Showing posts with label பார்த்தீபன் சபதம். Show all posts
Showing posts with label பார்த்தீபன் சபதம். Show all posts

Monday, April 6, 2009

பார்த்தீபன் சபதம்

பதின்மூன்றாம்நாள் குருஷேத்திரம், குருதியாறு பொங்கிக் கொப்பளித்துப் பாய்ந்து கொண்டிருக்கையில, மாலை மங்கி இருள் கவியத் தொடங்கியிருந்தது. அன்றைய போரின் முடிவிற்கான சங்கொலிகள் முழங்கவே வீரர்கள் தத்தம் பாசறை நோக்கித் திரும்பத் தொடங்கியிருந்தனர்.

“கண்ணா! ஏன் எமது பாசறை என்றுமில்லாதவாறு இன்று அமைதியாய் இருக்கிறது?”

வில் வளைத்து அம்பு தொடுத்துக் களைத்திருந்த காண்டீபன் வினாத் தொடுத்தான்.

எல்லாமே அறிந்திருந்த மாதவன், தன் மருகன், உத்தரை மணாளன் உதவி கேட்டு சங்கொலி எழுப்பியபோது தன் பாஞ்சன்யம் முழக்கி பார்த்தன் செவி சென்றடைவதைத் தடுத்திருந்த மாயவன் மௌனமாயிருந்தான்.

அரவக் கொடியோன் அணியினர் அநியாயமான முறையிற் தனியாளாய் நின்ற அபிமன்யுவைத் தாக்க, சுபத்திரை மைந்தன் வீரசுவர்க்கமடைந்துவிட்டான்.

நெஞ்சு துடித்தது. எப்படி முடிந்தது? பாதுகாப்பு கவசமாய் தானை தாங்கி நின்றவன், பத்மவியூகப் படைசாய்த்து புயலாகிச் சென்றவன் எப்படித் தனியனானான்?

துரோணர் அமைத்த பத்ம வியூகத்தினுள் மாட்டிக்கொண்ட உதிஷ்டிரனை மீட்பதற்கு உத்தரை மணாளன் உடனே ஏகினான். தருமபுத்திரன் தப்பிக்க தனஞ்சயன் மைந்தன் மாட்டிக்கொண்டான்.

ஜெயத்ரதன் தான் பெற்ற வரம் கொண்டு பாண்டவர் படையினைத் தடுத்ததனால் துரோணர் தலைமையில் துரியோதனப்படை தனியனாய் நின்றவனை சேர்ந்து நின்று தாக்கினார்கள். அக்கினி அம்புகளை அள்ளி அள்ளி எய்தார்கள். அபிமன்யுவை அழித்தாரகள். வரம்பெற்ற ஜெயத்ரதன் இல்லையேல் இது நடந்திருக்காது. வனவாச காலத்தில் போரிட்டு தோல்வியடைந்து அவமானப்பட்ட ஜெய்த்ரதன் நயவஞ்சகமாய் வஞ்சம் தீர்த்துக் கொண்டான்.

அனைத்தையும் அறிந்த அருச்சுனன் விழிகள் அனலைக் கக்கின.
“நாளை சூரிய மறைவிற்குள் ஜெயத்ரதனைக் கொல்வேன். இல்லையேல் தீ மூட்டி அதில் வீழ்ந்து இறப்பேன்”
சபதமிட்டான் பார்த்தீபன்.