Showing posts with label தந்தையுமானவள். Show all posts
Showing posts with label தந்தையுமானவள். Show all posts

Saturday, April 4, 2009

தந்தையுமானவள்

கவிதைக்குப் பொய் அழகு என்றார் வைரமுத்து.
ஆனால் கவிதைக்கும் பொய்யை விட கருத்தே அழகு என்பது என் தாழ்மையான கருத்து. எப்படி நகைகள் அணியஅணிய பெண்கள் அழகாகிக் கொண்டு போவார்களோ, அப்படியே பொய்களால் அலங்கரி்க்க கவிதையும் அழகாகிக் கொண்டே போகும். ஆனாலும் நகைகளால் மட்டுமே (புன்னகை தவிர்த்து) அழகாய்த் தெரியம் பெண்களை யார் மீண்டும் ரசிப்பார்கள்?

சரி பெண்ணுக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
அதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.


ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு முன்னர், வேறொரு நண்பன் சார்பில் எழுதப்பட்ட கவிதையின் ஞாபகச் சேமிப்பிலிருந்து பிறக்கிறது இந்தக்கவிதை, இம்முறை இன்னொரு நண்பனுக்காக.
(ஆக இது எனக்கான கவிதை அல்ல, என்ன கொடுமை சார்!)

எப்படி ஒரே நதியில் இருமுறை நீராட முடியாதோ, அவ்வாறே ஒரே கவிதையை இருமுறை எழுத முடியாது என்பதும் நிதர்சனம்.
எனவே மூலம் ஒன்றாக இருக்க, ஓடி வந்த பாதை மட்டுமே மாறியிருக்கிறது இந்தக் கவிநதிக்கு.


தந்தையுமானவள்

மௌனமொழி பேசியெனை
மயக்கிப் பின்,
உன் விழிவீச்சுவிந்தால்
என் இதயக்கருவறையைக்
கர்ப்பமாக்கிச் சென்றவளே.

இப்போதெல்லாம் ஏனடி
இந்தப் பாராமுகம்?

எப்படியடி முடிந்தது உன்னால்,
காரியம் முடிந்ததும்
கைவிடும் கயவனாயாக?

சேல் காட்டிச்
செல்லும் பெண்ணே! என்
சூல் கொண்டுன் கருக்கொண்ட
காதல் சிசுவிங்கு தன்
கால் கொண்டு
உதைக்கிறதே!

உனைக் காணும்
நேரங்களிலெல்லாம்
பிரசவ வேதனை என்னைப்
பிரட்டியெடுக்கிறது.

ஆனாலும் பயப்பிராந்தியிலென்
வாய்யோனிமடல்கள்
உலர்ந்துபோய் விடுவதால்
பெறுமாதம் தாண்டியும்...

ச்சே...
என்ன மனுசனடி நீ!
நம் காதல் குழந்தைக்கு
அப்பனாய் நீயிருந்தும்
ஆபத்தில்கூட உதவாமல்....

சரி!
கணவானாய்த்தான் வேண்டாம்
கருக்கலைப்புச் செய்ய
ஒரு மருத்துவிச்சியாயாவது?...