Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Monday, October 11, 2010

தீராப்பசி!

தீராப் பசிகொண்டலையும்
திருப்தியற்ற திருந்தாமனமே!

தீனிக்கான திண்டாட்டம்
பற்றிய கவலைகளின்றிய
கொண்டாட்டமா உனக்கு?

அது அன்றைக்கும்
இன்றைக்கும் என்றைக்குமா?

எண்ணற்ற எண்ணங்களை
உண்டு தீர்த்த பின்னும்
அவாஞ்சையை அடக்கா
அடங்காப்பசி மனமே!

சட்டென்றொரு
சிலநொடி நேரப்
பட்டினியைக்கூடத்
தாங்கமாட்டாத்
தீனிப்பண்டாரமே!

பலகாலப் பலகாரங்களைக்கூட
பழுதடைந்த பின்னும்
வைத்து வைத்துத்
தின்று தீர்க்கின்ற நரியே!

காலாவதியான
உணவுகள் பற்றிய
உணர்வுகள் அற்றுச்சுமக்கும்
சுணைகெட்ட கழுதையே!

தின்று ஏப்பமும்விட்ட
உணவினைக்கூட
இரைமீட்டி இரைமீட்டி
அசைபோடும் அசிங்கமே!

ஏன்? சிலவேளைகளில்
வயிற்றுக்குள் செரிப்பதைக்கூட
வாந்தியெடுத்துவிட்டுப் பின்
அள்ளிப் பசி தீர்க்கும் நாயே!

அதுவும் அல்லாதவிடத்து
கழித்த மலத்தினைக்கூட
கையினால் கிண்டிக்கிளறியுன்
இரைப்பையை நிரப்பும் பேயே!

பட்டினியை மறுதலிக்குமுனக்கு
வெறுமையைத் உண்ணத்தந்தால்,
ஏற்க மறுக்கும் தொல்லையறுத்து
சும்மாயிரு மனமே!