Sunday, September 26, 2010

நினைவுகளில் நீ!


பசித் தீயையெரித்த
பட்டினித் தீ நீ!
பன்னிரு நாட்கள்
பசியுனக்குத் தீனி!

விடுதலை வேள்வியில்
எழுந்த யாகத்தீ!
அந்த யாகத்தில்
சொரிந்தவாகுதி நீ!

தீயதே தீண்டாத
தியாகம் நீ!
தீயுமே தீண்டிடாதவுன்
திருமேனி!

அகிம்சை வாதி
மகாத்மா காந்தி
அவரையும் விஞ்சி
நீ காலத்தீ!

நாட்டுக்காய் உருகிய
மெழுகு வர்த்தி!
ஞாலம் வணங்கிடும்
திலீபம் நீ!

Friday, September 17, 2010

சொல்ல விரும்பும் கதை, அதைச் சொல்லத் தயங்கும் நிலை

நேற்றைய மாலை கடந்து நேரம் எட்டு மணியை எட்டிக் கொண்டிருக்கையில் Little India-இற்குள் தொடரூந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். Buffalo வீதியினை அடைகையில் கோமளா விலாஸ் கண்ணில் பட்டது. உள்ளே நுழையச் சொல்லி உடலை உந்தியது உள்ளிருந்தவொரு மனம். உமிழ் நீர்ச்சுரப்பிகள் வஞ்சகமின்றித் தங்கள் வேலைகளில் ஈடுபடவாரம்பித்தன. உள்ளே போகலாமா வேண்டாமா என மனம் தடுமாறத் தொடங்கியது. கடந்த எட்டு நாட்களாக கடைப்பிடித்து வரும் இரவுணவுப் பழக்கத்திற்கு களங்கம் வரப்போவதாய் ஆழ்மனது எச்சரித்தது. குறைந்தது ஒரு மண்டலமாவது அந்த இரவுணவுப் பழக்கத்தினைக் கைக்கொள்ள வேண்டுமென எண்ணியிருந்ததால் இன்னோர் மனது பின்னடித்தது. மனதின் எங்கோ ஒரு மூலைக்குள் ஒளிந்திருந்த துரோக மனமொன்று தன்வேலையைக் காட்ட ஆரம்பித்தது. நான் இரண்டாகப் பிளவுபட்டேன்.

விரோதியை வெல்லலாம் கூடவே ஒழிந்திருக்கும் துரோகியை வெல்ல முடியுமா? Trojan குதிரைக் காலத்திலிருந்து இற்றைவரை துரோகத்தனங்கள்தான் வெல்லமுடியாதவர்களாய் இருந்தவர்களையெல்லாம் வெற்றிகொள்ள உதவி செய்திருக்கிறது. இப்போது என் அனுமதியின்றியே அனிச்சையாக கால்கள் உள்ளே நுழைந்து விட்டிருந்தன. ஆயினும் மனத்திற்குள் போராட்டம் முடிந்தபாடாயில்லை. இல்லாத உணவுப் பதார்த்தத்தைக் கேட்டுவிட்டு வெளியேறச் சொல்லியது உள்மனது. உணவு பாரிமாறுபவர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டதும் “கொத்து பரோட்டா” என்றது அந்த மனது. அனேகமாக அந்நேரத்திற்கு அங்கே கொத்துபரோட்டா முடிந்துவிட்டிருக்கும் என்கின்ற முன்னைய அனுபவத்தில். தூரதிர்ஷ்டவசமாக கொத்து பரோட்டா கிடைக்கவே, வேறுவழியேயில்லை என்கின்ற ஏற்றுக்கொள்ளலில் மனங்களெல்லாம் ஒன்றுபட உணவினை இரசித்துச் சுவைக்கத் தொடங்கினேன்.

முதல்கவளம் உள்ளே சென்றதும் அப்படி ஒரு பரவசம். நீண்ட நாட்களின் பின்னர் கிடைத்த அந்த மென்மையான கொத்துபரோட்டா சிறிது நேரத்திலேயே காலியாகத் தொடங்கியது. முதல் கவளத்தில் கிடைக்கும் அந்த சுவையும் மகிழ்ச்சியும் கடைசிக் கவளம் வரை தொடர்வதில்லை. சில கவளங்கள் உட்கொண்டவுடனேயே மனது வேறு நினைவுகளுக்குத் தாவிவிடுவதே வழமையானது. அதன் பின்னர் பழக்கதோஷத்தில் கைகள் வாயிந்கு உணவினை எடுத்துச் செல்ல, வாய் அதைவாங்கி வயிற்றுக்கு அனுப்புவதைக் கடமையாகச் செய்துவிடுகின்றதேயன்றி ஆரம்பிக்கும் போதிருந்த அந்த ஆனந்தம் தொடர்வதில்லை. உணவு மட்டுமல்ல, உறவுகள் உட்பட அனைத்து விடயங்களும் அப்படியானவையே. அதனால்தானோ என்னவோ பழகப்பழகப் பாலும் புளிக்கும் என்று அந்தக்காலத்திலேயே அனுபவித்துச் சொல்லியிருக்கிறார்கள். அதை இந்த உணவகத்தினரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர் என்றே எண்ணத் தோன்றியது. ஏனெனில் இங்கே சாதாரண அளவிலும் குறைவாகவே பரிமாறுகின்றார்கள். அப்போதுதான் அந்த சுவை அலுத்துப்போகாதிருக்கும், வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருப்பார்கள்.

