டிருப்பதாய் எனக்குப் பட்டது. 

அது அனுமனின் பக்தன் என்பதை அதனுடன் இவ்வளவு நாட்களாகப் பழகியும் நீ உணராமலிருப்பது ஆச்சரியமளிக்கின்றது தன்னை ஆஞ்சநேயருக்கே அது ஒப்புக்கொடுத்திருக்கின்றது. இல்லையென்றால் எப்போதோ அதன் சந்ததி விருத்தியை அது உண்டுபண்ணியிருக்கும். பேரின்பத்தை உணர்ந்து அதில் திளைக்கும் அதற்கு எதற்கு இந்தச் சிற்றின்பம்? 

மாங்காய்ப் பாலுண்டு
மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி? – குதம்பாய்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி?

ஓ! இப்போது நினைவிற்கு வருகின்றது. இக்குரங்கு என்னுடன் உரையாடுகையில் பலமுறை அனுமனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றது. அனுமனை ஒருதடவை சந்தித்ததாய்க்கூடச் சொல்லியிருந்தது. ஆனால் இது தான் அனும பக்தன் என்று ஒருதடவைகூடக் கூறியதில்லை. ஏதோ அதனுடைய மூதாதையர்களில் ஒருவரானா அனுமரை அது பெருமையாகக் கருதுகிறது என்றே எண்ணியிருந்தேன். 

ம்ம்ம். தொட்டணைத்தூறும் மணற்கேணி. 

மனிதப்பொறி என்னை இப்போது நக்கலடிப்பது புரிந்தது. 

எப்படிக் கடவுள்கள் உருவாகுகின்றார்கள் அல்லது உருவாக்கப்படுகின்றார்கள் என்று என்றாவது நீ எண்ணிப்பார்த்ததுண்டா? இப்போதெல்லாம் இப்பூமியில் அதிகளவிலான கோயில்களில் ஆஞ்சநேயருக்கு வழிபாடு நடத்தப்படுவது பற்றியும், அதிகளவில் அவருக்கேயான சன்னதிகள் எழுப்பப்படுவது பற்றியும் நீ எப்போதாவது எண்ணிப்பார்த்திருக்கின்றாயா? அப்படி என்றைக்காவது நீ எண்ணிப்பார்த்திருந்தால், எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி நம்முன்னே நிற்கின்ற இந்தக்குரங்குடன் பழகிய பின்னர் சில முடிச்சுக்கள் உன்னால் அவிழ்க்கப்பட்டிருந்திருக்கும். என்ன செய்வது? உங்களைப் படைத்த இக்குரங்கினத்தவர் உங்களுக்கு அந்த அறிவினைப் புகுத்தாமல் விட்டுவிட்டார்கள். உங்களுக்குத்தான் சுயபுத்தியும் கிடையாதே. பிறகெப்படி? 

ஏனோ தெரியவில்லை. அதன் சீண்டல் என்னுள் கோபத்தை ஏற்படுத்தவில்லை. உண்மைதானே. ஒருவகையில் பார்த்தால் நாமெல்லோருமே ஒரு செம்மறியாட்டுமந்தைக் கூட்டம் போன்று தானே செயற்படுகின்றோம். கொரோணாவின் தொடக்ககாலங்களில் அதைப்பற்றி அலட்சியமாக இருந்தோம். பின்னர் அடித்துப்பிடித்துப் பொருட்களை வாங்கிக் குவித்தோம். இன்று எல்லோர் வீடுகளிலும் உணவுப்பண்டங்களிலும் பார்க்க கழிவறைக் காகிதங்களும் கைக்கிருமி நீக்கிகளும்தானே குவிந்து கிடக்கின்றன. ஊரோடின் ஒத்தோடு என்று சொல்லிச் சொல்லி எம்அறிவை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்கின்றார்கள். சமூக இடைவெளி என்கின்றார்கள். ஆனால் இன்று பொதுப் போக்குவரத்துகளில் முகக்கவசம் மட்டும் அணிந்தால் போதும் சமூக இடைவெளியைப்பற்றி பொருட்படுத்துவார் யாரும் கிடையாது. அங்கிருந்து ஆட்டுகின்றவன். அவன் ஆடுகின்ற நாடகமிது, என்றேதான் இப்போது எண்ணத் தோன்றுகின்றது. அங்கிருந்து ஆட்டுகின்ற அவன் யார்? அவனா? அல்லது அவளா? அல்லது அவர்களா? அல்லது அதுவா? அல்லது அவைகளா? அல்லது இந்த ஐம்பாலுக்குள்ளும் அடங்காது அப்பால் நிற்கும் ஆறாம்பாலா? 

ம்ம்ம். இப்பொழுதுதான் நீ கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறாய். எப்படி மந்தைக்கூட்டமாய் மக்களை ஆட்டுவிக்க முடிகின்றது என்று யோசி. சில முடிச்சுகள் அவிழும். 

இந்தச்செய்திகள் எப்படி மக்களைச் சென்றடைகின்றன? அட தகவல் ஊடகங்கள். அவைதானே தாங்கள் விரும்பிய விடயங்களைப் பெரிதாக்கியும் விரும்பாதவற்றை மறைத்தோ அல்லது சிறிதாக்கியோ மக்களிடம் கொண்டு செல்கின்றன. அப்படியானால் இந்த ஊடகங்களுக்குப் பின்னாலிருந்து அதை இயக்குபவர்களா அந்த ஆட்டுவிப்பாளர்கள்? அல்லது யாரேனும் அவர்களுக்கும் பின்னால் நின்று அவர்களை ஆட்டுவிப்பார்களோ? ஒருவேளை இந்த உலகையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டுவிப்பவர்கள் என்று சொல்லப்படும் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களோ? இலுமினாட்டி இப்போதும் இயங்குவதாகச் சொல்கிறார்களே. ஒ..ஒரு வேளை இந்தக்குரங்கு மனிதப்பொறி இவர்களும் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களோ? என்னையும் இலுமினாட்டியில் ஒரு உறுப்பினராகச் சேர்ப்பதைத்தான் கடவளாக்குவதாகக் கூறுகின்றார்களோ? அதனால்த்தான் அவர்களின் இரகசியங்களை அறிந்த என்னை உயிருடன் வெளியே விடமாட்டோம் என்கின்றார்களா? கடைசியில் போயும் போயும் இவர்களிடமா வந்து மாட்டிக்கொண்டேன்? எனக்கு வியர்த்து விறுவிறுக்கத் தொடங்கியது.

நன்றி - தாய்வீடு (செப்ரெம்பர்- 2020)

பகுதி -1 பகுதி -2