Showing posts with label சிங்கப்பூர். Show all posts
Showing posts with label சிங்கப்பூர். Show all posts

Saturday, August 8, 2009

சிங்கப்பூருக்குப் பிறந்தநாளு - 09 ஆவணி 2009


1965ம் ஆண்டு ஆவணித் திங்கள் 09ம் நாள் பூமித்தாய் தனது புதியதொரு புதல்வனைப் பிரசவித்த பெருமையில் பூரித்துப் போயிருந்தாள். ஆசியக் கண்டத்தில் மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்குமிடையில் பிரசவிக்கப்பட்ட புதிய நாடொன்று பூமிப்பந்தில் தவழத் தொடங்கியிருந்தது. 1963 புரட்டாதி (September) 16ம் திகதி, மலாய், சாபா, சரவாக் ஆகிய பிரதேசங்களுடன் சிங்கப்பூரினையும் இணைத்து மலேசியா என்கின்றவொரு புதிய நாடு உருவாக்கப்பட்டிருந்தது. ஆயினும் சிங்கப்பூரில் இடம்பெற்ற சில இனரீதியிலான முரண்பாடுகளால் ஏற்பட்ட கலவரங்களாலும், அதனால் உண்டான பதட்டங்களாலும், வேறுசில காரணங்களாலும் அப்போதைய மலேசியப் பிரதமர் தலைமையிலான மலேசியப் பாராளுமன்றத்தின் ஒருமித்த ஆதரவுடன் சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பிலிருந்து 09-08-1965 இல் வெளியேறியது அல்லது வெளியேற்றப்பட்டது. அன்றைய தினத்தில் சிங்கப்பூர் குடியரசு (Republic of Singapore) சுதந்திர நாடாக திரு. லீ க்குவான் யூ (Lee Kuan Yew) அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டது.


எந்தவொரு இயற்கை வளங்களும் இல்லாததுடன், 10% - 12% வரையிலான மக்களின் வேலையில்லாப் பிரச்சினையும் அப்போது சிங்கப்பூரின் எதிர்காலத்தைக் கேள்விக்குரியதாக்கியிருந்தன. இப்படியான காரணுங்களுக்கு அஞ்சியே ஆரம்பத்தில் 1963 இல் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து கொண்டது. இப்போது பிரிந்து வந்தாகிவிட்டது. பிரச்சினைகளும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன. சுதந்திர சிங்கப்பூரின முதற் பிரதமரான திரு. லீ க்குவான் யூ, கலக்கமடையவில்லை. அவரது தீர்க்கதரிசனமிக்க பார்வைகளுடன் கூடிய திட்டங்களும், மனஉறுதியும் அயராத உழைப்பும், மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியவாறே செயற்பட்ட பாணியும், விடாமுயற்சியும், அவருக்கு உறுதுணையாக அளப்பரிய பங்காற்றிய ஏனைய அதிகாரிகளின் பங்களிப்புகளும், மற்றைய நாடுகளை சிங்கப்பூரைப் பார்த்து வியக்க வைத்தன.


சிங்கப்பூரில் பல்லின, பல்மத, பல்கலாச்சார மக்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்களிடையே எந்தவிதமான இனமத முரண்பாடுகளும் இல்லாது ஒரேநாட்டு மக்கள் என்கின்ற சிந்தனையே முன்னிற்பது பெருமையளிக்கிறது. அனைத்து அரச நிறுவனங்களிலும் ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் ஆகிய நான்கு அரசமொழிகளிலும் எவ்வித வேறுபாடுமின்றி மக்களுக்கான சேவைகள் வழங்கப்படுவதை எப்படிப் பாராட்டுவது?


1990 இல் திரு. லீ க்குவான் யூ, பிரதமர் பதவியிலிருந்து ஓய்வுபெற, திரு.கோ ச்சோ தொங் (Goh Chok Tong) அவர்கள் சிங்கப்பூர் குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆனார். 2003ஆம் ஆண்டளவில் பரவிய சார்ஸ் (SARS) நோயினால் சிங்கப்பூர் பாரிய பின்னடைவினை எதிர்கொண்டது. அதன் பொருளாதாரம் சரிந்தது. ஆயினும் தலைமைத்துவத்தின் சரியான திட்டமிடுகைகளினால் சரிவிலிருந்து மிக வேகமாகவே மீண்டுகொண்டது.


2004இல் திரு. கோ ச்சோ தொங் ஓய்வுபெற, சிங்கப்பூர் குடியரசின் மூன்றாவது பிரதமராக தற்போதைய பிரதமர் திரு. லீ சென் லூங் (Lee Hsien Loong,) அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இப்போதைய சவாலாக, உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதரப் பின்னடைவும், H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் நோயும் விளங்குகின்றன. ஆயினும் உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் சிங்கப்பூரிற்கு வரும் பயணிகளின் வருகையை இவை பாரியளவில் பாதிக்காமலிருப்பதற்கு தற்போதைய அரசு மேற்கொண்டுவரும் தகுந்த நடவடிக்கைகளே காரணம்.


இன்றைய தினத்தில் தனது 44வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் சிங்கப்பூருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.