இப்போது பக்கத்து மேசையிலிருந்தவருக்கு பூரி செல்வதைப் பார்த்ததும் நாக்கில் மீண்டும் எச்சில் ஊறியது. இந்த நாக்கு எப்போதுமே இப்படித்தான் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறது. உணவு பரிமாறுபவர் அருகே வந்து வேறு ஏதாவது வேண்டுமா எனக் கேட்டதும் முந்தியடித்துக்கொண்டு நாக்கு பூரி கொண்டுவரச் சொன்னது. சற்று நேரம் யோசிக்க விட்டால் உள்மனது அதைத்தடுத்திருக்கும் என்று அந்த துரோக மனது நாக்கிடம் சொல்லியிருக்க வேண்டும். விழித்துக் கொள்வதற்குள் உணவுபரிமாறுபவர் சமையலிடத்தினை நோக்கி நகர்ந்து விட்டார். இம்முறை பூரியினை அனுபவத்துச் சுவைத்துச் சாப்பிடமுடியவில்லை. நான் மீண்டும் இரண்டுபட்டுவிட்டேன். இப்போது என்னைப் பார்க்க எனக்கே கேவலமாகவிருந்தது.. உள்மனதின் உறுத்தலைத் தாங்க முடியவில்லை. அதுவும் செப்டம்பர் பதினைந்தாம் திகதிக்கு அடுத்த நாளே இப்படியானவொரு நிலைக்கு நீ இறங்கிவிடுவாயென தான் நினைக்கவேயில்லையென அந்த உள்மனம் திட்டத் தொடங்கியது. செப்டம்பர் பதினைந்து நிவைிற்கு வந்ததும் குற்றவுணர்ச்சி குறுகுறுக்கவாரம்பித்தது. ஆரம்பத்திலேயே இது தெரிந்திருந்தால் கால்களின் தன்னிச்சையான செயற்பாடு முதலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருந்திருக்கும். அந்த நம்பிக்கை நீண்டகாலமாகவே இருந்து வந்தது. ஆயினும் அந்த நம்பிக்கையைத் தவிடு பொடியாக்கிவிட்டது இன்றைய நிகழ்ச்சி. இப்போது நாக்கினையும் அதற்கு ஆதரவாக நின்ற மனங்களையும் நோக்கினேன். தலையைக் குனிந்துகொண்டவாறே ஓரமாய் ஒதுங்கிக் கொண்டன.

அது நிகழ்கையில் நான் இருபத்திநான்காம் வயதில் இருந்தேன். அதற்கு முந்தைய மூன்று வருடங்களிலும் ஆண்டுக்கு இருதடவைகள் 24 மணிநேரம் நீர் உட்பட எந்தவித உணவுப்பதார்த்தங்களையும் உட்கொள்வதைத் தவிர்த்து வந்திருந்தேன். இரவு 11.55 முன்னதாக வயிறு நிறைய உண்டு தண்ணீரும் பருகிவிட்டுப் படுத்துக் கொண்டால் 24 மணிநேரம் கழித்து அடுத்த நாள் நடுநிசி 12.00 மணி தாண்டிய பின்பே தண்ணீரும் உணவும் உட்கொள்வேன். இப்போது 23 வயது முடிந்து 24வது நடப்பதால் இம்முறை அதை 48 மணி நேரமாக்கும் எண்ணம் வந்தது. இரவு 12.00 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் உட்கொள்வதை நிறுத்திக் கொண்டேன். மறுநாள் எந்த உபாதைகளும் இன்றிக் கழிந்தது. அடுத்தநாள் காலையில் சோர்வாய் உணர்ந்தேன். மதியம் அண்மிக்கையில் தலையிடிக்கத் தொடங்கியது. மதியம் இரண்டுமணி கழிகையில் இலேசாகத் தலைச்சுற்றலை உணர்ந்தேன். நாக்கு மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்வது புரிந்தது. படுத்துக் கொண்டேன். புருவஙங்களுக்கு மத்தியில் விண்விண்ணென வலிக்கத் தொடங்கியது. பின் அது நெற்றிவரை பரவி சிரசெங்கும் விரிவது புரிந்தது. பார்க்கும் பொருட்களெல்லாவற்றின் மேலும் பச்சைநிறம் படர்வது போன்றவொரு பிரமை. இதற்கு மேல் என்ன நடக்குமோ என்கின்ற பயம் வந்தது. நேரத்தைப் பார்த்தேன் மாலை 03.40 ஆகியிருந்தது. இதற்கு மேலும் தொடர்ந்தால் என்ன நடக்குமோ என்கின்ற பயத்தினில் அருகிலிருந்த தண்ணீரைப் பருகினேன். சற்று சிரமப் பட்டே தண்ணீர் தொண்டைக்குழியைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு 'பணிஸ்' (bun) இற்கு மேல் உண்ண முடியவில்லை. 48 மணி நேரம் என எண்ணியிருந்ததை வெறும் முப்பத்தொன்பதே முக்கால் மணி நேரத்துடன் முடித்துக் கொண்டேன். பட்டினியின் கொடிய வலியினை அனுபவபூர்வமாய் அறிந்து கொண்டேன். அதன் பின்னர் சில நாட்கள் பட்ட அவஸ்தையின் காரணமாக அந்தப் பயிற்சியினைப் பின்னர் நிறுத்தி விட்டேன்.


அது 23 வருடங்களுக்கு முன்னர். அவனுக்கும் அது 23 வயது முடிவடைந்து 24வது நடந்து கொண்டிருந்தது. அவன் ஒரு மருத்துவபீட மாணவனாயிருந்திருந்தவன், ஆயினும் அவன் வேறொரு வியாதிக்கும் மருத்துவனாயிருக்க ஆசைப்பட்டான். ஆசைப்பட்டது மட்டுமல்ல அதை அடைவதிலும் ஆர்வமாயிருந்தான். அதை அடையும் வழியினில் சென்று கொண்டிருந்தான். காகங்களிடமிருந்து கோழிக்குஞ்சுகளைக் காப்பாற்றுவதில் அவன் தீவிரமாயிருந்தான். காலவெள்ளத்தில் அமைதிப்புறாக்கள் வந்தன. கோழிகளுக்கோ மிக்க மகிழ்ச்சி. அவை ஏதுமறியாத அப்பாவிகள். ஆயினும் அவன் புரிந்து கொண்டான். அமைதிப்புறா வேடமணிந்து வந்தவை, வல்லரசு வேட்கையில் வேட்டையாடத் துடித்துக்கொண்டிருக்கும் வல்லூறுகளே என்பதை. இப்போது அவன் இம்சைவாதிகள் அணிந்து வந்திருக்கும் அகிம்சை முகமூடிகளைக் கிழித்தெறிவதற்கு ஒரு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பிணியறுக்கும் மருத்துவனாயிருப்பதில் வல்லவனான அவனே இப்போது இங்கே மருந்தாகினான்.


கௌதம புத்தர், மகாத்மா காந்தி எல்லோருமே மிகச்சிறந்த அகிம்சாமூர்த்திகள்தான். ஆயினும் அவர்களின் பெயரால் ஆட்சி செய்பவர்கள்???


Saturday, August 14, 2010

வெற்றிக்கான தோல்வி (Lose to win)


இன்றைய நடுநிசியை அண்டிய பயணம். தூக்கக் கலக்கம் வேறு. வழமையாக நீண்ட நேரப் பயணங்களுக்கு (இங்கே சிங்கப்பூரில் ஒரு மணி நேரப்பயணம் என்பது நீண்ட நேரம் தான்) IPod தான் எனக்கு வழித்துணையாக இருப்பது வழக்கம். ஆனால் காலையில் புறப்படுகின்ற அவசரத்தில் IPod இனை மறந்து விட்டிருந்தேன். இரவு நேரப் பயணங்களில் பழைய பாடல்களைக் கேட்டவாறே கண்மூடிப்பயணிப்பது ஒரு சுகானுபவம். கடைசியாக கடந்த மாத இறுதியில் அந்த இனிமையை இரசித்திருந்தேன். அதிலும் பழைய பாடல்களை என் சிறுவயதில் மனனம் செய்து கொள்வதற்கு காரணமாக இருந்தவரும் அருகிலிருந்து பாடல்களை மீட்டியவாறு வந்த அந்த கொழும்பு-யாழ் இரவுப் பேருந்துப் பயணம் ரம்மியமானது. பழைய இனிய நினைவுகள் எப்போதுமே உற்சாகத்தைத் தருபவையே.

பேருந்திற்குக் காத்திருக்கையில் நேரத்தைக் கடத்துவது சிரமமாயிருந்தது. சகபயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவேயிருந்தது. செவிக்கு உணவில்லாதவிடத்து வயிற்றுக்கும் கொஞ்சம் ஈயப்படும் என்றார் வள்ளுவர். வயிறு ஏற்கனவே நிரம்பிவிட்டிருந்ததால் கண்கள் அலைபாயத் தொடங்கின. எங்கள் புலன்கள் யாவுமே இப்படித்தானே, சும்மாயிராமல் எப்போதும் எங்கேயாவது அலைபாய்ந்து கொண்டுதானே இருக்கின்றன. சும்மா இருப்பது எவ்வளவு கடினமானது என்பது புரிந்தது. வாசிப்பதற்கும் எதுவும் என்னிடம் இருக்கவில்லை.

பார்வை வீச்சுக்குள் சில பயணிகள் வந்தார்கள் போனார்கள். சில பெண்கள் வாசகங்கள் பதித்த மேலாடைகளுடன் வந்தார்கள். “அறிவு எங்கே இருக்கிறது?” என்கின்ற கேள்விக்கு “பெண்களின் மார்பகங்களின் நடுவே” என்றான் தெய்வீகப்புலவன் காளிதாசன். ஆயினும் பெண்களின் ஆடைகளின் முன்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகங்களைப் படித்து அறிவினை வளர்த்துக்(?) கொள்வதில் உள்ள இயல்பான தயக்கம் கண்களைக் கீழே தாழவைத்து விடுகிறது. தாய்ப்பால் அருந்திய சிசு அதனின்றும் விடுபடுகையில் அறிவினைப் பெறத் தொடங்குகின்றான். பின் மணவாழ்வில் இணைந்து மனைவியின் மார்பில் முயங்கத் தொடங்குவதனுடன் அவனது அறிவு விருத்தி நின்று விடுகின்றது. காளிதாசன் காலத்தில் அதுதான் வாழ்க்கையை முறையாகவும் இருந்தது. குருகுலவாசத்தில் அறிவைத் தேடிக்கொண்டு பிரம்மச்சரியம் முடித்து கிருகஸ்தத்தில் இறங்கிவிடுவதே அக்கால வழமை. எதேச்சையாய் நிமிர்கையில்,

“LOSE TO WIN'

ஓர் ஆணின் சட்டையின் முதுகுப்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் கவனத்தை ஈர்த்தது.

Lose to win. வெல்வதற்காகத் தோற்பது. அதன் அர்த்தம் என்ன? வெற்றி என்றால் என்ன? தோல்வி என்றால் என்ன? நாம் விரும்பியதை அடைவதை வெற்றி என்று கூறலாமா? அப்படியானால் தோல்வி என்பது நாம் விரும்பியதை அடையமுடியாமல் இருப்பது என்றுதானே அர்த்தப்படமுடியும். அல்லது நாம் விரும்பாததைப் பெற்றுக்கொள்வது என்றும் கூறலாம். ஏனெனில் ஒன்றை அடையமுடியவில்லையென்பதன் அர்த்தம் வேறொன்றை அடைந்து விட்டோம் என்பதுதானே. அப்படியானால் வெல்வதற்காகத் தோற்பது என்பது என்ன அர்த்தத்தைக் கொடுக்க முடியும்? சரி. எதற்காக வெற்றியடைய விரும்புகின்றோம்? அந்த வெற்றி எமக்கு மகிழ்ச்சியைத் தருவதனால்தானே? தோல்வி துன்பத்தைத் தருவதனால்தானே அதைத் தவிர்க்க விரும்புகின்றோம்.

ஊடலில் தோற்றவரே வென்றவர் ஆவார் என்பார்கள். அப்படியானால் வேறொன்றைப் பெறுவதற்காக இன்னொன்றை இழப்பதனையா/கொடுப்பதனையா இது குறிக்கின்றது? ஆக பெறுவது மட்டுமே வெற்றியா? கொடுப்பது தோல்வியா? பொதுவாகவே வெற்றியடைய வேண்டுமென விரும்பும் நாமெல்லோருமே மற்றவர்களிடம் ஏதோவொன்றை பெற்றுக்கொள்ளவே விரும்புகின்றோமா? கொடுப்பதிலே மகிழ்ச்சி இல்லையா? அங்கேயும் இருக்கிறது. எம்முடைய எதிரிக்கு நல்லவொரு அடி கொடுக்கையில் மகிழ்ச்சியடைகின்றோம் வென்று விட்டதாய்ப் பெருமிதம் அடைகின்றோம். இல்லையா? அதே வேளையில் அடிவாங்கியவர் துன்பமடைகின்றார். அப்படியானால் கொடுப்பதில் நாங்களும் மகிழ்ச்சியடைந்து அதைப் பெறுபவரையும் மகிழ்ச்சியடைய வைக்கமுடியாதா? ஒரு காதலனோ/காதலியோ தனது காதலிக்கோ/காதலனுக்கு முத்தத்தினை வழங்குகையில் இருவருமே மகிழ்ச்சியடைகிறார்களே. அப்படியானால் அங்கே யார் வெற்றிபெறுகிறார்? எவர் தோல்வியடைகிறார்? இதைத்தான் இணைந்து வெல்லுதல் (Win together) என்பதா?

'தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா யார்கொலோ சதுரர்?' என்று கடவுள் என்று தான் நம்பும் சங்கரனைப் பார்த்துக் கேட்கின்றார் மாணிக்கவாசகர். 'அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றதொன்றென்பால்?' என்கின்ற அவர் வெளிப்படையாகவே தானே அந்த சூதாட்டத்தில் வென்றவர் என்றும் பறைசாற்றுகின்றார். ஆக வாழ்க்கையே வெறும் சூதாட்டம் தானா?

இங்கே உள்ள காணொலியினைப் பார்க்கையில் என்ன நினைக்கத் தோன்றுகிறது?

“முருகா நீ ரெண்டுதாரம் கட்டிக்கிட்டுச் சிரிக்கிற...” என்றெல்லாம் இனி அந்தத் தமிழ்த் திரையிசைப்பாடலைப் பாட இந்த மூன்றாவது மனைவி விடுவாரா?
:-)


Monday, July 19, 2010

மயிருக்கு மரியாதை


இன்றைய மதியநேர உணவிற்காக வெளியேறுகையில்,
“Hey! wow! you need not to take care about your hair....”
கலாய்த்தவாறே சென்றார்கள் வேறு பிரிவுகளில் பணிபுரியும் சில பெண்கள்.

தலையைத் தடவி விட்டுக் கொண்டேன். என்னோடு அருகில் கூடவந்த, பணியிடத்தில் பக்கத்திலிருந்து பெட்டி தட்டுபவரும் தனது தலையைத் தடவி விட்டுக்கொண்டார். கலாய்த்தவர்கள் இளம்பெண்களாயிருந்திருந்தால் (அதிலும் அழகானவர்களாயிருந்திருந்தால் சொல்லிவேலையில்லை), அட! எங்களையும் லுக்கு விடுகிறார்களே என்று நெஞ்சுக்குள் கிளுகிளுத்திருக்கும். இவர்கள் வயதானவர்கள் என்பதால் சித்தத்தில் பித்தம் ஏறாமல் சிந்தனை வந்தது.

“When the student ready, the teacher appears” (மாணவன் தயாராயிருக்கும் போது குரு தோன்றுகின்றார்) என்றார் விவேகானந்தர். “இதோ, இங்கே செத்துக்கிடக்கும் எலியும் புத்தியுள்ளவனுக்கு முதலாக அமையும்” என்று எதேச்சையாக யாரோ ஒருவருக்குச் சொல்லக் கேட்டதை, அவரிடம் அறிவுரை கேட்க வந்தவன் தனக்குச் சொல்லப்பட்டதாக நினைத்து அந்த செத்த எலியினையே முதலாக வைத்து பெரிய வியாபாரியாகியதைப் பற்றி சின்ன வயதுகளில் பாடசாலைப் புத்தகத்தினில் கற்றிருக்கிறோம். ஆயினும் சிலவேளைகளில் மாணவன் தயாராகாமலிருக்கையில், சம்பவங்களைக் கொண்டு குரு அவனுக்கு விடயங்களை உணர்த்தி விடுகிறார். காமம் தலைக்கேறி அர்த்தசாமத்து அடைமழைப்போதினில் செத்தபிணத்தினை மரக்கட்டையாக நினைத்து ஆற்றைக் கடந்தும், மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த விஷப்பாம்பினைக் கயிறாகக் கருதி சேற்றினைக் கடந்தும் தாசி வீட்டினையடைந்த நகுலனுக்கு, அத்தனை நாளும் காமக்கிழத்தியாய்க் கிடந்தவள், குருவாக மாறி அவனை ராமதாசராக்கினாள். ஆக சூழ்நிலையும், மாணவனின் விழிப்புணர்வும் சரிவர அமைகையில் சாதாரண சம்பவங்களே பல அரிய பாடங்களைக் கற்றுத் தந்து விடுகின்றன.

என்னருகே தனது தலையைத் தடவியவாறு வந்தவர், தனது சிரசிலேயே வெள்ளாமை செய்து கொண்டிருப்பவர். பாரிய பணச்செலவில் மயிரினைப் பயிரிட்டுக் கொண்டிருப்பவர். அண்மையில் நாற்றுநட்டுவிட்ட வயிலினைப்போல் மயிர்க்கற்றைகள் முளைவிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதே நபர் ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்னர் தலைமயிர் பற்றிய கவலைகளின்றி என்னைப்போல்தான் இருந்திருப்பார். “உப்பில்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை. அப்பன் இல்லாவிட்டால் தெரியும் அப்பனின் அருமை” என்கின்ற பழமொழிக்கிணங்க நாங்களும் எம்மிடம் இப்போது இருக்கின்றவைகளைப் பற்றிய நிறைவான எண்ணங்களையோ அல்லது அவற்றை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்குரிய முயற்சிகளையோ விட்டுவிட்டு இழந்தவை பற்றியும் இல்லாதவை பற்றியுமான கவலைகளில் நிகழ்காலத்தினைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.

“உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். என் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” என்கின்ற திரையிசைத் தத்துவப்பாடலுக்கு எளிய உதாரணமும் இந்த மயிர்தான். தலையில் இருக்கும் வரை எத்தனை மரியாதை இந்த மயிருக்கு? அதனை முடி என்று கூட அழைப்பதுண்டு. 'முடி' என்கின்ற பெயர்ச்சொல் மன்னர்கள் அணியும் கிரீடங்களையும் குறிக்கின்றது. தமிழக நண்பர்களுக்கு சில வேளைகளில் மயிர் என்று கூறுவது அசூசையாக இருக்கலாம். 'மயிர்' என்பது பேச்சு வழக்கில் தவிர்க்கப்படவேண்டிய சொல் என்று சில தமிழக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆயினும் தமிழகத்தின் பழந்தமிழ் இலக்கியங்களில் கூட மயிர் என்கின்ற சொல் பாவனையில் இருந்திருக்கின்றது. “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்” என்றிருக்கிறார் வள்ளுவர். ஆக மயிர் என்கின்ற வார்த்தை தவிர்க்கப்படவேண்டிய வார்த்தையோ அன்றி அசூசைப்பட வேண்டிய வார்த்தையோ அல்ல. ஆயினும் “ஓரூருக்குப் பேச்சு, இன்னோரூருக்கு ஏச்சு” என்கின்ற பழமொழியும் எம்மிடையே உண்டு. அண்மையில் தமிழக சஞ்சிகை ஒன்றினில் வந்தவொரு கட்டுரையை வாசிக்கையில் அதில் குறிப்பிடப்பட்டிருந்தவொரு உள்ளூர் பழமொழி (பொன்னி வாருவான்னு பொச்சைத் திறந்து வைச்சுக் காத்திருந்தாராம் நம்மூருப் புள்ளாரு [பிள்ளையார்]) எனக்குப் புரியவில்லை. எனது தமிழக நண்பரிடம் அர்த்தம் கேட்டபோது அதைச் சொல்வதற்கு ரொம்பவும் வெட்கப்பட்டார். அப்புறம் அதற்கான விளக்கத்தினை ஆங்கிலத்தில் கூறினார். என்ன இது? தமிழில் கூறுவதற்கு வெட்கம்/கூச்சம்/அசூசை. ஆனால் அதனையே ஆங்கிலத்தில் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஏனப்படி? “நெருப்பென்றால் சுடாது” என்றும் சொல்கிறார்கள். பின் ஏன் இந்த முரண்பாடு? ஆக 'அஞ்சுவது அஞ்சாமை பேதமை' என்பது போல இதுவும் சொல்லைத் (வார்த்தையை) தெரிந்து அதைச் சொல்லத் தெரிவதில் தமிழ்ப்பண்பாடு குறுக்கிடுகின்றதா? “தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிறது போல” மயிரை விட்டிட்டு...

“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது” சிரிசிலிருக்கும்வரை தலைமயிருக்கு நாம் செலுத்தும் அக்கறையையும் கவனிப்பையும் பார்க்கும் உதிர்ந்துவிட்ட மயிர் என்ன நினைக்கும்?

எண்ணெய் வைத்து அரப்பு/சீயாக்காய்/ஷம்போ தேய்த்து முழுகி எத்தனையோ வாசனைத்திரவியங்கள் தடவி சீப்பு வைத்து தலை சீவி... எதற்காக? பெண்களின் கூந்தல்அழகினை சிலாகித்துப்பாடாத கவிஞர்கள் உண்டா? பெண்களின் கூந்தல்மணம் இயற்கையா செயற்கையா என்கின்ற வாதத்தில் நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்றாரே நக்கீரர். ஒற்றைத் தலைமுடியை வைத்து அரசியின் தொடையில் மச்சமுமிருக்கும் என்பதை ஊகித்து சிலைவடித்தானே சிற்பி. ஒற்றை முடியில் அத்தனை கூறுகளும் அடங்கியிருக்கிறதா? “ஒருபிடி ஓலை. திருபிடி ராசா. காசிக்குப் போனாலும் வாசிக்க ஏலாது” என்று விடுகதையாகச் சொல்லப்பட்டாலும், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாமே.

அந்தக்காலத்தில் ஒருவனை அவமானப்படத்துவதற்கு அல்லது அசிங்கப்படுத்துவதற்கு அவனை மொட்டையடித்து விடுவார்களாம். ஆக எங்கள் முகவழகினை மெருகூட்டுவதில் இந்த தலைமயிர் பாரிய பங்களிப்பினைச் செய்வதனால்தானா இந்த மயிரைக் கொண்டாடுகின்றோம்? அப்படியானால் தங்கள் அழகினைச் சிதைத்துக் கொள்வதற்காகவா பௌத்த துறவிகள் மொட்டையடித்துக் கொள்கிறார்கள்? அழகாயிருப்பதில் சிந்தை மயங்கும் என்பதனாலா? அழகில் மயங்குகையில் அறிவு அடிபட்டுவிடுவதனாலா? அறிவு அடிபட்டு விடுகையில் உண்மைகளை உணரமுடியாமல் போய்விடுவதனாலா? ஆக அழகு என்பதே வெறும் மாயைதானா? ஆயினும் சில எளிய விடயங்களை ஒப்பிடுவதற்கும் இந்த மயிர் உவமானப்படுத்தப் படுகிறதே. பிறகென்ன மயிருக்கு, இந்த மயிருக்கு இந்த மரியாதை?



Monday, June 28, 2010

இராவணன் - சொல்ல மறந்த கதை அல்ல, சொல்லாமல் மறைத்த கதை



ராவணன் திரைப்படத்தினைப் பற்றிய எனது கருத்தினை (எனக்கு விமர்சனம் செய்யத் தெரியாது என்பதனால்) பதிவு செய்யும்படி அத்திரைப்படம் வந்த புதிதினில் என்னிடம் ஒருவர் கேட்டிருந்தார். படத்தினை இரசித்துப் பார்ப்பதற்குரிய மனநிலை இருக்கவில்லையாயினும், 'what ever happens, life has to go on' என்பதனால் நண்பர்களுடன் ஒருவாரத்திற்கு முன்னரே திட்டமிட்டிருந்ததன் பிரகாரம் கடந்த சனி இரவு திரையரங்கினுள் நுழைந்திருந்தோம். இத்திரைப்படம் எந்தவொரு சரித்திர நிகழ்வுடனும் சம்பத்தப்பட்டதல்ல என்பதை ஆரம்பத்திலேயே கூறுவதன் மூலம் பார்வையாளர்களுக்கு இராமயண இதிகாசத்தினை நினைவுபடுத்திவிடுகின்றார் அதன் இயக்குனர் திரு. மணிரத்தினம்.

இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தனது படங்களுக்கு வித்தியாசமான களங்களையே தேர்வு செய்வதானவொரு கருத்தினை ஏனைய விமர்சனங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிந்திருந்தது. அவரின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தினைப் பார்வையிட்ட ஈழத்தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் களத்தின்/காட்சியமைப்புகளின் குறைபாடுகள். ஆயினும் களநிலவரத்தினை நேரில் பார்த்திருந்திராத தமிழக நண்பர்கள் பலர் இப்போதும் அப்படத்தினை சிலாகித்துக்கூறுவது சிலவேளைகளில் சிரிப்பினையே ஏற்படுத்துவதுண்டு. ஆயினும் அப்படத்தினுாடக சில நியாயங்களை வெளிப்படுத்தியிருந்தமை வரவேற்கத்தக்கதே. சிலவேளைகளில் மணிரத்தினம் அவர்களினால் ஈழத்து அவலங்களைக் கற்பனை செய்து பார்ப்பது கடினமானதாக அமைந்திருந்திருக்கக்கூடும். உதாரணத்திற்கு இடம்பெயரும் மக்கள் தலைக்கு மேலே வட்டமிடும் உலங்கு வானூர்தியினை வேடிக்கை பார்ப்பது போல் ஒரு காட்சியமைப்பு அமைந்திருந்தது. உலங்குவானூர்திகளைக் கண்டால் மக்கள் எப்படி ஓடி மறைவார்கள் என்பது அனுபவித்தவர்களுக்கே தெரியும். தூரதிர்ஷ்டவசமாக அந்த வகையிலேயே இந்த ராவணன் திரைப்படமும் அமைந்துவிட்டிருப்பது வேதனைக்குரியதே.

இராவணன் ஒரு காமுகன், கொடியவன், அரக்கன் என்றெல்லாம் பக்கச்சார்பானவர்களால் புனைந்துவிடப்பட்டுள்ள இதிகாசங்களையே எமது முன்னோர்கள் எம்மிடம் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பார்கள். தோல்வியைத் தழுவிய புரட்சிகள், கிளர்ச்சிகள் என மாற்றப்படுவதும், மிகைபலத்துடன் வெற்றியடைந்துவிட்ட கிளர்ச்சிகள் புரட்சிகளாக வரலாற்றில் காட்டப்படுவதும் சர்வசாதாரணமானது. நீ தோல்வியடைந்துவிட்டால், எதனால் தோல்வியடைந்தாய் என்பதை விளக்குவதற்கு நீ இருக்க மாட்டாய். வெற்றியடைந்து விட்டாலோ நீ எப்படி வெற்றியடைந்தாய் என்பதைக் கூறவேண்டிய அவசியம் உனக்கு இருக்காது என்பார்கள். இதுதான் வாழ்க்கை. வென்றவனைப் போற்றுவதே வரலாற்றின் வாடிக்கை. ஒருவனை நல்லவனாய்க் காட்ட வேண்டுமெனில் மற்றொருவனைக் கெட்டவனாய்க் காட்ட வேண்டியது அவசியமாகி விடுகிறது. ஏனெனில் நல்லது என்று தனித்து ஒன்று கிடையாது. ஒப்பீடுதான் நல்லது கெட்டது என்று வகைப்படுத்துகிறது. ஆக ஒரு சாதாரண அரசனான இராமனை ஒரு அவதார புருஷனாகக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்காக இராவணனை கெட்டவனாகச் சித்தரிக்கப்பட வேண்டிய கடப்பாடு இராமயண கதாசிரியர்களுக்கு உண்டாகி விடுகிறது. (அவர்களும் தங்கள் வயிற்றுப் பிழைப்பினைப் பார்த்தாக வேண்டுமே). அதிலும் கம்பர் இன்னும் ஒருபடி மேலே போய் வான்மீகி இராமயணத்தையே தமிழில் தான் மொழிபெயர்த்ததாய் அவையடக்கம் செய்துவிட்டு தன் கற்பனைகளை அள்ளிவிட்டு இராமனைப்பற்றிப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இராமனை ஏகபத்தினி விரதனாய்க்காட்டி இராவணனை ஒரு காமுகனாய்ச் சித்தரிப்பதனூடாக இராமனை உயர்த்தி விட்டிருக்கிறார். ஆனால் மணிரத்தினம் அவர்கள் இந்தச் சிக்கல்கள் எதுவும் எழுந்துவிடாமல் தவிர்ப்பதற்காய் இந்தியிலும் தமிழிலும் தனது ராவணனை தானே இயக்கி ஒரே நேரத்தில் வெளியிட்டிருப்பது பாராட்டிற்குரிதே.

இராமாயண கதாபாத்திரங்களான இராமன், இலக்குவணன், சீதை, அனுமன், சடாயு, இராவணன், சூர்ப்பணகை போன்ற பல கதாபாத்திரங்களும் இந்த ராவணன் படத்தில் காட்டப்பட்டிருந்தாலும் இராமாயண கதையோட்டத்திற்கேற்ப அவர்களுக்கிடையிலான காலத்தொடர்புகள் அமைந்திருக்கவில்லை. இராமாயணத்தில் சடாயுவை சந்தித்த பின்னரே அனுமரை இராமன் கூட்டணி சந்திக்கிறது. இங்கே அனுமராக உருவகிக்கப்பட்ட பாத்திரம்தான் சடாயுவாக உருவகிக்கப்பட்ட படகோட்டியைக் கண்டுபிடிக்கிறது. அந்தப் படபோட்டியும் சடாயு பாணியில் ஐஸ்வர்யாராயைக் கடத்திச் சென்ற திக்கைக் காட்டி விட்டு கதையிலிருந்து மறைந்து விடுகிறது.

“ஆண்கள் நீங்கள், உங்கள் சண்டையில் எதற்காய், பெண்களாகிய எங்களைப் பகடைக்காய் ஆக்குகின்றீர்கள்?” என்கின்ற நியாயமான கேள்வியினூடாக காலங்காலமாய் பெண்கள்மீது திணிக்கப்பட்டுவரும் ஆணாதிக்க மனோபாவம் தோலுரிக்கப்படுகிறது. இராமனைக் கண்டு மயங்கி, அவனை அடைய முற்பட்டதாலேயே இலக்குவணன் சூர்ப்பணகையின் காது, மூக்கு முலைகளெல்லாம் அறுத்தெறிந்தானாம். ஒரு பெண்ணை இதைவிட கேவலப்படுத்திவிட முடியுமா? அப்படிச் செய்வதற்கு யார் இராம இலக்குவணன்களுக்கு உரிமை தந்தது? எந்த வகையிலே இதை நியாயப்படுத்த முடியும்? பிறபெண்களின் விருப்பின்றி இராவணன் அவர்களை அடைந்தால் அவன் தலைகள் வெடித்து இறப்பான் என்கின்ற சாபத்தினாலேயே இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்கிறது இராமயணம். அது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அவன் சீதையை இப்படிக் கேவலப்படுத்தவில்லையே. இராமாயண கதாசிரியர்களின்படி அவன் ஒரு காமுகனாக இருந்திருந்தால் தன் முடிவு தெரிந்திருந்ததும் அவன் சீதையைப் பலாத்காரப்படுத்தியிருந்திருக்கலாமே. அவர்கள் சொல்வது உண்மையென வைத்துக் கொண்டாலும் அவன் சீதையைக் காதலித்திருக்கின்றான் என்றே கொள்ள வேண்டும். அதைத்தான் தனது ராவணன் திரைப்படத்தினூடாக மணிரத்தினம் அவர்கள் சொல்லியிருக்கிறார். ஆனாலும் அவர் சொல்ல மறந்த அல்லது சொல்லாமல் மறைத்த உண்மைகள் ஏராளம் (அவைபற்றிய மேலதிக தகவல்களுக்கு படங்களாக இணைக்கப்பட்டிருப்பவற்றைப் பாருங்கள்). இயக்கனர் செல்வராகவன் அவர்களின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு காட்சி, காதலிற்கும் காமத்திற்கும் இடையிலான அந்த மெல்லிய கோட்டினைக் காட்டிச் செல்கின்றது. பெண்ணின் விருப்புடன் அவளைத் துய்க்க விரும்புவது காதல். பெண்ணின் இசைவின்றிப் பலாத்காரமாக அவளை அனுபவிக்கத் துடிப்பது காமம். அந்த வகையிலே இங்கே ராவணன் காமுகன் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்கிறார் இயக்குனர் மணிரத்தினம்.

ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே என்பார்கள். அது எந்தளவுக்கு உண்மையோ பொய்யோ பெரும்பாலான இந்துமத புராணங்களில் விரோதிகளாகச் சித்ததரிக்கபட்டிருக்கின்ற பெரும்பாலோனோரின் அழிவுகளுக்கு பெண்களே காரணமாக இருந்திருக்கின்றார்கள். அந்த வகையிலேயே தன்னால் தன் தங்கையை மானபங்கப்படுத்தியமைக்குப் பழிவாங்கும் முகமாக தான் அனுபவித்த அதே வலிகளை அதைத் தந்தவனுக்கே திருப்பித்தரும் எண்ணத்துடன் ஐஸ்வர்யாராயைக் கடத்தி வந்திருந்தாலும், மலைநாட்டுக் கரும்பாறை மேலே தலைகாட்டும் சிறுபூவைப்போல பூத்த அந்தப் பொல்லாத காதல் இந்த வீரா என்கின்ற ராவணனுக்கும் ஏற்பட்டு விடுகிறது. காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் படுத்திருக்கும். அதன் இரண்டு கண்களும் மூடுவதில்லை ஒருகண் விழித்திருக்கும். அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு வெளியே குதித்துவிடும். அந்த மிருகம் தான் இந்த ராவணனையும் கொன்று குவித்திருக்கிறது. “நீ என்னைத் தேடி வந்தாயா? அல்லது வீராவைத் தேடி வந்தாயா? என்கின்ற ஐஸ்வர்யாராயின கேள்வியில் பெண்மையின் ஏக்கமும் கோபமும் பொங்கி வழிகிறது. “பதினான்கு நாட்கள் வீராவுடன் இருந்தாயே, அவன் சொக்கத்தங்கமாக இருந்த உன்னை எச்சத் தங்கம் என்று சொன்னானே” என்கின்ற பிரதிவிராஜின் கூற்று அன்றும்சரி இன்றும்சரி ஆண்கள் பெண்களின் உள்ளத்தூய்மையிலும் உடலின் கற்பையே அதிகம் கொண்டாடுகின்றார்கள் என்கின்ற யதார்த்தத்தினை அடித்துச் சொல்கிறது.

இராவணன் பற்றிய என் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த காரணமோ அல்லது வேறேதேனும் காரணங்களோ ஏனோ தெரியவில்லை மணிரத்தினம் அவர்களின் இந்த ராவணன் திரைப்படக்கதை சப்பென்றிருந்தது.













Friday, May 28, 2010

தேடலும் தொலைத்தலும்!













ஒவ்வொரு முறையும்
எங்கேயென்றே தெரியாத
ஏதாவதொரு புள்ளியில்தான்
ஆரம்பிக்கின்றன
எனது தேடல்கள்!











நுாலின் ஒற்றைநுனி பற்றி
சிக்கெடுக்கும்
பக்குவத்துடன்தான்
ஆரம்பிக்கின்றன
ஒவ்வொரு தடவையும்.












இழையோடும் பாதையோடு
விழைந்து செல்லும்
விழிகள், விட்டுவிடும்
இடம்தான் ஈற்றில்
புரிபட்டு விடுவதில்லை.













எதிலோவெல்லாம் தொடங்கி
எங்கோவெல்லாம் சேர்ந்து
சோர்ந்து போகையில்
மறந்து விடுகின்றன
முடிவிடப் புள்ளிகள்.












அமர்க்களமாய் ஆரம்பித்தாலும்
இதோ! இப்படித்தான்!
ஈற்றில் என்னவென்றே தெரியாமல்
தொலைந்து போகின்றன
அந்தத் தேடல்கள்!

Tuesday, May 18, 2010

முட்டையும் முள்ளிவாய்க்காலும்


பூமிப்பெண்ணும் இந்த
ஆமைப்பெண் போல்தான்
அன்றொருநாள் சூல்கொண்டாள்

ஆயிரம் முட்டைகளின்றியொரு
அக்கினிக் குஞ்சிற்காய்
அடை காத்தாள்.

அடங்காப்பற்றினை அண்டி
அன்னியர் அயலவர்
அனைவரும் வந்தனர்.

இருபத்தொரு தலைமுறைக்கு
கருவறுத்த பரசுராமன்
பரம்பரைதானேயது!

இருபத்தொன்றுக்கு பழிதீர்ப்பதாய்
பகையுடன் சேர்ந்து பதினெட்டில்
பகடையாடியதாம்.

பாருங்கள் இப்படித்தான்...